ஆண்டுதோறும் பல்வேறு நாட்கள் உலக தினங்களாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் கழிப்பறைக்காகவும் ஒரு உலக தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பது வியப்பாக இருக்கும். கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமானதா? என்று நினைக்கலாம். ஆம், கழிப்பறை பிரச்சனை சர்வதேச அளவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 260 கோடி மக்கள் இந்த நெருக்கடியை நாள்தோறும் சந்தித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் (ரர்ழ்ப்க் பர்ண்ப்ங்ற் ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய்) என்றசர்வதேச அமைப்பு. சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் ‘உலக கழிப்பறை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
கழிப்பறை வசதி என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. இயற்கையின் அழைப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. விழித்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை, ஏன்? தூக்கத்திற்கு இடையிலும் கூட இயற்கை உபாதைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். வீடு, அலுவலகம், பயணம் என்று எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இயற்கையின் அழைப்பு வரலாம். இன்று முடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட முடியாது. ஆனால் இதைப்பற்றிப் பேசுவதற்குக் கூட யோசிக்கிறோம். அது ஏதோ கூடாத செயல் போல எண்ணுகிறோம். இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், வெளிப்படையாகச் சொல்ல பலர் கூச்சப்படுகிறார்கள்.
வீதிக்கு வீதி வகை வகையான உணவகங்கள், கடைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு புறப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. பல நேரங்களில் அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படுகின்றனர். அன்றாடம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது.
உலக அளவில் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத 260 கோடி மக்களில் 180 கோடி மக்கள் தெற்காசிய நாடுகளில் வசிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ, உகாண்டா, தான்சானியா போன்றநாடுகள் இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
போதிய கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் ஏரிகள், குளங்கள், சாலை ஓரங்கள், வயல்வெளிகள், கண்மாய்கள் போன்றஇடங்களில் காலைக்கடன்களை முடித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. இருள் பிரியாத அதிகாலை நேரத்தையும், இருள் கவியும் மாலை நேரத்தையும் மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் அவர்கள் தொற்றுநோய், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பை தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் ரீதியான வேறுபாட்டால் பெண்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நேரம் ஆண்களை விட அதிகம். ஆகவேதான் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 என்றவிகிதத்தில் இருப்பது நல்லது என்று உலக அளவிலான ஐடஇ IPC (International Plumbing Code) அறிவுறுத்தியுள்ளது. பெரும்பாலான மேலை நாடுகள் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் கட்ட வேண்டும் என சட்டம் இயற்றி உள்ளன.
உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் நிறுவனமும் இணைந்து உலக அளவில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கழிப்பறை வசதியை நான்கு விதமாக இந்த அறிக்கை பிரித்துக் காட்டுகிறது. அதாவது வெட்டவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறவர்கள், சுகாதாரக் குறைவான கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறவர்கள், பொதுக்கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்துகிறவர்கள், தண்ணீர் வசதி நன்றாக உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறவர்கள் என்று அந்த அறிக்கை வகைப்படுத்தி இருக்கிறது.
உலகில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவோரில் 58 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும், சீனா, இந்தோனேஷியா போன்றநாடுகளில் வெறும் 5 சதவீதம் மக்கள்தான் திறந்த வெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. வேறு வகையாக சொல்வதானால் உலகில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
நவீன கழிப்பறைகள்
ஆண், பெண் படம் போட்டுப் பிரித்துக் காட்டும் பொதுக்கழிப்பறையை ஒரு காலத்தில் ரயில்நிலையங்களில் மட்டும்தான் பார்க்க முடியும். இன்று ஊருக்குள்ளும், பேருந்து நிலையங்களிலும் கட்டணக் கழிப்பறைகளைப் பார்க்க முடிகிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் பயனற்று பாழடைந்து கிடக்கின்றன. சில இடங்களில் பயன்படுத்தும் அளவுக்கு தரமில்லாமல் இருக்கின்றன.
பிந்தேஸ்வர் பாடக் என்பவர் ‘சுலப் இண்டர்நேஷனல்’ என்றதன்னார்வ சேவை நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் முக்கிய நகரங்களில் சமுதாயக் கழிப்பறைகளை அமைத்துள்ளார். நாள்தோறும் சுமார் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயன்படுத்தும் வகையில் 5000க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை இவரது அமைப்பு நிர்வகித்து வருகிறது.
சக்கரங்கள் பொருத்திய நடமாடும் அல்லது நகரும் நவீன கழிப்பறைகள் மேலை நாடுகளில் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் தற்காலிகமாக இந்த வசதி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இத்தகைய கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம். பத்து ஆண்டு உத்திரவாதத்துடன் பல நிறுவனங்கள் இத்தகைய கழிப்பறைகளை விற்பனை செய்கின்றன.
இந்த ஆண்டு (2011) மே மாதம் இந்தியாவிலேயே முதன் முதலாக நாணயம் போட்டதும் இயங்கும் ‘நவீன இயந்திரக் கழிப்பறை’ திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையை உபயோகிப்பவர்கள் அதற்கான நாணயத்தை நுழைவாயிலில் உள்ள இயந்திர துவாரத்தில் போட்டதும் கதவு திறக்கும், மின் விளக்கு எரியத் தொடங்கும். அதன் பின்பு உள்ளே சென்று கழிப்பறையை பயன்படுத்திவிட்டு கதவை திறந்து வெளியே வந்தவுடன்; தானாகவே தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். டெக்னோபார்க் ராம் சைன்டிபிக் சொலுசன்ஸ் என்றநிறுவனம் இந்த கழிவறைகளை வடிவமைத்து, இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு செயல்படுத்தி உள்ளது.
அரசின் நடவடிக்கைகள்
சுகாதாரக் கழிப்பிடத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் சுகாதாரமான வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2000மாவது ஆண்டு முதல் ‘முழு சுகாதார இயக்கம்’ (Total Sanitation Campaign) செயல்பட்டு வருகின்றது. நகர்புற, கிராமப்புற பாகுபாடின்றி அனைவருக்கும் இத்திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும் என்றநோக்கத்தில் இத்திட்டம் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கழிவறை அமைத்தல், திட, திரவ கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, பள்ளிச் சுகாதாரக் கல்வி போன்றசெயல்களை உள்ளடக்கியது இந்த இயக்கம்.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவதில் மத்திய மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து அந்தந்த பகுதி மக்களின் ஒத்துழைப்போடு முழு சுகாதார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன. 2012ம் ஆண்டிற்குள் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருவதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது.
நிறைவாக. . .
கழிப்பறை வசதி என்பது வீட்டு வசதியோடு தொடர்புடையது. மலம், சிறுநீர் கழிக்க மற்றும் அவற்றை அகற்றதேவையான தண்ணீர் வசதி போன்றவற்றை உள்ளடக்கியதே கழிப்பறை வசதி எனப்படும். சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாது போனால் தனிமனித ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். ஆரோக்கியமற்றகுடிமக்களால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
சுகாதாரக் குறைவால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அந்தப் பணத்தை கழிப்பறைகள் கட்டுவது போன்றஆக்கபூர்வமான பணிகளில் செலவழித்தால் நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது சுகாதாரத்துறை வல்லுநர்களின் கருத்தாகும்.
திறந்தவெளியில் மலம் கழிப்பதில் சௌகரியச் குறைச்சல் இருந்தாலும், அதில் சுதந்திரமிருப்பதாக பலர் கருதுகின்றனர். ‘சென்றோம், வந்தோம்’ என்றில்லாமல் கழிவறையைக் கட்டிக்கொண்டு அதைக் கழுவிக் கொண்டு என்று சலித்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால் இந்த எண்ணம் அண்மைக் காலமாக மாறி வருகிறது. வீட்டோடு இணைந்த கழிப்பறைகளைக் கட்டிக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், திறந்த வெளியில் மலம் கழிப்பது தவறு என்று உணர்ந்ததால் மட்டும் அல்ல. ‘அவசரத்துக்கு’ ஒதுங்கக் கிடைத்த மறைவிடங்கள் இன்று கிராமங்களில் கூட காணாமல் போய்விட்டதும் ஒரு காரணம். இயற்கை உபாதைகளை வெளியேற்றவிரும்பும் அந்தக் கணத்தில் கழிப்பறை வசதி கிடைப்பது என்பது ஒரு வரப்பிரசாதம். அதனை ஒவ்வொரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
சுகாதாரம் என்பது மக்கள் வாழ்வின் அடிப்படை உரிமை என்று உலக அளவில் குரல்கள் வலுத்து வருகின்றன. 2025ம் ஆண்டுக்குள் கழிப்பறை பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நா. தீர்மானித்துள்ளது. ‘2015ல் அனைவருக்கும் கழிப்பறை வசதி’ என்றஇலக்கை அடைவதற்கான செயல்பாடுகளுக்கு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 11வது உலக கழிப்பறை உச்சி மாநாடு இம்மாதம் (நவம்பர்) 22 முதல் 25 வரை சீனாவில் நடைபெறஉள்ளது.
அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் அதை பயன்படுத்துகிற, பராமரிக்கிற பொறுப்பு பொதுமக்களை சார்ந்ததுதான். அரசாங்கம் ஏற்படுத்தித் தருகிற பொதுச் சுகாதார வளாகங்களை மக்கள் எவ்வாறு மோசமாக பராமரிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதார வளாகங்களை உருவாக்குவதால்தான் இப்படியான சிக்கல் எழுகிறது என்று சொல்லப்படுட்டாலும் அது மட்டுமே காரணமல்ல. மக்களிடையே போதிய விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லாததும் கூட காரணம்.
நகரங்களை திட்டமிடுபவர்களும், வீடு கட்டுபவர்களும் கழிப்பறைக்கு இடம் ஒதுக்குவதை, பணம் செலவிடுவதை ஒரு வீண் வேலையாக, வீண் செலவாக கருதாமல் அதனை ஒரு பயனுள்ள மூலதனமாக கருத வேண்டும். ‘ஒரு தேசத்தின் வளர்ச்சியை அதன் கழிப்பறை வசதிகள் எளிதாகக் காட்டி விடும்’ என்கிறார்கள் சர்வதேச சுகாதார நிபுணர்கள். கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் சமூகச் சூழலில் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய் என்பது மிகப் பெரிய சமூக முரண்பாடு. கழிப்பறை வசதிகளை மேம்படுத்தாத சமூகம், அடிப்படைச் சுகாதாரக் கேடுகளில் சிக்கி ஆரோக்கியமற்ற தலைமுறையைத்தான் உருவாக்கும். எனவே, கழிப்பறை வசதியை மேம்படுத்தி, அத்துடன் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த தினத்தில் உறுதி ஏற்க வேண்டும்.