– 2011 – March | தன்னம்பிக்கை

Home » 2011 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனதினை தெளிவு செய்

    மனிதனை மனிதனாய் வாழ வைப்பது மனம். மனிதா, உன் மனதினை தெளிவு செய். மனம் தெளிந்தால் சொல் தெளியும்; சொல் தெளிந்தால் செயல் தெளியும்; செயல் தெளிந்தால் உன்னுள் நம்பிக்கை சுடர்ந்து எரிவது உனக்குத் தெரியும். அச்சுடரொளியில் உன்னால் வெற்றி என்னும் சிகரம் நோக்கி முன்னேறமுடியும். ஆதலால் மனிதா, மனதினை தெளிவு செய்.
    மனம் என்பது என்ன?
    விந்தைமிகு, வியத்தகு இம்மண்ணுலகில் ஆறறிவு மனிதன் தம் ஐம்புலன்களால் உய்த்துணரும் உணர்வுகளையும், அனுபவம் வாயிலாக அடையும் அனுபவ அறிவு மற்றும் உணர்வுகளையும், தமது எல்லையற்ற சிந்தனைகளையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக அமைவது மனம்.
    சொல்லும் சொல் சீர்மை பெற;
    செய்யும் செயல் மேன்மையுற;
    வாழும் வாழ்வு வளமை பெற;
    வழிவகை செய்வது மனம்;
    மனம் என்னும் சொல் மூன்று விதமாக மனோதத்துவ அறிஞர்களால் கையாளப்படுகிறது. வெளி மனம், உள் மனம், ஆழ் மனம் என்று அறிஞர்களால் பகுக்கப்படும் மனதை, ஐம்புலன்களுடன் நேரடித் தொடர்புடைய, சுய நினைவில் வெளிப்படுத்துவதுமான உணர்வுகளைக் கொண்ட மனம் வெளிமனம் என்றும்; சுய நினைவிற்கும் அப்பாற்பட்ட அசாதாரண ஆற்றல் உடைய பிரபஞ்சத்துடன் தொடர்புடைய மனதை உள்மனம் அதாவது ஆழ்மனம் என்றும் அடையாளம் காட்டுகின்றனர் மனவியலார்.
    ஐம்புலன்களுடன் நேரடித் தொடர்புடைய வெளிமனமானது கிளைவிட்டு கிளைதாவும் குரங்கைப் போன்றது. பல்வேறு வெளி உலக பாதிப்புகளில் சிக்கித்தவித்து, குழம்பி, நிலைதடுமாறி நம் வாழ்க்கையையும் நிலை குலையச் செய்துவிடும்.
    மனக் குரங்கைக் கட்டுப்படுத்தியதால் தான் சித்தர்களால் சித்துகள் புரிய முடிந்தது. மனக்குரங்கை அடக்கியதனால்தான் சான்றோர்களால் சாதனை படைக்க முடிந்தது. மனக்குரங்கைத் தன் வசப்படுத்தியதால்தான் ஞானிகளால் ஞாலத்தையே வெல்ல முடிந்தது.
    மனிதா, நீ மகானாக வேண்டாம். மனிதனாகவாவது இருக்க வேண்டாமா? மனக்குரங்கை அடக்கி ஆள வேண்டாம், அமைதிப்படுத்தவாவது வேண்டாமா? இம்மானுட பூமியில் மனிதம் செழிக்க மனிதா, மனதினை தெளிவு செய்.
    மனத் தெளிவால்
    மனிதம் பிறக்கும்
    மனம் தெளிந்தால்
    மானுடம் சிறக்கும்
    மனம் தெளிவு பெற…
    ஆணவம், மாயை, காமம், ஆசை, கள்ளுண்ணல் இவைகட்கு அடிமையாகும் மனிதனால் இறைமையைக் காட்டும் அமைதிநிலையை அடைய இயலாது. அழுக்காறு, அடுத்துக் கெடுப்பது, கொலை, களவு, பொய்யுரை இவையனைத்திற்கும் மனித மனமே காரணமாக அமைகிறது.
    உள்ளத்துக்குள்ளே உள்ளதடா உலகம் நல்ல
    உள்ளத்தைக் கொண்டால் உலகிலிருள் விலகும்
    என்பதை உள்ளத்தால் உணர்ந்தறிய வேண்டும். இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையில்லா இவ்வுலக வாழ்வில் உனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள,
    தெய்வம் தெளி
    தெளிந்தோர்ப் பேண்
    பொய்யுரை அஞ்சு
    புறஞ்சொல் பேசேல்
    செய்ந்நன்றி கொல்லேல்
    தீ நட்பு இகழ்
    கள்ளும் களவும்
    காமமும் பொய்யும்
    வெள்ளைக் கோட்டியும்
    விரகினில் ஒழி
    என்று சிலம்பு காட்டும் செயல்களை மேற்கொள்.
    ஆழ்கடலில், அமைதியான பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் சுனாமியாய்ப் பேருருக்கொண்டு சுழன்றடித்து சுற்றுப்புறத்தையே சுத்தமாக்கிவிடவில்லையா? அடிமனதில் அமைதியான தெளிவில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் உன் சுற்றுப்புறத்தை மாற்றி உன்னை முன்னேற்ற சிகரத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
    உடலினை உறுதி செய்
    – திருமூலர் மந்திரம்
    அறிவினை விரிவு செய்
    – பாவேந்தர் மந்திரம்
    மனதினை தெளிவு செய்
    – தாரக மந்திரமாய்
    மனிதா, நீ தினம் ஜெபித்தால் மண்ணில் மனிதம் மலரும். வன்முறை அழியும். மானிடம் ஜெயிக்கும்.

    மதிப்பு, மரியாதை

    மதிப்பு, மரியாதை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. மதிப்பு என்பதை ஆங்கிலத்தில் (Value) வேல்யூ என்று சொல்கிறோம். நம்மைப் பொறுத்த அளவில் முக்கியத்துவம் என்று கொள்ளலாம்.
    மதிப்பு
    ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. அது பணத்தாலும் இருக்கலாம்; கலை நயத்தலாலும் இருக்கலாம்; உபயோகத்தாலும் இருக்கலாம். உதாரணமாக சாதாரண செருப்பை எடுத்துக் கொள்வோம். கடும் வெயில்; சாலையோர கரடுமுரடாக உள்ளது. நடந்து செல்ல வேண்டிய நிலை. இதுவரை வெறும் காலில் வெளியில் நடந்ததே இல்லை.
    செருப்புகள் இரண்டும் அறுந்துவிட்டன. அணிந்து நடக்கவோ முடியாது. இந்த நிலையில் செருப்பின் மதிப்பு (Value) என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையில் மிக மிக முக்கியமானது செருப்புதான்.
    எனவே, எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு உயிரையும் மிகச் சாதாரணமாக மதிப்பிட்டு, ஒதுக்கவோ, உதாசீனப்படுத்தவோ கூடாது.
    மனித மதிப்பு
    நம்மிடம் மனம் என்கின்ற சிந்திக்கின்ற, யூகித்து அறிகின்ற ஆறாவது அறிவு உள்ளது. இதை நாம் அனைவரும் முதலில் உணர வேண்டும்.
    இன்று சமுதாய நிகழ்வுகளைக் கேட்கும்போது, பார்க்கும் போது, பரவலாக, குறிப்பாக இளைஞர்கள் மனித நேயத்தை மறந்து தற்காலிக திருப்திக்காக தவறான செயல்கள் செய்வதை அறிகிறோம்.
    ஏன்?
    இவர்கள் தங்கள் மதிப்பை அறியாததால் தான். இதற்குக் காரணம் இவர்களது பெற்றோர்கள் என்று சுட்டிக்காட்டினால் மிகையாகாது.
    பொதுவாக மனிதர்கள் மற்றவர்கள் மீது வைத்துள்ள அபிப்ராயங்களை மதிப்பு எனக்கூறலாம். குடும்பம் என்றால் பெற்றோர் குழந்தைகள்; கணவன் மனைவி இவை தான் அடிப்படை உறவுகள்.
    இவர்களுக்கிடையிலுள்ள உறவு மேலும் வலுப்பட்டு அன்புடையதாக இந்த அபிப்ராயங்கள் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இது மாறாது; மாறக்கூடாது.
    சரியும் மதிப்பு
    அப்படி, தன் நெருங்கிய உறவுகளிடம் இவர் இப்படித்தான் என்று குறைபட்டுக் கொண்டு, இவரிடம் நேரில் தன் அபிப்ராயத்தை சரியான திருத்தத்துக்கு கூறாமல் விடுபவர்களை நாம் காண்கின்றோம். இதனால் உறவுகளின் மத்தியில் இவரது மதிப்பு சரியும்.
    இதுபோல் சரிந்துவிட்ட மதிப்பை உயர்த்துவதென்பது மிகச் சிரமம். பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமலேயே பெரிய மாற்றுக்கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால், இவர் என்ன தான் முயன்று, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முழுமையான திருப்தியை குடும்பத்தாரும் உறவுகளும் அடையமாட்டார்கள்.
    மதிப்பின் நிலைமாறுமா?
    ஆம். மாறும். உயரும் அல்லது தாழும். அழகான, நல்ல வேலைப்பாடமைந்த பொருள் உள்ளது. அதற்கென ஒரு காலம் உள்ளது. நாளாக, நாளாக அதனது இருப்புத் தன்மை குறைந்து கொண்டே வரும்.
    இளமைப்பருவத்தில் காண்பித்த திறமை உத்வேகம் முதுமையில் குறைவது போன்றதே இது. மறைவுக்குப் பின்னும் மதிப்பால் உயர்ந்த மனிதகுலச் செம்மல்கள் பலரை அறிவோம்.
    சாக்ரடீஸ்
    இளைஞர்களை சிந்தித்துத் தன்னை அறிந்து செயல்பட வழிகாட்டினார். அதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்தார்.
    அண்ணல் காந்தி
    மனிதர்களை மதங்கள் பிரித்துவிடக் கூடாது. அன்பால் எதையும் சாதிக்கலாம் என்று ஆங்கிலேயரிடமிருந்து நம் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தவர். சுய லாபத்துக்காக கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் வாழ்ந்தவர்.
    A.P.J. அப்துல்கலாம்
    எளிமைக்கு சிறந்த உதாரணம். பதவியெனும் வாய்ப்பு இந்தச் சமுதாயத்திற்குத் தொண்டாற்றவே. தன் உறவுகளை அழைத்து வைத்து சேர்ந்திருப்பதற்கு அல்ல என்று தம் வாழ்க்கையால் போதித்து வருபவர். இது போல் பலரைக் கூறலாம்.
    மதிப்பை அறிதல்
    ஒருவரது மதிப்பை எப்படி, எப்போது அறிய முடியும் என்றால், அவர் இல்லாத போது. அவரைப் பற்றிய விமர்சனங்கள், அபிப்ராயங்கள், கருத்துக்கள் மூலமாக, மக்களில் பெரும்பாலானவர்கட்கு எதற்கு எப்போது மதிப்பு கொடுப்பது எனத் தெரிவதில்லை. உதாரணமாக ஒருவர் தங்க நகை அணிந்து சாலையில் நடந்து செல்கிறார். அவரை மறித்து நகையைப் பிடுங்க முயற்சிக்கின்றனர். உயிரே போனாலும் நகையை விடமாட்டேன் என்றஉறுதியோடு போராடுகிறார்.
    கும்பல்தான் வெற்றி பெற்றது; இவர் பிணமானார். என்ன தெரிகிறது?
    உணர்ச்சி வேகம், பொருளாசை, உயிரைப் பற்றிய அறியாமை அருமையான வாழ்க்கை அவரைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது.
    சமயோசிதமாய் சிந்தித்து செயல்படுவதற்கு ஆறாவது அறிவு இருப்பதையே மறந்து விடுகிறோம். எதற்கு, யாருக்கு, எப்போது, எப்படி மதித்து தரவேண்டும் என்பது மிக முக்கியம்.
    செயல்பாடு
    அதேபோல் பிறர் கோணத்தில் நமது மதிப்பு சரியாமல் இருக்க என்றும் ஒரே மாதிரியான செயல்பாடும் முக்கியம். சிலரிடம் நமது மதிப்பை உயர்த்திக் காண்பிக்க தேவையில்லாத முயற்சிகள் செய்வர். பின்னர் உண்மை நிலை தெரியும்போது கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றப்பட்ட கலசம், திடீரென கீழே விழுந்த கதையாகிவிடும்.
    ஒவ்வொருவரிடமும் என்ன உள்ளது? என்ன தேவை? இந்த இரண்டும் முக்கியம். இருப்பதை பண்புகள், குணங்கள், செல்வங்கள் என்று கூறலாம். தேவைகளை வேண்டுதல்கள் என்று கூறலாம். அதனால்தான் நாம் இது வேண்டும், அது வேண்டும் என்று எப்போதும் வேண்டிக் கொண்டே இருக்கிறோம்.
    வேண்டுதல் எந்த அளவு முக்கியமானதோ, அதைவிட மேலானது இருப்பதை தக்கவைத்துக் கொள்வது, நல்ல குணங்களை, பண்புகளை நாளும் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வருவதால் மட்டுமே அவைகளைத் தக்க வைக்க முடியும்.
    தியாகம்
    பலர், தனி மனித வழிபாட்டின் காரணமாக உணர்ச்சி வயப்பட்ட நிலையில் உயிரையும் தியாகம் செய்யுமளவுக்குச் செல்வதை ஊடகங்கள் வழி பார்க்கிறோம். அந்த அளவுக்கு மதிப்பு மிக்கவர்களா என்றவினாவும் எனலாம்.
    மதிப்பு இங்கு முன்னிலைப்படுத்தாமல் உணர்ச்சியே பிரதானமாக இருப்பதால், திடீரென, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர்.
    ஓர் உதாரணம் மூலம் தெளிவு பெறலாம். உலக நன்மைக்காகப் பாடுபட்டு வரும் நல்ல சிந்தனையாளர் ஒருவர், அவரது செயல்களால், நல்ல பழக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் என இருவர் ஆற்றில் படகில் செல்கின்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது. ஒரு லைப் பெல்ட் மட்டும் உள்ளது. படகு கவிழும் சூழல் உருவாகிவிட்டது.
    அந்த நல்ல சிந்தனையாளர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டுமென்று உடன் உள்ளவர், லைப் பெல்டை அவருக்கு கொடுத்து விடுகிறார். இதுதான் தியாகம். கிடைத்தற்கரிய வாழ்க்கையை உலக நலன் கருதி சிந்தித்துச் செயல்படுதல். இதற்கு அடிப்படையாக அமைந்தது அந்தச் சிந்தனையாளரது நற்பண்புகள் மீது இவர் கொண்ட மதிப்பு.
    மரியாதை (Respect)
    இதை கண்ணியம் என்றும் கௌரவம் என்றும் கூடக் கூறலாம். தோற்றத்தில், ஆடையில் கூட பிறரிடம் நம்மீது மரியாதையை உண்டாக்க முடியும். இது நிரந்தரமில்லாதது; மாறிவிடும் இயல்பு கொண்டது.
    மனித குலத்தின் மாண்புகளில் ஒன்று இந்த மரியாதை. அறிமுகமில்லாத ஒருவர் தொடர்பு கூட, உடனே அவர்மீது ஒரு மரியாதையை உண்டாக்கும். பழகப் பழக இந்த மரியாதையானது மதிப்புக்காக மாறுகிறது அல்லது அவர் தொடர்பை விட்டு விடுகிறோம்.
    நல்ல பண்புகள் உள்ளவர்கள் பிறர் என்ன நினைப்பார்களோ என எண்ணி கவலைப்படாமல், தாங்களே நன்றாகச் சிந்தித்து, துன்பமில்லாத வகையில் செயல்படுவதால், மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை.
    மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல. பிறரிடமிருந்து தானாக வர வேண்டும். “எனக்கு அவர் உரிய மரியாதை அளிக்கவில்லை’ எனச் சில சமயம் நாம் நினைப்பதுண்டு.
    (Give and Take Respect) மரியாதை என்பது கொடுப்பதால் பெறமுடியும் அல்லது தன் தோற்றத்தால், பேச்சால், செயலால் மட்டுமே பெறமுடியும் என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
    ஆறறிவில்லாத தாவரம் உள்ளிட்ட உயிரினங்கள் கூட, தம்மீது அன்பு, அக்கறை காட்டுவோரிடம் தமது நன்றியை வெளிப்படுத்துவதை நாம் அறிவோம்.
    வாழ்க்கை
    வாழ்க்கை என்பதன் இருப்பிடம் குடும்பம். எனவே, குடும்பத்தில் மரியாதைகள் காலப்போக்கில் மதிப்பாக மாறவேண்டும்.
    சிலர் குறைபட்டுக் கொள்வார்கள். “என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” என்று இங்கு மதித்தல் என்பது மதிப்பு (Value) ஆகாது. அங்கீகாரம் என்று கூறலாம். தன் இருப்பை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை அப்படிக் கூறுகின்றனர்.
    அழைப்பிதழ் பெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறோம். கூட்டம் அதிகம். அழைத்தவரைச் சந்திக்க வாய்ப்பில்லை. நிகழ்வு முடிந்து திரும்பும்போது மனதுள் நெருடல்.
    வீடுதேடி வந்து அழைத்தவர்கள் சரியாக மதிக்கவில்லை; உபசரிக்கவில்லை என்று இது தேவையில்லை. நிகழ்வின் முக்கியத்துவம் கருதி நம்மால் என்ன உதவி அவருக்குச் செய்ய முடியுமோ, அதைச் செய்வது தான் சரியானது.
    சிறுவயதுக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்பிக்க வேண்டிய ஒன்று – பிறருக்கு மரியாதை அளிப்பது; வயதுக்கு மரியாதை பணிவாய் பேசுவது; அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்பது; தெளிவுக்காக சந்தேகங்கள் கேட்பது போன்றவை.
    கல்விக்கு மரியாதை இன்று கல்வி என்றாலே, வேலைக்கானது என்றாகிவிட்டது. எனவே, எந்தத் துறையைத் தேர்வு செய்கிறோமோ, அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் தேவையான தகவல்கள் பெற, இந்த மரியாதை உதவும்.
    அனுபவத்துக்கு மரியாதை ஒரு செயலால் பெறும் பலனை அனுபோகம் என்று கூறுகிறோம். அனுபவித்தல் என்று பொருள். அனுபோகங்கள் அனுபவங்களாகப் பதிவாகின்றன. அனுபவசாலிகளை மரியாதையுடன் போற்றவேண்டும்.
    அவர்களது அனுபவங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமைய வாய்ப்புண்டு.
    மரியாதையில் போலி மரியாதை என்று ஒன்று உண்டு. நேரில் பார்த்தால், மிகவும் பவ்யமாய் செயல்படுவர்; பிறகு தரக்குறைவாய் பேசுவர். தமிழில் “கூழைக்கும்பிடு” என்றசொல் உள்ளது. காரியம் ஆக வேண்டுமென்றால் காலையும் பிடிப்பார்கள். முடிந்தபின் காலை வாரிவிடவும் தயங்கமாட்டார்கள்.
    தன்னம்பிக்கையுள்ளவர்கள் இதுபோன்று கூழைக்கும்பிடு ஆசாமிகளாக மாறமாட்டார்கள். அதே நேரம் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்து ஏங்கவும் மாட்டார்கள்.
    இவர்கள் தங்கள் மதிப்பை (Value) நன்கு உணர்ந்துள்ளதால், அதற்கேற்றவாறு செயல்படுவார்கள். போலியாக பிறரது மரியாதையை எதிர்பார்க்காமலிருப்பதுடன் மற்றவர்களுக்கும் போலியாக, அளவுக்கும் அதிகமாக மரியாதை காண்பிக்கமாட்டார்கள்.
    இந்த வாழ்க்கையில் நமது தோற்றம், பேச்சு, செயல்கள் எல்லாம் மற்றவர்கள் மனதில் நம்மீது முதலில் மரியாதையை உருவாக்க வேண்டும். காலப்போக்கில் இது மதிப்பாக மாறவேண்டும். இதற்கு அடிப்படையாக அமைவது நல்ல எண்ணங்களும், நல்ல பண்புகளுமாகும்.
    – வாழ்க வளமுடன்

    தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!

    பா. இராஜலட்சுமி

    மரணம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் மனதில் ஒரு வகையான அவஸ்த்தை ஏற்படுகிறது. மரண பயம் என்பது எல்லோருக்கும் உண்டு. ‘ஜனனம்’, ‘மரணம்’ போன்றஇரு விஷயங்களுக்கு மட்டுமே விஞ்ஞானத்தால் இன்னும் பதில் சொல்ல இயலவில்லை. எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது, எப்படி என்பது தான் சஸ்பென்ஸ் (Suspense). தன்னுடைய மரணத்தை தானே நிச்சயிப்பவர்களும் உண்டு. ‘தற்கொலை’ – தன் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொள்வது. கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு! இந்த நிலையை நாம் பலரிடம் பார்க்கிறோம். தற்கொலை செய்து கொள்வதில் சிறு வயதினரே அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. பெண்களை விட இதில் ஆண்களே அதிகம். இன்னொரு அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய உளவியல் நிபுணர்கள் கூட தற்கொலை செய்து கொள்வதுண்டு.
    ஒரு இளவயதுள்ள, ஆரோக்கியமான, அசாத்திய திறமையுள்ள ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அதற்கான காரணம் என்று எதைக் குறிப்பிடுவது? வாழ்க்கையில் நேரிடும் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லாத தன்னம்பிக்கை இழந்தவராகத் தான் இருக்க முடியும். தற்கொலை செய்ய தைரியம் இருக்கும் அவர்களுக்கு, பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லை என்பது தான் வருத்தம்.
    சில வருடங்களுக்கு முன்பு எங்கள் அடுத்த வீட்டில் கணவன், மனைவி அவர்கள் பெண் குழந்தை என மூன்று பேர் இருந்தனர். கணவர் மிகவும் நல்ல குணமுடையவர், அமைதியானவர், எப்பொழுதும் அவர் முகத்தில் ஒரு சாந்தம் இருக்கும். இவர் தியானப் பயிற்சி மேற்கொண்டுள்ளாரோ என்றசந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏனென்றால் அவர் ஒவ்வொரு வேலையையும் மிகப் பொறுமையாக செய்பவர். அதிகம் சத்தம் போட்டுகூட பேசமாட்டார். நல்ல வேலையும், நல்ல சம்பாத்தியமும் உள்ளவர். அவர் குடும்பத்தில், யாரையுமே கடிந்து ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று அவர் மனைவி எங்களிடம் பெருமையாக சொல்வார். அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
    இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் வேறொரு வீட்டிற்குக் குடிமாறிச் சென்றனர். அங்கு சென்று 6 மாதங்கள் கழித்து திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றதகவல் வந்தது. அந்த தகவல் எங்களுக்குப் பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பயங்கர நஷ்டம். ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவரால், இந்த நஷ்டத்தை எப்படியாவது சமாளிக்கலாம் என்றதன்னம்பிக்கையே வரவில்லை. எல்லா விஷயங்களையும் பொறுமையாக செய்யும் அவர், இந்த விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டார். அவரது மனம் திடமாக, தன்னம்பிக்கையோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.
    இது போன்று மாணவர்களிடம் தற்போது தற்கொலை எண்ணங்கள் அதிகம் காணப்படுகிறது. தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்விகள் தான் வெற்றியின் ஏணிப்படிகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் முழுவதுமாக இழந்து விடுகின்றனர். இது போன்று பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். பணத்தட்டுப்பாடு, தொழிலில் தோல்வி, விவாகரத்து, வருங்காலத்தைப் பற்றிய அச்சம் போன்று வாழ்வில் நடக்கும் துயர சம்பவங்களால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் படும் துன்பங்கள் எத்தனை! தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் உயிர் தப்பிய பின்னர் வாழ்க்கையின் மகத்துவத்தையும், தங்கள் உறவினர்களின் முக்கியத்துவத்தையும் உணர்கிறார்கள்.
    எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண், அவள் கணவனுடன் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை என்று கூறுவாள். மிகவும் சிறிய வயதில் பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு 2 குழந்தைகள். கணவன் பொறுப்பில்லாமல், எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பதாகவும், தான் வீட்டு வேலை பார்த்து அதில் வரும் பணத்தையும் தன் கணவர் அநாவசியமாக செலவு செய்வதாகவும் கூறி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். ஒருநாள் வாக்குவாதம் அதிகமாக, அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாள். மருத்துவமனையில் 1 மாத காலம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது சரியாக கவனிக்க ஆள்இல்லாததால் அவளது இரு குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாயினர். அதன் பிறகு அவளது தவறைஉணர்ந்து மிகவும் வருத்தப்பட்டாள். அவளுக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தால், அந்த குழந்தைகளின் நிலை? இப்படி தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவருக்குப் பின்னும் அவதிக்குள்ளாகும் பல ஜீவன்கள் உள்ளன.
    ஒருவர் எந்த மனநிலையில் தங்கள் வாழ்க்கையை ஒடுக்கத் தீர்மானிக்கின்றனர்? ‘வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லை, இனி எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தன்னம்பிக்கையை இழந்த, மிகுந்த மன அழுத்தம் உடையவர்கள் தான் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். பல சமயங்களில் தனிமையில் இருக்கும் பொழுதுதான் தற்கொலை எண்ணங்கள் அதிகமாகத் தூண்டப்படுகிறது. மனம் திறந்து நாம் நம் பிரச்சனைகளை நம் நண்பரிடமோ, நமக்கு நெருங்கியவரிடமோ பேசினாலே பாதி பாரம் குறைந்தது போல் உணர்வோம். ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவரது குடும்பத்தினர் நடந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையும் போது அடுத்த முறைதேர்ச்சி பெறுவதற்கான வழிகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூறி அவர்களை உற்சாகப்படுத்துதல் (Motivate) வேண்டும். அவர்களை கேலி செய்வதோ, கேவலப்படுத்தவோ கூடாது. சிறு வயதிலிருந்தே நிறைய தன்னம்பிக்கையையும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். துன்பமும், துயரமும் வரும்போது தங்கள் குடும்பத்தினர் தங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பார்கள் என்றஎண்ணமே அவர்களை உற்சாகப்படுத்தும், தோல்விகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
    எனவே, தன்னம்பிக்கையுடன் வாழுங்கள் !
    வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!

    மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

    டாக்டர் வி.மு. பழநியப்பன்.

    அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உங்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறதா?
    மாரடைப்பும் அதனால் மரணமும் வரக்கூடுமா?
    இனிப்புநீர் நோய் உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பு உண்டா?
    கிட்னியில் கற்களோ அல்லது சுருக்கமோ ஏற்பட்டு, அதனால் நீங்கள் மரணமடையக்கூடுமா?
    மலட்டுத்தன்மை, ஆண்மையின்மை போன்றவை உங்களைத் துன்புறுத்தக் கூடுமா?
    இவற்றிற்கான மறுமொழியை, அறிவியல் முறைக்கேற்பக் கூறிவிடமுடியும்.
    அவ்வாறு கூறுவதற்கு ஒலி அல்லது ஒளிக் கருவிகளோ கதிர்வீச்சுக்களோ தேவையில்லை என்பதோடு, மிக எளிதான முறையில், செலவில்லாமலேயே ஓரளவிற்கு மிகச் சரியாகவே கண்டுபிடித்துவிடமுடியும்.
    அதுமட்டுமல்ல, அத்தகைய நோய்கள் உங்களைத் தாக்கிவிடாதவாறும், ஒருவேளை அவை வந்துவிட்டால் அவற்றைக் குணப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும்கூட நான் உங்களுக்குச் சொல்லித்தரத் திட்டமிட்டுள்ளேன்.
    சிறிது பயிற்சி பெற்றால், நீங்களேகூட உங்கள் உடல்நலத்தை மிக எளிதாகக் கண்காணித்துக் கொள்ளலாம்.
    இந்தச் செய்தி மிகுந்த வியப்பைத் தரத்தக்கதுதான்.
    நான் இங்கு எழுதவிருப்பதைத் தொடர்ந்து படியுங்கள். நான் விளக்கும் ஒவ்வொரு பகுதியையும் நன்றாகப் புரிந்துகொள்ளும்வரை, தேவைப்பட்டால் மூன்று, நான்கு முறைகள் வேண்டுமானாலும் படியுங்கள். சிறிது காலத்திலேயே உங்களை நான் இத்துறையில் வல்லுனராக ஆக்கிவிடுகிறேன்.
    நான் எழுதப் போவதில் சில பகுதிகள் மிக எளிமையானவையாகவும் நீங்கள் ஏற்கனவே அறிந்துகொண்டவையாகவும்கூட இருக்கலாம். “இது நமக்குத் தெரிந்ததுதானே!” என்றெண்ணி, எந்த ஒரு சிறு விவரத்தையும் புறக்கணித்துவிடாதீர்கள்.
    இதெல்லாம் எவ்வாறு இயலும் என்ற ஐயம் ஏற்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், மிகக் குறுகிய காலத்திலேயே இது உண்மைதான் என்று நீங்களே உணர்ந்துகொள்ளப் போகிறீர்கள்.
    ஆயினுங்கூட, இதனைப் பற்றிய சில அடிப்படைச் செய்திகளை இப்போதே உங்களுக்குச் தெரிவித்து விடுகிறேன்.
    கடந்த 36 ஆண்டுக் காலமாக நான் செய்துவந்த ஆய்வுகளின் அடிப்படையில் நான் அறிந்துகொண்ட அனைத்து விவரங்களையும் உங்களுக்காக ஒளிக்காமல் மறைக்காமல் இங்கு எழுதப்போகிறேன்.
    முதலில் உங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லிப், பின்னர் உங்களுக்குத் தெரியாதனவற்றைப் பற்றி சொல்லத் திட்டமிட்டுள்ளேன். எந்த ஒன்றையும் எளிதாக எடுத்துக் கொண்டுவிடாமல், ஒவ்வொன்றையும் நன்றாகப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
    * * * * * *
    உலகில் உள்ள அனைத்து மக்களயும் எட்டு வகைப்பட்டோராகப் பிரித்துள்ளேன்.
    ஆண்-பெண் என்ற வேறுபாடு, மேலைநாடு, கீழைநாடு என்பன போன்ற வேறுபாடுகள் அனைத்தையும் மீறி, எல்லா மனிதர்களும் இந்த எட்டு வகைகளுக்குள்தான் அடங்குவர். எனவே, நீங்களும் இந்த எட்டில் ஒரு வகையைச் சேர்ந்தவராகத்தான் இருக்கமுடியும்.
    பின் வரும் அந்த எட்டையும் நினைவிற் கொள்ளுவது நல்லது:
    முதல் வகை: “எலும்பும் தோலுமாய் உள்ளோர்”. இவர்களை, ஆங்கிலத்தில் “Skeletal People” அல்லது “S” அல்லது “Minus-2” என்று குறிப்பிடுவேன்.
    இரண்டாம் வகையினர்: “ஒல்லியாய் உள்ளோர்”. “Thin People” அல்லது “Minus One” என்று இவர்களைக் குறிப்பிடுவது எனது வழக்கம்.
    மூன்றாம் வகையினர், “ஒச்சமில்லாதோர்”, “குறையற்றோர்”, “சீரானோர்” அல்லது “செம்மையானோர்” என்ற பொருள் தரக்கூடிய “Perfect People” அல்லது “P” என்றவாறு ஆங்கிலத்திலான எனது நூல்களில் குறிப்பிட்டு வருகிறேன். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துச் “செம்மையானோர்” என்றே நாம் இவர்களைக் குறிப்பிடுவோமாக.
    “Obese” “Obesity” என்ற சொற்களைத் தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
    “குண்டு”, “குண்டுத்தனம்”, அல்லது, “தடிப்பு”, “தடிப்புத்தனம்”, அதுவுமல்லாது, வடமொழியில் “பருமன்” என்று பலவாறாகக் குறிப்பிடலாந்தான். “அதிக எடையுடையோர்” அல்லது, “பெருத்த உடலுடையோர்’ என்றுங்கூடக் குறிப்பிடலாம்.
    குண்டாக இருப்போரைக் “குண்டர்’ என்றோ, தடியாக இருப்போரைத் “தடியர்” என்றோ குறிப்பிடுவது தவறாகிவிடும்.
    எனவே, Obesity Status என்பதைக் குறிப்பதற்கு “உடல் வாகு” என்று குறுப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என எனக்குப் படுகிறது. எனவே, அவ்வாறே செய்வோமாக.
    இக்கட்டுரையில் நான் இதனை எவ்வாறு குறிப்பிட்டாலும், அது, ஆங்கிலத்திலான “Obese” அல்லது “Obesity” என்ற சொற்கள் தரும் பொருள்களாகவே கொள்ளுங்கள்.

    மக்களுள் நான்காம் வகைப்பட்டோர், “முதல்நிலையிலான உடல்வாகு அல்லது தடிப்புத் தன்மையானோர்” ஆவர். இவர்கள், ஆங்கிலத்தில் “Obesity Type-1” என்ப்படுவர்.
    அடுத்துவரும் ஐந்தாம் வகையினர், “இரண்டாம் நிலையிலான உடல்வாகைக் கொண்டோராவர்”. இவர்கள் “Obesity Type-2” எனக்குறிப்பிடப் படுகின்றனர்.
    ஆறாம் ஏழாம் வகையினர் யாரென நான் கூறாமலேயே புரிந்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் எண்ணியவாறே இவர்கள், “மூன்றாம் / நான்காம் நிலையிலான உடல்வாகைக் கொண்டோராவர்” என்று குறிப்பிடப் படுகின்றனர். ஆங்கிலத்தில் இவர்களை “Obesity Type-3” / “Obesity Type-4” என்று குறிப்பிடுவது வழக்கம்.
    எஞ்சியுள்ள எட்டாவது வகையினர், ஆங்கிலத்தில், “Withered” அல்லது “W” என்று குறிப்பிடப்படுகின்றனர்.
    மரத்திலிருந்து முற்றிய நிலையில், “இனி வாழ இயலாது’ என்ற நிலையில் உள்ள பழுப்பு நிறத்து இலைகள் உதிர்ந்துவிடுகின்றனவல்லவா, அந்த நிலையைக் குறிப்பிடுவதுதான் “withered” எனும் இச்சொல்லாகும்.
    தமிழில் இதனை எவ்வாறு சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறீர்கள்?
    “நல்வாழ்வை இழந்தோர்’, “வாழத் தகுதியற்றோர்’, “வாழ்க்கையின் எல்லையில் உள்ளோர்’, “இறப்பிற்கு அருகில் உள்ளோர்’, “நலம் இழந்தோர்”, “நலிந்துவிட்டவர்கள்’, என்றெல்லாம் இவர்களைக் குறிப்பிட முடியுமென்றாலும், “நிலைகுலைந்தோர்’ என்று குறுப்பிடுவது நன்கு பொருந்துமென நினைக்கிறேன்.
    இத்தகைய நிலைகுலைந்தோரே எட்டாவது வகைப்பட்டவர்களாவர்.
    * * * * * *
    கதை இதனோடு முடிந்துவிட்டது என்று நினைத்துவிடவேண்டாம்.
    இந்தக் கடைசி வகையினரான நிலைகுலைந்தோரிடையே மேலும் எட்டுவகைப்பட்டோர் உள்ளனர்.
    இவர்கள், “முதல்நிலை நிலைகுலைந்தோர்’, இரண்டாம் நிலை நிலைகுலைந்தோர், மூன்றாம் நிலை நிலைகுலைந்தோர், என “எட்டாம் நிலை நிலைகுலைந்தோர்’ வரை உள்ளனர்.
    ஆங்கிலத்தில்,
    “Withered-First Stage” அல்லது,”W-1”,
    “Withered-Second Stage” அல்லது, “W-2”,
    “W-3”, “W-4”, “W-5”, “W-6”, “W-6”, “W-7” and “W-8” என்பனவே அவையாகும்.
    இந்த வகையினரை உங்களுக்கு மிக எளிதாகப் புரியவைப்பதற்காக பின்வரும் எடுத்துக் காட்டுக்களைக் குறுப்பிடுகிறேன்.
    ஒருவருக்கு “Diabetes” எனும் இனிப்புநீர் நோய் இப்போதுதான் தோன்றியுள்ளது என்று வைத்துக் கொண்டால், அவர் “Withered-First Stage” அல்லது “W-1” என்ற வகைப்பட்டவராவார்.
    இனிப்புநீர் நோயாளிகளை நிச்சியமாகப் பார்த்திருப்பீர்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளாகிவிட்டால், அந்த இனிப்புநீர் நோயாளிகள் உடல் எடை குறைந்து, மெலிந்து, நலிந்துபோய்விடுவார்கள். அத்தகையோர், “W-3” அல்லது “W-4” என்ற வகையைச் சார்ந்தவர்களாவர்.
    இந்நிலையில் உள்ள ஒருவர் நோய் முற்றிப்போய், படுத்த படுக்கையாக ஆகிப்போவாரானால், அவரை “W-8” என்ற வகைப்பட்டவராகக் குறிப்பிடவேண்டும்.
    W-8 என்ற நிலையை ஒருவர் அடைந்துவிடுவாரேயானால், அவரை யாராலும் எந்த வழியாலும் குணப்படுத்த இயலாது. அது, “மரணம் உறுதியாகிவிட்ட நிலை” என்று கொள்ளுவதுதான் சரியாக இருக்கும்.
    அந்த இனிப்புநீர் நோய் வருவதற்கு முன்னால், அதாவது, இனிப்புநீர் நோய் இன்னும் ஓரிரு மாதங்கள் அல்லது ஓராண்டுக்காலத்தில் ஏற்படப்போகிறது என்ற நிலையில் உள்ள ஒருவரை, “Obesity Type-4” என்ற “நான்காம் நிலைத் தடிப்புத்தன்மை அல்லது உடல்வாகை உடையவர்” எனக் கொள்ளவேண்டும்.
    “நான் எந்த வகைத் தடிப்புத்தன்மையைச் சேர்ந்தவர்?” அல்லது, “எனது உடல்வாகு எத்தன்மையது?” என்ற கேள்விதான் அடுத்து எழும்.
    அதை அறிந்துகொண்டால்தான் தமக்கு வரவிருக்கும் அல்லது இப்போதே இருந்துவரும் நோய்களைத் தடுத்துக் கொள்ளவோ குணப்படுத்திக்கொள்ளவோ இயலும்.
    உங்களுடைய உடல்தன்மையை மிக எளிதான சில வழிகளில், முன்னரே கூறியதுபோல, கருவிகள் ஏதுமின்றியே கண்டறியலாம்.
    சற்றே பொருத்திருங்கள். அடுத்த இதழில் அவ்விவரங்களை உங்களுக்குத் தெரிவித்து, உங்களை இந்தத் துறையில் திறம்படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்.
    அதற்கு முன்னர், இன்று தரப்பட்டுள்ள இந்த விவரங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் அடுத்தடுத்து வரும் விவரங்களை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.
    ஏதோ புரிந்ததுபோல இருக்கிறது என்ற நிலையிலிருந்தால், தயவு செய்து, சோர்வடைந்து, மனந்தளர்ந்துவிடாமல், மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.
    மனித வகையினரைப் புரிந்துகொள்ளாமல் இருந்தால், நான் தொடர்ந்து கூறப்போகும் அனைத்து விவரங்களையும் உங்களால் புரிந்துகொள்ள முடியவே முடியாது. அவ்வாறானால், நீங்கள் தேர்வில் தோற்றவர்க்கு ஒப்பாகிவிடுவீர்கள்.
    “இது நமக்குச் சரிப்பட்டு வராது” என்றுமட்டும் நினைத்துச் சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில், இந்தப் பகுதிமட்டும்தான் சற்றுக் கடினமானதுபோலத் தோன்றும். இனி வருவன புரிந்துகொள்ளுவதற்கு எளிதானதாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல், மிகப்பெரும் பயனைத் தரத்தக்கதாகவும் இருக்கும்.
    உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளவேண்டுமானாலும். உங்கள் குழந்தைகளை நோயற்றவர்களாக வாழவைக்க விரும்பினாலும், நீங்கள் கண்டிப்பாக இங்கு தரப்பட்டுள்ள விவரங்களைப் படித்துப் புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.
    உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா?
    “வாழ்க்கையில் வெற்றி பெருவோர் நொண்டிச் சாக்குப் போக்குச் சொல்லுவதில்லை!
    அதேபோல,
    நொண்டிச் சாக்குப் போக்குச் சொல்லுவோர், வாழ்க்கையில் வெற்றிபெறுவதே இல்லை!
    தயவுசெய்து, நீங்கள் நொண்டிச் சாக்குப் போக்குச்சொல்லிவிடாமல், இக்கட்டுரையைப் பல முறைகள் படித்து, கண்டிப்பாகப் புரிந்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்வோர்க்கு நிச்சயமாகத் தகுந்த வெகுமதி கிடைக்கும்.
    அடுத்த இதழில் மிகவும் பயன்தரத்தக்க விவரங்களைக் கூறவிருக்கிறேன், காத்திருங்கள்.

    விதைகளால் ஓவியம்

    கின்னஸ் சாதனைப் பெண்மணி திருமதி. இ. விஜயலட்சுமி பிரபாகரன்

    கடந்த 9 வருடங்களாக ஓவியம் மற்றும் (பெயிண்டிங்) வர்ணம் தீட்டும் கலையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்து “விஜயலட்சுமி தஞ்சாவூர் ஆர்ட் கேலரி” எனும் பெயரில் தஞ்சாவூர் ஓவியச் சிற்பங்களை வரைந்து ஓவியக் கலையை வளர்த்து வரக்கூடியவர் தான் திருமதி இ. விஜயலட்சுமி பிரபாகரன்.
    ஆயில் பெயிண்டிங், அக்ரலிங் பெயிண்டிங், மெட்டாலிக் பெயிண்டிங், வாட்டர் கலர் பெயிண்டிங் மற்றும் கிளாஸ் பெயிண்டிங், ம்யூரல் பெயிண்டிங் போன்றவண்ணம் தீட்டும் வகையில் 60 வகைகளை செய்து வருவதுடன், பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளதுடன் கோலம், ரங்கோலி கலையிலும் சிறப்பான இடத்தை தக்க வைத்துள்ள இவர், ஒரே நாளில் இரண்டு கின்னஸ் மற்றும் இரண்டு லிம்கா உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
    “இந்த மாபெரும் முயற்சியால் என்னுடயை ஓவியத்திறமைக்கு உலக அங்கீகாரம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வு மற்ற திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கும் என்கிற அடிப்படையிலும் இந்த முயற்சி மேற்கொண்டு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன்” என்று கூறும் விஜயலட்சுமி, முதலாவதாக படைத்த கின்னஸ் உலக சாதனை “விதைகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்”, இரண்டாவதாக படைத்த கின்னஸ் உலக சாதனை “பீன்ஸ் விதைகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஓவியம்” ஆகும்.
    முதலில் படைத்த “விதைகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்”, 4 வகை விதைகளை வைத்து, 4 மீட்டர் உயரமும் 4 மீட்டர் நீளமும் கொண்ட 16 சதுர மீட்டர் அளவிலான பெரிய வரைதாளில் இந்த ஓவியத்தை வரைந்து சாதித்துள்ளார்.
    “இரத்த தானம் செய்து வாழ்க்கையை அனைவருக்கும் வழங்குங்கள். தாங்களும் ஆரோக்கியமாக வாழுங்கள்” எனும் சாராம்சத்தை உணர்த்துமாறு சமுதாய மக்கள் அனைவருக்கும் இரத்ததானம் பற்றி விழிப்புணர்வை கொடுக்கும் நோக்கத்தில் சமூக அக்கரையுடன் இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாக கூறும் அவர், “4 விதமான விதைகளை உபயோகித்துள்ளேன். ஆனை குன்றிமணி, ஆளை களிச்சி விதைகள், மக்காச்சோளம் விதைகள், பட்டாணி விதைகள் ஆகிய நான்கு விதைகளையும் ஃபெவிக்கால் தடவி ஒட்டி இரத்ததானம் விழிப்புணர்வு ஓவியத்தை படைத்துள்ளேன்” என்கிறார்.
    இரண்டாவதாக படைத்துள்ள “பீன்ஸ் விதைகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஓவியம்” 8 மீட்டர் உயரமும், 9 மீட்டர் நீளமும் கொண்ட 72 சதுர மீட்டர் அளவிலான பெரிய ஓவியமாக உருவாக்கி சாதித்ததின் நோக்கம் “அனைவருக்கும் கல்வி” எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே என்கிறார்.
    பீன்ஸ் விதை ஓவியத்தில் 5 விதமான பீன்ஸ் விதைகள் உடன் பச்சைப் பட்டாணி, வெள்ளைப் பட்டாணி, டபுள் பீன்ஸ் விதை, சைனா வரி பீன்ஸ், ராஜ்மா பீன்ஸ் போன்ற பீன்ஸ் விதைகளை உபயோகித்துள்ளார்.
    சாதனைக்குரிய இரண்டு ஓவியங்களுக்கு 1000 கிலோ விதைகளும், 250 கிலோ ஃபெவிக்கால் பசையும் உபயோகம் செய்துள்ளார். மேலும், ஓவியத்தாள் 150 சதுர மீட்டர் அளவில் உபயோகம் செய்து, கடந்த 3 மாத காலமாக இதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு இருந்திருக்கிறார்.
    இந்த சாதனைகளைப் புரிந்ததற்கு பலருக்கும் நன்றி சொல்லிக்கொள்ளும் அவர், நான் செய்வதற்காக என்னுடைய கணவர் திரு. ஜே. பிரபாகரன் அவர்கள் மிகுந்த ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் கொடுத்தார். எனது மகன் வி.பி. தினேஷ் மிகுந்த உதவிகரமாக இருந்தார். தவிரவும் இந்த சாதிப்பிற்கு பேருதவியாக ஸ்ரீ பாலாஜி மளிகை ஸ்டோர் உரிமையாளர் திரு. த. குபேந்திரன் அவர்களும், ஸ்டைல் மாடுலர் கிச்சன் திரு. த. ரவிச்சந்திரன் அவர்களும் இருந்தார்கள்.
    சாதனை நிகழ்த்திய அன்று புதுச்சேரி ஆர்ய வைஸ்ய மஹா சபாவின் தலைவர் திரு. பி.ஜி.ஆர். தண்டாயுதம் செட்டியார் அவர்கள் இந்த கின்னஸ் நிகழ்வுகளை துவக்கி வைக்க, நிறைவு விழாவில் புதுவை தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மஹா சபாவின் மாநிலத் தலைவர் திரு. ஆர். தயானந்த குப்தா அவர்கள் தலைமை ஏற்கவும், புதுவை ஆர்ய வைஸ்ய மஹாசபாவின் தலைவர் திருமதி. சசிரேகா ஸ்ரீதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், “இம்ப்ரஷன்ஸ்” முதன்மை ஓவிய இயக்குனர் திரு. கே.ஜே. மகேஷ்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்து கொடுத்தார்கள்.
    கின்னஸ் உலக சாதனையோடு, சமூக அக்கரையும், விழிப்புணர்வும் கொடுத்துள்ளதுடன், திறமையுள்ள அனைவரும், பெண்களும் கின்னஸ் உலக சாதனை படைக்கலாம் என்கிற உணர்வையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார் திருமதி விஜயலட்சுமி பிரபாகரன். இவரின் சாதனைகள் இத்துடன் நின்றுவிடாமல் இன்னும் தொடர தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

    ஜெயிப்பது நிஜம்

    நம்பிக்கை மணியன்
    மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்

    வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள்
    1. வெற்றியாளர்கள் உலகின் மிகப்பெரிய, அறிவு சார்ந்த சொத்தான, மூளையை (Intellectual Property Brain) பயன்படுத்தி, அதாவது சிந்தித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்னர்.
    2. வெற்றியாளர்கள், கடந்த கால தோல்விகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதும் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாழுகிறார்கள். தோல்வியின் மூலம் ‘எதைச் செய்யக்கூடாது’ என்றஅனுபவத்தையும், வெற்றியின் மூலம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்றவெற்றியின் சூத்திரங்களையும் (Success Formulae) கண்டுபிடித்து, பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகின்றனர்.
    3. வெற்றியாளர்கள், தோல்வி அடைந்தால், பிறரை பற்றி குறைகூறுவதில்லை (Finding Fault). நொண்டிச்சாக்கு (Lame Excuse) சொல்வதில்லை. செய்த தவறைநியாயப் படுத்துவதில்லை (Justification) தோல்விக்கு தானே காரணம் என ஒத்துக்கொண்டு, தன்னைத் திருத்தி, சீர்படுத்தி, நேர்மறையாகச் சிந்தித்து, செயலில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளனர்.
    4. வெற்றியாளர்கள், சுயபரிசோதனை (Self Analysis) செய்து அவர்களுடைய பலங்கள் (Strengths), பலவீனங்கள் (Weaknesses), வெற்றி வாய்ப்புக்கள் (Opportunities), எதிர்கால பயங்கள் (Threats) போன்றவற்றைஅலசி ஆராய்ந்து குறிக்கோள் (Goal) நிர்ணயம் செய்கின்றனர். பின்பு திட்டமிட்டு (Plan) குறிக்கோளுக்கு, கால நிர்ணயம் (Target Date) செய்து, தங்களுடைய அறிவைப் (Knowledge) பெருக்கித் திறமையை (நந்ண்ப்ப்) வளர்த்து, நேர்மறைமனோபாவத்துடன் (Positive Attitude), தங்களை உற்சாகப்படுத்தி (Self Motivation) குறிக்கோளை அடைகின்றனர்.
    5. வெற்றியாளர்கள், குறிக்கோளை அடைய நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். புதிய மேலாண்மை யுக்திகளை, நவீன தொழில் நுட்பங்களைக் கையாளுபவர்கள். வெற்றியாளர்கள் வெற்றி வாய்ப்புகளை தேடி அல்லது உருவாக்கிப் பயன்படுத்துவார்கள். ஐம்புலன்களையும் (Five Senses) சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக தொடர்பு கொள்ளுதல், வாசித்தல், எழுதுதல், பிறரது உடல்மொழியைக் கண்டுபிடித்து எடை போடுதல், உற்றுக் கவனித்தல், கண்காணித்தல், பிறரிடம் பழகும் தன்மை தலைமைப்பண்பு (Leadership) போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, வெற்றி அடைந்துள்ளனர்.
    6. வெற்றியாளர்கள் நீர்வளம், நிலவளம், எண்ணெய்வளம், கனிமவளம், இயற்கைவளம் (Water, Land, Oil, Mineral, Natural Resources) போன்றவளங்களை பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளனர். போட்டி நிறைந்த இந்த பொருளாதார உலகத்தில் மனித வாழ்க்கையைச் (Human Resources) சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
    7. வெற்றியாளர்கள் மனிதர்களை நிர்வாகம் (HRM Human Resource Management) செய்வதில் கெட்டிக்காரர்கள். மனிதர்களை முன்னேறச் (HRD Human Resource Development) செய்வதில் நல்லவர்கள். அது தவிர நேரத்தையும், தன்னையும் (Time Management and Self Management) நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள்.
    8. வெற்றியாளர்கள் கடினமாக உடல் உழைப்புடன் (Physical Hardwork), புத்திசாலித்தனமான மூளை உழைப்புடன் (Smart Mental Work), தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் … ஆகியோர்களின் கூட்டு உழைப்புடன் (Team Work), தங்களை முழுமையாக அர்பணித்து (Commitment) குறிக்கோளை அடையும்வரை, திட்டமிட்டபடி, விடாமுயற்சி (Endurance) செய்து, வெற்றி அடைந்துள்ளனர். தன்னம்பிக்கை அவர்களின் தாரக மந்திரம்.
    9. வெற்றியாளர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள், மாற்றம் ஒன்றேநிலையானது என்று நம்புபவர்கள். நேர்மறைமனோபாவத்துடன் (Positive Mental Attitude) பிரச்சனைகளை வெற்றி வாய்ப்புகளாக மாற்றுபவர்கள். தடைக்கற்களை, படிக்கட்டுகளாக மாற்றுபவர்கள். பலவீனங்களை பலமாக மாற்றுபவர்கள். மொத்தத்தில் சோதனையைச் சாதனையாக மாற்றுபவர்கள். துன்பத்தை இன்பமாக மாற்றுபவர்கள்.
    10. வெற்றியாளர்கள் செய்யும் தொழிலே தெய்வம் (Work is worship) என போற்றி வழிபடுபவர்கள். வாடிக்கையாளர் களுக்குத் தரமான சேவை செய்து மகிழ்ச்சி அளிப்பவர்கள் மொத்தத்தில் செய்யும் தொழிலை கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு விரும்பி செய்பவர்கள். வெற்றியை அடைய செயலில் ஈடுபடுபவர்கள். வெற்றியாளர்கள் தான் மட்டுமின்றி பிறரும் வெற்றியடைய விரும்பி செயல்படுவார்கள்.
    11. வெற்றியாளர்கள், அவர்களுக்கு எது தேவையோ (Need), எது (Want), அதை மற்றவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றனர். அன்பை (Love) பொழிகின்றனர். சரியான நபருக்கு சரியான நேரத்தில் உதவி (ஏங்ப்ல்) செய்கின்றனர். தியாகம் செய்கின்றனர். மற்றவர்களுக்கு வழி காட்டுகின்றனர். பிரபஞ்சத்தில், தங்களுக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறுகின்றனர்.
    12. வெற்றியாளர்கள், மனம் என்னும் மந்திரச் சாவியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். ஆன்மிக முறைப்படி அல்லது விஞ்ஞான முறைப்படி மனத்தை கையாண்டு வெற்றி அடைந்துள்ளனர். வெற்றியாளர்கள் குறிக்கோளை அடைய லட்சியக் கனவை அடிக்கடி (Creative Visualization) காணுபவர்கள். ஆழ்மனத்திற்கு (Sub Conscious Mind) கட்டளையிடுபவர்கள் (Auto Suggestion).
    மேற்கண்ட 12 வெற்றி சூத்திரங்களை, வாழ்க்கையில் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்!
    ஜெயிப்பது நிஜம்.

    உங்களால் எதையும் சாதிக்க முடியும்

    யாரைக்கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்

    வாழ்க்கை என்பது ஒரு அழகான பூந்தோட்டம். வண்ண மலர்கள் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி உங்கள் மனதிலே இருக்கின்றசுமைகளை இறக்கி வைத்து ஆனந்தக் களிப்பிலே உங்களை வாழ்த்துகிறது. வாழப்பிறந்த நீங்கள் கவலையில்லாமல் மகிழ்வோடு இருந்துவிட்டுப் போங்கள். உங்களுடைய நோக்கங்கள், உங்களுடைய செயல்கள், உங்களுடைய கடமைகள் ஆகியவைகளை நீங்கள்தான் நிறைவேற்றவேண்டும். மற்றவர்கள் உங்கள் பாதையில் குறுக்கிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணி விடுவார்களோ என்று ஏன் நினைக்கின்றீர்கள்? அப்படி நீங்கள் நினைக்கும்போதே உங்களுடைய மனம் கனத்துப் போய்விடுகிறது. இனம் தெரியாத அச்சத்தில் நீங்கள் மூழ்கிவிடுவதால் தேவையில்லாமல் கவலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் இது நியாயந்தானா? மற்றவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? மற்றவர்கள் உங்களைக் கண்டபடி விமர்சனம் செய்யட்டும், அறநெறி பிறழ்ந்தவர்கள் அனைவரும் கூடி உங்களுக்கு அர்ச்சனை செய்யட்டும். நீங்கள் ஒழிய வேண்டும் என்று கர்ஜனை செய்யட்டும். தகாத வார்த்தைகளால் உங்களை மறைமுகமாகத் திட்டட்டுமே. இதனால் உங்கள் கௌரவம் பாதிக்கப்பட்டுவிடுமா? எப்படி வாழ வேண்டும் என்றகொள்கையும், அதன்படி செல்கின்றஉரிமையும் நமக்கு மட்டுமே இருக்கிறது. இதில் மற்றவர்கள் நம்மைவந்து பரிகாசம் செய்வதற்கும், கிண்டலாகப் பேசி நம்மை மட்டம் தட்டுவதற்கும் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மற்றவர்களைப் பற்றிய அர்த்தமில்லாத பயம் உங்களுக்குத் தேவையில்லாதது. எனவே யாரைக் கண்டும் பயப்படாதீர்கள்.

    உங்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை விரட்டுங்கள்

    உங்களுக்குப் பல வகையிலும் துன்பங்கள் வந்துசேரும். இதை நீங்கள் தவிர்க்க முடியாது. உங்களுடைய மனைவி உங்களைக் ‘காய்ச்சும்’ போது உங்களுக்குப் பல கவலைகள் வந்து சேரும். உறவினர்களால் பல உபத்திரவங்கள் உங்களுக்கு உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். நண்பர்கள் அருகில் இருந்துகொண்டு உங்களுக்கு அழகாகக் குழி பறிப்பார்கள். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைப் பலவாறு உங்களை ‘மட்டம்’ தட்டிப் பேசுவார்கள். அலுவலகத்தில் உங்களுடைய மேலாளர் எதற்கெடுத்தாலும் உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார். உங்களைப் பிடிக்காத சிலர் உங்கள் மேல் எரிந்து விழுவார்கள். எது நடந்தாலும் நடக்கட்டும், எனக்குக் கவலையில்லை என்றமனோதிடத்துடன் உங்கள் கடமையில் கண்ணாய் இருந்து பிழையில்லாமல் செயலாற்றுங்கள். நீங்கள் மனச்சோர்வில்லாமல் மகிழ்வோடு இருக்கலாம்.

    எப்பொழுதும் சிரித்தபடி இருங்கள்

    எப்பொழுதும் சிரித்தபடி வாழ்கின்றவர்களுக்கு வாழ்நாள் நீண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனதிலே கவலையை ஏன் ஏற்றிக்கொண்டு துன்பப்படுகிறீர்கள்? கவலையை நீங்கள் துரத்தியடியுங்கள். மகிழ்வை மற்றவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, அதில் பெறுகின்றஇன்பம், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மகிழ்வோடு இருப்பவர்களிடம் நாம் பேசுவதற்குத் துடிக்கின்றோம். என்றைக்கும் கவலையோடு இருப்பவர்களைக் கண்டால் அவரை விட்டு விலகிஓட எண்ணுகின்றோம். அவர்களிடமுள்ள அந்தக் கவலை அலைகள் நம்மையும் வந்து தாக்கக்கூடாது என்றகவலை நமக்கு வந்துவிடுகிறது. எனவே நீங்கள் எப்பொழுதும் சிரித்தபடி கலகலப்போடு இருங்கள். வாய்விட்டு, மனம்விட்டு நீங்கள் சிரிக்கின்றசிரிப்பு, உங்களுடைய சிந்தனைகளைப் பெருக்குவதோடு, உங்கள் வாழ்நாளையும் கூட்டும் என்பதில் ஐயமில்லை. “சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…” இது எவ்வளவு பெரிய உண்மை. வாழத் தெரிந்தவன் சிரிக்கும் கலையிலே தேர்ச்சி பெற்றவனாக விளங்குவான். நீங்கள் மிகவும் சோர்வோடு வீட்டுக்குச் செல்லும்போது, உங்கள் மனைவி புன்னகையோடு உங்களை வரவேற்கும்போது உங்கள் மனம் காஷ்மீரின் எல்லைக்கே போய்விடும். புன்னகையால் சாதிக்க முடியாத காரியம் எதுவுமே இல்லை. 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இலங்கையின் கிரிக்கெட் வீரர் முரளீதரன் முத்தையா, எப்பொழுதும் சிரித்த படியே இருப்பார். சாதிக்கப் பிறந்த நீங்கள் புன்னகை மன்னனாக விளங்குங்கள். சிரிக்கத் தெரிந்தவன் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பான். மகிழ்ச்சி இருந்தால் ஆனந்த மயமான வாழ்க்கைக் கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கலாம்.

    என்றைக்கும் அசைக்க முடியாத நெஞ்சுறுதியோடு வாழ வேண்டும்

    மனதில் உறுதி இருந்தால் உங்களுக்கு மலை கூடக் கடுகாகக் காட்சியளிக்கும். மனதில் உறுதி இல்லாதவர்கள்தான் மரண வேதனையைக் கட்டித் தழுவ விழைகிறார்கள். மனதில் நீங்கள் உறுதியைக் கொண்டுவிட்டால், உங்கள் முன் இருக்கும் எந்தப் பிரச்சனையையும் நீங்கள் வெகு எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். “என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று நூறுமுறைவாய்விட்டுச் சொல்லுங்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, உங்கள் வாழ்வை வளப்படுத்தக்கூடிய இந்த மந்திரத்தை மனஉறுதியோடு சொல்லுங்கள். இந்த மந்திர அலைகள் உங்கள் உடம்பில் இயங்கிக் கொண்டிருக்கின்றநாடி நரம்புகளில் பாய்ந்து உங்களுக்குப் புத்துணர்வை எப்பொழுதும் நல்கிக் கொண்டே இருக்கும். உறுதியில்லாத கட்டிடம் எதுவும் நிலைத்து நிற்பதில்லை. உறுதியில்லாத மனமும், பாசியும், அழுக்கும், சேறும் நிறையப் பெற்று துர்நாற்றம் மிகுந்த குளமாகக் காட்சியளிக்கும். இந்தக் குளத்தினால் யாருக்காவது பயன் உண்டா? அதுபோலத்தான் உறுதியற்றமனமும். உறுதியற்றமனம் இருக்குமானால் அது உங்களுக்கே பயன்படாதே. எனவே மனதில் உறுதியோடு இருங்கள்.

    எவரையும் பழித்துப் பேசாதீர்கள்

    “இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஆற்றல் இருந்தே தீரும். இந்த ஆற்றலை நாம் பயன்படுத்தாத காரணத்தால் நாம் வீணாகி வீழ்கிறோம். நீங்கள் எவரையும் இழிவாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழித்தும் பேசாதீர்கள். மற்றவர்களைப் பேச நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைப் பழித்துப் பேசுவதன் மூலம், நாம் நம்முடைய பொறாமை எண்ணங்களை இந்த உலகத்திற்குப் பறைசாற்றுகிறோம். மற்றவர்கள் மேல்கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். மற்றவர்களை நமக்குப் பிடிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம். மற்றவர்களை நீங்கள் கேவலமாகப் பேசுவதன் மூலம் உங்களுக்குள்ளே உரிமையோடு திரிந்து கொண்டிருந்த பண்பையும், அன்பையும், மனிதநேயத்தையும் நீங்கள் உங்களது மனமாகிய வீட்டைவிட்டே துரத்தியடிக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறு செய்யலாமா? எனவே எவரையும் இழிவாகப் பேசாதீர்கள்.

    எவரிடமும் தற்பெருமை பேசாதீர்கள்

    “இந்த ஊரில் எனக்குச் செல்வாக்கு அதிகம், என்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது” என்று சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். நீங்கள் அவ்வாறு தற்பெருமை பேசிக் கொண்டு திரிய வேண்டாம். தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களுடைய தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். அடக்கம் என்று சொல்லக்கூடிய மிக உயர்ந்த குணம், நீங்கள் தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களை விட்டு விலகி ஓடும். அடக்கம் போனபின் உங்கள் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுமே. மற்றவர்களை நீங்கள் மனதாரப் புகழுங்கள். உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாதீர்கள். “என்னால் முடியும்” என்று சொல்வது தன்னம்பிக்கை, “என்னால் மட்டுமே முடியும்” என்று சொல்வது தற்பெருமை. ஆணவத்திற்குச் செல்லக்கூடிய கரடுமுரடான பாதைதான் தற்பெருமை.

    எல்லோரும் உங்களை மதிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்

    “எவரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று நீங்கள் வருத்தத்துடன் கூறுகிறீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்தால் என்ன, மதிக்காவிட்டால் என்ன? மற்றவர்கள் உங்களை மதித்து உங்களுக்கு கிடைக்கப் போவதென்ன? தன்னம்பிக்கையோடு தளராத நெஞ்சத்தோடு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்து உழைத்துக் கொண்டே இருங்கள். எவரைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நல்ல வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு, பெரும் பணக்காரராக நீங்கள் ஆகும்போதும், செய்வதற்கரிய செயல்களைச் செய்து சிறந்த புகழைப் பெற்றுப் புகழின் உச்சிக்கே நீங்கள் செல்லும்போதும், அனைவருடைய கவனமும் உங்கள் பக்கம் திரும்பும். எல்லோரும் உங்களை மதிப்பார்கள். உங்களை இந்திரன் என்றும், சந்திரன் என்றும் வானளாவப் புகழ்ந்து பேசும்போது நீங்கள் உணர்ச்சியற்றஜடமாக மாறிவிடுங்கள். ஒருவர் உங்களைப் புகழும்போதோ, அல்லது உங்களை இகழும்போதோ உங்கள் மனம் உணர்ச்சியலைகளால் தடுமாறித் தத்தளிக்கிறது. நீங்கள் பக்குவப்பட்ட நிலைக்கு வந்துவிட்டால் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் உங்களுக்கு ஒன்றுதான். இந்தநிலை எல்லோருக்கும் கிட்டாது. தன்னம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே இந்தப் பக்குவநிலை கிட்டும்.

    துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே

    நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாமே வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றீர்கள். வெற்றி பெற்றால் மகிழ்ச்சியினாலே துள்ளிக் குதிக்கின்றீர்கள். தோல்வி ஏற்பட்டால் உடனே துவண்டு போய்விடுகிறீர்கள். இது சரியா என்பதை எண்ணிப்பாருங்கள். தோல்வியடையாதவர் எவருமே வெற்றி பெற்றதாகச் சரித்திரமே இல்லை. நீங்கள் அடைகின்றதோல்விகளைத் துணிந்து ஏற்றுக் ùôகள்ளுங்கள். அவைகளின் மூலம் நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவதோடு, எவராலும் சிதைக்க முடியாத மனோதிடத்தைப் பெறுவீர்கள். “தோல்வி அடைந்து விட்டோம்” என்று கவலைப்படாதீர்கள். வள்ளுவரும் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று கூறியிருக்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அந்தச் செயலில் கருமமே கண்ணாக இருந்து முடித்துவிடுங்கள். பலனை எதிர்பார்க்காமல் நீங்கள் கடுமையாக உழைக்கும்போது, அற்புதமான பலன்கள் உங்களுக்குக் கிடைத்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும் “நான் மிகக் கடுமையாகச் செயலாற்றுகிறேன். பலன்களை, நினைத்து நான் கவலைப்படுவதே இல்லை” என்கிறார் ஹென்றி போர்டு. எனவே ஒரு செயலைத் துணிந்து செய்துவிட்ட பிறகு, பின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவைகளைப் பக்குவ நெறியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். தோல்வி வந்துவிட்டதே என்று துயரம் கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் அயராது பாடுபடுங்கள். நீங்கள் வெற்றிக் கனியை அடைவது உறுதி.

    உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!

    ‘தேசிய நல்லாசிரியர்’ திரு. R.K. ராமசாமி
    நிறுவனர், RKR கல்வி நிறுவனங்கள், உடுமலைப்பேட்டை.

    நேர்முகம்: என். செல்வராஜ்

    முயற்சி என்பது வேள்வி
    உழைப்பு என்பது தவம்
    சாதனை என்பது வரம்

    Continue Reading »

    உடலினை உறுதிசெய்

    உங்கள் உடலை நேசியுங்கள்
    அழகான இந்த உலகில் பிறந்திருப்பதே மகிழ்ச்சியானதாகும். அதுவும் எந்த உடல் குறையும் இல்லாமலும், உடல் உறுப்புகள் சீராக இயங்கப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய வரமாகும். ‘உலகிலேயே மிகப்பெரிய அதிசயம் மனிதன்’ என்றார் மரியாமான்ஸ். இந்த வலுவான நோயற்றஉடலினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர வீணாக்கக்கூடாது. இவ்வுடலினைப் போற்றவேண்டும். உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் நலம் சிறக்கும். இதனால் உங்களுக்கு எதையும் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.
    உங்கள் உடல்தான் உங்கள் முதன்மையான சொத்து
    சில மாணவர்கள் என்னிடம் வந்து நான் ஓர் ஏழை, எப்படி IPS தேர்வில் வெற்றி பெறமுடியும் என்று கேட்கிறார்கள். எப்படி ஏழை என்று கேட்டால், என்னிடம் பணம் இல்லை, என் தந்தையிடமும் பணம் இல்லை என்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது, உங்களது இரண்டு கண்களையும் விற்றுவிடுங்கள் 100 கோடி ரூபாய் தருகிறேன் என்று யாராவது கேட்டால் உங்களது கண்களைத் தருவீர்களா? தரமாட்டேன் என்பார் அந்த இளைஞர். ஆக, உன் கண்களின் மதிப்பு 100 கோடி ரூபாய். கைகள், கால்கள் எல்லாம் உள்ளன. பலகோடி ரூபாய் மதிப்புள்ள உடலை வைத்திருக்கும் நீ ஏழை என்று சொல்லக் கூடாது என்று அறிவுரைகூறி அனுப்புவேன். இந்த உடல் விலைமதிப்பற்ற சொத்து. இதை வைத்து பணம், பெயர், புகழ், நன்மதிப்பு என்று எதையும் சம்பாதிக்க முடியும்.
    ‘ஏழையாக பிறப்பது தவறில்லை. ஆனால் ஏழையாகவே சாவதுதான் குற்றம். உடல்நலம் இருந்தால் ஏழையால் செல்வந்தனாக மாறமுடியும். அப்படி தனது வாழ்க்கையை அமைக்காதவன் ஒரு குற்றவாளி. அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கலாம்’ என்றார் மைக்ரோ சாப்ட் கம்பெனியின் நிறுவனர் பில்கேட்ஸ்.
    ‘ஃபோர்டு கார் கம்பெனி நிறுவனர் ஹென்றி ஃபோர்டு. அவர் வாழ்ந்த காலத்தில் அவர்தான் உலகில் மிகப்பெரிய பணக்காரர். அவரது சொத்துகள் என்ன என்பது பற்றிய விவாதம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடந்தது. அவரது கார் கம்பெனி 90 சதவீதம், வீடு மற்றும் தோட்டம் 5 சதவீதம், வங்கிக் கணக்கு 5 சதவீதம் என்று பல மாணவர்கள் சொன்னார்கள். ஒரு மாணவன் கருத்தினைச் சொன்னான். கார் தொழிற்சாலை, வீடு, தோட்டம், வங்கி இருப்பு அனைத்தும் 5 சதவீதம்தான், மீதி 95 சதவீதம் என்ன? என்று பேராசிரியர் கேட்டார், அது தான் ‘ஹென்றி ஃபோர்டு’ என்றான் அம்மாணவன். ஹென்றி ஃபோர்டின் எல்லாச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தாலும் கூட, மீண்டும் ஒரு புதிய கார் தொழிற்சாலையைத் தொடங்க அவரால் முடியும் என்பது தான் அம்மாணவனின் வாதம்.
    உடல்நலம் மிக்கவர் யாரும் ஏழையாக இருக்க முடியாது. உடல்நலம் கெட்டவர் யாரும் செல்வந்தனாகவும் இருக்க முடியாது.
    எனவே தான் சொல்கிறேன், உங்கள் உடலை நேசியுங்கள். உடல்நலத்தைக் காக்கும் நூறு சதவீதப் பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல்நலன் உங்கள் கையில். துரித உணவுக் கடைகள் உங்கள் உடல்நலத்தை நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள். அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவர்கள், விஞ்ஞான அறிவும் பயிற்சியும் இல்லாத உள்ளூர் மருத்துவர்கள், மந்திரவாதிகள், மூட நம்பிக்கைக்காரர்கள் ஆகியோரிடத்தில் உங்களது உடல்நலத்தை அடமானம் வைக்காதீர்கள். உங்களது உடல்நலத்தை நீங்களே உறுதி செய்யுங்கள். நீங்கள் தான் உங்களுக்கு முதல் மருத்துவர்.
    இவ்வுலகில் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் அனைவருமே வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் தான். தங்களது உடலை நேசிப்பவர்கள்தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தங்களது உடலை வெறுப்பவர்கள் யாரும் வாழ ஆசைப்படமாட்டார்கள். தங்களது உடலை வெறுப்பவர்கள், மற்றவர்களையும் வெறுத்து இவ்வுலகையும் வெறுப்பார்கள். இவர்களிடம் ஓர் எதிர்மறைமனப்பான்மைதான் இருக்கும். நீங்கள் அவ்வகையைச் சார்ந்தவர்கள் அல்ல என்றஉறுதிமொழியை எடுத்துக் கொண்டுள்ளீர்கள். ஏனென்றால் நீங்கள் உங்கள் உடலை நேசிக்கிறீர்கள். உங்கள் உடலை மதிக்கிறீர்கள். அதைப் பயன்படுத்த விரும்புகிறீர்களே தவிர அதை வீணாக்க விரும்பமாட்டீர்கள். இந்தப் புத்தகத்தை இதுவரை நீங்கள் படித்திருப்பதே அதற்குச் சான்று.
    உலகில் அதிகமான காலம் உயிர் வாழ்ந்த நமோஜீ தானே என்ற ஜப்பானியரை 2008ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று பேட்டி கண்டனர். எவ்வளவு நாள் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர். “நான் என்றும் வாழ வேண்டும், நான் சாகவிரும்பவில்லை”. அவருக்கு 112 வயதிலும் சாக விருப்பமில்லையாம். நீங்களும் 100 வயதிலாவது இப்படி ஒரு வாக்குமூலத்தை இவ்வுலகிற்குத் தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 100 வயது வரை வாழப்போகும் உங்களது இன்றைய வயதை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் ஒரு குழந்தை என்பது உங்களுக்குப் புரியும்.
    உங்கள் உடலை நீங்கள் நேசித்தால் உங்கள் உடல்மீது உங்களுக்கு மரியாதை ஏற்படும். உங்கள் உடலை கட்டிக் காப்பீர்கள். உடல் என்றும் இளமைத் தோற்றத்துடன் இருக்கும். நமோஜீ தானேவைப் போல என்றும் வாழ ஆசைப்படுங்கள்.

    உள்ளத்தோடு உள்ளம்

    மாணவர்கள் தேர்வையும், மக்கள் தேர்தலையும் சந்திக்கும் காலகட்டம் இது.கல்வியின் அவசியம் அறிந்து, விளையாட்டுத் தனத்தை மூட்டைகட்டி வைத்து சாதிக்க வேண்டும் என்ற ஒரே மனநிலையில் படித்துள்ளவர்கள் தேர்வைச் சந்திக்க பயப்படப்போவதில்லை.

    Continue Reading »