– 2011 – April | தன்னம்பிக்கை

Home » 2011 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

    கடந்த இதழ்களில் நம்மால் அறியப்பட்ட பல்வேறு வகையான பொறியியல் துறைகளின் விபரங்களைத் தொடர்ந்து இந்த இதழில் பெரும்பான்மையான மாணவர்களால் அறியப்படாத அதே நேரம் அதிக அளவிலான (100%) வேலை வாய்ப்புக்களைக் கொண்டுள்ள பொறியியல் துறைகளான மெரைன் இன்ஜினியரிங் மற்றும் பெட்ரோலியம் இன்ஜினியரிங் துறைகளின் விபரங்களைக் காண்போம்.
    மெரைன் இன்ஜினியரிங்
    இந்தியாவை ஒரு கடல் சார்ந்த நாடாக அறிந்திருப்பதும், நமது கடற்கரைகளின் நீளம் 7517 கிலோ மீட்டராக இருப்பதும், 95 சதவீதம் அதிகமான பொருட்கள் கடல் மூலம் கப்பல்கள் வாயிலாக கொண்டு செல்லபப்படுவதனால் இத்துறைமாணவர்களின் தேவைப்பாடுகளின் எண்ணிக்கைகளை அறியலாம்.
    2010 ஆண்டின் கணிப்புகளின் படி, ஆண்டின் இறுதிக்குள் 27,000 மாணவர்கள் தங்களின் அறிவை நாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் மெரைன் பொறியியல் பெற்றிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இந்திய அரசால் மத்திய மெரைன் பல்கலைக்கழகம் சென்னையை அடுத்த உத்தண்டியில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    மெரைன் பொறியியல் என்பது கப்பல் இயங்கும் முறையைப் பற்றிய தொழில்நுட்பமாகும். மெரைன் பொறியாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. நிலத்தில் 6 மாதங்களும், நீரில் 6 மாதங்களும் வாழும் முறையை ஏற்கும் மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கும் முன் அடிப்படை தகுதிகளை நிறைவு செய்தல் வேண்டும்.
    அவைகளில்,
    அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள்
    திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தகுதியுடையவர்கள் (கடந்த ஆண்டுகளில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது)
    குறைந்தபட்ச உயரம் 157 செ.மீ.
    குறைந்தபட்ச எடை 48 கிலோ
    சராசரியான கண்பார்வை
    பன்னிரண்டாம் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளில் தேர்வு பெற்றவர்கள் தமிழ்நாட்டில் அமையப்பெற்றகல்லூரிகளிலும், IIT-JEE நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மிகச்சிறந்த மத்திய பல்கலைக்கழகங்களிலும் சேர்க்கை பெறலாம். மாணவிகளுக்கு இந்திய அரசின் மூலம் முழுமையான இலவசக் கல்வியை பெறுவதன் மூலம் B.Sc. (Nautical Science) / B.Sc. (Maritime Science) / M.Tech. (Marine Engineering) போன்றஇளங்களை பட்டப்படிப்பை பெறலாம். மாணவிகள் தங்களுடைய இப்பிரிவு தேர்வுக்கு முன் கப்பல் மற்றும் கடல்வழி வேலை வாய்ப்புகளில் உள்ள சாதகமான அதேநேரம் பாதகமான நிலைகளை நன்கு அறிய வேண்டும்.
    இளங்களை படிப்புகளும் அவற்றைஅளிக்கும் சிறந்த கல்லூரிகளும்
    B.Sc. Nautical Science
    மெரிடைப் அகாடமி, சென்னை
    சாமஸ் பொறியியல் கல்லூரி, சென்னை
    வேல்ஸ் பொறியியல் கல்லூரி, சென்னை
    கோவை மெரைன் கல்லூரி, கோவை
    டி.எஸ். சாணக்கியா கல்லூரி, மும்பை
    B.Sc. Nautical Technology
    ஆர்.எல். கல்லூரி, மதுரை
    டோலனி மெரிடைம் கல்லூரி, புனே
    இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வாயிலாகவும் (B.Sc. Nautical Science) பட்டப்படிப்பைப் பெறலாம். இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய துறைமுகங்களும் இத்துறைமாணவர்களின் தேவைப்பாட்டை உணர்த்துகின்றது.
    தமிழ்நாட்டில் மெரைன் பொறியியல் படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 5 கல்லூரிகளில் 200 இடங்கள் மட்டுமே உள்ளது. இதனைத் தவிர, ஒரு சில தனியார் பல்கலைக்கழகங்களிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்லூரிகளிலும் இதனை படிக்கலாம். தனியார் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணமாக ஓர் இலட்சத்திற்கும் அதிகமாக வசூலிக்கின்றனர்.
    தமிழ்நாட்டில் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி சாமஸ் பொறியியல் கல்லூரி, சென்னை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, ஸ்ரீ பெரும்புதூர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
    பெட்ரோலியம் இன்ஜினியரிங்
    பெட்ரோலியத் துறையில் பொறியியல் படிப்பு என்பது என்னை வளத்தை கண்டுபிடிப்பது, பெட்ரோல் மற்றும் எரிவாயுவைப் பிரித்தெடுத்தலாகும்.
    மாதந்தோறும் விலை உயர்வைக் கண்டுவரும் பெட்ரோலியம் மற்றும் அதன் சார்ந்த பொருட்களைக் கண்டறிவது, பிரித்தெடுப்பது மற்றும் விற்பனை செய்வதே இத்துறைமாணவர்களின் வேலைப்படும் தன்மையாகும்.
    குறைவான கல்லூரிகளும், அதிகமான மனிதவள தேவைப்பாடுகளும் இத்துறைபொறியாளர்களின் பற்றாக்குறையை நமக்கு உணர்த்துகின்றன. உயர்கல்வி ஆலோசகராக இருப்பதனால் அத்துறையைச் சேர்ந்த சில நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இத்துறையின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களையும் பள்ளி மாணவர்களிடையே தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
    தமிழ்நாட்டில் பெட்ரோலியத் துறையைப் பயில்வதற்கு ஒரு சில கல்லூரிகள் மட்டுமே உள்ளது. அவற்றில்,
    அண்ணா பல்கலைக்கழகம், எ.சி.டி. கேம்பஸ், சென்னை
    அண்ணா பல்கலைக்கழகம், பி.ஐ.டி. கேம்பஸ், திருச்சி
    ராஜுவ்காந்தி பொறியியல் கல்லூரி, ஸ்ரீ பெரும்புதூர் இந்தியாவில் மிகச்சிறந்த பழமையான பல்கலைக்கழகங்கள் உள்ளன.
    அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகார்
    மகாராஸ்டிரா பொறியியல் கல்லூரி, புனே
    பண்டிட் தீனதயால் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், குஜராத்
    பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
    இத்துறையில் Petroleum Engineering, Petro-chemical Technology Utßm Petro-refinary போன்றபடிப்புகளும் உள்ளன.
    தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை விபரங்களைத் தொடர்ந்து குறுகிய காலத்தில், குறைந்த செலவுகளில் தொழிற்கல்வியை முடித்து அதன் மூலம் அதிக வருவாயைப் பெறும் வகையிலான படிப்புகளின் விபரங்களை வரும் இதழ்களில் அறிய இருக்கின்றோம்

    பிக்மாலியன்

    பிக்மாலியன் என்று ஓர் சிற்பி இருந்தாராம். அவர் ஓர் அழகான பெண் சிலையை முழு ஈடுபாட்டுடன் செதுக்கினாராம். அந்த சிலை உயிர் பெற்று வந்து தன்னை மணந்து கொள்ளும் என்று நம்பினாராம் இறுதியில் அப்படியே நடந்தது என கீரேக்க நாட்டு புராணக் கதை கூறுகிறது.
    கதையில் இருந்து வாழ்க்கை, வாழ்க்கையில் இருந்து கதை என இந்த கதையை வாழ்வியலோடு தொடர்புபடுத்தும் பொழுது விளைந்தது தான் (Pygmalion Effect) பிக்மாலியன் விளைவுகள்.
    மனித வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உள்ள இந்த பிக்மாலியன் விளைவுகள் கூறுவது என்ன?
    “நாம் ஒருவரை எப்படி எதிர்பார்த்து நடத்துகிறோமோ அவருடைய செயல்கள் அதுபோலவே அமையும். உயர்வாக நினைத்தால் உயர்வாக, தாழ்வாக நினைத்தால் தாழ்வாக இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல நடைமுறைகள்’, ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள். மேலும், இந்த விளைவுகள் மனிதனின் மனதில் தன்னம்பிக்கையும், நேர்மறைசிந்தனைகளையும், வளர்க்கிறது என கண்டறியப்பட்டுள்ளன. கணவன் – மனைவி, அதிகாரி – தொழிலாளி, ஆசிரியர் – மாணவர் என எல்லோருக்கும் இந்த விளைவுகள் பொருந்தும். தனி மனித வாழ்வு என்பது குடும்பம், சமூகம் என இரு பிரிவுகளைக் கொண்டது. இந்த இரண்டு வாழ்க்கையிலும் சக மனிதர்களை உயர்வாக எதிர்பார்த்து, நடத்தி அதன் மூலம் நல்ல விளைவுகளைப் பெறமுடியும் என்றால் நம் மனதில் நம்மை பற்றி உயர்வான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதில் வெற்றி காண நம்மால் முடியாதா?
    நிச்சயம் முடியும். மனித வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இன்றியமையாதவை. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களுக்கு நியாயமானது. பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்புகளால் சிலரின் திறமைகள் அவர்களிடம் இருந்து மறைந்து விட்டன என்று கூறுவதை தற்காலிகமாக மறந்து விட்டனர் என்று கூறலாம். நாம் எல்லோரும் நம் பள்ளிப் பருவத்தில் ஏதேனும் ஒரு திறமையால் ஆட்கொள்ளப் பட்டிருப்போம். உதாரணமாக ஓவியம் வரைதல், பேச்சு போட்டிகளில் சிறந்து விளங்குதல், சிலர் குறிப்பிட்ட விளையாட்டில், நடிப்பு, கலை, இசை மற்றும் நடனக்கலை என பல்வேறு திறமைகள், வேலை, சம்பளம், பிறகு குடும்பம் என நம் சூழலில் உள்ளவர்கள் வாழும் வாழ்க்கையே நம் எதிர்பார்ப்புகளாக அமைவதால் இயற்கையாக நம்மிடம் இருந்த இந்தத் திறமைகள் மெல்ல மறைந்தன (மறந்தன). இன்று நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சிலரின் பள்ளிப் பருவத்தை பின்நோக்கி பார்க்கும் பொழுது, அவர்களில் பலர் அந்நாளில் சிறந்த ஓவியராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு திறமைகளோடு சிறந்து விளங்கியுள்ளனர். இந்நாளில் குடும்பம் குழந்தைகள் என்று வாழும் இவர்களிடம் இந்தத் திறமைகள் பற்றி கேட்கும் பொழுது இவர்களுக்குள் ஒரு பெருமிதம் தோன்றினாலும், ‘அதெல்லாம் அந்தக் காலம்’ என்று ஒரு வார்த்தையில் கூறி தங்களிடம் இன்றும் மறைந்திருக்கும் அந்தத் திறமைகளை உணராமல் தங்களுக்குத் தாங்களே ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள்.
    இன்று இந்த ஓவியர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் எங்கே? இதற்குக் காரணம் என்ன? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியை எதிர்பார்த்த அளவு அவர்களின் திறமைகளை எதிர்பார்க்காதது, அதை அறிந்து உற்சாகப்படுத்தாததுÐ இன்று பெற்றோர்களாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்குத் தங்களின் கடந்த காலம் திரும்ப வராமல் போகலாம். ஆனால் உங்களுக்குள் இருக்கும் திறமைகளுக்குக் கடந்த காலம், நிகழ்காலம் என்று கிடையாது. எப்படி மனிதனின் மனதில் தோன்றிய எண்ணங்கள் எளிதில் மறைவது இல்லையோ, அதுபோல்தான் உங்கள் திறமைகளும் இப்பொழுது நீங்கள் நினைத்தால் கூட அந்தத் திறமைகளுக்கு உயிர் கொடுக்கலாம்.
    அதன் மூலம் சிறப்பான எதிர்காலம் பெறலாம். உங்கள் திறமைகளால் நீங்கள் ஒளிர்வீர்கள் என்று உங்களிடம் நீங்கள் எதிர்பார்த்தால், நீங்கள் ஒளிர்வீர்கள். இதற்கு வயது ஒரு தடையல்ல. அன்று பதினாறு (16) இன்று நாற்பது (40) இரண்டுக்கும் இடையே அனுபவம் ஓர் மகத்தான துணையாக அமையும். அனுபவமே தைரியம், அனுபவமே ஆசான், நம்புங்கள். இது பலரது அனுபவ உண்மை. சற்று முயற்சி செய்து தற்காலிகமாக நீங்கள் மறந்த திறமையைச் செயல்படுத்தும் நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நிகழும் விளைவுகள்.
    1. உங்கள் பிள்ளைகளின் திறமைகளை நீங்கள் உணர்வீர்கள், செயல்படுத்துவீர்கள்
    2. உங்கள் வாழ்க்கையில் நடந்த இந்த விளைவுகளை உங்கள் சந்ததிகள் பாடமாக ஏற்றுக்கொள்வார்கள்.
    நான் அடிக்கடி என் நண்பர்களிடம் கூறும் வார்த்தை வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் நான் என்றென்றும் மாணவன், ஆம் நாம் எல்லோருமே இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தான் இந்த மாணவப் பருவம் நிதானமும், சிந்தனையும் கொண்டது. நம் சிந்தனையின் மூலமாக நம்மோடு சேர்ந்து மற்றவர்களையும் உயர்த்தலாம். அதுவே இந்த மாணவப் பருவத்தின் சிறப்பு. இங்கே நம் சூழலில் இருந்து கற்கும் பாடங்களுக்கு நாமே ஆசிரியர்; நாமே மாணவர். நூறு கிலோ எடையுள்ள ஒரு கல் சீராக செதுக்கப்பட்டு எடை குறைந்து நம் முன்னே அழகான சிற்பமாக காட்சி அளிப்பது போல் இங்கே குறிப்பிட்டுள்ள சிந்தனைகளை நம்மிடம் நாமே எதிர்பார்ப்புகளாக செயல்படுத்தினால் நம் வாழ்க்கையில் ‘பிக்மாலியன்’ விளைவுகளைக் காணலாம். நாமும் பிக்மாலியனாக மாறலாம்.
    எனவே, நீங்கள் எதுவாக ஆக விருப்பப்படுகின்றீர்களோ அதுவாக, முதலில் உங்கள் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
    நிச்சயம் அதுவாகவே நீங்கள் ஆவீர்கள்.

    முயன்றேன்… வென்றேன்…

    தன்னம்பிக்கை இதழ் நிறுவனர் அமரர் இல. செ. கந்தசாமி அவர்களது பேச்சைக் கேட்ட பின்பே, பள்ளியில் ஒன்பதாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்ட தன்னால் நிச்சயம் முன்னேற முடியும் என்று முயன்று இன்று ‘இநஆ சேம்பர் பிரிக்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தக்காரராய் இருப்பவர் கோவை தடாகம் திரு. ப.ய. செல்வராஜன். சுமார் 200 தொழிலாளர்களுக்கு வேலை தருவதுடன் சேம்பர் பிரிக்ஸ் தயாரிப்பாளர் சங்கச் செயலாளராகவும் சேவை செய்து வருகிறார்.
    “சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தேன். 9ம் வகுப்பின் பாதியில் நின்றுவிட்டு வேலைக்குச் சென்றேன். எலக்ட்ரிக்கல் பிட்டர், உரம் விற்பனைக் கடை, விஸ்கோஸ் கான்ட்ராக்டரிடம் வேலை, இன்ஜினியரிங் ஒர்க்ஸ் எனப் பல இடங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றேன்.
    தன்னம்பிக்கை இதழ் நிறுவனர் அய்யா இல.செ.க. அவர்கள் பேச்சால் ஊக்கம் பெற்றேன். வாடகை சைக்கிள் கடை, பேக்கரி, மெடிக்கல் ஷாப், நாட்டு செங்கல் சூலை எனப் படிப்படியாக முன்னேறி இன்று சேம்பர் பிரிக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்துள்ளேன்.
    சுமார் 200 பேர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து பணிபுரிகின்றனர். அவர்கட்கு அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர், மருத்துவக்காப்பீடு, சிறுவர்கள் கல்விக்கு தேவையான வசதிகள் செய்துள்ளேன். ஆண்டுக்கு ஒருமுறை இலவச சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். மேலும், எனது ஊரான தடாகத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த, சொந்தமாக ரூ. 2 லட்சம் பொதுமக்கள் சார்பில் வழங்கினேன். ரோட்டரி சங்கத் தலைவராக இருந்தபோது, உண்டு உறைவிடப்பள்ளி கட்டிடப் பணிக்கு ரூ.1.75 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன்.
    இது தவிர வசதியற்ற படிப்பாளிகளுக்குக் கல்விக் கட்டணம், மருத்துவ நிதி உதவி, விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்கள் என இயன்ற அளவு வருமானத்தில் ஒரு பகுதியை வழங்கி வருகிறேன்.
    இதற்கும் மேலாக வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, அவர்கள் விரும்பும் தொழில் தொடர்பாக சரியான முறையில் ஆர்வத்துடன் வழிகாட்டியும் வருகிறேன். எனது படிப்பு 9ம் வகுப்பு வரை தான். எனது குடும்பத்தில் மனைவி பிளஸ் டூ வரை. மகன் இன்ஜினியரிங் படித்து வருகிறார்; மகள் டாக்டருக்கு படித்து வருகிறார். எனது இந்த முன்னேற்றம் மற்றும் சேவைகளுக்கு என் குடும்பத்தாரும், உடன் பிறந்தவர்களும் உற்ற துணையாக இருக்கின்றனர்.
    சரியான முறையில் சிந்தித்து முடிவெடுத்து திறமையாகச் செயல்பட்டால், நாம் கட்டாயம் வாழ்க்கையில் முன்னேறமுடியும்” என்று தன் வெற்றி வாழ்க்கை குறித்த பதிவுகளை நம்மோடு திரு. ப.ய. செல்வராஜன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
    தொழில் தொடங்குவது, நஷ்டம் தவிர்ப்பது போன்ற பலவித சந்தேகங்களுக்குத் தெளிவு பெறதன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றதெரிவித்திருக்கிறார். அவருடைய தொலைபேசி எண்கள்: 9363261644, 9360313445. தொடர்பு கொள்ளுங்கள்! நீங்களும் எல்லாத் தடைகளையும் தாண்டி தொழிலதிபராக மாறுங்கள் !!
    -Jc.S.M. பன்னீர்செல்வம்

    மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்

    பி. இராமசாமி
    முதுநிலை மேலாண்மையியல் துறை
    S.N.S. பொறியியல் கல்லூரி, கோவை

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவு வாழ்க்கையை வகுத்துக்கூறிய பெருமை திருக்குறளாம் அமுத குறளுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லும் போதே நமது குரலும் இனித்திடுமே. திருக்குறள் தொட்டுத் தழுவாத துறைகளே இல்லை. குறளைப் படித்தால் நம்மை விட்டு விலகாத துன்பங்களே இல்லை.
    “மேலாண்மை என்பது ஒரு செயலை மற்றவர்களைப் பயன்படுத்தி எவ்வாறு செய்து முடிப்பது என்பதைக் குறிக்கும்”. மேலாண்மையைப் பற்றி வள்ளுவர் பல குறள்களைப் படைத்துள்ளார். குறள்களை மேலாண்மையின் இருவரி வேதம் என்றே குறிப்பிடலாம். குறள்களின் வழிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் சரிவர பயன்படுத்தினாலே எந்த ஒரு தொழிலிலும் வெற்றி என்பது கைவசம்; முன்னேற்றம் எப்போதும் நம் வசம்.
    தொழில் தொடங்க
    “பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்”
    எந்த ஒரு தொழிலை நாம் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டியவை ஐந்து,
    பொருள் (Raw material)
    கருவி (Machinery)
    காலம் (Period)
    செயல் (Planning)
    இடம் (Suitable Place)
    இவை ஐந்தும்தான் தொழில் தொடங்குவதற்கு அஸ்திவாரம் என்று, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியிருப்பது நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. காரணம், வள்ளுவர் காலத்தில் மேலாண்மையியல் என்ற சொல் வழக்கத்திலும், தொழில் புலக்கத்திலும் இருந்திருக்க வாய்ப்பில்லா காலங்கள் அவை.
    “ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
    ஆஅதும் என்னும் அவர்”
    ஒரு தொழிலைத் தொடங்கியபின் அத்தொழிலில் நாம் சிறந்து விளங்க வேண்டும். மேலும் மேலும் நாம் உயர்வடைய வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இருந்தால் நாம் ஒருபோதும் கெட்டுப் போவதற்குரிய செயல்களைச் செய்யக்கூடாது. அதாவது, தன்னுடைய பொருளின் தரத்தை (Quality) ஒரு போதும் குறைத்துவிடக்கூடாது என்று கூறுகிறார். அன்றே வள்ளுவர் தர மேலாண்மையைப் (Quality Management) பற்றி இரண்டே வரிகளில் கூறியிருப்பது தொழிலை மட்டுமில்லை தமிழின் தரத்தைக்கூட உயர்த்துகிறது.
    தொழில் இரகசியங்களைக் காத்தல்
    “கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்
    எற்றா விழுமம் தரும்”
    நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அந்த செயல் நினைவுற்றபின் தான் மற்றவர்களிடம் அந்த கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் அதைப் பற்றிய கருத்துக்களை யாரிடமும் தெரியப் படுத்தக்கூடாது என்று தொழில் இரகசியத்தைக் (ஆன்ள்ண்ய்ங்ள்ள் நங்ஸ்ரீழ்ங்ற்) காக்கும் வழிமுறையை வகுத்துக் கூறியுள்ளார்.
    மேலாளர் பண்பு நலன்கள்
    “வினைதிட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற”
    ஒரு செயலை செய்யும் மேலாளரின் முதல் தகுதியும், முதல் திறமையும் அவருடைய மன தைரியம் ஆகும். மற்ற தகுதியும், திறமையும் மன தைரியத்திற்குப் பின்புதான் என்று மேலாளரின் தகுதிகளை அழகாக வரையறை செய்துள்ளார்.
    “கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு”
    ஒரு மேலாளர் என்பவர் ஒரு செயலைச் செய்ய ஏற்ற கருவியையும், காலத்தையும், செயல் வகைகளையும், செயலின் அருமைகளையும் ஆராய்ந்து அதன்பின் தான் செயல்பட வேண்டும் என்று மேலாளரின் (Manager) இலக்கணத்தை இலக்கிய நயத்தோடு வகுத்துக் கூறியுள்ளார்.
    “செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்”
    ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயற்கையான நூலறிவைத் திறம்பட பெற்றிருந்தாலும் உலக நடைமுறை என்ன என்பதை அறிந்து அதன்படி செயல்படக் கூடிய இயற்கை அறிவையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது குடையை எப்படி தயாரிக்க வேண்டும் என்று அறிந்திருந்தால் மட்டும் போதாது. அது எந்தக் காலத்தில் விற்பனைசெய்ய இயலும் என்ற இயற்கை அறிவையும் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நாம் தொழிலில் நிலைத்திருக்க முடியாது.
    விற்பனை பிரதிநிதியின் பண்புகள்
    “அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
    இன்றி யமையாத மூன்று”
    அன்பாக பேசுதல், விற்பனை செய்யும் பொருள்களைப் பற்றிய அறிவைப் பெற்றிருத்தல், எதையும் ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய மூன்றும் தூது உரைப்பார்க்கு வேண்டிய அவசியமான குணமாகும். தூதுரைப்பவர் என்றால் விற்பனைப் பிரதிநிதி (Sales Representative) என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு விற்பனைப் பிரதிநிதி என்பவர் யார், அவர் எப்படி செயல்பட வேண்டும், அவருடைய பண்பு நலன் ஆகியவற்றை விற்பனை நோக்கமற்ற காலத்தில் விற்பனைப் பிரதிநிதியின் பண்புகளைக் கூறியிருப்பது நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது.
    “தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாம் தூது”
    விற்பனைப் பிரதிநிதியாக செயல்படுவோர் தன் விற்பனைப் பொருட்கள் பற்றிய செயலை வாடிக்கையாளரின் முன் தொகுத்துச் சொல்லக் கூடிய அறிவும், பயனற்றவற்றை நீக்கியும், கேட்பவர் மனம் மகிழும்படியும், நன்மை பயக்கக்கூடிய சொற்களைக் கூறுபவனே சிறந்த விற்பனையாளர்.
    வலிமை அறிதல்
    “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்”
    இந்தக் குறளில் “வலி” என்ற வார்த்தையை “வலிமை” என்று பொருள் கொள்க.
    தான் எடுத்துக் கொண்ட செயலின் வலிமை என்ன, அதை எதிர்கொள்ளக்கூடிய தன் வலிமையும், அதே துறையில் செயல்படக்கூடிய தனது பகைவனது வலிமையும் சீர்தூக்கிப் பார்த்து எந்த ஒரு தொழிலையும் தொடங்க வேண்டும்.
    இதே கருத்தைத்தான் ஆங்கிலத்தில் SWOT Analysis (Strength, Weakness, Opportunity and Threat) என்று குறிப்பிடுவர்.
    மேலே சொன்ன கருத்துக்களை அலசி ஆராயும்போது, மேலாண்மை பற்றிய கருத்துக்களைச் சொன்னது மேலை நாட்டவர்கள் இல்லை தமிழர்களின் தலையாயப் பரம்பரைத் தலைவன் ‘திருவள்ளுவர்’ தான் என்ற கருத்து நமக்கு ஆழமாக தெரியவருகிறது. ஆக, மேலாண்மையின் தத்துவங்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வகுத்துக்கூரிய பெருமை தமிழர்களுக்குத் தான் சேரும்.
    நடைமுறையில் நாம் பயன்படுத்தக்கூடிய மேலாண்மையின் கருத்துக்கள் எல்லாம் 18-ம் நூற்றாண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக உருவானவை ஆகும். வியாபாரம், தொழில் வளர்ச்சி ஆகியவை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தான் வளர்ச்சி பெறத் தொடங்கின. ஆனால் வியாபாரம், தொழில் போன்ற வார்த்தைகளையே அதிகமாக பயன்படுத்தாத பண்டமாற்றுமுறை காலத்திலேயே எவ்வாறு தொழிலைத் தொடங்க வேண்டும், மேலாளரின் தகுதிகள் என்ன, விற்பனைப் பிரதிநிதியின் பண்பு நலன்கள் என்ன என்பனவற்றை வள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.
    மேலே சொன்ன கருத்துக்களின் மூலம் நாம் தெளிவான முடிவுக்கு வரலாம். மேலாண்மைக் கொள்கைகளையும், தத்துவங்களையும் வகுத்தது தமிழர்கள் தான். தற்பொழுது மேலாண்மையின் தந்தை என அழைக்கப்படும் எப்.டபள்யூ. டெய்லருக்கு முன்பே மேலாண்மையின் கருத்துக்களை வள்ளுவர் கூறியதால், மேலாண்மையின் தந்தை என்ற பெருமையும், தகுதியும் வள்ளுவருக்கு மட்டும்தான் சேரும். ஆக உலகத்திலேயே மேலாண்மையின் கருத்துக்கள் முதலில் உதித்தது தமிழகத்தில் தான். இதன் மூலம் உலகத்திலேயே தமிழ்தான் முதலில் தோன்றிய மொழி என்ற கருத்தும் தெரிய வருகிறது.

    எல்லாம் எவன் செயல்?

    மிதப்பில் எழுதுவது கேள்விப்பட்டிருக்கின்றேன். மிதந்து கொண்டு எழுதுவது எப்படிதான் இருக்கின்றது என அனுபவித்துப் பார்த்துவிடலாம் என்று பஞ்சப்பள்ளி அணைக்கட்டிற்குள். பரிசலில் மிதந்து கொண்டு எழுதுவதை அனுபவிக்க, மீனவராக மாறி பதினைந்து வருடமான விவசாயி ஆறுமுகத்துடன் பேச்சுக் கொடுத்து நட்பை வளர்த்துக் கொண்டு நடு அணைக்கட்டை அடைந்தோம். 500 மீட்டருக்கும் மேல் நீர்ப்பரப்பு இருக்கும் போல முதலைகள் கிடையாதாம், நீந்தும் ஆசை பிறந்து மறைந்தது.
    நடப்பதைக் காட்டிலும் பரிசல் வேகமாகப் போகும் என நண்பர் (மீன்துறை) வரதராசன் கூறினார். நம்பச் சிரமமாக இருந்தாலும் அனுபவம் நிரூபித்துக் காட்டியது. நீர் என்றென்றும் கனவுகளின் அடைக்கலமாக இருந்திருக்கின்றது. நீர்ப்பரப்பு குறைந்ததும் யானைகள் இந்த இடத்திற்கு வருமாம் இயற்கையோடு இணைவதற்கு என்றாவது ஒரு நாள் நேரம் ஒதுக்குதல் நல்ல விஷயம்தான். எழுதலாம் என்று தோன்றுவதையெல்லாம் கடந்த ஒரு மாதமாக குறித்துக் கொண்டு குறி பார்த்துக் காத்திருந்தேன். படிப்பதற்காக என்பதைக் காட்டிலும் வெளி வடிகாலுக்காக என்று எழுதுவதிலிருக்கின்றஅழகும் அதன் பயனும் அதிகமாக இருக்கக் காண்கின்றேன் மாரண்ட அள்ளியிலிருந்து சின்னாற்றின் எதிர் திசையில் பயணித்து பஞ்சமில்லாமல் பேரழகைக் கொட்டி வைத்திருக்கின்ற பஞ்சப்பள்ளியை அடைவதொன்றும் சிரமமான காரியமில்லை. கனவு தனது ஆக்கத்தை என்றைக்குமே கலைத்துக் கொள்ளாது என்கின்ற மாதிரி மலை மடிப்புக்களுக்கிடையே நீர் மனசு போல சலசலத்துக் கொண்டிருந்தது.
    இசை சமீபகாலமாக கவனத்தை ஈர்த்துக் கொண்டு இருத்தல் நிஜம்தான். சின்ன வதம்பச்சேரியில் கிராம நாட்கள் நினைவாடுகின்றன. காவிரிக் காடு என்பதற்கும் காவிரி நிதிக்கும் எங்களூருக்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. காவேரிக்காடு என்று அழகாக அழைக்கப்படும் அந்த விளையாட்டு மைதானத்தில் மனத்தாங்கல்களோடு முடிந்த நாட்கள் ஞாபகம் வருகின்றன. உடனடியாக நீரில் எழுதி அழிப்பது போல நினைவுப் பதிவுகளை அழித்து எழுதினால் எப்படி இருக்கும் விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி எல்லாம் செல்லும் உடல் கேட்ட பாரதி, ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ? என்று கேட்ட திருநாவுக்கரசர் இருவரும் சேர்ந்து மனமும் உடலும் நம் கரங்களில் இல்லை ஏதோ ஒரு பரம் பொருளில் உள்ளது என்றும் இந்த நினைவுகள், படிவங்கள் எல்லாமே “”நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே” என்று எண்ணம் கூட கந்தன் செயல் என பேசிக் கொண்டு காரியம் ஆற்றாமல் இருந்துவிட இயலாது.
    அண்மையில் பெரியவர் ஒருவரை சந்தித்து அளவளாவ நேர்ந்தது. உடனிருப்பவர்களை சரியான இதயத்துடிப்போடு வைத்திருத்தல் ஒரு கலை. அதன் மூலம் அற்புதமான பணி விளைவுகளை உருவாக்க முடிகின்றது. வேலை வேலை என்று பரபரக்கையில் வேளை வீணாகிறதே ஒழிய பணி முடிக்கப்படுவது இல்லை. கற்பனை காதுகளுக்கு ஓய்வு கொடுக்கையில் தான் கருத்து வடிவம் பூண்டு கொள்கின்றது. கற்பனை உடைமாற்றுகின்ற நேரத்தில் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டு பார்வையாளர்களால் பதட்டப்படுத்தப் பட்டுவிடக் கூடாது.
    சமீபத்தில் ஒரு கல்லூரிக்குப் பேசுவதற்காக சென்றிருந்தேன்.. கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி என்று போட்டியை உச்சரித்து அவர்களுக்கு முதல், இரண்டு, மூன்று என பரிசுகளை ஒவ்வொன்றாக வழங்கும் பொழுது அந்தப் புத்தகத்தின் அட்டையினைப் படித்துப் பொருளை உள்வாங்கிக் கொண்டே அளித்து மகிழ்ந்தேன். பக்க எண்ணிக்கைகளும், புத்தக விலையும், ஒரு புறம் வைத்து பரிசு பெறும் இடத்தை எதிர்ப்புறம் வைத்தால் இரண்டுக்கும் எதிர்மறைப் பொருத்தம் காணப்பட்டது. ஆறுதல் பரிசாக கொடுத்த புத்தகங்கள் கனமில்லாமல் இருந்தன.
    மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பது போல பேசுகையில் கனமில்லாத புத்தகங்கள் என்று நினைத்துவிடப் போகின்றீர்கள் அவைதான் மனதை இலேசாக்க வல்லவை என்று கூறும் பொழுது என்னால் பொருளை உணர்ந்துகொள்ள முடிந்தது.
    “கத்தியின்றி இரத்தமின்றி யுத்த
    மொன்று வருகுது”
    எனும் நாமக்கல் கவிஞர் பாடல்தான் மாரண்டஅள்ளி பெண்கள் மேனிலைப் பள்ளியில் ஞாபகம் வந்தது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளை யார் யார் நூற்றுக்கு நூறு சதம் வாங்குவீர்களோ? அவர்களை கைகளை உயர்த்துங்கள் என்றால், சூரியகாந்திப் பூக்களைப் போல பக்கவாட்டிலும் பின்புறத்திலும் வளைந்து அசைந்தன தலைகள். நம்மைக் காட்டிலும் அருகிலிருக்கின்றவர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்தே வாழ்ந்து பழகிவிட்டோம் நாம். நேரம் கொடுப்பது குறித்து கூட, யாரோடு இருக்க மிகவும் விரும்புகின்றீர்கள் என்று யாரேனும் கேட்டால் நம்மோடு பேசுவதற்கு என சற்று நேரம் கூட ஒதுக்க இயலாத நண்பர்கள் எனக்கு உண்டு திருமூலர் ஒரு பாட்டில் “தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே” என்று முடித்து வைத்திருப்பார். நான் செய்துவிட்டேன் என்று “நார்ஸிஸக்” கொள்கைக்குள் நுழைத்துவிட வேண்டாம், நானே எவ்வளவு அழகு என்று நாணிப் போகுமளவு பிரஸ்தாபித்துக் கொள்ளவும் வேண்டாம், இரமண மகரிஷி கோபுரம் தாங்கி பொம்மை குறித்துப் பேசுவது போல செயல்கள் சிலபல நேரங்களில் இயற்கையை ஒட்டி நடப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் எல்லாம் எவன் செயல் என்று கேட்கவும் வேண்டி உள்ளது.
    தன்னைப் புரிந்து அளந்து கொண்டதும், மனதைப் படிக்கின்றஆற்றல் பெருகிவிடுகின்றது. அண்மையில் சந்தித்த பெரியவர், இரண்டு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார், ஒன்று வி.ஆர்.கிருஷ்ணா ஐயர் குறித்த பல்வேறு உலகில் என் பயணம் என்பது, இரண்டாவது அவரது சகோதரரது ‘சந்திப்பு நேரங்களும், ஏமாந்த நேரங்களும்’ (Appointments and Disappointments) என்கின்ற புத்தகங்கள். முன்னவர் வழக்கறிஞர் மற்றும் புகழ்பெற்ற நீதிபதி, பின்னவர் காவல் துறை அதிகாரி. தலைசிறந்த நீதிபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்ற சுவை குறித்துக் கூறவே வேண்டாம், நினைத்த இடத்திலெல்லாம் ஷெல்லி, வோர்ட்ஸ் வொர்த், உமர் கயாம் என்றும் எமர்ஸன், டென்னிங் என்றும், ரூட்யார் கிப்ளிங் என்றும் தெரிந்த தெரியா ஷேக்ஸ்பியரின் கவிதைகளென்றும் அள்ளி விளையாடுகின்றஅற்புத பொக்கிஷம் இது. இது போலவே இராபின் சர்மாவிடம் இருந்து இழையெடுத்து படித்த புத்தகங்கள் நிறைய உண்டு, ஒரு யோகியின் சுயசரிதம் என்றபரமஹம்ஸ புத்தகத்தையும் கிருஷ்ணா ஐயர் தொட்டுப் போயிருப்பார். அவரது இல்லத்தரசி சாரதா ஐயர் அவர்கள் மீதிருந்த காதலைப் பேசுமிடங்களில் காவியமே ஆற்றியிருப்பார். அரசியல் பேசிய இடங்களில் துள்ளியெழச் செய்வதும், சோகம் நெருடும் இடங்களில் துவண்டு விழச் செய்வதுமாம் தொண்ணூறைத் தொடுகின்ற அனுபவத்தை புத்தகத்திற்குள் பதித்துக் கொடுத்திருப்பார்.
    படிக்கச் செய்த பெரியவர், ஆனந். இந்தப் புத்தகத்தை ஏன் மெதுவாய் படிக்கறீங்க எடுத்தா முடிக்காமல் பெரும்பாலான புத்தகங்களை வச்சதே இல்லீங்க என்றார். அறுபது வயதுக்காரர்களோடு அன்யோன்யமாக இருப்பது முப்பதிலிருக்கின்றவர்களுக்கு வாழ்வை வாசிக்கக் கற்றுத் தருகின்றது. இலக்கை சரிவரிப் பொருத்திக் கொள்ள உதவி செய்கின்றது. அன்பின் அடைக்கும் தாழ்களை அடையாளம் கண்டு விளங்கிக் கொண்டு விலக்கிக் கொள்ள வழிவகை செய்கின்றது.
    மாணிக்க வாசகரின் திருவாசகம் தொடங்குகையில் ‘வேகம் கொடுத்தாண்ட வேந்தன் கழல் வெல்க” என்றொரு வரியோடும், பரபரப்பாக இருப்பதற்கும் பணி செய்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பி உடல் நிலையை பாழாக்கிக் கொள்கின்றவர்களுக்கு, மிட் பிட்சில் விழுந்து ஆஃப் திசையில் சீறிச் செல்கின்றஞானமணியின் (ஆயுதப்படை காவலர்) வேகப்பந்தை ஸ்கொயர் கட் செய்ய மட்டும்தான் மின்னல் வேக ரிப்ளக்ஸ் வேண்டும், மற்றபடி வாழ்க்கையில் வேகமான முடிவுகளை நிதானமாகத்தான் செய்தாக வேண்டும். அழுத்தந்திருத்தமாக பேசுவதற்கு ஆழமான பயிற்சி தேவைப்படுகின்றது என்றெல்லாம் யோசிக்க வைத்தது பஞ்சப்பள்ளி அணைக்கட்டின் பரிசல் பயணம்.
    தருமபுரி மாவட்டத்தில் ஜருகு எனப்படும் மானியத அள்ளி கிராமத்தில் எட்டு ஊர் மக்கள் தியானத்தால் தங்கள் மனதுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. செயல்களின் வலிமை மனதில் அழுத்துகையில் ஏற்றுக் கொண்டு புன்னகைக்கின்ற மன வலிமை தியானம் தரும் எனில், வெற்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் திருவள்ளுவர் சொன்ன சுடச் சுடரும் பொன் போல, துன்பம் வரவர தியானம் செய்பவர் மிளிருவார் என்கின்றசெய்தி அழகானது. தன் செயல் எண்ணி தவிக்கின்றநெஞ்சை, நின் செயல் செய்து நிறைவு செய்யச் செய்வாய் என்கின்றபாரதியின் வாக்கு.
    எல்லாம் எவன் செயல் என்று எண்ணுகிற நிதானத்தை மக்களுக்கு வழங்கினால் அதுவே மாபெரும் தானம்.

    சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50

    இரண்டு ஓட்டுநர்கள், இருவருக்குமே அவசரம். முதலாமவர் நிதானமாக எதிர்புறம் வாகனங்கள் வருகின்றனவா? யாரேனும் சாலையைக் கடக்கின்றனரா? சாலை நேராக, பழுதடையாமல் இருக்கின்றதா? என கவனமாகப் பார்த்து வாகனத்தைச் செலுத்தினார். ஆகவே அவர் அவ்வாகனத்தில் பயணித்த பயணிகள், பாதசாரிகள், இதர வாகனங்களில் பயணம் செய்தோர் என அனைவருக்கும் எவ்வித ஆபத்துமின்றி சந்தோஷ சூழல் தொடர்ந்து நிலவுவதை உறுதி செய்தார்.
    மற்றொரு ஓட்டுனர், அவசரமான சூழலில், நிதானமிழந்து, கவனக்குறைவுடன், சாலையில் இதர வாகனங்கள், பாதசாரிகள் சென்று கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது, கட்டுப்பாடற்ற வேகத்துடன் விரைந்து செல்லும் நோக்குடன் புறப்பட்டார். ஒரு வளைவில் முந்திச் சென்றபோது எதிரே வந்த பள்ளி வாகனத்தில் மோதி தான் இறந்ததுடன் சக பயணிகள் மற்றும் பல பள்ளி மாணவர்களின் இறப்பிற்கும் காரணமாக அமைந்துவிட்டது அந்த இரண்டாவது ஓட்டுனரின் நிதானமற்ற செயல். அது மட்டுமா? அவரது அநியாயச் செயல், ஒன்றுமறியா அப்பாவி குழந்தைகள் எத்தனை பேர் கை, கால், உடலின் பல பகுதிகளில் உள் மற்றும் வெளிக்காயங்களுடன் வலி அனுபவித்து வாழ்நாள் முழுவதும் துன்பத்துடன் வாழவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்திவிட்டது. விபத்திற்கு உட்பட்டவர்களின் பெற்றோர், குழந்தைகள், கணவன், மனைவி என அனைவருக்கும் வாழ்நாள் சோகத்தை ஏற்படுத்தியதற்குக் காரணமாக அமைந்துவிட்டார், மேற்கண்ட அவசர புத்தி ஓட்டுனர்.
    இதே அவசரத்தை ஓட்டுனர் பயன்படுத்தும்போது ஏற்பட்ட பின் விளைவுகள் தான் பெற்றோர், ஆசிரியர், மேலாளர், மருத்துவர், பணியாளர், தொழில் அதிபர் என யார்? யார்? அவர் அவர் சூழல்களில் பயன்படுத்தினாலும் ஏற்படப் போகின்றது.
    எடுத்துக்காட்டாக, சில தினங்களுக்கு முன் பெங்களூரில் தேர்வில் மதிப்பெண் குறைந்த 10 வயது குழந்தையைப் பெற்றோர் அடித்து, உதைத்து அவமானப்படுத்தியவுடன், அந்தக் குழந்தை தற்கொலை செய்த செய்தியை படித்திருப்பீர்கள். ஒரே குழந்தையை இழந்த பெற்றோர் இனி திருந்தி என்ன பயன்? அவர்கள் வாழ்க்கை முழுவதும் நரக வாழ்வுதான். ஆனால் அவர்களின் அனுபவம் நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.
    இதுபோன்று 8வது வகுப்பு மாணவி ஒருவர் சகமாணவியரின் பொருட்களைத் திருடி இருப்பார் என்ற சந்தேகத்தில், அவர் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியை அவரை மிக கடுமையாக (அவசரப்பட்டு, நிதானமிழந்து, சுயகட்டுப்பாடின்றி, உடனடி முடிவு எடுத்ததன் விளைவாக) மற்ற மாணவர்கள் முன்பு வைத்து அவமானப்படுத்தியுள்ளார். மாணவி தற்கொலை செய்துவிட்டார். மாணவியின் பெற்றோர் எவ்வளவு வேதனையுடன் துடிதுடித்து போய் வாழ வேண்டியிருக்கும்?
    சென்னையில் 4 ஆசிரியைகள் சேர்ந்து ஒரு மாணவியைத் திருத்தும் விதமாக அவமானப்படுத்திய செய்தியையும் படித்திருப்பீர்கள். அதிலும் மாணவி தற்கொலை. ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.
    குழந்தைகளின் இழப்பு, தாய், தந்தையரின் இழப்பு அல்லது உடன் பிறந்தவரின் இழப்பு என உயிர்களின் இழப்பு என்பது வலி மிகுந்த இழப்பு.
    என்ன காரணம்?
    நிதானமின்மை, அவசரம், உடனடியாக நினைத்த காரியத்தை அடைந்துவிட வேண்டும் என்ற விவேகமற்ற வேகம்.
    நிதானமின்மை தான் ஓட்டுனர்களைக் கவனமின்றி வேகமாக வாகனத்தை செலுத்த வைக்கின்றது.
    பெற்றோர், ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை வழி நடத்த அன்பான வழிமுறைகளை விட்டுவிட்டு அடி, உதை போன்ற அவசரமான, நிதானமற்ற வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்க வைக்கின்றது.
    பலன்: விபத்துக்கள், விரக்தி, தோல்வி மனப்பான்மையின் உருவாக்கம், அவமானம், தற்கொலை. மேலும் எதிர்மறை விளைவுகளும், தாக்கங்களும்.
    ஆகவே, அன்பு தன்னம்பிக்கையாளர்களேÐ
    அவசரம் வேண்டாம்.
    நிதானம் போதும்.
    குறிக்கோள்களை அடைவது உறுதி.
    சந்தோஷம் தொடரும்.
    சாதனைகள் நிகழும்.

    40. கோபம் அது ஒரு சாபம்
    கோபத்தினால் கண்ட பலன்களே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் கோபத்தின் உச்சியில் சிலர் எடுத்த பல முடிவுகளே, உலக சரித்திரத்தில் மிகவும் மோசமான உயிர் சேதங்கள் மற்றும் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
    ஏன் உலக வரலாற்றினைப் புரட்டிப்பாருங்கள்
    சமீப காலத்தின் செய்தித்தாள்களைச் சற்று திருப்பிப் பாருங்கள்.
    சகோதரர்கள், சகோதர சகோதரிகளைக் கொன்ற செய்திகள். பணியாளர்கள் மேலதிகாரிகளைக் கொன்ற செய்திகள். தொழிலதிபர்கள் சக தொழிலதிபர்களை (யாருக்கும் யாரும் போட்டியாளர் இல்லை, என்பதை உணராமல்) கொன்ற செய்திகள்…
    அதற்கும் மேலாக ஆசிரியர், பெற்றோர், நண்பர், சமூகத்திடம் கொண்ட உச்சகட்ட கோபத்தில் தன்னையே தான் மாய்த்துக்கொண்ட குழந்தைகள் பற்றிய செய்திகள்…
    இன்னும் எத்தனையோ சகோதரர்கள், கணவன் மனைவியர், பெற்றோர் குழந்தைகள், நண்பர்கள், கோபத்தின் உச்சியில் எடுத்த முடிவுகளால் தங்களுக்கு இருந்த உயிருக்குயிரான. உறவுகளை (சீரழித்து) அழித்து இருக்கிறார்கள். எத்தனையோ சகோதர சகோதரிகள், பெற்றோர் குழந்தைகள், கணவர் மனைவியர், ஒரே வீட்டில் வசித்தும், தங்களுக்குள் எந்த உரையாடலும் இன்றி (ஏதோ) வாழ்ந்து (நடித்து) கொண்டிருக்கிறார்கள்.
    ஆகவே, கோபம் உயிர்களைப் பறிக்கலாம். உறவுகளை முறிக்கலாம், எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கலாம். உடல் நலத்தை சிதைக்கலாம். சிந்திக்கும் திறனை குறைக்கலாம். ஆகவே உங்கள் வாழ்வில் கோபத்திற்கு இடம் கொடுப்பீர்களானால் சந்தோஷத்தோடு சாதனை வாழ்வு வாழ வேண்டிய அற்புத வாய்ப்பை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும்.
    கோபம் எப்படி ஏற்படுகிறது
    கோபம் என்பது அடிப்படை காரணம் அல்ல. இது ஒரு விளைவு மட்டுமே, அப்படியானால் ஒரு செயலைத் தொடர்ந்து, உடனடியான விளைவு என்பது அடிப்படை காரணங்களாகிய (அடிப்படை விளைவுகள்) பொறாமை, பயம், தோல்வி, கசப்புணர்வு, அவமானம், பலமின்மை, ஏமாற்றம், பாதுகாப்பின்மை, தனிமை போன்ற அடிப்படை முதல்நிலை உணர்வுகளின் உருவாக்கமே. ஒரு செயல் விளைவித்தவுடன் இந்த அடிப்படை உணர்வுகள் எந்த அளவு வீரியத்துடன் நம்மில் உருவாகின்றதே அந்த அளவு நம் கோபம் (இரண்டாம் நிலை உணர்வு) நம்மிடமிருந்து பீறிட்டு, வார்த்தைகள், செயல்கள், உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றங்களாக வெளிவருகின்றது.
    ஆகவே, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்வீர்களானால், முதலில் இரண்டாம் நிலை உணர்வாகிய கோபத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அந்தக் கோபத்திற்கு காரணமான முதல்நிலை உணர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.
    கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
    கோபத்தின் ஆணிவேர் என்பது எண்ணங்களில் தான் இருக்கின்றது. நாம் எதிர்பார்க்கும் விதமாக நம்மை சுற்றி இருப்பவர்கள் செயல்படாவிட்டால்; நாம் விரும்பும்படி நம்முடைய சூழ்நிலைகள் அமையாவிட்டால், நம்முடைய மனது எண்ண அலைகளை ஓடவிடுகின்றது. அந்த எண்ண அலைகளின் விளைவுகள் தான் கோபத்தின் முதல்நிலை உணர்வுகள், எண்ணத்தை தொடர்ந்து வரும், முதல்நிலை உணர்வுகளின் தாக்கம்தான் கோபம் என்கிற இரண்டாம் நிலை உணர்வு. அத்தகைய இரண்டாம் நிலை உணர்வின் வெளிப்பாடுகள் தான் திட்டு, அடி, உதை, மறைமுக தாக்குதல்கள், பொருட்களை உடைத்தல், கொலை, புலம்பல், தற்கொலை என்ற பல்வேறு எதிர்மறை செயல்கள். கோபத்தின் காரணமாக நேர்மறை செயல்களும் விளைவுகளாகலாம். எத்தனையோ சாதனையாளர்களின் சாதனை சரித்திரத்தின் பின்னணியைப் பார்ப்பீர்களானால் சில சூழல்கள் அல்லது நபர்கள் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கோபமாக இருந்திருக்கலாம். இதனால் நன்மை இருப்பது ஒரு பக்கம். ஆனால் அதிக கோபத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட சாதனையாளர் மனதில், பழிக்குப்பழி அல்லது விரோத உணர்வு தொடர்ந்து இருந்துவிடாமல் இருப்பது அவசியம்.
    ஏனென்றால் வெளிப்படுத்தப்பட்ட கோபத்தின் விளைவைவிட, மனதில் அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் பின்விளைவு மோசமானது ஆகும்.
    ஆகவே, கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டுமானால், கோபம் வரும் சூழல்களில் நமக்குள் ஏற்படும் முதல்நிலை உணர்வுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
    எடுத்துக்காட்டாக, என்னுடைய நண்பர் ஒருவரின் மகன் காதல் திருமணம் செய்யும் முடிவுடன் தாய் தந்தையுடன் பேசத் துவங்கினான். அவன் கூறிய செய்தியைக் கேட்ட தாய் ,மயங்கி விழுந்துவிட்டார். பின் கோபத்துடன் மகனைத் திட்டியதுடன் உடலாலும், மனதாலும் சோர்ந்துவிட்டார். தந்தையோ மகனை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடத் துவங்கினார்.
    தாய் தந்தையருக்கு இவ்வளவு கோபம் கொப்பளிக்க என்ன காரணம்? ஊரார் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமாக இருக்கலாம். அதாவது பயம் அல்லது அவமான உணர்வு. தங்கள் கனவுகள் தகர்ந்துவிட்டதோ என்ற எண்ணமாக இருக்கலாம். அதாவது ஏமாற்றம் என்ற உணர்வு, தாங்கள் போட்ட திட்டம் அல்லது தாங்கள் விரும்பிய வரனை முடிக்கமுடியவில்லையே என்ற எண்ணம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இது தோல்வி என்ற முதல்நிலை உணர்வினை அடிப்படையாக ஏற்பட்ட எண்ணம்.
    அத்துடன் எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் மகனுக்கு கிடைத்துவிட்டதே என்ற எண்ணத்தினால் ஏற்படும் பொறாமை உணர்வு கூட இந்த பெற்றோரின் கோபமான நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
    மேலும் வருகின்ற மருமகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பாளா? தங்கள் அமைதியான வாழ்விற்கு, தங்கள் தேவைகளுக்கு தங்கள் பராமரிப்பிற்கு, தங்கள் மகனின் நிம்மதியான வாழ்விற்கு உதவியாக இருப்பாளா? என்ற பலவீனம் அல்லது பாதுகாப்பின்மை உணர்வு மற்றும் தனிமை போன்ற, முதல்நிலை உணர்வுகள் கூட அந்த பெற்றோர்களின் கடுமையான கோபத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
    ஆகவே, மேற்கண்ட நிகழ்வில் பெற்றோர் தங்கள் இயல்பான குணநலன்கள், கோபத்திற்கான முதல்நிலை உணர்வுகளை (அவர்கள் மழலைக் காலம் முதல் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்) விழிப்புணர்வுடன் ஆய்ந்து, அறிந்து ஆளுமையில், குணநலன்களில் தேவையான மாற்றங்களைச் செய்து வாழ்ந்து வந்திருப்பார்களானால், எதிர்பாராத கோப உணர்வையும், கோபத்தின் வெளிப்பாடுகளையும் தவிர்க்கலாம்.
    கோபத்தினை எளிதாக மேலாண்மை செய்ய முடியும் என்பதனை புரிந்து கொள்ள ஓர் எடுத்துக்காட்டு:
    ஒரு நண்பர், அமெரிக்க தேசத்தில் பணிபுரியும் தன் மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பை பெறுகிறார். கிடைத்த செய்தி, “அப்பா, நான் என்னுடைய வருங்கால வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்துவிட்டேன்” என்பது தான். அவர், “அப்படியா மகனேÐ நல்லது. இந்தச் செய்தியை உன் அம்மாவிடம் அவசரப்பட்டு சொல்லிவிடாதே” என்று கூறிவிட்டு, மகனிடம் சில கேள்விகளைக் கேட்டார்.
    குறிப்பாக, மகனே அந்த உன் தோழி உனக்கு அறிமுகமாகி எத்தனை காலம் ஆகியது? என்ற கேள்வியை தொடுத்தார். மகன், “மூன்று மாதங்கள்” என்றார். தந்தை உடனே “பரவாயில்லை, நீ தொடர்ந்து அவளுடன் நட்போடு பழகு, திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. ஆனால் அப்பெண்ணின் இயல்பு, குணநலங்கள், எதிர்பார்ப்புகள், குடும்ப பின்னணி போன்றவற்றைப்பற்றி விழிப்புணர்வுடன் பழகி மேலும் பயனுள்ள செய்திகளை, அனுபவங்களை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துவாயாக” என்று அறிவுரை வழங்கினார்.
    அடுத்து மூன்றாவது நாளில் மகனிடமிருந்து தந்தைக்கு அழைப்பு. “அப்பா நான் அந்த பெண்ணை மணக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். இனி நீங்கள் நம் ஊரிலேயே உங்களுக்குப் பிடித்தமான வரனை பார்க்க தொடங்கிவிடுங்கள்” என்றார். இந்த இரண்டாவது நிகழ்வில் எவ்வளவு சந்தோஷம் பெற்றோருக்கு.
    ஏன்? இந்த இரண்டாவது நிகழ்வில் மட்டும், தந்தைக்கு மகனிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டபோது பயம், அவமானம், தோல்வி, ஏமாற்றம், பொறாமை போன்ற கோபத்திற்கு அடிப்படையான முதல்நிலை உணர்வுகள் வந்திருக்காதா?
    கண்டிப்பாக ஒரு தந்தை என்ற நிலையில் அப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்பட்டிருக்கும்.
    ஆனால், தன் சுய விழிப்புணர்வின் மூலம் அவற்றை அறிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அந்த உணர்வுகள் வழங்கிய தூண்டுதல்களுக்கு ஏற்ப செயல்பட்டு கோபம் என்ற எரிமலையை வெடித்து சிதறவிடாமல், அமைதியாக செயல்பட்டார். தந்தையின் முதிர்வான செயல்பாடு காரணமாக மகன் பெற்றோர் விருப்பமே என் விருப்பம் என்றநல்ல முடிவினை எடுத்துவிட்டார். குடும்ப உறவுகள் சீர்குலையவில்லை. கொலைகள், தற்கொலைகள் நடந்துவிடவில்லை. அமைதி கெட்டுவிடவில்லை. கசப்புணர்வுகள், மன அளவு வடுக்கள் யாருக்கும் ஏற்பட்டுவிடவில்லை. எப்படி முடிந்தது?
    சுயவிழிப்புணர்வுடன், பொறுமையுடன் நிகழ்ந்த உரையாடல்கள் காரணமாக மட்டுமே முடிந்தது.
    ஆகவே, சந்தோச சாதனைப் பயணம் மேற்கொண்டுள்ள தன்னம்பிக்கை நாயகர்களே, நாயகிகளே, எப்பொழுதும் சுயவிழிப்புணர்வுடன் செயல்பட்டு, உங்களில் காணப்படும் முதல்நிலை கோப உணர்வுகளைப் புரிந்துகொண்டு அமைதியுடன் சூழல்களைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்.
    கோபம் உங்களைப் பார்த்து கோபப்படத் துவங்கும். அத்தகைய சுயவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான், உளவியல் வல்லுனர்கள், கோபம் வந்தால் 1 முதல் 100 வரை எண்ணுங்கள், கோபம் கொள்பவருக்கு கோபமாக ஒரு கடிதம் எழுதுங்கள் (தபால் செய்ய வேண்டாம்) என பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறார்கள்.
    அதைவிட கோபம் வருவதற்கு முன்பாகவே, இப்பொழுதிருந்தே தன் விழிப்புணர்வை நோக்கி செயல்படுவோம். நம்மில் காணப்படும் கோபத்திற்கான முதல்நிலை உணர்வுகளையும், அவற்றின் காரணங்களையும் கண்டுபிடித்து, கோபத்தை முளையிலேயே கிள்ளி எறிய முடிவெடுப்போம்.
    என்றென்றும் சந்தோசத்தோடு சாதனை வாழ்வு வாழ்வோமாகÐ வாழ்த்துக்கள்Ð
    (சந்தோச சாதனை அனுபவங்களுடன் அடுத்த இதழில் சந்திப்போம்…)

    நிலைத்திருக்கும் நினைவுகள்

    இன்று நினைத்தாலும் அந்த நிகழ்ச்சிகள் பசுமையானவையாக மனதில் படிந்திருக்கின்றன. சிறிதளவு கனத்த உடலானாலும் எப்போதும் சுறுசுறுப்பாக மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் தோற்றமளிப்பார். எவரோடும் எதார்த்தமாகப் பழகுவார். இனிய சொற்களாலேயே எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்துவார். மனம் சோர்ந்துவிட வாழ்க்கையில் தளர்ந்து போன எவரையும் உட்சாகப்படுத்தி ஊக்கமளிப்பார். உண்மையையும், நேர்மையையும் நேசித்தவர். அவற்றைத்தன் எழுத்துக்களிலும், மேடைகளிலும், தனிப்பேச்சுகளிலும் தயங்காமல் வெளிப்படுத்துவார். தன்னால் இயன்றதைப் பிறருக்குத் தானே முன்வந்து செய்வார். நல்லது என்று அவருக்குத் தோன்றினால் அதை வலியுறுத்திச் சொல்லத் தயங்கமாட்டார். அவரைப் பார்க்கும் அந்தக் கனத்திலேயே எவருக்கும் மனதில் மகிழ்ச்சி அரும்பிவிடும். சமுதாய ஈடுபாடுள்ள எவரையும் சந்தித்துப் பேசி மகிழ்வார். வாழ்க்கையை உடன்மறைக் கண்ணோட்டத்துடன் பார்த்துப் பழக வேண்டும் என்பார். முயற்சித்து முன்னேற வேண்டும் என்று சொல்லுவதோடு மட்டுமல்லாமல் தன்னால் இயன்றதைச் செய்வார்.
    சென்ற 1988ம் ஆண்டு என்னுடைய நாவல் ‘அங்குத்தாய்’ வெளியானது. அதன் ஒரு பிரதியை எங்களூர் நண்பர் ஒருவர் வாயிலாக அவருக்குக் கொடுத்து அனுப்பினேன். அந்த நண்பர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அப்போது பணியாற்றி வந்தார். அந்த நாவலைப் படித்துவிட்டு அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்த வேண்டுமென்று விருப்பப்பட்டார். அதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் அமரர் இல.செ.க. தானே முன் முயற்சி எடுத்து விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் அவர்களை விரும்பி வேண்டி அதன் வெளியீட்டு விழாவை நிகழ்த்த ஏற்பாடு செய்தார். அதே சமயத்தில், காவ்யா பதிப்பக வெளியீடாக என்னுடைய சிறுகதைத் தொகுப்பான, ‘ரி வோல்ட்’-ம் வெளியானது. இரண்டுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. பல அறிஞர்களும், படைப்பாளிகளும் பங்கு கொண்டனர். கோவை செஞ்சிலுவைச் சங்கத்தில் நடந்த அந்த விழாவில் தாமே முன்வந்து அவர் அந்த நாவலை வெளியிட்டார். டாக்டர் மனோகர் டேவிட் ‘ரி வோல்ட்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. அதற்குப் பிறகு என்னுடைய படைப்புக்கள் எவ்வளவோ வெளியாகின. அதுதான் முதலாவதும், கடைசியானதுமான எனது படைப்பு வெளியீட்டு விழா.
    தாமே ஒரு சிறந்த எழுத்தாளர் என்றாலும் என்னைப் பாராட்டிப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் அவருக்கு இருந்தது. ஒரு தாயின் கருணையைப் போன்ற உணர்வாகவே அது இருந்தது.
    ஒருமுறை என்னைத் தனியே அழைத்து வைத்து எனக்குத் தேவையானதை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சுட்டிக்காட்டினார். மார்க்சியச் சிந்தனையில் தோய்ந்துபோன என்னை வாழ்க்கையை உடன்மறைக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பதை அடையாளம் காட்டினார். அந்தக்கருத்து என்னை மேலும் கூர்மைப்படுத்தியது. வாழ்க்கையையும், சமுதாயத்தையும் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் அறிவியல் ரீதியாக அணுகக் கற்றுக்கொண்டேன். இதே முறையில் அவர் பலரை நெறிப்படுத்தியிருப்பதை நான் அறிவேன்.
    உயர்கல்வி கற்றிருந்தாலும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த எனக்கு வழிமுறை காட்ட அவர் வந்தார். வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்த என்னை ஒரு மாட்டுப்பண்ணை வைத்து நடத்தத் தூண்டினார். அது என்னுடைய வருமானத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்றும் ஆலோசனை கூறினார். அதற்குத் தாமே ஏற்பாடு செய்வதாகச் சொல்லி என்னை வேளாண் பல்கலைக் கழகத்திற்கு வந்து சந்திக்கும்படி சொன்னார். அதற்கு இசைந்த நான் அவர் விரும்பியபடி அவரைச் சந்தித்தேன். தாமே முன்வந்து என்னை வேளாண் பல்கலைக்கழக மாட்டுப்பண்ணைக்கு அழைத்துச் சென்று காட்டி விவரங்களைச் சொன்னார். ஒரு கல்வியாளன் அறிவுத் துறையில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது அவருடைய கருத்து.
    ஒருமுறை எமது நண்பரான கவிஞர் மு. மேத்தா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவைக்கு வந்திருந்தார். கோவை ஏ.பி. லாட்ஜில் அவருக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் தங்கியிருந்த அறைக்கு வெளியே அந்நேரத்தில் அமரர் இல.செ.க. அவர்கள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அறைக்குள் கவிஞர் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்று அவர் வெளியில் காத்திருந்தார். அவர் தன்னுடைய வருகையைக் கவிஞருக்குத் தெரிவித்திருந்தால் கவிஞரே தூக்கத்தைத் தவிர்த்துவிட்டு வெளியில் வந்திருப்பார். கவிஞர் மு. மேத்தா கோவையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரை எம்.ஏ. பட்டம் பெற வழிகாட்டியவர் அமரர் இல.செ.க. அவர்கள்.
    அந்த நேரத்திலும் அமரர் இல.செ.க. எழுதிக் கொண்டிருந்தார். கவிஞர் தாகூரைப் பற்றித் தாம் எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறியதோடு தாகூரைப் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கேட்டார். நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். அதன் பிறகுதான் நேரம் கழித்து கவிஞர் அறையைத் திறந்து கொண்டு வெளியில் வந்தார்.
    நேரத்தை முறையாகப் பயன்படுத்துவதும், மனிதர்களை நேசத்தோடு அணுகுவதும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதும் அவருடைய இயல்பு. தன்னுடைய மேதைமையைக் குறித்து எந்த விதமான கர்வமும் கொள்ளாத பெருந்தன்மையாளர் அவர். மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். தன்னுடைய கருத்துக்களைத் தயங்காமல் வெளிப்படுத்துபவர்.
    வானம்பாடிக் கவிஞர் குழுவை வேளாண் பல்கலைக் கழகத்திற்கு அழைத்து மாணவர்கள் முன்னிலையில் ‘கவி இரவு’ நிகழ்ச்சியை நடத்துவதற்கான முயற்சிகளைச் செய்தார். மாணவர் மன்றம் அந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த எல்லாவிதமான வசதிகளையும் செய்தது.
    காட்சிக்கு எளியவராகவும் கடுஞ்சொல் சொல்லாதவராகவும் இருந்து எல்லோரையும் அவர் மகிழச் செய்தார். அதில் தானும் மகிழ்ந்தார். தன்னைப் போலவே ஒவ்வொரு மனிதரும் உயர்வடைய வேண்டுமென்று உளமாற விரும்பினார். அவரைப் பற்றிய நினைவுகள் நிலையானவை.

    இங்கிலீஸ் ரொம்ப ஈஸி

    கணக்குப் பாடம், நிறைய மாணவர்களுக்குக் கலக்கம் தரும் பாடமாகக் கருதப்படுகிறது. ஆங்கிலமும் அப்படியே, கல்லூரி மாணவர்களுக்குக் கூட சற்று கைவராத பாடமாகத்தான் இருக்கிறது; உரையாடுவதற்கு உபத்திரவம் தரும் ஒரு மொழியாகத்தான் இருக்கிறது.
    ஆனால், கொஞ்சம் முயற்சித்தால், தொடர்ந்து தினமும் பயிற்சி எடுத்தால், ஆங்கிலம் அப்படி ஒன்றும் முழி பிதுங்க வைக்கும் மொழி அல்ல என்று புரியும்.
    என்ன முயற்சி? என்ன பயிற்சி?
    1. சொந்தமாக வீட்டில், ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் டிக்ஷ்னரி ஒன்றாவது இருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை ஆங்கில இலக்கணநூல் ஒன்றும் இருக்க வேண்டும். அவை கைக்கு எட்டும் தூரத்தில், கண்ணில் படும் இடத்தில், மேஜையிலேயே இருக்க வேண்டும்.
    2. எட்டாம் வகுப்பு / ஒன்பதாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு – ஆங்கிலப் பாடப் பகுதிகளிலிருந்து அல்லது ஹிந்து போன்றஆங்கில நாளிதழ்களிலிருந்து உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிறுத்தி நிதானமாகப் படியுங்கள். ஒருமுறைக்கு இரண்டு முறை, மூன்று முறைபடியுங்கள். தினமும் ஒரு புதிய பகுதியை, பாராவைப் படியுங்கள். பத்துப் பதினைந்து வரிகள் மட்டும் படித்தால் கூட போதும்.
    3. படித்து விட்டீர்களா? என்ன புரிந்து கொண்டீர்கள்? நீங்கள் புரிந்து கொண்டதை தமிழில் மொழிபெயர்ந்து உங்கள் வார்த்தைகளில் எழுதுங்கள். அதை உங்கள் வீட்டில் உள்ள, ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களிடம் கொடுத்து உங்கள் மொழிபெயர்ப்பு சரிதானா என்று பார்க்கச் சொல்லுங்கள். எந்த இடத்தில் எந்த வாக்கியத்தில் உங்கள் கருத்து மாறியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
    4. அடுத்த பயிற்சி என்ன தெரியுமா? மொழிபெயர்க்கும்போது, சில புதிய வார்த்தைகளை, சில கடின வார்த்தைகளைச் சந்தித்திருப்பீர்களேÐ அவைகள் உங்களைச் சங்கடப்படுத்தி இருக்குமேÐ சங்கடப்படுத்த விடலாமா? எடுங்கள் டிக்ஷ்னரியை. பொறுமையாக அந்த வார்த்தைகளைத் தேடி, பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கும் முக்கியம். ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துப் பார்த்து மனதில் பதித்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகள், வாக்கியத்தில், எந்த இடத்தில், எந்த வார்த்தையுடன் இணைந்து, இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
    5. இப்படி, தினமும் ஐந்தாறு வார்த்தைகளையாவது புதிது புதிதாக கற்றுக்கொள்ளுங்கள். இதற்காகவே ஒரு புதிய நோட்டை எடுத்து அந்த வார்த்தைகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மாதத்தில் ஆயிரம் புதிய சொற்கள் உங்களுக்கு அறிமுகமாகி இருக்கும். உங்களின் ஆளுமைக்குள் வந்திருக்கும்.
    6. இப்போது வேறு மாதிரியான பயிற்சி:
    வாரப்பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் உண்டுதானே உங்களுக்கு? அதில் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி புழங்கும் உரையாடல்கள் நிறையவே இருக்கும். உதாரணமாக, “நீ இப்ப என்னதான் சொல்ற?” “கூப்பிட்டா உடனே வரமாட்டியா நீ?” போன்றவை இந்த தமிழ் உரையாடல்களை ஆங்கிலத்தில் சொல்லிப் பாருங்கள்.
    What do you say finally?
    Would you not (or) Won’t you come quickly when I call?
    தமிழ் உரையாடல்களை ஆங்கிலத்தில் சொல்லும்போது சில சொற்கள் சேர்ந்திருக்கும். சில சொற்கள் விடுபட்டிருக்கும். அது அப்படித்தான். அதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    7. தினமும் இதுபோல் பத்து தமிழ் உரையாடல் வாக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதிப் பாருங்கள். எழுதியதை, ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் காண்பித்து, உங்கள் பிழைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.
    8. இதற்கும் தனியாக ஒரு நோட்டு போடுங்கள். எழுதிக் கொண்டே வாருங்கள். எழுதிவிட்டால் மட்டும் போதாது. எழுதி வைத்தவைகளைத் தினமும் வாய்விட்டுச் சொல்லி பாருங்கள். சொல்லச் சொல்ல, உங்களிடம் ஒரு தன்னம்பிக்கை மெல்ல மெல்லப் பிறக்கும். இதோடு நில்லாமல், வீட்டில் பேசும்போதும், நண்பர்களிடம் பேசும்போதும், கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தில் பேசுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆறேழு மாதத்தில் ஆங்கிலப் பேச்சு (நல்ர்ந்ங்ய் உய்ஞ்ப்ண்ள்ட்) என்பது அத்துபடியாகிவிடும்.
    9. இப்போது நான்காவது வகைப்பயிற்சி:
    அடிப்படை ஆங்கில இலக்கண நூல் ஒன்று வாங்கியிருக்கிறீர்கள் அல்லவா? அதை தினமும் எடுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு வாரம் என்று கெடு வைத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து படியுங்கள். இலக்கண விதிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். சந்தேகம் ஏற்பட்டால், யாரிடமாவது உடனே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
    10. குழந்தைகளுக்கான எளிய தமிழ் நூல்கள் ஒன்றோ, இரண்டோ வாங்குங்கள். அல்லது ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பான தமிழ்ப் பாட நூல்களை வாங்குங்கள். அவற்றிலிருந்து தினமும் ஐந்தாறு வாக்கியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட இலக்கண அறிவைக் கொண்டு இந்த தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் இலக்கண சுத்தமாக மொழிபெயருங்கள். வழக்கம்போல் இதையும் ஆங்கிலம் தெரிந்த ஒருவரிடம் காட்டி பிழைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.
    அவ்வளவுதான். இப்போது உங்கள் நிலை என்ன?
    நிறைய புதிய சொற்களைக் கற்றுக் கொண்டீர்கள்.
    ஆங்கில வாக்கியங்களைத் தமிழப்படுத்தக் கற்றுக் கொண்டீர்கள்.
    தமிழ் உரைநடைப் பேச்சுக்களை ஆங்கிலத்தில் பேசப் பழகிக் கொண்டீர்கள்.
    இலக்கணப் பிழையின்றி ஆங்கிலத்தில் எழுதவும் தேறிவிட்டீர்கள்.
    இப்போது புரிந்திருக்குமே ஆங்கிலம் அப்படி ஒன்றும் கஷ்டமில்லை என்று.
    இந்த வழிமுறைகளைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட வீட்டுப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் ஆர்வம் உள்ள யாவரும் முயன்று பார்க்கலாம்.
    முயற்சியும், தொடர்ந்த பயிற்சியும் இருந்தால் முடியாததும் உண்டோ?

    திருநங்கையர் தினம்

    இந்த ஆண்டு (2011) முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2008-ம் ஆண்டு ‘அரவாணிகள் நலவாரியம்’ தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதிதான் திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது,
    பெண் என்பது ஒரு பாலினம் ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாவது ஒரு பாலினம் என்று கொள்ளலாம். ஆணும் பெண்ணும் இயற்கையின் படைப்பு என்றால் அரவாணிகளும் இயற்கையின் படைப்புதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    அடிப்படையான பால் நிலையிலிருந்து திரிபடைந்தவர்களே இந்த அரவாணிகள். ஆரம்பத்தில் ஆணாகப் பிறக்கும் இவர்கள் நாளடைவில் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பெண்மைக்குரிய தன்மையினை அதிக அளவில் பெறுவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. பிறவியில் பெண்ணாகப் பிறப்பவர்கள் ஆணாகத் திரிபடைதலும் உண்டு. எனினும் எண்ணிக்கையில் இது மிகவும் குறைவு.
    அரவாணிகள் பலகாலமாக அலி பேடி போன்ற சொற்களால் கிண்டலும் கேலியுமாக அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமின்றி வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள்.
    அரவாணிகள் என்போர் இன்று நேற்றல்ல, இதிகாச காலத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். தொல்காப்பியம் ஆண் தன்மை மிகுந்த பெண்களை ‘ஆண் அரவாணி’ என்றும் பெண் தன்மை மிகுந்த ஆண்களை ‘பெண் அரவாணி’ என்றும் விளக்குகிறது. நன்னூல் ஆண் அரவாணியை ‘ஆண்பேடு’ என்றும் பெண் அரவாணியை ‘பெண்பேடு’ என்றும் வகைப்படுத்தியுள்ளது,
    மகாபாரதத்தில் அரவாணிகள் பாத்திரங்களாகவே படைக்கப் பட்டுள்ளனர், குருஷேத்திரப் போரில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்தக் குறையும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனித உயிர் தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆரூடம் கூறுகிறது. அர்ஜுனனின் மகன் அரவானை பலியாக்க முடிவு செய்கின்றனர். அதற்கு அரவான் சம்மதித்தாலும் தன் கடைசி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லறவாழ்வில் ஈடுபட்ட பின்புதான் பலிக்களம் செல்வேன் என்று சொல்கிறான். எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். ஒருநாள் இல்லறவாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக்கோலம் பூணுகிறாள் மோகினி. அந்த மோகினியாகத்தான் அரவாணிகள் தங்களை நினைக்கின்றனர். கொலையுண்ட அரவானை கூத்தாண்டவராக நினைத்து வழிபடுகின்றனர்.
    கூத்தாண்டவர் திருவிழா
    அரவாணிகள் சமூகத்தில் கூத்தாண்டவர் திருவிழா ஒரு சமுதாய சடங்காக நடத்தப்படுகிறது. திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது.
    சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானை கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பொழுது விடிந்ததும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிலை வைக்கப்பட்டு கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள கொலைக்களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறது. உயிர்விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை துண்டிக்கப்படுகிறது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து பூ எடுத்து வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக் கோலம் பூணுகின்றனர்.
    இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வரும் திருநங்கைகளை ஒன்றிணைக்கும் விழாவாகவும் அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு கலைத்திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இந்த விழா அமைகிறது,
    அரவாணிகளை மக்கள் மதிக்கின்ற நிகழ்வுகளும் உண்டு, திருமண விழா குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா கடை திறப்பு விழா போன்ற நற்காரியங்களுக்கு பூசாரியை அழைப்பது போன்றே திருநங்கைகளையும் அழைத்து ஆசி வாங்கிக் கொள்ளும் பழக்கம் மும்பை போன்ற பகுதிகளில் அதிகமாக உள்ளது. அரவாணியிடம் ஆசி பெற்றால் குழந்தை அரவாணியாக மாறாது என்று நம்பிக்கையும் நிலவுகிறது.
    அரசின் திட்டங்கள்
    தங்கள் சமூகத்தின் முதல் போராட்டம் என்று அரவாணி சமூகத்தினர் கருதுவது 2004ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனுவைத்தான் வங்கிக் கணக்கு திறப்பது வங்கிக் கடன் பெறுவது தொலைபேசி இணைப்புக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றிற்குத் தகுதியானவராகக் கருதப்பட ஒருவருக்கு தேவையான குடும்ப அட்டை அரவாணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடரப்பட்ட ரிட் மனு அது.
    ஜுலை 2004ல் சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்ட அறிவிப்பில் அரவாணிகள் அரசு அடையாள அட்டைகளுக்கும் ஆவணங்களுக்கும் விண்ணப்பிக்கும்போது ஆண் அல்லது பெண் இரண்டில் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறியது.
    டிசம்பர் 2006ல் அரவாணிகளின் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்று அரவாணிகள் நல்வாழ்வுக்கான துணைக்குழு அமைக்கப்பட்டது. இதனையொட்டி வெளிவந்த அரசாணை பல முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறது, அரவாணிகளுக்கு அனுமதி வழங்காத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கைகள்; அரவாணிகள் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு நிதியுதவிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள்; பால் மாற்று அறுவை சிகிச்சை வேண்டி அரவாணிகள் அணுகும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அறிவுப்பூர்வமான தகவல்கள்; மனநல ஆலோசனை வழங்குவதற்கானப் பயிற்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அடையாள அட்டைகள் குறித்த புகார்களைத் தெரிவிப்பது போன்றவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த அரசு ஆணை தெரிவித்தது.
    மே 2008ல் சமூக நலவாழ்வுத் துறையின் கீழ் அரவானி நலவாரியம் அமைக்கப்பட்டது. அதே மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை தமிழகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரவாணிகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கு வழி செய்தது.
    கணக்கெடுப்பு
    பொதுவாக அரவாணிகளை ‘ஆண்கள்’ பிரிவில் சேர்க்கும் நடைமுறை உள்ளது. ஆனால் ‘தங்களை தனிப்பிரிவாக சேர்த்து தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரவாணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அரவாணிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது.
    மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்கள் பெண்களுக்கு முறையே 1 2 என்ற எண்கள் வழங்கப்பட்டுள்ளன, இப்போது அரவாணிகளை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 3 என்ற எண்ணில் குறிக்கப்படுவார்கள் எனினும் 3ம் எண்ணில் குறிக்கலாம் என்று சம்பந்தப்பட்டவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த எண்ணில் சேர்க்கப்படுவர்.
    ஆண் பெண் போலவே அரவாணியும் ஒரு மனித இனமே. அவர்களும் சமமாக கருதப்பட வேண்டும். அரவாணிகள் நலனுக்காக தமிழக அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. அவர்கள் கல்வியறிவு பெறவும் மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறவும் சட்டபூர்வ அந்தஸ்தை பெறவும் அரசு வழி வகை செய்துள்ளது. நீண்டகால போராட்டத்திற்குப் பின்பு இப்போதுதான் சமுதாயத்தில் இவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கி உள்ளது.
    மக்கள் அரவாணிகளை அருவருப்பான மனநிலையோடுதான் பார்க்கின்றனர். ஊடகங்கள் அவர்களை கேவலமாக சித்தரிக்கின்றனர். சமூகம் இவர்களை ஒரு இழி பிறவிகளாக கருதி புறக்கணிக்கின்றது. அரவாணிகள் குறித்து பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும் விவாதங்களும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
    மற்றவர்களைவிட உழைப்பிலும் அறிவிலும் அரவாணிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. சமுதாயம் தான் அவர்களுக்குரிய வாய்ப்புகளைத் தராமல் ஒதுக்கி வருகிறது. தடைகளைத் தாண்டி அரவாணிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்.
    திருநங்கை சமுதாயத்தில் பிறந்து இன்று ஆண் பெண் இருபாலரையும் விஞ்சி விடும் வண்ணம் மிகச் சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து நடனப் பள்ளி தொடங்கி நடனத்தை வளர்த்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.
    திருநங்கைகளுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் தர வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டதன் காரணமாக ஊடகங்களில் திருநங்கையே தொகுப்பாளராக வந்து முத்திரை பதித்து வருகின்றனர்.
    அவர்கள் தங்களுக்குள் இருக்கும் மனத்தடைகளையும் குழப்பங்களையும் உடல் ரீதியான உறவுகள் குறித்தும் தெளிவான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், பிரபலமாக உள்ள அரவாணிகள் களப்பணியாற்றி தங்களைப் போன்றவர்களை வழி நடத்த வேண்டும்,
    அரவாணி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி ஏற்பதில்லை, அவர்களுக்குள் எழும் மாற்றங்களே அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. வலியுடனும், வேதனையுடனும் வாழும் அரவாணிகளைப் புறக்கணிப்பதைத் தவிர்த்து அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.
    அரவாணிகளுக்கான தவறான பிம்பத்தை உடைத்தெறிந்து அவர்களது உணர்வு மதிக்கப்படவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அவர்களை அரவாணி என்று குறிப்பிடுவதை விட திருநங்கை என்று அழைப்பதையே விரும்புகின்றனர். பெண்ணியம் போல அரவாணியம் பேசப்பட வேண்டும். அப்போதுதான் திருநங்கையரும் நல்வாழ்வு வாழ வழி பிறக்கும்.

    நிதானித்து நட

    தட்டில் சுடச்சுட இட்லிகள் வந்திறங்கின! அஜய் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான். “அம்மா! இன்னும் ஒரு நாலு கொண்டா…” என்ற படி காதில் மாட்டியிருந்த கருவி மூலம் இசை மழையில் நனைந்து கொண்டிருந்தான் அஜய். முணுமுணுத்த படியே உணவும் உள்ளே இறங்கி கொண்டிருந்தது. அப்போது குளியலறையிலிருந்து அப்பா வந்தார். முணுமுணுத்துக் கொண்டு, சிறு ஆட்டம் ஆடிய படி அஜய் சாப்பிடுவதைப் பார்த்து அப்பா தலை துவட்டிய படி, “ஏன்டா இப்ப லேப் டாப் வாங்கின?” என்று வினவினார். பாடல்களை நிறுத்தி விட்டு, மிக கூர்மையான பார்வையுடன் அப்பாவை நோக்கி, “ஏன் வாங்க கூடாது? நான் சம்பாதிக்கிறேன்! எனக்காக நான் வாங்குறேன்!” என்று பதிலளித்து இட்லியை மீண்டும் ருசிக்க ஆரம்பித்தான் அஜய். அம்மா இதை எல்லாம் சமையலறையிலிருந்து கேட்ட படியே தன் வேலையில் மூழ்கியிருந்தாள். “சரிடா! இங்க வீட்டில ஒரு கம்ப்யூட்டர் இருக்கே! அப்புறம் எதுக்கு இன்னொன்னு?” என்று அப்பா கேட்க, இட்லி மேல் சட்னி கொஞ்சம் ஊற்றி விட்டு “அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது! எனக்கு, என் வேலைக்கு எல்லாம் அது தேவை!” என்று கடுகடுப்பாக பதில் சொன்னான் அஜய். “சரி! அப்போ வீட்டில இருக்குற இந்த கம்ப்யூட்டர்?” என்று விடாப்படியாக அப்பா கேள்வி மீண்டும் தொடுக்க கோபம் மூண்டு, “அய்யோ! நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டியா? தொனதொனன்னு…” என்று சட்டென எழுந்து கை கழுவினான் அஜய். “ஆமா! வீணா தண்ட செலவு பண்ணிக்கிட்டே இரு! வேலைக்கு சேர்ந்து நாலு மாசம் தான் இருக்கும்! அதுக்குள்ள தாம் தூம்ன்னு செலவு பண்ணிக்கிட்டு! சேமிச்சு வை! சேமிச்சு வைன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்!” என்று அப்பா பொறிந்து தள்ளி கொண்டிருக்க, அஜய் சமையலறை சென்று தண்ணி குடிப்பது போல் மெல்ல அம்மாவிடம், “ஏம்மா இப்பிடி இம்சை பண்ணிக்கிட்டே இருக்காரு? நான் சம்பாதிச்சு வாங்கினா தப்பா? சும்மா….” என்று அஜய் மெத்தனப் பார்வையுடன் சொல்ல, அம்மாவோ, “ஏன்? அவர் சொல்றதுல என்னடா தப்பு இருக்கு? வேலை கிடைக்காம திரியுற காலத்துல காசு மேல உனக்கு அக்கறை இருந்துச்சு! இப்போ! நாலு காசு பார்க்க ஆர்ம்பிச்சவுடனே தண்ணி மாதிரி செலவு பண்ணுனா, அப்பா இல்ல எல்லாரும் கேள்வி கேட்பாங்க!” என்றார் அம்மா!
    கோபம் இன்னும் பல நூறு டிகரிகளைத் தாண்டியது அஜய்யிற்கு!
    தனது பொருட்கள் எடுத்து வேகமாய் வீட்டை விட்டு வெளியேறினான். “டேய்! என் மேல இருக்குற கோபத்த சாப்பாடு மேல காட்டாத! வந்து முழுசா சாப்டிட்டு போ!” என்றார் அப்பா. திரும்பி அப்பாவைப் பார்த்தான் அஜய். பின்னால் அம்மா, மதிய உணவு பெட்டியுடன் நின்றிருந்தாள். “ஆபிஸ் பக்கத்துல ஹோட்டல் இருக்கு! அங்கே சாப்பிட்டுகிறேன்! என்னை பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம்!” என்று விறுவிறுவென தன் இரு சக்கர வாகனம் ஏறி கிளம்பினான் அஜய்.
    ரோட்டில் செல்லும் போது, அப்பா காலையில் பேசியது அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சூரியன் அன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. இவனோ அதை விட மிஞ்சும் சூட்டில்! அது சாலையின் முக்கிய சந்திப்பு. எப்போதும் நெரிசல் அதிகாமாகவே காணப்படும்! அஜய்யின் வண்டி முன்னால் ஒரு வெள்ளை நிற சட்டை அணிந்த ஒரு இளைஞன், வண்டியை மிக மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தான். “வேகமா போய் தொலைய மாட்டங்க!” என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கையில், காலையில் அம்மா அப்பா உதிர்த்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளைத் துளைத்தது! வெப்பமும் அதிகரிக்க சட்டென்று, “டேய்! வேகமா வண்டி எடுடா!” என்று முன்னால் இருப்பவனை நோக்கி ஒரு சத்தம் போட்டான் அஜய். அந்த முகம் அஜய்யை திரும்பி பார்த்தது. அவன் இளைஞன் அல்ல, நாற்பது வயது நிரம்பிய ஒருவர்! முறுக்கு மீசையுடன் கோபமாய் பார்த்தார். அஜய்யிற்கு ஒரு நிமிடம் இதயம் நின்றது, நாக்கு வறண்டு போனது! அந்த மீசைக்காரர், “என்னடா சொன்ன? ‘டா’ போட்டு கூப்பிடுறியா? நான் யார் தெரியுமா?” என்று வண்டியை ரோட்டில் அங்கேயே நிறுத்தி விட்டு, தன் மீசையையும் புஜங்களையும் முறுக்கிய படி அஜய் நோக்கி வந்தார். கூட்டம் கூடியது! ‘நம்ம வட்டச் செயலாளர் பாண்டி அண்ணன் தானே அது!’ என்று கூட்டத்தில் யாரோ யாரிடமோ கேள்வி கேட்டது அஜய்யிற்கு இன்னும் பயத்தைக் கூட்டியது. வெகு நேர பேச்சு, அதட்டலுக்குப் பிறகு அஜய் அந்த மீசைக்காரரிடம் மன்னிப்பு கேட்டவுடன், மீசைக்காரர் தன் மீசையை முறுக்கிய படியே அங்கிருந்து சென்றார். அந்தக் கூட்டம் கலைந்தது. அதன் பின் அஜய் அங்கே தன் வண்டியில் அமர்ந்த படி இழுத்து ஒரு மூச்சு விட்டான். அவனும் அங்கிருந்து கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தான்.
    தன் இருக்கையில் அமர்ந்து விட்டு, அருகில் இருந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்தான். அப்போது, “சார்! இனிய காலை வணக்கம்!” என்ற ஒரு குரல் கேட்டது. அஜய் முன்னால் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் கடை நிலை ஊழியன் முனியன் நின்று கொண்டிருந்தான்.
    மூக்கு சிவந்து, கண்கள் நீர் நிறைய எதிரில் நின்ற முனியனைத் திட்ட வாய் எடுத்தான் அஜய். சாலையில் நடந்த அமளிதுமளி ஒரு கனம் அவன் கண் முன் ஓடியது!
    சட்டென கோபக் கனல் சிரிப்பு பூக்களாக மாறி அவன் வாய் வழி, “இனிய காலை வணக்கம்!” என்றது. “படபடப்பா இருக்கீங்க! இருங்க! உங்களுக்கு ஒரு கப் காபி கொண்டு வர்றேன் சார்!” என்று சிரிப்புடன் அங்கிருந்து சிட்டாய் பறந்தான் முனியன். மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டபடியே தன் இருக்கையில் சாய்ந்து கொண்டான் அஜய்.