– 2011 – May | தன்னம்பிக்கை

Home » 2011 » May (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பிறப்பு தடையல்ல

    தன் அக்காவுடன் சென்று ஒருநாள் மாலையில் சிறுவன், டீச்சரைச் சந்திக்கிறான்.
    அக்கா : டீச்சர்Ð என்னோட தம்பி இவன்தான். அடிக்கடி நான்
    செல்வேனில்லீங்களா? இவன் கேக்கறகேள்விகளுக்கு எங்க ஊட்லே யாராலுமே பதில் சொல்ல முடியறதில்லே. இவனுக்குக் கொஞ்சம் புரியறமாதிரி இவன் கேக்கறகேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க டீச்சர். நான் தூரமா உக்காந்து ஹோம் ஒர்க்கை எழுதிகிட்டிருக்கேன்.
    டீச்சர் : தம்பி, உன்பேரு என்னப்பா?
    சிறுவன் : வணக்கம் டீச்சர். எம்பேரு கணேசு.
    டீச்சர் : கணேசு அல்ல கணேசன்
    கணேசன் : டீச்சர் நான் பணக்காரன் ஆக முடியுமா?
    டீச்சர் : நிச்சயமா முடியும்.
    கணேசன் : அதுக்கு நான் என்ன செய்யனும்?
    டீச்சர் : ரொம்ப சந்தோஷம், நல்ல ஆசை பணக்காரன் அப்படீன்னா, நீ என்ன நெனைக்கறே?
    கணேசன் : நெறைய பணம் இருக்கனும்Ð நெனைச்சதெல்லாம் வாங்கனும்Ð பெரிய மெத்தை வீடு, காரு, நல்ல துணி இதெல்லாம் அப்படீன்னு நெனைக்கறேன்.
    டீச்சர் : வெரிகுட். நெறைய பணம்னா, தெளிவாச் சொல்லனும், ஒரு லட்சமா, 10 லட்சமா, ஒரு கோடியா, இல்ல எவ்வளவு கோடிதான் வேணும்?
    கணேசன் : அடேங்கப்பாÐ அவ்ளோ பணமா? இது வரைக்கும் ஒரு தடவை தான் 100 ரூபா நோட்டையே பாத்திருக்கேன் டீச்சர்.
    டீச்சர் : பரவாயில்லே. அந்த மாதிரி 1000 நோட்டு சேர்ந்தா ஒரு லட்ச ரூபாய். அதுவே 100 மடங்கு அதாவது 100 கட்டு சேர்ந்தா ஒரு கோடி ரூபாய். ரொம்ப சிம்பிள் தான்.
    கணேசன் : அப்ப ஒரு கோடி ரூபா, எனக்கு வேணும்னா நா என்ன பண்ணனும் டீச்சர்.
    டீச்சர் : அப்படிக் கேளுடா குட்டிப் பையாÐ வசதியில்லாத ஏழைகள் வீட்டிலே பொறக்கற குழந்தைகள் ஏழையாத் தான் வாழனும் அப்படீன்னு கடவுள் நினைக்கலேÐ அதே தான் உனக்கும்Ð நீ முயற்சி செய்து, நன்றாகப் படித்து, கடுமையாக உழைத்தால், நீ நெனைக்கறதை உன்னாலே அடைய முடியும்.
    நீ செய்ய வேண்டியது, 500 ரூபா நோட்டை நல்லாப் பாத்து மனசிலே பதிஞ்சு வெச்சுக்கோÐ அந்த மாதிரி 100 நோட்டு சேர்த்துக் கட்டினா அது 50000 ரூபா அது மாதிரி 200 கட்டு எனக்கு வேணும். அதை நான் எனது 25 வயசுக்குள்ளே சம்பாதிப்பேன். அப்படீன்னு நெனச்சுகிட்டே இருக்கனும்.
    கணேசன் : டீச்சர், 25 வயசு வரைக்கும் காத்திருக்கணுமா? ஒடனே கெடைக்காதா?
    டீச்சர் : வெளையாட்டுப் பையனா இருக்கறயேப்பா? நீ முதல்லே படித்து முடிக்கனும். நெறைய மார்க் வாங்கி ஒரு வேலைக்குப் போகனும். அங்கே உன்னோட முழுத் திறமையைக் காண்பித்து, நெறைய சம்பளம் வாங்கனும், இதுக்குத் தாம்ப்பா சுமாரா 25 வயசுன்னு சொன்னேன்.
    கணேசன் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி இத்தனை பணத்தை சம்பாதிக்க முடியுமா? இல்லே அரசியலுக்கு போனாத்தான் சம்பாதிக்க முடியுமா? டீச்சர்
    டீச்சர் : அதென்ன கணேசன், புதுசா அரசியல்னு சொல்றேÐ
    கணேசன் : டீச்சர், எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு, பாரு இவங்கெல்லாம் நாலு வருஷத்துக்கு முன்னாலே தான் ஒரு அரசியல் கட்சீலே சேந்தாங்கÐ இன்னிக்கு என்னடான்னா, கோடிக் கணக்குலே சொத்து சேத்துட்டாங்கனு, அதனாலே அப்படிக் கேட்டேன் டீச்சர்.
    டீச்சர் : பரவாயில்லப்பா. இன்னிக்கு இந்த அரசியல் பண்றதுதான் நம்ம நாட்டுலே ஏழைங்க ஏழையாவேயும், பணக்காரங்க பணக்காரங்க ளாவேயும் இருக்கறதுக்கு அடிப்படையா இருக்குது.
    சரி, நீ கேட்டதுக்கு பதில் சொல்றேன். அரசியல்ங்கிறது தொழில் இல்லை. ஒரு சேவையா ஆரம்பமானது தான். இன்னிக்கு சுயநலமிக்க அரசியல்வாதிகளாலே, லாபம் தரக்கூடிய பிசினஸ் அப்படீங்கறஅளவுக்கு பொதுமக்கள் மனசுலே எடம் புடிச்சுருச்சு, அரசியல் என்பது தொழில் இல்லீங்கிறதுனாலே, முன்னெல்லாம் நல்ல வசதியாக இருந்தவங்க தங்களோட கைக்காசைப் போட்டு பொதுவான காரியங்கள் செஞ்சாங்க.
    ஆனா, இன்னிக்கு ஒரு சில வருடங்க ளிலேயே அரசியல்வாதிகள் ஏராளமா சம்பாதிச்சர்றாங்க. அந்தப் பணம் முறையாக வந்ததில்லை. அந்த மாதிரி எண்ணம் உன்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு வரவே கூடாது.
    கணேசன் : சரிங்க டீச்சர், வேறெஎப்படித்தான் சம்பாதிக்கிறது.
    டீச்சர் : முதலில் படித்து முடி, 500 ரூபாய் நோட்டை மனதில் பதிய வை இன்னிக்கு நேரமாச்சு. தேவைப் பட்டா மறுபடியும் நாம சந்திக்கலாம். நான் கௌம்பறேன்.
    டீச்சர் சென்றுவிட்டார். தன் அக்காவுடன் வீட்டுக்குத் திரும்பினான் கணேசன்.
    டீச்சர் கூறியவாறு பணக்கட்டுக்களை மனதுக்குள் குவித்தான். இதே சிந்தனையாக மாறினான். கோழி முட்டைகளை அடைக்காப்பது போல் பல ஆண்டுகள் இந்த எண்ணத்தை வலுப்படுத்தினான். நன்றாகப் படித்தான். அந்தப் பள்ளியில் இவன்தான் முதல் மதிப்பெண் பெற்றான்.
    ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, கூலிக்கு வேலை செய்து, வாழ்க்கையின் உச்சத்தை எட்டிய ஜி.டி. நாயுடு, அம்பானி, ஓபராய் போன்றவர்களது சுயசரிதைகளை வாசித்தான். இன்று தமிழ் நாட்டில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ள சில வணிக நிறுவனங்களைப் பற்றியும், அதன் வளர்ச்சி விபரங்கள் பற்றியும் முழுமையாக அறிந்து கொண்டான்.
    நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, சகமனிதரை மதிக்கும் பண்பு, பிறருக்கு உதவும் குணம் ஆகியன இயல்பாகவே இவனிடம் இருந்தது. பள்ளி ஆசிரியர்களாலும், ஊர் மக்களாலும் பாராட்டப்பட்டான்.
    வங்கிக் கடன் வாங்கி கல்லுரிக் கல்வியை முடித்தான். கேம்பஸ் இண்டர்வியூவில் வெளிநாட்டு கம்பெனி ஒன்றால் தேர்வு செய்யப்பட்டான். படிப்பு முடிந்தவுடன் பெற்றோர் ஆசியுடன் வெளிநாடு சென்று வேலை பார்த்தான். அங்கும் உயர்கல்வி கற்றான். இவனது ஆர்வத்துடன் கூடிய ஈடுபாடு, அந்த நிறுவனத்தில் குறுகிய காலத்தில் நற்பெயருடன் பதவி உயர்வையும் பெற்று தந்தது.
    ஒருமுறைதாயகம் திரும்பியபோது, சிறுவயதில் சந்தித்துப் பேசிய டீச்சரைச் சென்று சந்தித்து, விரிவாகத் தன் வளர்ச்சியைக் கூறினான். இவன் மனதில் பெரிய மாற்றம் வந்துள்ளதை அந்த டீச்சர் கண்டறிந்தார். சிறுவயதில் பணம், வீடு, கார் என்றமனநிலையில் இருந்தவன், இன்று பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதர்களை மதிக்கும் நல்ல குணத்துக்கு மதிப்பளித்துப் பேசியதை அறிந்து மகிழ்ந்தார்.
    தான் பெற்றசம்பளப் பணத்தில் சேமித்து, வசித்த வீட்டையே மாடி வீடாக மாற்றி விட்டான். இன்னும் இரு வருடங்களில் வெளிநாட்டுப் பணியை முடித்துவிட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்து, நண்பர் சிலருடன் சேர்ந்து புதிய தொழில் ஒன்றைத் துவங்க இருப்பதாய் கூறி, ஆசிகள் பெற்றுக் கொண்டான்.
    வாய்ப்புகளை உருவாக்கும் மனவலிமையை வளர்த்துக் கொண்டான். உருவாக்கிய வாய்ப்புகளில் தன் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, மனோசித்திரமாய் வரைந்து வைத்திருந்த இலக்குகளை அடைந்தான். முயற்சிக்கான விளைவுதான் வெளிநாட்டு வேலை; இருந்தாலும் தாய்நாடு திரும்பி வந்து, இங்கு புதிய தொழில் துவங்க இருக்கிறான்.
    இது மற்றவர்களுக்குச் சாத்தியமா?
    சாத்தியம் தான் என்று சத்தியமாய் கூறுகிறேன். இந்தக் கட்டுரையில் நீங்கள் கடந்து வந்த சிறுவனை நான் என் வாழ்க்கையில் சந்தித்தேன். எனவே, சிறுவயதில் அவர்களிடம் நல்ல பண்புகளை விதைத்தால், அவை வளர்ந்து, பருவத்தில் நல்ல குணங்களாக வெளிவரும். இப்பணியைப் பெற்றோர் மட்டுமே செய்ய இயலாது.
    ஆசிரியப் பெருமக்கள், குறிப்பாக 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், இதை நாட்டுப்பற்றுடன், இதய சுத்தியுடன் செயல்படுத்தினால் பத்தே ஆண்டுகளில் இந்தியா ஊழலற்றபாதையில் பயணத்தை துவங்கிவிடும்.
    நல்ல பண்புகள், பழக்கங்கள் வாழ்க்கையாக மாறும்போது பயமும் சந்தேகமும் எக்காரணம் கொண்டும் நம் மனதிற்குள் நுழைய முடியாது. இவை தடைகளாக, வேலிகளாக இல்லாவிட்டால் சுதந்திரமாக யாராலும் முன்னேறமுடியும். இதற்கு வசதிமிக்க குடும்பத்தில் பிறப்பது அவசியமா? ஏழைக்குடும்பத்தில் பிறந்து விட்டேனே என யாரும் வருந்த வேண்டியதில்லை.
    ஏழையாக இருந்தாலும், படிப்பறிவில்லாதவர்களாக இருந்தாலும், உங்களுக்கு குழந்தையாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக உங்கள் குழந்தையும் ஏழையாகவே வாழ வேண்டுமா?
    தேவையில்லைÐ ஐந்தில் வளையுங்கள். 50ல் தானே வளையும். நல்ல பண்புகளை, குணங்களை இளம் வயதில் மனதில் விதையுங்கள். பயம், சந்தேகம் இரண்டையும் கிள்ளி எறிய உற்சாக மூட்டுங்கள். ஏராளமான வாய்ப்புகள் இறைந்து கிடக்கின்றன. நமக்குத் தேவையானதை நாம் தான் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று நல்ல ரோல்மாடலாக இருங்கள். முன்னேறப் பிறப்பு தடையே அல்ல.
    வாழ்க வளமுடன்

    உனக்குள்ளே உலகம்-12

    சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு நடந்து முடிந்தது. இந்தத் தேர்வுகளில் மாணவ – மாணவிகள் நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக பெற்றோர்களும், ஆசிரியர்களும் பலவித முயற்சிகளை மேற்கொண்டார்கள். தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காக காலையில் எழுந்து அவர்களுக்கு வேண்டிய உணவு, மற்றும் வசதிகளை பெற்றோர்கள் செய்துகொடுத்தார்கள். ஆசிரியர்களும் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் நலனுக்காக உழைத்தார்கள். மாணவ – மாணவிகளும் அதிகமாய் முயற்சி செய்து படித்தார்கள். இருந்தபோதும் சில “எதிர்பாராத நிகழ்வுகள்” பிளஸ் 2 தேர்வு நேரத்தில் நிகழ்ந்துவிட்டது.
    பிளஸ் 2 அரசுத் தேர்வுகளை நடத்திய பொறுப்பாளர்கள் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் பிரபல நாளிதழ்களில் வெளியானது. ஒரேநாளில் உயிரியல், தாவரவியல், வரலாறு ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. “தேர்வு நடந்த அந்த ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரலாற்றுத் தேர்வில் 2 மாணவர்களும், திருவாரூர் மாவட்டத்தில் வரலாற்றுத் தேர்வில் 3 மாணவர்களும் ‘காப்பி’ அடித்ததால் பிடிப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் உயிரியல் தேர்வில் 4 மாணவர்களும், வரலாற்றுத் தேர்வில் 4 மாணவர்களும் பிடிப்பட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் உயிரியல் தேர்வில் 3 பேரும், தாவரவியல் தேர்வில் 2 பேரும், வரலாற்றுத் தேர்வில் ஒருவரும் காப்பி அடித்துப் பிடிப்பட்டார்கள். மொத்தம் 19 பேர் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் நடந்த தேர்வில் பிடிபட்டிருக்கிறார்கள்” – என நாளிதழ்கள் புள்ளி விவரங்களை வெளியிட்டன.
    மேலும் பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்தத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுப்பதற்காக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தலைமையில் பறக்கும் படைகள் அனுப்பப்பட்டிருந்தன. இருந்தபோதும் முதல் தேர்வான மொழித்தாள் தேர்வில்கூட காப்பி அடித்த மாணவர்களை “பறக்கும் படை”யினர் பிடித்திருக்கிறார்கள்.
    படிப்பதற்கு நேரம் ஒதுக்காமல், படிப்பதற்கு முயற்சி செய்யாமல் மாணவ, மாணவிகள் – “மதிப்பெண்கள் மட்டும் தனக்கு அதிகம் வேண்டும்” – என்றஉணர்வோடு சில இளைய உள்ளங்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதன் விளைவுதான் எதிர்பாராத நிலையில் ‘கையும் களவுமாக’ பிடிபட்டு காப்பி அடித்தவர்கள் பட்டியலில் தங்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.
    இப்படி பள்ளிகளில் பயிலும்போதே பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உருவாக்கிவருகிறது.
    படித்த பாடங்களை மனதில் நிறுத்தி அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து தேர்வு எழுதுவதற்கு அடிப்படையாக அமையும் நினைவாற்றல் சக்தி (Memory Power) மாணவர்களிடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்காகவே தேர்வு (Examination) நடத்தப்படுகிறது. குறிப்பாக – பள்ளிகளில் படிக்கும்போதே தாங்கள் படிக்கும் பாடத்தை எந்த அளவுக்கு மாணவர்கள் புரிந்து படித்திருக்கிறார்கள்? படித்த பாடங்களை அவர்களால் எந்த அளவுக்கு எளிதில் நினைவுக்கு கொண்டுவர முடிகிறது? என்பதைப்பற்றி அறிந்துகொள்ளும் வகையில் தேர்வு நேரத்தில் கேள்வித்தாளில் கேள்விகளை அமைத்திருப்பார்கள். சில கேள்விகள் மாணவர்களின் பகுத்தாய்வு செய்யும் திறனை (Analytical Skill) பரிசோதிக்கும் வகையில் இடம்பெறும்.
    பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகளெல்லாம் “மாணவர்களின் நினைவாற்றல் திறனை” அளவிடுவதற்காகத்தான் நடத்தப்படுகிறது என்பதை மாணவ – மாணவிகள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படை உண்மையைப் புரியாத மாணவ – மாணவிகள் தேர்வில் ‘காப்பி’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். “தேர்வு விடைத்தாளில் (Answer Paper) விடைகள் எழுதப்பட்டிருந்தால் மதிப்பெண் வழங்கி விடுவார்கள். எனவே கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடையைப் பக்கத்தில் பார்த்து எழுதியோ, துண்டுப்பேப்பரை மறைத்து வைத்துக்கொண்டு எழுதியோ, காப்பி அடித்து தேர்வை எழுதிவிட வேண்டும்” என்றஎண்ணத்தை சில இளைய உள்ளங்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் விளைவுதான் அவர்கள் ‘காப்பி’ அடிப்பதற்கு அடிப்படை காரணமாக மாறிவிடுகிறது.
    “மதிப்பெண்கள் அதிகமாக பெற்றுவிட்டால் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். என்னை சிறந்த அறிவாளி என்று சமுதாயம் நினைக்கும் எனக்கு மேற்படிப்பில் எளிதில் இடம் கிடைக்கும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்” என்ற எண்ணத்தில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற விரும்புகிறார்கள். தேர்வை ஒழுங்காக எழுத இயலாது என்ற நிலை உருவாகிவிட்டால், “எப்படியாவது நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும்” என்று நினைத்து குறுக்கு வழிகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
    குறுக்கு வழியில் மதிப்பெண் பெறவிரும்பு பவர்கள் தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கேள்வித்தாள் ‘அவுட்’ ஆகுமா? என்று எதிர்பார்க்கிறார்கள். துண்டுத்தாளில் எழுதி அதனை கைக்குட்டைக்குள் வைத்து தேர்வு நடக்கும் இடத்திற்கு கொண்டுச்செல்ல திட்டமிடுகிறார்கள். கைகளில்கூட சில விடைகளை எழுதிவைத்துக்கொள்கிறார்கள். ‘காப்பி’ அடிப்பதற்கு எத்தனையோ வழிகளை கடைபிடிக்கிறார்கள். இப்படி குறுக்கு வழியில் தேர்வு எழுதி, உயர்மதிப்பெண் பெற்றவர்களுக்கு சில வேளைகளில் வேலைகூட கிடைக்கலாம். ஆனால் அந்த வேலையில் அவர்களால் நிம்மதியாக இருக்கமுடியாது. அப்படி நிம்மதியாக இருந்தாலும் பதவிஉயர்வு (Promotion) அவர்களுக்குக் கிடைப்பது இயலாத காரியமாகிவிடும். பதவி உயர்வு பெற்றாலும் அந்தப் பதவியில் அவர்கள் பிரச்சனைகளையே சந்திக்கவேண்டிய நிலை வந்துவிடும். வாழ்நாள் முழுவதும் அவர்களது மனசாட்சியே அவர்களை மாறிமாறி கேள்வி கேட்கும். கொடுமையாய் வதைக்கும்.
    அது ஒரு காலை நேரம்.
    “ஹோட்டலுக்குப் போனார் ஒருவர். மேஜை அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்ததும் “சார் உங்களுக்கு என்ன வேண்டும்?” என சர்வர் கேட்டார்.
    “உங்கள் ஹோட்டலில் என்ன இருக்கிறது?” என்று வந்தவர் விசாரித்தார். “இட்லி, வடை, பொங்கல், பூரி…….” என ஒருசில உணவு வகைகளின் பெயரைச்சொன்னார் சர்வர். அதற்குமேல் அந்த சர்வரால் உணவு வகைகளின் பெயரைச் சொல்ல முடியவில்லை.
    “வேறு என்னப்பா இருக்கிறது?” – வந்தவர் கேட்டார். அந்த சர்வர் திகைத்தார்.
    அது ஒரு நடுத்தர ஹோட்டல் என்பதால் அங்கே சுமார் 30க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இருந்தது. அத்தனை உணவு வகைகளின் பெயர்களையும் சர்வரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
    “தம்பி சர்வர் வேலைக்கு வந்தாச்சு. என்னென்ன அயிட்டங்கள் ஹோட்டல்ல இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியவில்லை நீ என்ன படித்திருக்கிறாய்?” என சாப்பிட வந்தவர் கேட்டார். கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தாலும் “பிளஸ் 2 படித்திருக்கிறேன்” என பதில் தந்தார்.
    வந்தவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
    பிளஸ் 2 முடித்தபின்னும் தான் செய்யும் வேலைக்கு ஏற்றநினைவாற்றலை வளர்க்க இயலாத அந்த சர்வர் அங்கு அவமானப்பட்டார். ஒரு சர்வர் வேலைக்குக்கூட “நினைவாற்றல்” நிறையத் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட மேஜையின் அருகில் நின்று, சாப்பிட வந்தவர்களிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்டு, தகவல் அறிந்து, அவர்களுக்கு ஏற்றஉணவை சரியான நேரத்தில் கொண்டுவந்து, சரியாக பறிமாறிவிட்டு அவர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை உள்ளடக்கிய ‘பில்’ தயார் செய்து கொடுப்பது சர்வருடைய பணியாக இருக்கிறது. இந்தப்பணியில் ஒரு சிறிய நினைவுப் பிழை ஏற்பட்டால்கூட பணத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும். அப்படி பண நஷ்டம் ஏற்பட்டால் சர்வர் வேலைக்கு ஆபத்து வந்துவிடும்.
    எந்தவொரு வேலையில் ஈடுபட்டாலும் ‘நினைவாற்றல் சக்தி’ (Memory Power) என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. இதனால்தான் சின்னஞ்சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும், சிறுவர்களையும் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளிகளிலும் நினைவாற்றலை வளர்ப்பதற்கான பயிற்சிதான் அதிகமாக வழங்கப்படுகிறது. ஒருவருடைய நினைவாற்றல் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்றவாறு சரியான முறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? என்பதை அறிந்துகொள்வதற்காகவே தேர்வுகளை நடத்துகிறார்கள். ஆனால் தேர்வு காலம் என்றாலே நிம்மதியைக் சீர்கெடுக்க வருகின்றகாலம் என நினைத்து சில இளைய உள்ளங்கள் பயப்படுகின்றனர்.
    தேர்வு நேரத்தில் சில மாணவ – மாணவிகளுக்கு தேவையில்லாத பயம் வந்துவிடுகிறது. தேவையில்லாத பயம் உருவாக பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
    குறிப்பாக –
    · பாடங்களைப்பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்துகொள்ள இயலாமல் இருப்பது
    · படிக்கும் பாடத்தின்மீது ஆர்வம் இல்லாமல் இருப்பது
    · வாரந்தோறும் நடத்தப்படும் தேர்வுகளிலும், மாதத் தேர்வுகளிலும் முறையாக படிக்காமல் தேர்வு எழுதுவது.
    · தேர்வை எதிர்நோக்க உதவும் பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது
    · உடல் நிலையைப் பாதுகாப்பதில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது.
    · நினைவுக்கலையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது.
    · வகுப்பில் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிக்காமல் இருப்பது.
    · ஆசிரியர் பாடம்நடத்தும்போதே வேண்டிய குறிப்புகளை நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ளாமல் இருப்பது.
    · பாடம் தொடர்பான வேறுசில புத்தகங்களையும் படித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது
    – ஆகியவை தேர்வு நேரத்தில் பயத்தை(Fear) உருவாக்கும் காரணிகளாக (Factors) அமைந்துவிடுகின்றன.
    தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளில் பாடங்களைப் படித்து, அடுத்தநாள் தேர்வு எழுதி அதற்கு அடுத்த நாள் படித்த பாடத்தை மறந்துவிடுகின்ற“புதிய கலாச்சாரம்” இப்போது உருவாகத் தொடங்கிவிட்டது. இதனால்தான் தேர்வுநேரத்தில் “நன்றாகத் தேர்வு எழுத வேண்டும்” என்றசிந்தனையில் தேர்வு எழுதுவதற்குப்பதில் தேவையில்லாத செயல்களில் சில மாணவ – மாணவிகள் ஈடுபடுகிறார்கள்.
    பாடங்களை ஒழுங்காக படிக்காதவர்கள் மட்டுமே தேர்வு நேரத்தில் பயப்படுவார்கள். தேவையில்லாமல் கோபப்படுவார்கள். படிப்பதற்கு ஆர்வமில்லாத நிலையை உருவாக்கி ஒருவித மன அழுத்தத்தோடு காணப்படுவார்கள். மன அழுத்தம் (Depression) அதிகமாகும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை அவர்கள் திசைமாறிச் செல்ல வைத்துவிடுகிறார்கள்.
    இவர்கள் வாழ்க்கை சிறந்ததாக அமையவேண்டுமென்றால் படிக்கும்போது கவனத்தோடு படிக்கவேண்டும் பண்போடு பழக வேண்டும். எதிர்கால சிந்தனையோடு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். உயர்ந்த நெறிகளோடு வாழப் பழக வேண்டும். அப்போது வாழ்க்கை வசந்தமாகும். மகிழ்ச்சி உங்களுக்குச் சொந்தமாகும்.

    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

    வளர்ந்து வரும் மாணவர்கள் சமுதாயத்தை ஓர் ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுவதில் உயர்கல்விகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதன் வழியே மாணவர்களின் உயர்கல்வி வேலை வாய்ப்புள்ள படிப்பாக அமையுமானால் அதன் மூலம் தானும் தன்னைச் சார்ந்த குடும்பமும் வளம் பெறுவதுடன் தன்னுடைய பகுதியும் உயர்வடைகின்றது. ஒரு மாணவன் தகுந்த படிப்பின் மூலம் சரியான தன்னுடைய எதிர்காலத்தினை அமைக்கும்பொழுது, தவறான வழிகளிலும் செயல்படுவதற்கான கூறுகள் அனைத்தும் தடைபடுகின்றது. மாறாக உயர்கல்விக்குப் பிறகு வேலைவாய்ப்புகள் குறையும் பொழுது தவறான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டு அதன்மூலம் குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
    மாணவர்கள் பொறியாளர்களாகவோ அல்லது மருத்துவராகவோ ஆனால் தான் வாழ்வு வளம் பெறும் என்ற நிலை முற்றிலும் மாறி அதற்கு இணையான வசதி வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் பெரும்பாலான தொழிற்கல்விகள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளன. சில படிப்புகளில் அதன் கல்வி பெறும் காலம் முடிவடைதவற்குள் மாணவர்கள் தங்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்கின்றனர். அந்த வகையில் 100 சதம் வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ள படிப்புகளில் இரண்டை இந்த இதழில் அறிய இருக்கின்றோம்.
    1. மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் துறை
    தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் இல்லாமல் வருவதில்லை. திரைப்படங்களில் வரும் ஸ்பெஷல் எபெக்டுகள் இந்த நவீன தொழில்நுட்பத்தின் விளைவுகள். வரி வடிவம், ஓசை, அனிமேஷன், கிராஃபிக் ஆர்ட், வீடியோ ஆகியவற்றை கம்ப்யூட்டர் மூலம் ஒன்றிணைந்து உருவாக்கும் தொழில்நுட்பம் தான் மல்டிமீடியா. 2டி-அனிமேஷன், 3டி-அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ், இமேஜ் எடிட்கள், ஆடியோ வீடியோ எடிட்டிங், வெப் டிசைனிங் போன்ற அனிமேஷன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் கற்றுத்தரப்படுகின்றன. அனிமேஷன் துறையில் ஈடுபட விரும்புபவர்கள், ஓவிய அறிவு, வண்ணங்கள் வடிவமைப்பு குறித்த தெளிவான பார்வை, அழகியல் உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
    மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் படிப்புகளின் வேலைகள் திரைப்படத் துறையில் மட்டுமே இருப்பதாக கருதிவிடக்கூடாது. விளம்பர நிறுவனங்கள், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், வீடியோ கிராபிக்ஸ் மையங்கள் ஆகியவற்றிற்கும் அனிமேஷன் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வெளிநாட்டின் திரைப்படங்கள் போலவே இந்தியாவிலும் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அனிமேஷன் உதவியுடன் தயாரிக்கப்படும் விளம்பரங்களும், டி.வி. தொடர்களும் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்கின்றன.
    பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் அனிமேஷன் மற்றும் விஷுவல் கம்யூனிகேசன் போன்ற படிப்புகளையும், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஒரு வருட பட்டயப்படிப்புகளை அனிமேஷன் துறையில் பயிலலாம்.
    சிறந்த கல்லூரிகள்
    · National Institute of Design, Ahmadabad.
    · Apeejay Institute of Design, New Delhi.
    · Tronz Webel Academy, Kolkata.
    · MIT Institute of Design, Pune.
    · Lexicon College of Arts and Design, Guwahati.
    கம்பெனி செகரெட்டரி படிப்பு
    தற்போதைய வேகமான பொருளாதார வளர்ச்சியின் சூழ்நிலையில் ஒரு நிறுவனத்தில் கம்பெனி செகரெட்டரி (நிறுவன செயலர்) பணிகள் முக்கியமானதாகும். கம்பெனிகள் சட்டம் மற்றும் பங்குகள் பரிவர்த்தனை தொடர்பான சட்டங்களில் நிபுணராக விளங்குவதால் அவர் நிறுவனத்தின் தொடக்கத்திலிருந்து பணியையும் தொடர்கின்றார்.
    பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர், பொது மேலாளர் போன்ற உயர்பணிகளில் கம்பெனி செகரெட்டரிகளே செயல்படுகின்றனர். நிறுவனத்தின் சட்டம், நீதி, நிர்வாகம், பணியாளர் நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகள் சிறப்பாக நடைபெற உதவுகின்றனர்.
    இந்திய பாராளுமன்ற சட்டத்தின் கீழ் செயல்படும் “தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரெட்டரிஸ் ஆஃப் இந்தியா” கம்பெனி செகரெட்டரி படிப்பை அஞ்சல் வழி மூலம் கற்பிக்கின்றது. இதன் தலைமை அலுவலகம் புது டெல்லியிலும், சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மண்டல அலுவலகங்களும் 69 கிளை அலுவலகங்களும் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன.
    படிப்பின் நிலைகள்
    1. ஆரம்ப நிலை Foundation Programme
    4 தாள்கள்; கட்டணம் ரூ. 36,000
    2. நிர்வாக நிலை Executive Programme
    2 பிரிவுகள்; 16 தாள்கள்; கட்டணம் ரூ. 7,000 (வணிகவியல் பட்டதாரிகள்). ரூ. 7,750 (பிற பட்டதாரிகள்)
    3. தொழில்முறை நிலை Professional Programme
    4 பிரிவுள்; 8 தாள்கள்; கட்டணம் ரூ. 7,500
    SC / ST மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்குப் பயிற்சி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகின்றது.
    அடிப்படைத் தேர்வை எழுத பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவைப் படித்தவர்களும், நிர்வாக நிலைத் தேர்வை அடிப்படைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களும், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்களும் தகுதியானவர்கள். இதன் பின்பு புரபசனல் படிப்புக்கான தேர்வை எழுதலாம்.
    புரபசனல் தேர்வின் வெற்றிக்குப் பின் 16 மாத மேலாண்மைப் பயிற்சியின் முடிவில் அரசு இன்ஸ்டிடியூட் பதிவு செய்தவர்களுக்கு (Associate Company Secretary) முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும். தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும்.
    மேலும் விபரங்களுக்கு,
    The Institute of Company Secretaries of India
    Southern India Regional Office
    No. 9, What Grafts Road
    Nungambakkam, Chennai 600 034
    Phone: 044 28279898 / 28268685
    www.icsi.edu
    மாணவர்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என்ற பொதுநல எண்ணத்தோடு பல்வேறு கல்விப்பணிகளை ஆற்றிவரும் செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு மற்றுமொரு சேவையாக தினமும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை இலவச கல்வி ஆலோசனை நிகழ்ச்சிகளை 0424 2500073 என்ற தொலைபேசி எண் வாயிலாக அளித்து வருகின்றது.
    சுமார் 2.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சேர்க்கை 2011 கலந்தாய்வுகள் அடுத்த மாதம் (ஜீன்) தொடங்க விருப்பதால் அதன் தொடர்பான விபரங்கள் அடுத்த இதழில் …

    உழைத்துக் கொண்டே இருங்கள்

    “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்ற பொன்மொழியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். உழைப்பாளர் தினம் என்று இன்றைக்கு உழைப்புக்கும், உழைப்பாளிகளுக்கும் நாம் பெருமை தருகிறோம். அத்தகைய உழைப்பை நீங்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், உங்கள் வாழ்க்கை முழுவதும். நீங்கள் ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த லட்சியப் பாதையில் உங்கள் பயணம் தொடர்ந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் – அஞ்சாமல் நீங்கள் முன்நோக்கிச் சென்று கொண்டிருக்க வேண்டும்.
    தளராத ஊக்கத்தைக் கொள்ளுங்கள்
    நீங்கள் எண்ணுகின்ற எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். நீங்கள் அடைய விரும்புகின்ற குறிக்கோள் உயர்ந்த தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். வெறும் எண்ணத்தோடு நின்றுவிடாமல், என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு ஊக்கம் வேண்டும். தளராத ஊக்கம் இருந்தால்தான் இடைவிடாத முயற்சிகளை நீங்கள் செய்ய முடியும்.
    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்கம் உடையான் உழை
    என்ற வள்ளுவரின் கருத்தை நினைவில் கொள்ளுங்கள்.
    விருப்பமில்லாமல் வாழ்க்கையில் நல்ல திருப்பமில்லை
    நீங்கள் சிறந்த தொழிலதிபராக வர வேண்டும் என்று மிகவும் விரும்புகிறீர்கள். நீங்கள் எந்தத் தொழிலைச் செய்ய விரும்புகின்றீர்களோ, அந்தத் தொழிலில் அதிக நாட்டம் கொண்டு உழைக்க வேண்டும். முயற்சியும், உழைப்பும் இருந்தால் நீங்கள் விரைவில் முன்னேறி விடலாம். அம்பானி சகோதரர்கள் மிகச்சிறந்த தொழிலதிபர்களாக விளங்கிக் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டி முதன்மை இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்த அளவுக்கு அவர்கள் உயர்வடைந்ததற்குக் காரணம், அவர்கள் தொழில் மேல் கொண்ட விருப்பமே ஆகும். விருப்பமில்லாமல் வாழ்க்கையில் நல்ல திருப்பமில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பலஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார் என்று சொன்னால், அதற்கு முக்கியக் காரணம் சச்சின் கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமே. ஆர்வம் இருந்தால் முயற்சி தானாகவே வந்துவிடும். அதன்பிறகு கடுமையான உழைப்பும் உங்களைத் தேடிவந்துவிடும். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?
    ஒரே குறிக்கோளுடன் உழையுங்கள்
    நீங்கள் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். சிறந்த தொழில் அதிபராகத் திகழ வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், ஒரே மாதத்தில் உயர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அவ்வாறெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடாது. உங்களுடைய லட்சியம் வெற்றி பெறும்வரை பொறுமையாக இருக்கவேண்டும். “பொறுமை கடலினும் பெரிது’ என்பதை மறந்துவிடாதீர்கள்’. “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று நரி திராட்சைத் தோட்டத்தை வெறுத்து ஓடிப்போன கதையாக உங்களுடைய செயல்களும் அமைந்துவிடக் கூடாது. “இந்தத் தொழில் எனக்குப் பிடிக்கவில்லை. நான் உயர்வடைவதற்கு நீண்ட காலத்தாமதம் ஆகும் போலத் தெரிகிறது. எனவே வேறு தொழிலை நான் நாடிச் செல்கிறேன்’ என்று சென்று விடாதீர்கள். நீங்கள் ஒரே நோக்கம், ஒரே லட்சியம் ஆகியவைகளைக் கொண்டிருக்க வேண்டாமா? குறிக்கோள்களை நீங்கள் மாற்றிக் கொண்டே இருந்தால் உங்களுடைய உயர்வு சிதைந்து போகாதா?
    ஒரே துறையில் இறுதி வரை போராடுங்கள்
    சாதாரண எறும்புகளைப் பாருங்கள். ஊர்ந்து ஊர்ந்து சென்று கடினமான கல்லைக் கூடத் தேய்த்துவிடுகிறது. எனவே ஒரே லட்சியத்தில் முயற்சி மட்டும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறலாம். ஒரு வேளை நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் துறையில் தோல்வி ஏற்பட்டால் மனம் சோர்ந்து போய் விடாதீர்கள். அத்துறையில் மீண்டும் மீண்டும் கவனத்தைச் செலுத்தி, முன்னுக்கு வரும் வழிகளை ஆராய்ந்து பார்த்து அத்துறையில் வெற்றி பெறுங்கள். கொள்கைகளை மாற்றிக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. அரசியலில் வேண்டுமானால் கொள்கைகளை மாற்றிக் கொண்டு “கே(ô)டீஸ்வரர்கள்” ஆனவர்கள் உண்டு. ஒரே துறையில் இறுதிவரை போராடிக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்படி நீங்கள் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும்.
    தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
    கடுமையான உழைப்பு வீண் போனதாகச் சரித்திரம் கிடையாது. கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம். கடுமையாக உழைக்கும் உழைப்பாளி தோற்றுப் போனதாக எவரையேனும் நீங்கள் சொல்ல முடியுமா?
    நீங்கள் கடுமையாக உழைப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பது, உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையே. தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன உழைத்தும் பயனில்லாமல் போய்விடும். தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் உங்களுக்கு எப்போதும் மனதில் மலர்ச்சி இருக்கும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்களுக்கு விரைவில் தளர்ச்சி வந்துவிடும். தளர்ச்சி வந்துவிட்டால் பிறகு உழைப்பதில் நாட்டம் வருமா என்ன? எனவே உங்களின் செயல்களின் மேல் – ஏன் உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எதையும் சாதிக்கலாமே.
    பொறுமையும், விடாமுயற்சியும் வேண்டும்
    நீங்கள் பொறுமையோடு, விடாமுயற்சியையும் தொடர வேண்டும். நீங்கள் தன்னம்பிக்கையோடு ஒரு செயலைச் சாதிக்க முற்படும்போது சோதனைகள் உங்களுக்கு வரத்தான் செய்யும். சோதனைகள் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும் போதனைகள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். எனவே சோதனைகள் வரும் போது மனதில் வேதனை கொள்ளாமல் சாதனைகளைப் படைப்பதில் நாட்டம் கொள்ளுங்கள். நீங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டே இருங்கள். அதே சமயத்தில் மிகச்சிறந்த வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி பெறுவதற்குக் காலம் கூடி வரும். அதுவரையில் நீங்கள் பொறுமையோடு இருங்கள்.
    அவமானங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்
    ஸிங்க்ளேர் லூயிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை ஆறு மாத காலமாக இரவு, பகலென்று பாராமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்ததும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். எவரும் இவருடைய கட்டுரையைப் படித்துப் பார்க்க விரும்பவில்லை. அந்தப் பத்திரிக்கை ஆசிரியர், “இடியட், இந்தப் பத்திரிக்கைக்கு உன் கட்டுரையைக் கொடுக்க வந்துவிட்டாய், உன் கட்டுரை இடம் பெறவேண்டிய இடம் எது தெரியுமா?’ என்று கூறிக்கொண்டே, கட்டுரையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். லூயிஸ் கோபம் கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானம், சோதனைகளைத் தாங்கிக் கொண்டார். இவரது பொறுமையும், சகிப்புத் தன்மையும், விடாமுயற்சியும் வெற்றிப் பாதைக்கு இவரை அழைத்துச் சென்றது. இவர் எழுதிய “மெயின் ஸ்டிரீட்’ என்ற நாவல் உலகத்திலேயே எந்தப் புத்தகமும் விற்காத அளவுக்கு விற்பனையாயிற்று. இவரைக் கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. லூயிஸ் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்தார். தன் திறமையைப் பிறர் கேவலப்படுத்தும்போது அதன் காரணமாக அவர் மனத்தளர்ச்சியடைய வில்லை. முயற்சி, உழைப்பு ஆகியவைகளைத் தன் வாழ்க்கையில் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.
    பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுங்கள்
    எனவே வாழ்க்கையில் எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் எவரும் முன்னுக்கு வர முடியாது. திட்டமிட்டு உழைத்து, அந்த முயற்சியின் மூலம் வாழ்க்கையில் உயர வேண்டும். தகுந்த முயற்சிகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறிவிடாது என்பதை உணர வேண்டும்.
    உங்களுடைய வாழ்க்கையில் வறுமையும், பிற தொல்லைகளும் உங்களை வாட்டி வருத்துகின்றனவா? இதற்காக நீங்கள் வருந்தாதீர்கள். எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் வாழ்வதில் ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.
    உங்களுடைய லட்சியப் பயணத்தில் சில சங்கடங்களும், பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். இதற்காக நீங்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படக் கூடாது. வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகள் தோன்றினாலும் அதை நீங்கள் எதிர்த்துக் கொண்டு சமாளிக்க முற்பட்டால், நீங்கள் நினைப்பதெல்லாம் எளிதாக நிறைவேறிவிடும்.
    மனத்தின் வலிமையைப் பெருக்குவன, துன்பங்கள் தாம்!
    எனவே உங்களுடைய வாழ்க்கையில் சங்கடங்களும், இடையூறுகளும் ஏற்படுகின்றனவே என்று மன அதிர்ச்சியும், வியப்பும் கொள்ளாமல் அவைகளை நீங்கள் வரவேற்று மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களுடைய அறிவையும், திறமையையும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாவிட்டால், உங்களுடைய அறிவையும், திறமையையும் பயன்படுத்தவே முடியாமல் போய்விடும். வாழ்க்கையில் தோன்றுகின்ற இடையூறுகளும், துன்பங்களும், சிக்கல்களும், தொல்லைகளும் உங்கள் மனத்தின் வலிமையைப் பெருக்குகின்றன. எனவே இவைகளைக் கண்டு எப்போதும் பயப்படாதீர்கள்.
    அச்ச உணர்வை அகற்றுங்கள்
    நீங்கள் ஒரு செயலைச் செய்து முடிக்க அஞ்சுகிறீர்களா? உங்களுக்கு அச்சம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முக்கியக் காரணம், உங்களுக்குத் தன்னம்பிக்கை இல்லை. உங்களுக்கு மன உறுதி இல்லை என்று அர்த்தம். எனவே அச்சத்தை நீக்கி வாழுங்கள். திறமையற்றவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு – தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு எப்போதும் பயம் இருந்துகொண்டு தான் இருக்கும்.
    தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை
    நீங்கள் எந்தக் காலத்திலும் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய முன்னேற்றத்தில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையே வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். உழைத்துக் கொண்டே இருங்கள். உயர்வு வராதா பார்க்கலாம்.

    பறக்க வேண்டுமா?

    விண்ணில் செல்லும் விமானத்தைக் காண தலையைத் திருப்புவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டான பழக்கம். ‘விமானம்’ என்றாலே கவர்ச்சியும் பரவசமும் நிறைந்த ஒன்றாக உள்ளது. விமானத்துறை சார்ந்த படிப்புகளுக்கும் அதே நிலைதான். விமானத்துறையில் வேலை செய்வது எல்லோராலும் விரும்பப்படுகிற ஒன்று. காரணம் நல்ல சம்பளம் கிடைப்பது தான். பொறியியல் சார்ந்த படிப்புகளில் இன்று மாணவரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள படிப்பு Aeronautical Engineering. பொறியியல் படிப்புகளில் இந்தியாவில் ஒரு சில கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. Aeronautical Engineering படிப்புக்கு தகுதியான மாணவர்கள் மட்டுமே சேர அனுமதிக்கப் படுகின்றனர். Aeronautical Engineering படித்து வெளிவரும் மாணவர்கள் மதிப்புமிக்க நிறுவனங்களில் தங்கள் கனவு நிறைவேற வேலையில் சேருகின்றனர்.
    இவ்வளவு பெருமைக்குரிய படிப்பை வழங்குவதில் பார்க் பொறியியல் கல்லூரி சிறப்பான இடத்தைப் பெறுகிறது. பார்க் கல்வி நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர் திருமதி அனுஷா ஆர். மகேஷ் அவர்கள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை எல்லோரும் விரும்பும் வண்ணம் புகுத்தி வருகின்றார். பார்க் கல்வி நிறுவனங்களில் தற்போது இளநிலை (UG) பட்டப்படிப்பிற்கு முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளும், முதுநிலை (PG) பட்டப்படிப்பிற்குப் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட துறைகளும் உள்ளன. பல படிப்புகள் இருந்தாலும் நாட்டிற்கு சேவை செய்யும் விதத்தில் விமானப் பொறியாளர்களை (Aero Engineers) உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது Aeronautical Engineering. இத்துறையில் தேர்ச்சி பெற்று வெளியே செல்லும் மாணவர்களில் “சிறந்த மாணவர்” ஒருவருக்கு IAF சுழற்கோப்பை (Rolling Trophy) வழங்கி சிறப்பிக்கின்றது.
    Aeronautical Engineering படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு ISRO, NAL, HAL, ADA, IAF, IA, IN, DRDO போன்ற விமானத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கின்றது. இது தவிர நாசா விண்வெளி ஆய்வகத்தில் இக்கல்லூரியில் படித்த இரண்டு மாணவர்கள் உள்ளனர்.
    B.E. in Aeronautical Engineering படிப்பு பார்க் கல்வி நிறுவனங்களில் இரண்டில் உள்ளது. இது தவிர M.E. மற்றும் Ph.D. போன்ற படிப்புகளும்
    இத்துறையில் வழங்கப்படுகின்றன.
    விமானத்துறைச் சார்ந்த படிப்புகளைப் படிக்க பார்க் பொறியியல் கல்லூரியை அணுகுவோம். சிறந்த விமானத்துறை சார்ந்த வல்லுனராகி வெளியே வருவோம்.

    மேலும் விபரங்களுக்கு
    Park College of Engineering
    and Technology
    Kaniyur, Coimbatore -641 659.
    Phone: 0421 2334899
    Website: www.pcat.ac.in

    வெற்றிக்கு ஒரு விசா

    நமது தன்னம்பிக்கை குறைந்து கொண்டே போவதற்கு பல காரணங்கள் உள்ளன. நமது பெற்றோர் நமக்கு தேவையான அளவிற்கு ஊக்குவிக்கவில்லை. ஆசிரியர்களும் நமது தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் நமது தன்னம்பிக்கையைக் குறைப்பதற்கான பல வேலைகளை அனைவரும் செய்திருக்கிறார்கள். நீ அதைச் செய்யாதே. இதைச் செய்யாதே எனத் தடை போட்டிருக்கிறார்கள்; அப்படிச் செய்தால் நீ அவ்வளவுதான் எனப் பயமுறுத்தியிருக்கிறார்கள். பல நேரங்களில் நம்மை உற்சாகப்படுத்த வேண்டிய நேரங்களில் நம்மை பலவீனப்படுத்தியிருக்கிறார்கள். வெற்றிக் கதைகளைச் சொல்லவில்லை. மாறாக தோல்வி பெற்றவர்களை உதாரணம் காட்டியிருக்கிறார்கள்.
    “அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது போல் பலமுறை நமது மனதைச் சம்மட்டியால் அடித்து அடித்து நமது தன்னம்பிக்கையைப் போக்கியிருக்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்படித்தான் ஊக்கப்படுத்த வேண்டும் என அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
    இந்தப் போட்டி நிறைந்த உலகத்தில் தன்னம்பிக் கையை வளர்த்துக் கொள்வது எப்படி ?
    1. ஒரு நாட்குறிப்பு புத்தகத்தை (டயரியை) எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளி சென்றநாள் முதல் இது வரை எத்தனை பதக்கங்கள், பட்டங்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வாங்கியுள்ளீர்கள் எனக் குறித்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கான வெற்றி நாட்குறிப்பு.
    2. காலையில் எழுந்தவுடன் நான் தன்னம்பிக்கை மிக்கவன் என ஐந்து முறை உங்களுக்குத் சொல்லிக் கொள்ளுங்கள்.
    3. முகம் பார்க்கும் கண்ணாடியில் உங்களது வலது கைப்பக்கத்தில் கண்ணாடியின் மேல் புறத்தில் “என்னால் முடியும” என எழுதிப் வையுங்கள்.
    4. “நான் சாதிக்கப் பிறந்தவன். சாதித்துக் காட்டுவேன்” என ஒரு பேப்பரில் பெரிதாக எழுதி கண்ணில் படும்படியான இடத்தில் ஒட்டி வையுங்கள்.
    5. எப்பொழுதெல்லாம் வாழ்க்கை டல்லடிப்பது போல் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்களது வெற்றி டயரியை எடுத்து படித்திடுங்கள். அடுத்ததாக என்ன செய்யலாம்? என மனம் தேட ஆரம்பித்து விடும்.
    6. வெற்றி பெற்றவர்களைச் சந்திக்க முயலுங்கள்; வாய்ப்பு கிடைத்தால் கை கொடுத்து விட்டு வாருங்கள்.
    7. நட்சத்திர ஹோட்டல் இருந்தால் அதிலுள்ள வரவேற்பு அறையில் போய் கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு வாருங்கள். நாமும் இதில் வந்து தங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என எண்ணுங்கள் அது நம்பிக்கையை அதிகமாக்கும்.
    8. உங்கள் கம்ப்யூட்டரில் டெஸ்க்டாப்பில் வெற்றி வாசகங்களை உலவ விடுங்கள்.
    9. வீட்டில் நற்சிந்தனைகளைத் தரக்கூடிய சுவரொட்டிகளை ஒட்டி வையுங்கள்.
    10. ஐந்து வருடம் கழித்து என்னவாக ஆக வேண்டும் என்பதை நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் அடிக்கடி சொல்லி வாருங்கள்.
    11. தோல்விகள் பற்றி கேள்விப் படும் பொழுதெல்லாம் அதில் என்ன நல்ல விஷயம் இருக்கக் கூடும் என ஆராயுங்கள்.
    12. ஆடைகள் அணிவதில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
    13. நடக்கும் பொழுது சாதாரணமாக நடப்பதை விட சற்று வேகமாக நடந்து வாருங்கள்.
    14. மற்றவர்களைப் பாராட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
    15. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ பயிற்சி வகுப்புகள் மற்றும் கூட்டங்களின் போது முதல் வரிசையில் அமருங்கள்.
    16. மற்றவர்களைச் சந்திக்கும் பொழுது வாழ்த்துங்கள்.
    தன்னம்பிக்கை என்பது நாம் என்ன உணருகிறோம் என்பது தான். இவைகளைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் கடைபிடித்து வாருங்கள். உங்களது தன்னம்பிக்கை எப்படி அதிகமாகாமல் போகிறதென்று பார்ப்போம். முயன்றவனுக்குத் தோல்வியில்லை. வெற்றிப் பாதையில் நடக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

    வசந்த விளிம்புகள்

    ‘டம்’ என்ற சத்தம் கேட்டது….

    அது ‘மெட்டல்’ சவுண்டு என்று எடுத்துக்கொள்ளலாம். சற்றே இன்னும் வேகத்தை கணித்து மெதுவாகவே சுழற்றி இருக்கலாம். கவனத்தை கூர்மைப்படுத்தி, மேலெழும்பி வரும்பொழுது கண்களை மூடாமல் இருந்திருக்கலாமோ?
    சற்றேரக்குறைய பாதி தூரத்தில் விழுந்த இடம் காணப்படுகின்றது… கால்களை சற்றே நகர்த்தியோ இடுப்பை வளைத்துக் குனிந்தோ இருந்தால் பந்து நகர்ந்து போயிருக்கும், ஹெல்மட்டை பதம் பார்த்திருக்காது…. காவல் துறை பயிற்சிக்குத் தேர்வான பந்து வீச்சாளர். அதுவும் முதல் ஓவரை வீச வருபவனைக் குறைத்து ஒன்றும் எடைபோட்டு விடவில்லையே….
    முட்டை அளவு வலதுபுற ஃப்ரான்டல் மண்டையோட்டின் மேல்பாகம் வீங்கிக் காணப்பட்டது. அதைக் காட்டிக்கொடுக்காத ஹெல்மெட்டும் கண்டுகொள்ள விரும்பாத மனபாங்கும் அடுத்த மூன்று பந்துகளை ஆக்ரோஷமாக ஆனால் பலனில்லாமல் ஆடச் சொல்லியது… பந்து படவேயில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உள்மனம், மெயின் அம்பயர் ‘வைட்’ என்றும் லெக் அம்பையர் அவுட் என்றும் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே…. முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் நல்ல ஆரம்பத்தை அளிப்பேன் என்று ஆரவாரத்தோடு நம்பிக்கொண்டு ஷாமியானாவின் நிழலில் இருந்த சக அணியினரை நோக்கி நகரத் தொடங்கினேன் கனமான ‘தலையோடு!’
    செந்நிறமான ஒரே அளவிலான சமதளமான காவலர் பயிற்சிப் பள்ளியின் விளையாட்டு மைதானம் கண் மூடி விழித்திருக்கிற நேரங்களில் கனவுகளில் வரக்கூடியது.
    ஒரு அடி ஆழம் தோண்டி அதனுள் சரிசமமான மெட்டல் கற்களை நிரப்பி, பிறகு மணல் கலந்த சரளை மண்ணிட்டு அதன்மீது செம்மண் இட்டு நிரப்பி பிறகு புத்து மண் என்கின்ற களிமண்ணை கொண்டுவந்து நான்கைந்து செ.மீ உயரத்திற்கு பூசினால் கிடைப்பது கிரிக்கெட் பிச் என்னும் ஆடுகளம்…
    நன்றாக தயாரிக்கப்படாவிடில், அன் ஈவன் பவுன்ஸ் (மய் உஸ்ங்ய் ஆர்ன்ய்ஸ்ரீங்) என்ற வகையில் எழும்புகிற பந்துகள் இது போன்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நண்பர்கள் கருத்துக் கணிப்பை தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.
    முதல் ஓவரில் ஏதாகிலும் இறக்கை கட்டிக்கொண்ட மாதிரி ஆறு ரன்களுக்கு ஒரு சிக்ஸரை அடித்துவிட்டால் போதும்…. பந்து வீச்சாளரின் கரங்கள் பதட்டத்தால் செயலிழந்து போகும்…. அதற்கான முயற்சியை ஆன மட்டிலும் மேற்கொண்டேன்…. இது ஒரு கைகள், கண்கள், மூளை, கால்கள், உடல், மொழி என்ற வகையிலான அற்புதமான ஒருங்கிணைப்புப் பயிற்சி…. மிகச்சரியான கால கட்டத்தில் சரியான உயரத்தில் துல்லியமாக மட்டையில் அடிபடும் பந்து வெளிப்படுத்தும் சத்தத்தைத் திருவள்ளுவர் கேட்டிருந்தால்…. குழலினிது…. யாழினிது…. என்ற குறளை அடுத்தொரு குறளும் சேர்க்கப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பார்.
    அந்த மாதிரியான நேரக்கணிப்பில் ஈடுபடுவது ஒரு தியானம். கூர்ந்த கவனம் மட்டுமே…. வெற்றியினை ஈட்டித்தரும். பந்துகள் 120 முதல் 170 கி.மீ வரையிலான வேகத்தில் சீறி வரும்பொழுது அவற்றை எதிர்கொள்ள முதல் ஆளாக மட்டை பிடிக்கும் அணியிலிருந்து கிளம்பிச் செல்வது சற்றே அல்ல, நிறைய மகிழ்சி அளிக்கும் விஷயம். அதிலும் முதல் முதல்பந்தை எதிர்கொள்ளும் ‘ஸ்ட்ரைக்கர் என்டை’ (Striker end) நோக்கிப் போகும்பொழுது அடிவயிற்றில் இன்று ஐம்பது ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், அதிவேகப் பந்து வீச்சு நமது உடலின் மீது படுகின்ற வாய்ப்பு குறித்த கணிப்பும் கலந்த கலவை உணர்வும் இருக்கிறதே அதற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.
    சில நேரங்களில் பிச்சின் பாதியில் விழுந்து சீறிப்பாயும் பந்தை சிலிர்த்துக்கொண்டு முன்னே இறங்கி விளாச மட்டை வீசினால் விளிம்பில் பட்டு ஒரு பனைமர உயரம் சென்று விக்கெட் கீப்பருக்கும் பின்னே சென்று விழுந்து நான்கை அடைந்தால் மனசுக்குள்ளே பரவசம் பிறக்குமே பந்து எங்கே போனதென தெரியாமல் நாலா புறமும் தேடி எல்லைக் கோட்டில் பார்த்தால் பிறப்பது மனசுக்குள் வசந்த காலம்.
    இப்பொழுது உலகக் கோப்பை மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்திருக்கும் காலம். கிரிக்கெட்டுக்கும் தேர்வுகளுக்கும் வேற்றுமையில் ஒற்றுமையைத் தேடத் தொடங்கினேன். ஆர்வம் கிரிக்கெட்டைத் தேர்வாகவும், தேர்வுக் காலத்தை ஆடுகளமாகவும் மாற்றிவிடுகின்ற வல்லமை படைத்தது. கேள்விகள் பந்துகளைப் போல் என்று கொண்டால் அடித்து ஆடுவதற்கு ‘திராணி” தேவைப்படுவதுபோல் பயிற்சியும் தேவைப்படுகின்றது.
    வாழ்க்கை ஒரு சுழல்பந்து வீச்சாளரைப்போல் சிலபேருக்கு கண்ணில் தெரிகையில்; கைதேர்ந்த மட்டையாளருக்கு கவனம் எத்தனை சிக்ஸர்கள் என்று கேட்பதில் இருக்கின்றது. தேர்வுகளில் வெற்றி தோல்விதான் வாழ்வில் வசந்தத்தை தீர்மானிக்கின்றன என்பது ஒரு கண் பார்வை தான். இரண்டு கண்களையும் திறந்து கொண்டால் தேர்வு வெறும் ‘ஓவர்’ தான் அதற்கு ஓவர் இம்பார்டன்ஸ் தர வேண்டியதில்லை என்பது புரிய வருகின்றது. ஓவர் என்கின்ற பெயரே இவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கின்றது. விளையாட்டை விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளாத அதே வேளையில் வாழ்க்கையை விளையாட்டுத் தனமாக எடுத்துக்கொள்கின்ற மனபக்குவம் எத்தனை பேருக்கு வாய்க்கும். விளையாட்டு வசந்த விளிம்பு என்பது அதனைத் தாண்டியும் உள்ளே எட்டிப் பார்ப்பவர்களுக்குத் தெரிய வரும்.
    அடுத்த பந்துவீச்சுக்கு ஆயத்தம் செய்கையில் ஒவ்வொரு நாளும் நடைபோட நம்மை அதே அளவு தயாரித்துக்கொண்டோமா? என்று கேட்டுக்கொள்கின்ற நிதானம், ஞானம் இரண்டும் கிடைக்கிறது. கிரிக்கெட்டும் தேர்வுக் ‘கள்ளும்” இலை தழைகளில்லாத போதிமரம். அவை அனுபவத்தோடு அளித்துப் போவதென்னவோ அலசிப் பார்த்து உண்ணவேண்டிய ஞானப் பழங்கள்.
    தலையில்பட்ட அடிக்கு வருவோம்….
    தலைக்குச் செல்கின்ற இரத்த ஓட்டம் பாதிப்பாயிருக்குமோ? ‘Skull’ என்கின்ற மண்டை ஓட்டு எலும்பு, ஏதும் பாதிப்பு அடைந்து இருக்குமா? இருந்தால்… ஹெல்மெட் தடுத்திருக்கிறதே… தலைமுழுக்க ஒருவித வலி பரவி… குறைந்து… தலைசுற்றி சரியாவது போல தெரிந்தது. கால்கள் நிதானம் பெற தொடங்கியது. நண்பர்களைப் பதட்டப்படுத்திவிடக் கூடாது. அதனால் அவர்கள் மனவருத்தமடைந்துவிடவும் கூடும்…
    ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை… I am Ok… என்று சொல்லி மனதில் வலிமையெல்லாம் கூட்டிக்கொண்டு தொடர்ந்து விளையாடத் தொடங்கினேன். ஒருவேலை ஹெல்மட் இல்லாதிருந்தால்… நிலை நினைக்கவே சிரமமாக இருக்கின்றது…
    நண்பர் ஒருநாள் சொன்னார், ஹெல்மெட் மற்றும் பேட்கள் (Pad-கள்) எல்லாம் அணிந்து இடுப்பில், நெஞ்சில், கையில், தலையில் என பாதுகாப்பு முஸ்தீபுகளை செய்து கொண்டு பிட்சில் (Pitch) இறங்கினால் ஏதோ விண்வெளி வீரனைப்போலாகி விடுகின்றோம். பந்து வீடியோகிராப்பில் பார்க்கிற மாதிரிதான் தெரியும். வலைவலையாக இருக்கிற காப்புக் கவசம் தாண்டி சீறி எழும் பந்தை சட்டென சந்திக்கின்ற சாமர்த்தியம் அலாதியானதுதான்.
    பள்ளியில், கல்லூரியில் படித்த மூளை படமும் அதில் டெம்போரல் பகுதி கேட்பதற்கும், ஆக்ஸிபிடல் பகுதி சமநிலையைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுவதாய் படித்ததும், முன்புற மூளை நினைவாற்றல் பகுதியாக இருப்பதும் நினைவிற்கு வந்தது.
    அண்ணா, எவ்வளவு முறை சொல்லியிருக்கோம்… டென்னிஸ் பந்துல விளையாடலாமில்லையா? ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கறீங்க? என்று தங்கை அபி கேட்கையில் அதானே… என்று தோன்றும் ஆனால் நட்பு வட்டம் அதையெல்லாம் கவனிக்கின்ற வகையில் இல்லை… பாதுகாப்பு தேடும் மனப்பாங்கு செயல்பாட்டிற்கு முதல் எதிரி… காப்பு எங்குள்ளது என்று தொடர்ந்து தேடினால்… கண்களில் வாய்ப்பு என்றுமே விழுவதில்லை…
    கிரிக்கெட் விளையாட்டுக்குள் ஆழமாகச் செல்கையில்தான், நாம் எடுக்கும் எல்லாச் செயல்களிலும் ஆழமாகச் செல்லக்கூடும்… வேகப்பந்தை விரட்டியடிக்கின்ற உற்சாகம்… உள்ளத்திற்குள் எவ்வளவு நாட்களானாலும் தெளிவாக உறைந்திருக்கிறது. சில தேர்வுகளில் சில பதில்கள் மனதில் பதிந்து விடுவதைப்போல. இப்படித்தான் பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் பொது தேர்வில் நூற்றி தொண்ணூற்றி ஒன்பது மதிப்பெண் பெற்றபொழுதும், விட்டுப்போன ஒரு மதிப்பெண்; ஒரு ‘மார்க்’ கேள்வியில் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பின் தத்துவம் என்ன? என்பது அணுக்கரு பிணைவு என தெரிந்தும் பின்னர் எழுதுவோம் என்று விட்டது? விடுபட்டுப் போயிருப்பது தேர்வு முடிந்தபின்தான் நினைவிற்கு வந்தது.
    பந்துகளை எப்படி எதிர்கொள்வதென திட்டமிட்டது கூட எதிர்பாராத நிலையில் விடுபட்டுப்போவதும் உண்டு. இப்படி அடிக்கலாம் அப்படி விளாசலாம் என்றெல்லாம் நினைத்துப் பார்த்தாலும்… வீசிப் பார்த்தாலும் விளையாடுகையில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்.
    அணிகளில் ரன் அவுட் குறித்து பேசியே ஆகவேண்டும். பரபரப்பாகவே ஓடிக்கொண்டிருப்பதும் சிலபேர் ரன்அவுட் ஸ்பெஸலிஸ்ட் என்ற பெயர் எடுத்திருப்பதும் ஆச்சரியமில்லை. சின்ன வயதில் பழனிச்சாமி என்றொரு நண்பன் ஆரவாரத்தில் அவனை மிஞ்ச இன்று வரையில் யாரையும் பார்த்ததில்லை. தேர்வு அறைக்குள் அமைதியாய்த்தான் தலைகள் தெரியும் ஆனால் நெஞ்சின் இரைச்சல் காதுகளுக்குள் அனுபவிக்க முடியாவிட்டாலும் மூளைக்குள் முகாமிட்டுக் கொண்டு இதய இசையமைப்பாளர் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருப்பார்.
    இன்றைய கட்டுரைக்கு ஒரு கிரிக்கெட் பந்து தலையில் மோதிய தம்மாத்துண்டு மேட்டரைப் போய் வசந்த விளிம்புகள் என்று தலைப்பு வைத்து…. இழுத்து இழுத்து எழுத வேண்டுமா? என்று யோசித்துப் பார்த்த பொழுது…. திரைப்படங்களில் கதைக்கும் திரைக்கதைக்குமான வித்தியாசம் மனதில் தோன்றியது. வில்லியம் டேரிலிம்பிளனின் ஒன்பது வாழ்க்கைகள் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தபொழுது கெல்வினேட்டர் கம்பெனியின் எம்.டி. முற்றும் துறந்த முனிவரான கதையைப் போட்டு நவீனகால இந்தியாவில் திருமூலருக்கும் பட்டினத்தாருக்கும் பங்கிருக்கிறதா என்று சுமார் எழுநூறு பக்கங்கள் ஆங்கிலத்தில் அலசுவதைப் புரிந்துகொள்ள இயன்றது. சாமுவேல் பெக்கட் என்கின்ற எழுத்தாளரின் நாடகங்கள் மௌனத்தையே சுற்றிச்சுற்றி வந்து தொட்டு கடைசியில் வார்த்தைகள் குறித்தே வெறுப்பாகவிருக்கிறது மௌனம் மனதிற்கு வசந்தமாகவிருக்கின்றது என்றெல்லாம் அவர் வசனங்களை வைத்து எழுதியதும், அவருடைய நண்பர் ஜேம்ஸ் ஜாய்ஸை சந்தித்த பொழுதுகளில் இருவரும் பல மணிநேரங்கள் எதையும் பேசாமல் அமைதி மொழியில் அளவளாவிக் கொண்டிருந்ததாக எழுதப்பட்டு இருந்ததைப் படிக்க நேர்ந்தது. சில பல நண்பர்களோடு பேசாக்காட்டிலும் எங்கு விட்டோமோ? அதே நினைவுகளோடு தொடர முடிகின்றதே… இருபத்தி மூன்றாம் புலிகேசியில் வரலாறு முக்கியம்! அமைச்சரே என்று நினைவலைகளை ஒரே உருவத்தில் வைத்துக்கொள்வது போல… பாரதியார் ஒருவேளை தொண்ணூற்றி ஒன்பது வயதுவரை வாழ்ந்து வயதான தோற்றத்தோடு வடிவுருவங்களை மனதில் தோற்றுவித்திருப்பின் ஜெயபேரிகை கொட்டடா! என்று படிக்கையில் இரத்தம் சூடேறுவது இதே அளவு இருக்குமா? என்பதும் சந்தேகம்தானே… ஒரு கோடி காட்டுவதைப் பிடித்துக்கொள்வது மகிழ்வான விஷயமாக மானிட உலகில் என்றென்றும் இருந்து வந்துள்ளது.
    மொழியே அப்படிப்பட்டதொரு படைப்புத்தானே. சில பல நேரங்களில் மொழியால் விவரிக்க முடியாத விஷயங்களை அர்த்தமுள்ள ‘அமைதி’ அழகாக வெளிப்படுத்தி விடுகின்றது. சாமுவெல் பெக்கட்டை படித்துப்பார்த்தால் மௌனத்தை எப்படி வசனமாக உபயோகப்படுத்தினார் என்று தெரியுமோ? என்னவோ? இனிமேல்தான் முயற்சிக்க வேண்டும்.
    சற்றே தடம்மாறிப் போயிருந்தால் CT Scan, MRI Doppler Imaging என்று மருத்துவத்துறையின் உச்சகட்ட கவனத்திற்காளாக்கியிருக்க வேண்டிய முன்நெற்றிப் புடைப்பு அல்லது சகுனத் தடை என்றோ? அபாய எச்சரிக்கை? என்றோ? ஆட்டத்தை முடித்துக்கொள்ளச் செய்திருக்கவேண்டிய நிகழ்வு எப்படியொரு பாதையில் நகர்ந்தது என்பது தனியே சிந்தித்துப் பார்க்க வேண்டியதே.
    நிகழ்ச்சியொன்றை எழுதும்பொழுது எந்த திசையிலும் வார்த்தைகள் பயணிக்கலாம்… வசந்த விளிம்புகளாய் மட்டுமே அவை நிற்கக் கூடும்… மீன் நினைவுகளைக் காட்டிலும் மீன் பிடிக்கக் கூடிய வித்தைக் கற்பனையைத் தோற்றுவிக்கின்ற முயற்சியாக எமது எழுத்திருக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தின் உருவெடுப்பே இவ்விளிம்புக் கோலம்…..

    இந்த நாள் இனிய நாள்

    நம் எல்லோருக்கும் ஒவ்வொரு நாளும் இனிமையான நாளாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை. அன்றைய பொழுது நாம் நிம்மதியாக உறங்க வேண்டும் என்றால் அது சந்தோசம் நிறைந்த நாளாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களும் நமக்கு சாதகமாகவும், நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்போதும் தான் சந்தோஷம் வரும் என்பது எல்லோருடைய நம்பிக்கை. ஆனால் எல்லா நேரமும் அப்படி இருப்பதில்லை. ‘நான்’ சந்தோஷமாக இருக்க வேண்டும்; ‘என்னுடைய’ காரியங்கள் நடக்க வேண்டும் என்பது போன்றஎல்லா எதிர்பார்ப்பும் ‘நான், எனக்கு, என்னுடைய…’ என்று நம்மை சூழ்ந்தே இருப்பதால் தான் நம்மால் பல சமயங்களில் சந்தோஷத்தை உணர முடிவதில்லை. ரோஜாவில் முள் இருப்பதால் கடிந்து கொள்கிறோம். ஆனால் முட்களுக்கு இடையே இருக்கும் ரோஜாவை பார்த்து சந்தோஷப்படுவதில்லை. சந்தோஷம் என்பது தாமாக வருவதா? இல்லை நாமாக ஏற்படுத்திக் கொள்வதா? தாமாக வரும் சந்தோஷத்தை நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் சந்தோஷம் தான் அதிகம். இப்படி ஒவ்வொரு நாளும் இனிய நாளாக மாறும் சந்தோஷத்தைப் பெறஒரு வழி உள்ளது. என்னவென்று கேட்கிறீர்களா?
    மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்போமேÐ ஒரு இளம்பட்டதாரி மேனேஜர் பதவிக்கான நேர்காணலுக்கு (Interview) ஒரு நிர்வாகத்துக்குச் சென்றார். அந்த நிர்வாகத்தின் மேலாளர் இளைஞனின் சான்றிதழ்களைப் பார்த்து நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காகப் பாராட்டினார். அவர் அந்த இளைஞனின் குடும்பத்தைப்பற்றி விசாரித்தபோது அவருடையத் தந்தை அவருக்கு ஒரு வயது இருக்கும் போதே இறந்து விட்டார் என்றும், ஒரே மகனாகிய தன்னைத் தன் தாய் பல வீடுகளில் துணி துவைத்து அதில் வரும வருமானத்தில் படிக்க வைத்ததாகவும் கூறினார். அந்த மேனேஜர் அந்த இளைஞனின் கைகளைக் காண்பிக்குமாறு கூறினார். அவரும் தன் மென்மையான கைகளை நீட்டினார். அதைக் கண்ட மேனேஜர், “ஒரு நாளாவது உன் தாய்க்கு துணி துவைப்பதற்கு உதவி செய்திருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், தனது தாய் அது போன்றவேலைகளைச் செய்ய அனுமதித்ததில்லை என்றும் தன்னை எப்போதும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும் கூறியதாக சொன்னார். பிறகு நேர்காணல் முடிந்துவிட்டதாகவும், அடுத்த நாள் வந்து முடிவு தெரிந்து கொள்ளுங்கள் என்றும் மேனேஜர் கூறினார். அன்று அவன் வீட்டிற்குச் சென்றதும் தன் தாயின் கைகளைத் துடைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார். வீட்டிற்குச் சென்றஇளைஞன், அதிகாரி சொன்னவாரு தாயின் கைகளை துடைப்பதற்காக கைகளை நீட்டுமாறு கேட்டுக் கொண்டான். குழப்பத்துடன் தன் தாய் கைகளை நீட்ட அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தன் தாயின் கைகள் காப்பு காய்ச்சியும், சொரசொரப்பாகவும், காயங்களுடனும் காணப்பட்டது. தன்னுடைய நல்ல படிப்பிற்கும், மென்மையான கைகளுக்குப் பின்னால் இந்தக் கைகள் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தான். பிறகு அவன் தாயின் கைகளைத் தன் கண்ணீரால் துடைத்தான். தன் தாயை வணங்கி நன்றி கூறினான். அன்று இருக்கும் துணிகளை அவனே துவைத்தான். வெகு நேரம் தாயும் மகனும் பேசிவிட்டு இரவு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் உறங்கினர்.
    மறுநாள் இளைஞன் நிர்வாகத்திற்குச் சென்றபோது மேலாளரிடம் நடந்ததைக் கூறினான். அதற்கு அவர் உன்னைப்போல் மற்றவர்களின் கஷ்டத்தைப் புரிந்து, உதவி செய்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மனம் கொண்ட உன்னைப் போன்றஇளைஞனே இந்த வேலைக்குத் தேவை என்று கூறி அவனை வேலையில் எடுத்துக் கொண்டார். இளைஞனும் மகிழ்ச்சியில் திளைத்தான்.
    இதுபோன்றநம் தாய், தந்தை, அக்கா, அண்ணன், தங்கை, தம்பி, கணவன், மனைவி, நண்பர்கள், உறவினர்கள்… என யாராக இருந்தாலும் உதவி செய்வதிலோ, பாராட்டுவதிலோ ஏன்Ð ஒரு சின்ன சிரிப்பு அவரை சந்தோஷப்படுத்துமேயானாலும் அதைச் செய்து பாருங்கள்Ð அவர்களின் சந்தோஷத்தில் உங்கள் சந்தோஷத்தைக் காண்பீர்கள்Ð பின்னர் எல்லா நாளும் இனிமையான நாளேÐ…

    தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு

    நேர்முகம் : என். செல்வராஜ்

    “என்னிடத்தில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. உலகச் சாதனையை முறியடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். என் பயிற்சியிலும் என் திறமையிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.

    Continue Reading »

    மாணவனே… வெற்றி மீது பற்று வை

    என் இனிய இளைஞர்களே,
    உங்களை எப்போதாவது சந்தித்திருப்பேனா இல்லையா! என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்களைப் போன்றபல இளைஞர்களைக் கல்வி நிலையங்களில் சந்தித்து அளவளா வியுள்ளேன். முதல் வர்கள் பலர் விளையாட்டு
    விழாவிற்கு என்னை அழைத்து
    அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளச் சொல் வார்கள். நான் அத்தகைய அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விளையாட்டிலும் படிப்பிலும் சாதனை நிகழ்த் துவது பற்றி என் கருத்துகளை இளைஞர்களோடு பகிர்ந்து கொள் வேன்.
    பல ஆண்டுகளாக பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று இளம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களோடு உரையாடியுள்ளேன். அந்த சந்திப்புகளின் வாயிலாக என்னால் ஒன்றைத் தெளிவாக அறிய முடிந்தது.
    இளைஞர்கள் உரிய அங்கீகாரத்தையும் பாராட்டையும் எதிர்பார்க்கிறார்கள். இளைஞர்கள் தாங்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகளுக்காக ஏங்கி நிற்கிறார்கள். ஆனால் அண்மைக் காலத்தில் முன்மாதிரியாகக் கொள்ளத் தக்கவர் மிகச்சிலராகவே உள்ளனர். அவர்களும் வீரர்களாகவோ, சினிமா நடிகர்களாகவோ உள்ளனர். இன்றைய தேவை இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை செயல்வீரர்களாக மாற்றத்தக்க மாமனி தர்கள்தான். இந்நிலவுலகில் வாழ்ந்த அத்தகைய மாமனிதர்களை இக்கட்டுரை தொடர் வாயிலாக சந்திக்கப் போகிறீர்கள்.
    நம் தாய்த்திருநாடு பெற்றெடுத்த தவப்புதல்வர்கள் பலரை நம் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கிறோம். அவ்வளவு ஏன்? உங்கள் ஆசிரியர், உங்கள் அப்பா அல்லது அம்மா கூட அத்தகையோரில் ஒருவராக இருக்கலாம். நாம் இவர்களாகவே மாறிவிட வேண்டும் என்பது அல்ல. மாறாக அவர்களுடைய ஒழுகலாறுகளை அங்கீகரித்து உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டால் நாமும் வெற்றியாளராக உருவாக முடியும்.
    வெற்றியாளர்கள் அனைவரும் இளமையில் ஒரு தெளிவான நோக்கம் உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நோக்கம் உடமைதான் வெற்றியின் வித்து. நோக்கம் உடமை என்பது தன்னலமோ பேராசையே அன்று. பேராசை ஏழு பெரும்பாவங்களில் ஒன்று. பேராசை என்பது உரிய தகுதியில்லாமல் ஒன்றை அடைய முற்படுவதாகும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் கூறுவாரே அந்த உயர்ந்த நோக்கம் அதை அடைவதற்கு உரிய சக்தி உன்னுள்ளே உள்ளது என்பதை இத்தொடர் விளக்கும். தவறின்றி பணியைத் திட்டமிட்டுச் செய்தால் நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என எண்ணுகிறீர்களோ அவ்வாறே ஆவீர்கள்.
    இந்தத் தொடரை நீங்கள் ஆழ்ந்து படித்தால் நீங்கள் செல்ல வேண்டிய பாதை தெளிவாகப் புலப்படும். நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம், அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் நிலை என்ன என்பதும் தெளிவாகும். சாதனையாளராக மாற வேண்டும் என்னும் தீவிர ஆசை உங்கள் ஆழ்மனதில் எழும். அதற்கான விதிமுறை களையும் செயல்முறைகளையும் இத்தொடர் விளக்கும். உங்கள் கனவை நனவாக்கும் முயற்சிகளை இன்றே செய்யத் தொடங்குவீர்கள். அதாவது சோம்பலை உதரித் தள்ளிவிட்டு “இன்று புதியதாய்ப் பிறந்தோம்” என்னும் உற்சாகத்தோடு செயல்படத் தொடங்குவீர்கள். இத்தொடரை நீங்கள் வாசிப்பது இல்லை, சுவாசிப்பது கூட செயல்படித்தொடங்கியமைக்கு ஓர் அடையாளமே. வாசியுங்கள்; எண்ணுங்கள்; கற்பனை செய்யுங்கள்; நிறைவாக ஒரு செயல் திட்டத்தை உருவாக்குங்கள்.
    மிகச்சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து சாதனையை நிகழ்த்த இயலும். ஆம் இப்போது உங்கள் கைகளில் தவழும் இத்தொடரும் ஒரு சரியான தேர்வுதான். அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். நம் முன்னோர்களின் நுண்மாண் நுழைபுலம், அனுபவம் மற்றும் நான் படித்த நூல்கள் இவற்றிலிருந்து பெறப்பட்ட வெற்றிச் சரித்திரங்கள் இந்நூலில் நிறைய உள்ளன. இத்தொடர், நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.
    இத்தொடர் உங்களுக்காகவே எழுதப்பட்டது. நீங்கள் சாதனை நிகழ்த்த ஆசைப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. உங்கள் மனதில் ஆசை உருவானால் வெற்றி உருவாகும். நம் கண் முன்னே வெற்றி அடைந்தோரின் வாழ்விலிருந்த வெற்றிக்கான இரகசியங்களை எடுத்து இத்தொடரில் வழங்கியுள்ளேன். இத்தொடரைப் படித்து முடித்தவுடன் இதில் பதிவு செய்யப் பட்டுள்ள வெற்றிக்கான கோட்பாடுகளை உங்கள் அப்பா, அம்மா மற்றும் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் கனவு காணட்டும்.
    பெரிதினும் பெரிது கேள் என்று பாரதியார் சொல்வாரே – அந்த ஆர்வத்தை இத்தொடர் தரும். இந்தத் தொடர் உங்களிடத்தில் எப்போதும் இருக்கட்டும். இது உங்கள் தனிச் சொத்தல்லவா!
    இத்தொடர் உங்கள் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் செயல்வீரரை உசுப்பி எழுப்பும். இத்தொடரைப் படிப்பதால், புத்துணர்வு பெற்ற புதுமனிதர் ஆவீர்கள்; இமாலய சாதனை நிகழ்த்த வேண்டும் என்னும் ஆசை கொழுந்துவிட்டு எழும்.
    “இப்போது நான் யார் என்பதை கண்டு கொண்டேன்”, நான் விரும்புவது என்ன, அதற்காக செய்ய வேண்டுவது என்ன என்பதையும் தெரிந்து கொண்டேன் என்று நீங்கள் உரக்கக் கூறுவீர்கள். உங்களிடமிருந்து ஒரு வெற்றியாளரை உருவாக்குவீர்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே வடிவமைப் பீர்கள். உங்கள் தலைவிதியும் ஆன்மாவும் உங்கள் தலைமையில் இயங்கும்.
    நீங்கள் செல்லும் வழி நன்று; வெல்வது உறுதி; வாழ்த்துக்கள்.
    “Be Ambitious Boys and Girls”
    ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம்
    – திரு. கோவிந்தராஜ்