– 2011 – February | தன்னம்பிக்கை

Home » 2011 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    தேர்வில் வெற்றியை வென்றிடுவோம்

    நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக் கூட, தேர்வுகள் வந்துவிட்டால் உதறல்தான், என்ன கேட்பார்களோ, என்ன எழுதுவதோ, என்றபயம் இருந்தபடியே இருக்கும். சுமாராகப் படிப்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பரீட்சை ஏன் தான் வருகின்றதோ, என அலுத்துக் கொள்வார்கள். நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். இது மாற்றப்படாத ஒரு விதியாகும். எனவே மாணவப் பருவத்தில், தேர்வுகளைச் சந்திப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால் தைரியமாக தேர்வுகளை அணுகலாம் என்பது மட்டுமல்ல, தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் பெறமுடியும்.
    படிக்காமல் தேர்வுகளைச் சந்திக்கும் துணிவு வராது. அது சரி ஆனால் எப்படி படிப்பது என்கிறீர்களா? எப்படிப் படித்தாலும் ஒன்றும் நடக்கமாட்டேன் என்கிறது, என புலம்பும் மாணவர்களும், இனி கவலைப்பட வேண்டாம். இங்கே கொடுக்கப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். வரும் தேர்வுகளில் உங்களை அறியாமலே அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பீர்கள்.
    முதலில் நாம் படிக்க உட்கார்ந்தால், பல விஷயங்கள், நமது படிப்பைக் குலைக்கும் சக்திகளாகச் செயல்படுகின்றன. அவற்றை இனி பார்ப்போம்.
    · பயம்
    · மன நெருக்கடி
    · கவனச் சிதறல்கள்
    · தாழ்வு மனப்பான்மை
    · அதீத நம்பிக்கை
    · படிக்கும் திட்டம் இன்மை
    · மனதை ஒரு முகப்படுத்தாமை
    · மன உறுதியின்மை
    · வெற்றி பெறுவதில் ஆசையின்மை
    பாடத்தின் முதல் பத்தியையும், பின்னர் கடைசி பத்தியையும் படியுங்கள். அது அப்பாடத்தின் நோக்கத்தையும், சாராம்சத்தையும், உங்களுக்குச் சொல்லும்.
    பாடத்தின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ள முக்கியத் தலைப்புகள் அனைத்தையும் படியுங்கள். இது அந்தப் பாடம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை சொல்லும்.
    பாடம் முழுவதையும் ஒவ்வொரு பத்தியின் முதல் வாக்கியங்களை வாசித்துப் பாருங்கள். இது அந்தந்தப் பத்தியில் கூறப்படும் கருத்துக்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கும்.
    இனி அந்தப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்கள், அருஞ்சொற்பொருள், சொல்லப்பட்டுள்ள முக்கியக் கருத்துக்கள் என்னென்ன என நீங்கள் கருதுவதை, ஒரு குறிப்பு புத்தகத்தில் எழுதுங்கள் எல்லாம் ஓரிரு வார்த்தைகளில் வரிசைப்படுத்தி எழுதினால் போதும்.
    இப்போது நீங்கள் எந்த ஏற்பாடுமின்றி, பாடத்தைப் படிக்கவே தொடங்கவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பத்து தடவை, பாடத்தின் முன்னும் பின்னும், கண்களை படரவிடுங்கள். இப்போது நீங்கள் அறியாமலேயே பாடத்தின் 50 – 60 சதவீதம் உங்களுக்குள் பதிவாகி இருக்கும்.
    இனி, நீங்கள் மேலே சொன்னபடி பாடத்தை ஒருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள். பாடம் எளிதாகப் புரிவதுடன் மிக ஆழமாக மனதில் பதியும்.
    தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள
    1. ஆசிரியர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட பாடத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்களை நீங்கள் சரியாக எழுதிவிட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
    2. உங்களது மொத்தப் பாடங்கள் எவ்வளவு? அதை எப்படி தேர்வுக்கு முன்னர் படித்து திருப்பம் செய்வது என்பது குறித்த திட்டம் தேவை.
    3. தேர்வுக்காக படிப்பது என்பது தினமும் செய்யவேண்டிய ஒரு வேலை,திரும்பத் திரும்ப படிக்கும்போது, குறிப்புகளை புரட்டிப் பார்க்கும் போது பிடித்த விஷயங்கள் எளிதாக மனதில் தங்கும், தினமும் படிப்பதால் மொத்தப்பாடங்களையும் மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கும் நேரமும் குறைந்து விடும்.
    4. சிலர் பரீட்சை வந்துவிட்டால் வகுப்பு
    களுக்குப் போகாமல் வீட்டில் இருந்து படிப்பார்கள், இது சரியான முறை அல்ல, ஆசிரியர்களின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை, சில முக்கியமான பாடப்பகுதிகள் கடைசி நேரத்தில் தான் விளக்கப்படும், எனவே அத்தகைய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
    தேர்வுக்கு ஒரு வாரம் முன்னால் செய்ய வேண்டியது
    1. இது வரை நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உங்கள் பாடநூல்கள், பிற உதவி நூல்கள், அனைத்தையும், சேகரித்து அவற்றை முறைப்படி அடுக்குங்கள். தேர்வுக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் நேரடியாக கைவசம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
    2. இந்த ஒருவாரத்தில் எல்லா பாடங்களையும் படித்து முடிக்க மனதிற்கு சரியான அளவில் நேரம் ஒதுக்கி, ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். தேர்வுக்கு முன் இரண்டு தினங்கள் வெறுமனே திருப்பம் செய்வதற்கு ஒதுக்குங்கள்.
    3. ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்கு நன்றாக தெரிந்த பகுதிகள், தெரியாத பகுதிகள் எது, எது என கணக்கெடுங்கள். இன்னமும் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய பகுதிகளை படிப்பதற்காக போதிய நேரம் ஒதுக்குங்கள்.
    4. உங்களுக்கு நீங்களே சுய தேர்வு, உங்களுக்கு பிடித்த முறையில் வைத்துக் கொண்டு, படித்த விஷயங்களைச் சொல்லி எழுதிப்பாருங்கள்.
    5. அன்றாடம், ஆசனங்கள், உடற்பயிற்சிகள், தியானங்கள் மூலம் மனத்தையும், உடலையும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள் இவற்றை தொடர்ந்து செய்யுங்கள். பதட்டம் குறையும், படிப்பு இனிக்கும்.
    தேர்வு தினத்தன்று செய்ய வேண்டியது
    1, நன்றாக தூங்கி எழும்புங்கள் உடல் அசதி, சோர்வு இருப்பின் நன்றாக தேர்வு எழுத இயலாது.
    2, தேர்வுக்கு முன்னால் புதிதாக எதையும் படிக்க, மனப்பாடம் செய்ய முற்பட வேண்டாம், தெரிந்த விஷயங்களை மட்டும் மறுபடி படித்துப்பாருங்கள்.
    3, நிறைய சாப்பிட வேண்டாம் அரைவயிறுக்கு சாப்பிட்டால் போதும், உணவு லேசானதாக இருக்கட்டும்,
    4, தேர்வு அறைக்கு முன்னதாகவே சென்று விடுங்கள் தேர்வை நன்றாக எழுதப் போவதாக கற்பனையும், உங்களுக்குள்ளே உறுதிமொழியும் செய்துகொள்ளுங்கள்.
    5, ஒருமுறை நிதானமான, ஆழமான, சுவாசப் பயிற்சியை செய்துவிட்டு மன ஒருமைப்பாடுடன் தயாராகுங்கள்.
    தேர்வின் போது கவனிக்க வேண்டியவை
    · மூன்று மணி நேரத் தேர்வு எனில் மூன்று மணி நேரமும் தேர்வு அறையிலேயே இருங்கள். எழுதி முடித்துவிட்டாலும் கூட, எழுதியதை மறுபடி படித்துப்பாருங்கள். சிறு சிறு தவறுகள், இருந்தால் திருத்துங்கள்.
    · மற்றவர்களின் செயல்களிலே கவனத்தை செலுத்தாது உங்களுடைய வேலையிலே கண்ணும் கருத்துமாக இருங்கள்.
    · கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் நிதானமாக வாசிக்கவும், கேள்விகளை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து புரிந்து கொண்டு கேள்விகளுக்கு ஏற்ற, சரியான அளவில் விடைகளை எழுதுங்கள்.
    · நேர நிர்வாகம் அதி முக்கியம், ஓவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் என்பதையும் முன்பே தீர்மானித்துக் கொண்டு எழுதுங்கள், நேரம் தாண்டுகிறது எனில், அடுத்த கேள்விக்கு போய் விடுங்கள், நேரம் இருந்தால் விடுபட்ட விடையை எழுதிக் கொள்ளலாம்,
    · முதலில் எளிதாக உள்ள கேள்விகளுக்கு, உங்களுக்கு நன்றாக பதில் தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். மேலும் உங்கள் கையெழுத்து, முதலிலிருந்து முடிவு வரை, ஒரே மாதிரி இருக்கட்டும், சரியான இடைவௌல் விட்டு நேர்க்கோடுகளில் தெளிவாக எழுதுங்கள்.
    · முக்கிய செய்திகளுக்கு அடிக்கோடிர்டு, எழுதியதை மறுபடியும், சரிபாருங்கள். பக்க எண்கள் கேள்வி எண்கள் உங்கள் பதிவு எண் போன்றவற்றைச் சரியாக எழுதியிருக்கிறீர்களா எனப்பாருங்கள் எல்லாவற்றிக்கும் மேலாக,
    தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்
    வெற்றி நிச்சயம்.

    இராகம் இதயராகம் எத்தனை வகை ?

    கிராமங்களில் பிற்பகல் வேளைகள் எண்பதுகளில் அமைதியானவை. வெறிச்சோடிய வெயில் மனதிற்குள் விதைக்கும் நினைவுச் செடிகள் வண்ணமயமானவை. ஆடு மேய்க்கின்ற வேப்ப மரத்தடிகள் அனல் வீசினாலும் ஆழமான அமைதியை உருவாக்குபவை. எப்போதாவது கடந்து போகிற மாட்டு வண்டியும் இருசக்கர பழைய லூனாவும் தவிர, அதிக போக்குவரத்து இடையூறு இல்லாத கிராமத்து மத்தியானங்கள் இசைக்கு உகந்தவை. வெறுமையும் வெண்மையும் வெம்மையும் சரிவிகிதத்தில் கலந்த அந்த பருத்தி கரிசல் காட்டு நண்பகல் வேளைகள் இவ்வளவு வருடங்கள் கடந்த போதிலும் உள் மனதோடு சங்கீதம் பாடிக் கொண்டிருப்பதை இப்பொழுதுதான் உணர முடிகின்றது.
    அண்ணா நூற்றாண்டு நூலகம் போயிருந்தோம். மூன்றாவது மாடியில் தமிழர் புத்தகப் பகுதியில் வாழ்க்கை வரலாறு பகுதியில் ஏ.ஆர். இரஹ்மானின் வாழ்வு குறித்த புத்தகம் கண்ட நினைவு பளீரிடுகின்றது. இசை மேதை பீத்தோவானிலிருந்து உலகின் எண்ணற்ற இசை வடிவங்களும் இசைஞானியின் இராக படைப்புகளும் மற்ற ஒப்பற்ற கலைஞர்களின் ஒவ்வொரு குழந்தைகளையும் இரசித்து சிலாகிப்பதானால்… எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? என்றல்லவா பாடத் தோன்றுகின்றது.
    தமிழில் “ழ” பிறப்பது எவ்வாறு என சிறப்பிடம் கொடுத்திருப்பது போல, இசை பிறக்கும் இடங்களை மயிலையார் விளக்கி மிடற்றினால் குரலும், நாவினால் துத்தமும் என எடுத்து மூக்கினால் தாரமும் பிறக்கும் என முடிக்கையில் தமிழிசை படிக்க ஆர்வம் அதிகரிக்கின்றது.
    வாழ்க்கையில் எதாவது ஒரு சுரத்தின் அடி நாதம் எல்லோருடைய மனதிலும் இருக்கத்தான் செய்கின்றது. தியானம் செய்யும் பொழுது மனதை அமைதிப்படுத்திக் கொண்டு இதயத்தின் ஓசையைக் கேளுங்கள் கவனியுங்கள் என்று சொல்வார்கள். நண்பரொருவரோடு சேர்ந்து முயற்சிக்கையில் பதினைந்து நிமிடம் கழித்துதான் தன்னால் தன் இதயத்தின் துடிப்பையும் அது உருவாக்கும் அதிர்வையும் கவனிக்க இயன்றதாகச் சொன்னார். இதயத்தை நமது நட்டுவனார் என்று வைத்துக் கொண்டால் அவர் ஜதி மாறாமல் நன்றாகவே தட்டிக்கொண்டு இருப்பது இசையென புரிந்து கொள்ள முடியும்.
    பரெய்லியில் கல்லூரியில் படித்த காலத்தில் அவசர அவசரமாகப் புத்தகங்களைச் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. உடனே இசையும் வருகிறது. வானொலி கேட்டுக் கொண்டு படிப்பது பழக்கமாதலால் படித்ததை நினைவிலிருந்து வெளியே எடுக்கையில் கூடவே இசையும் வெளியே விழுகிற அதிசயம் தெரிய வருகின்றது. பதட்டமான சூழ்நிலைகளில் அழுத்தமான இசையொன்று யாரும் கேட்காமலேயே காதுகளில் ஒலிக்கக் கேட்கலாம்.
    நண்பரொருவருக்குள் உள்ள இசை தாகம் தனது கடுமையான காவல்துறை முறுக்கு மீசை உடற்பயிற்சி வேகத்திற்கு இடையில் பார்க்க நேர்ந்தது. பதினோரு மணி இரவில் தனது பாடலாசிரியரை சந்தித்து ‘பியானோ” கற்றுக் கொள்கின்ற ஆர்வத்தை எந்த வகையில் சேர்க்க.
    இசை உடனிருப்பவர்களுக்குத் தொற்றிக் கொள்ளக் கூடியது. இன்னும் மலை வாசஸ்தலங்கள் போனதும் புதிய வானம் புதிய பூமி என்று துள்ளாத கால்கள் குறைவாகவே இருக்கும்.
    ஆழமான மனது இசையினால் உருவாகும், என்று சொன்னால் மெய்யில்லை என்று சொல்ல முடியாது. மெய்மறக்கும் இசை மனக்காயங்களை ஆற்றுகின்ற மருந்தாகின்றது. என் பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தினைப் பாலித்திட வேண்டும் என்று பாரதி சொன்னது நிஜமே. பாடல் காதுகளை வைகுண்ட வாசலாக்குகின்றது. மாயக் கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடலில் தொடங்கி….. என்னோடு தங்கு தங்கென்று சொன்ன தங்கக் குணத்தானை! எங்குநான் காண்பேன் இனி? என்று கவிமணி தொடர்புள்ள எதுகைப் பாடலும் சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ? என்று கேட்ட நேருவின் பிரிவில் பாடிய பாடல் ஒன்றும் சோக இசையை மனதுக்குள் மீட்டுகின்றன. டாம் ஹேங்ஸின் கண்களில் இந்த உணர்வை சோக கீதத்தை கையறு நிலையை ஒரு கவிதையைப் போல பார்க்க வேண்டுமானால் ‘கேஸ்ட் அவே”(Cast Away) பார்க்க வேண்டும்.
    இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் தன்னைத் தவிர எந்த ஒரு மனிதனையுமே பார்க்காமல் இருந்தால் பேச்சே இசையைப் போல் மாறிப்போய் விடுகின்றது.
    சதுரங்கப் பலகையில் முதல் வரிசையில் சிப்பாய் வைத்தால் எப்படி, நமக்கு ஆடத் தெரியாது என, ஆடத் தெரிந்தவர்களுக்குத் தெரியவருமோ? அதுபோல ஊண்ய்ங் அழ்ற்ள் என்று சொல்கின்ற இந்த கர்நாடக இசை, நாட்டிய சமாச்சாரங்கள் அவ்வப்போது ‘கற்றது கையளவு’ என்றும் ஔவை மேலும் சொன்ன ‘எல்லார்க்கும் ஒவ்வொன்றும் எளிது’ என்றும் சொல்லிப் போகின்றன.
    அதிகம் இசை படித்தால் நன்றாகத்தான் மாயமாகும் போல வாழ்க்கை.. .. ..
    –மேலும் வளரும்.. .. ..

    கொல்லிமலை கஸ்தூரிபாகாந்தி பாலிகா வித்யாலயா

    நிர்வாக இயக்குநர் திரு. சிதம்பரம், 9443265489

    இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகக் குறைந்த அளவு கல்வியையாவது வழங்க வேண்டுமென மத்திய அரசு முடிவெடுத்து அனைவருக்கும் கல்வி என்றதிட்டத்தை 2002 03ம் ஆண்டு தொடங்கியது. அதில் ஒரு பகுதி, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற10 முதல் 14 வயது வரையுள்ள பெண் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டமாகும். இத்திட்டத்தில் பழங்குடியின மக்களின் பெண் குழந்தைகளில் 10 முதல் 14 வயது பிரிவில் தொடக்கக் கல்வியை இடைநிறுத்தம் செய்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்து அவர்களுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை கல்வி வழங்கி, 8ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவைப்பதாகும். 8ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்னர் இவர்கள் 9ம் வகுப்பில் முறையான பள்ளிகளில் சேர்த்து கல்வி பயிலச் செய்வதாகும்.

    மேற்காணும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைப்பள்ளிகள் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் சுமார் 53 மையங்களில் மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் மாநில அரசின் பொறுப்பில் நடைபெற்று வருகிறது. இப்பள்ளிகள் அரசின் பொறுப்பில் இருந்து வந்தாலும், இதனை நிர்வகிக்கும் பொறுப்பினை ஆங்காங்கே உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு வழங்கி நடத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம், கல்வி நிலையில் சற்று பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது. இம்மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக கொல்லிமலை உள்ளது. இம்மலைப்பகுதியில் 14 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் மலைவாழ் மக்களின் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த அரசு முன்று கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட மையங்களை அனுமதித்து உத்திரவிட்டுள்ளது. அதில் முதல் மையத்தை சப்தர்மா அறக்கட்டளைக்கு வக்ஷ்ங்கி, நிர்வகித்து வருகிறது. மற்றஇரண்டு மற்றும் மூன்றாவது மையங்களை இராசிபுரம் வட்டம், அத்தனூர் சுதந்திர போராட்ட வீரர் என். கந்தசாமி கல்வி அறக்கட்டளைகளுக்கு வழங்கி, நிர்வகிக்கும் பொறுப்பினையும் வழங்கியுள்ளது. மேற்காணும் மூன்று மையங்களிலும் ஒவ்வொரு மையத்திலும் தலா 50 பெண்கள் வீதம் சேர்க்கை செய்யப்பட்டு, நாளதுவரை இம்மையங்கள் முறையாக செயல்பட்டு வருகிறது.

    சுதந்திர போராட்ட வீரர் என். கந்தசாமி கல்வி அறக்கட்டளை ஏற்கனவே பி.எட்., கல்வியியல் கல்லூரியையும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் மற்றும் நர்சரி மெட்ரிகுலேசன் பள்ளியையும் இராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டியில் நடத்தி வருகிறது. கொல்லிமலை மிகவும் பின் தங்கிய பகுதியாக இருப்பதால், 50 பெண் குழந்தைகள் தங்கி படிப்பதற்கு ஏற்ப உண்டு உறைவிடப் பள்ளிக்கான கட்டிட வசதி இல்லை என்பதால், தற்காலிகமாக மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனங்களின் வளாகத்தில், தனிக் கட்டிடத்தில் இரண்டு மையங்களும் இயங்கி வருகிறது. இங்கு மாணவியர்கள் தங்கிப் பயிலுவதற்கு ஏற்ப சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
    கொல்லிமலை பகுதியில் கல்வியை இடைநிறுத்தம் செய்த பெண் குழந்தைகளை இம்மையத்தில் சேர்க்க, அறக்கட்டளை தொண்டு நிறுவன பணியாளர்கள் கிராமம் தோறும் சென்று கே.ஜி.பி.வி. மையத்தின் பயன்பாட்டை எடுத்துக்கூறி, இடைநின்றகுழந்தைகளைக் கண்டறிந்து இம்மையத்தில் சேர்த்து வருகிறார்கள். மக்களிடையே தெருமுனை கூட்டங்கள், துண்டு பிரச்சார நோட்டீஸ் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலும் மலைவாழ் மக்களின் குழந்தைகளை அதிகமாக சேர்க்கை செய்கிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் குழந்தைகள் சிலருக்கும் முன்னுரிமை அடிப்படையில் ஓரிரு இடங்கள் வழங்கப்படுகிறது.
    செயல்பாடுகள்
    · தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்படுகிறது.
    · பாடம் தவிர கணிணி, விளையாட்டு, பாட்டு, நடனம், யோகா, தியானம், சுயதொழில் குறித்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
    · இம்மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு உணவு, உடை, தங்குமிட வசதி, காலணிகள் மற்றும் தினசரிப் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.
    · பள்ளியில் சேர்க்கப்பட்ட நாள்முதல் மாணவிகளின் பெயரில் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டு மாதம் 50 ரூபாய் சேமிக்கப்பட்டு மாணவிகள் ஒரு வகுப்பு முடித்து மற்றொரு வகுப்பிற்குச் செல்லும்போது நோட்டுப் புத்தங்களுக்காக அச்சேமிப்புத் தொகை செலவிடப்படுகிறது.
    · மேலும் ஒவ்வொரு மாணவியும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு அதற்கான ஆண்டு பிரிமீயத் தொகையும் அரசு செலுத்தி வருகிறது.
    · 2009-10 ஆம் ஆண்டில் இம்மையத்தில் 8ம் வகுப்பு பயின்ற10 மாணவிகள் இராஷ்ஷரியபுரஸ்கார் விருது பெற்றுள்ளனர். தினசரி மற்றும் சிறுவர் இதழ்களுக்கு ஓவியம் வரைந்து சிறப்பு வெகுமதிகளும் பரிசுகளும் பெற்றுள்ளனர்.
    · 2008ம் ஆண்டு இம்மையத்தில் கல்விபயின்று 8ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதியவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    · ஒவ்வொரு மாதமும் அரசு பெண் மருத்துவர்களைக் கொண்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
    · மாணவர்களிடையே அவ்வப்பொழுது விழாக்கள் நடத்தப்பட்டு போட்டிகள் வைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.
    · இத்திட்டமானது மேலும் பல மாவட்டங்களிலும் விரிவுப்படுத்தி தொடக்கக்கல்வியை எல்லாக் குழந்தைகளும் பெறவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு’.

    சர்வதேச தாய்மொழி தினம்

    ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள் ‘தாய்மொழி நாளாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்கதேச மொழியுரிமை போராளிகளின் நினைவாக 2000-மாவது ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
    மொழிகள் இனங்களை அடையாளம் காட்டுவன; அந்தந்த இனமக்களின் அமைதியான வாழ்வுக்கு மொழிகள் அடிப்படையாகத் திகழ்வன சமுதாய ஒருமைப்பாட்டுக்கும் நிலையான வளர்ச்சிக்கும் துணை நிற்பன.
    தற்போது உலகமெங்கும் சுமார் 7000 மொழிகள் பேச்சு வழக்கிலும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் ஏட்டில் இடம்பெறாத நிலையிலும் உள்ளன. ஏட்டில் இடம்பெற்று பேச்சில் இடம்பெறாத மொழிகள் ஏட்டிலும் பேச்சிலும் இடம் பெற்று இலக்கிய வளம் பெறாத மொழிகள் இலக்கிய வளம் பெற்றும் ஆட்சியில் இடம் பெறாத மொழிகள் என்று பல நிலைகளில் மொழிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
    வளமான மொழிகளிலேயேகூட ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் கல்வி மொழியாக ஊடக மொழியாக கணினிமொழியாக ஆக்கப்படவில்லை என்றும் இப்போது பேச்சு வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகளில் சரிபாதி அடுத்த சில தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்றும் கூறுகிறார் யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்.
    மொழிகள் அழிந்தால் அது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே ஆபத்தாகும். மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால் சிந்தனைகள் குறையும். மொழிகளின் அழிவைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம். ஒவ்வொரு மொழிக் குடும்பத்தாரும் தத்தமது மொழியை தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்று அந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
    சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும். அதற்கிணங்க ஐ.நா. தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம் பிரெஞ்சு சீனம் ஸ்பானிஷ் ரஷியன் அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல் அனைத்தையும் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டும் என்றும் தம் அறிக்கைகள் ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது.
    தாய்மொழியை அனைத்து மக்களும் கற்றுப் பயன்படுத்துவதுடன் தேசிய மொழி ஒன்றையும் பன்னாட்டு மொழி ஒன்றையும் கூடக் கற்றுக் கொள்வது நல்லதுதான். உலகமயமாகும் இக்காலச் சூழலில் பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும்தான். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
    “”ஆங்கில மொழியில் எழுதுவதை விடப் பேசுவதைவிட என் தாய்மொழி குஜராத்தில் எழுதினால் பேசினால் எளிமையாக என்னால் கருத்துகளை வெளிப்படுத்த முடியும்””- மகாத்மாவின் இந்த சிந்தனையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    செம்மொழியான தமிழ்மொழி
    உலக மொழிகள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் அது அறுநூறு. அவற்றுள் இலக்கியம் மற்றும் இலக்கணம் உடையவை என்று பார்த்தால் வெறும் முன்னூறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உடைய மொழிகள் எத்தனை என்று பார்த்தால் எண்ணிக்கை ஒற்றை இலக்கில்தான் உள்ளது. அதாவது ஆறு மொழிகள் மட்டுமே அத்தகைய சிறப்பு கொண்டவை. 1. தமிழ் 2. சீனம் 3. சமஸ்கிருதம் 4. இலத்தீன் 5. ஹீப்ரு 6. கீரிக்
    இந்த ஆறு மொழிகளில் முதலிடம் வகிப்பது தமிழ். தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளை நுண்ணிய உணர்வுகளை மிகத் தெளிவாக அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கின்றார்.
    உலக மொழிகளில் காந்த சக்தி கொண்டது தமிழ். ஒரு மொழியை நன்கு ஆய்வு செய்த பின்னரே அம்மொழியின் வளம் பற்றி பேச முடியும். ஆச்சார்யா வினோபா பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து உலகுக்கு உரைத்தவர். அவர் அன்னைத் தமிழின் பெருமைகளை கூறும் போது இவ்வாறு கூறுகிறார், “”லத்தீன் மொழியைப் போன்று தமிழ்மொழி அளவற்றவினைச் சொற்களைக் கொண்டுள்ளது. ஒரு மொழியின் வளம் அதன் வினைச் சொற்களில் அளவில் அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் உயர் தனிச்செம்மொழி என்பதில் ஐயமில்லை”” என்று கூறியிருக்கிறார்.
    ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்றநூலில் மொஹஞ்சாதாரோ ஹரப்பா ஆகிய இடங்களில் திராவிட நாகரிகம் இருந்ததாக குறிப்பிட்டு எழுதியுள்ளார். அப்படிப்பட்ட நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நம்முடைய மொழி தமிழ்மொழி.
    செம்மொழி மாநாட்டின்போது நாடு நகரமெங்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினையை மக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். கடல்கோள்களை எதிர் கொண்டும் காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகள் அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளுவதாக அழகிய பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது மாநாட்டின் இலச்சினை. அறம் பொருள் இன்பம் எனும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் அவர் மூன்று விரல்களைக் காட்டுவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் ஹரப்பாவிலிருந்த குறியீடுகளும் இடம் பெற்றிருந்தன.
    செம்மொழி மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (ஙர்ற்ற்ர்) ‘பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்’ என்பது அமைந்திருந்தது. ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும், இச்சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.
    ‘என்றுமுள தென்றமிழ்’ என்று கம்பன் தமிழின் இனிமையை தன் படைப்புக் காப்பியங்களில் உணர்த்தியிருக்கிறார். எம்மொழியும் பெறாத முச்சங்கம் அதாவது தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று சங்கம் வைத்து வளர்ந்த செம்மையான மொழி நம் தமிழ்ச் செம்மொழி.
    உலக மொழிகள் பலவற்றுக்கும் தாயாகிய மொழி நம் தமிழ்மொழி. நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுத்து மொழியாய் ஏறுநடை போட்ட மொழி தமிழ்மொழி. மொழி பேசுவதற்குரிய ஒரு கருவி என்று சொல்லப்பட்டாலும் நம்மொழி வாழ்வியல் மொழியாய் வளர்ந்து செழித்து தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் தழுவிக் கொண்டு தமிழனத்தை வளர்த்த மொழி. நம் தாய்மொழியான தமிழ்மொழியை போற்றுவோம் வணங்குவோம் பாதுகாப்போம்.

    சாதனை வாழ்விற்கான சந்தோச வழிமுறைகள் 50

    என்னுடைய “உறவுகள் மலரட்டும்” என்ற பயிலரங்குகளின் பங்கேற்பாளர்கள் பலர், தங்கள் குடும்பத்தார் , உறவினர் , நண்பர் உடன் பணிபுரிவோரிடம் , இருந்த சமூக உறவு சீர்குலைய முக்கிய காரணமாக தெரிவிப்பது குறைகூறுதல் ஆகும். ஓன்றில் , இவர்கள் அவர்களை திருத்தும் எண்ணத்துடன் , அவர்களது குறைகளை சுட்டிக்காட்டி , இருப்பார்கள் அல்லது அவர்கள் , இவர்களது குறைகளை எடுத்துரைத்திருப்பார்கள்.
    குறைகாண்பது சரியா? தவறா? என்பதற்கு விடைகாணும் விதமாக, பயிலரங்கு ஒன்றில் பெண் பங்கேற்பாளர் ஒருவர் தெரிவித்த அனுபவ பகிர்வை , இங்கு விவரிக்கின்றேன். அந்த பெண்மணிக்கு ஒரே மகன். மகனுக்கு மூன்று குழைந்தைகள். மகன் மனைவியை தேர்ந்தெடுப்பதில் அந்த பெண்மனியின் விருப்பமே வெற்றிபெற்றது. மகனும் மருமகளும் சந்தோக்ஷமாக ஆனந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர். ஒரே மகன் என்பதால் தாய் தந்தையோடு ஒன்றாக வாழ்வதில் மகன் உறுதியோடு இருந்தார்.
    பெண்மணி அவர்கள் பகிர்ந்து கொண்ட செய்தி, “ஐயா, இன்று, இந்த பயிலரங்கில் கலந்து கொண்ட பின்பு தான் நான் செய்த மகா தவறு ஒன்றை உணர்ந்து கொள்ள முடிந்தது.
    என் மருமகளை ஆரம்பம் முதல் மகனிடமும், என் கணவன், மருமகளின் வீட்டார் மற்றும் ஊராரிடம் குறைகூறி துன்புறுத்தி, இறுதியில் என் மூன்று பேரக்குழந்தைகள் அம்மா , இல்லாமல் வளர வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தான் காரணமாகி விட்டேன்.
    இப்போது தான் மூன்று உண்மைகளை உணர முடிகின்றது.
    ஒன்று : என் மாமியார் என்னைப் படுத்திய கொடுமைகள், ஏற்படுத்திய அவமானங்கள், கண்ட குறைகளினால் நான் பட்ட துன்பங்களை, மறந்து அதே தவறை என் மருமகளுக்கு எதிராக நான் செய்து விட்டேனே என்பது.
    இரண்டு: நான் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் குறைகள் மற்றும் நிறைகள் கலந்தே வாழ்கின்றனர் என்பது
    மூன்று: என் மருமகளிடம் இருந்த கணவன் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்த அன்பு மற்றும் அரவணைப்பு, உழைப்பு, பொறுப்பு, மரியாதை செலுத்தும் பாங்கு போன்ற பல்வேறு நிறைகளைக் கவனித்து அவரைப் பாராட்டத் தவறிவிட்டேன். ஆனால் என்ன செய்வது இப்போது காலம் கடந்து விட்டது. ஞானம் வந்து என்ன பலன்”.
    ஆகவே ஒருவருடைய சிறப்புகள், பெருமைகள் மற்றும் சாதனைகள் மற்றும் நன்மைகளைக் கண்டுபிடித்து பாரட்டக் கற்றுக்கொண்டால், மேற்கண்ட தீய விளைவுகளை, சண்டை சச்சரவுகளை, தற்கொலை விவாகரத்துகளை, கொலை பகை போன்ற எண்ணற்ற எதிர்விளைவுகளைத் தடுத்துவிட முடியும். அது மட்டுமல்ல ஒருவரைப் பாராட்ட பாராட்ட அவர் தன் தவறுகளை குறைத்து நன்மைகளை அதிகப்படுத்த துவங்கிவிடுவார். அத்துடன் அவருடைய செயல்திறன், மனஅமைதி, ஒத்துழைப்பு அதிகமாவதுடன் அவர் குடும்பம் அலுவலகம் அல்லது சமுதாயம் சார்ந்த அனைவரும் சிறப்பாக செயல்படும் சூழலை ஏற்படுத்த முடியும்.
    ஏன் பாரட்ட மறுக்கிறோம்?
    நம்முடைய கர்வம் அல்லது ஆணவம் நம்மை ஆட்டிப்படைக்க அனுமதித்து விட்டால், நாம் ஆணவத்தின் அடிமையாகி விடுகிறோம். அதன் பின்பு ஆணவம் நம்மை ஆட்டிப்படைக்கிறது. வழிநடத்துகிறது. ஆணவம் யாரேனும் நம்மை நல்லவர் என்று சொன்னாலோ புகழ் பாடினாலோ சந்தோஷம் கொள்கிறது.
    யாரேனும் நம்மை குறைகூறினாலோ, இகழ்ந்தாலோ, அறிவுரை கூறினாலோ போதும் அதற்கும் மேல் நம்மை விட வளர்ச்சி அடைந்தாலே போதும், நிலை குலைந்து விடுகிறது.
    அடுத்து என்ன ?
    நம்மை புகழ்ந்தவர் நன்மை செய்தாலும், தீமை செய்தாலும், நம்மை தவறாக புரியவைக்கிறது.
    நம்மை விட வளர்ந்துவிட்டவர் அல்லது (செல்வம், புகழ், அந்தஸ்தில்) தவறைசுட்டிக்காட்டியவர், நன்மை செய்தால் நம் ஆணவம் நம் புலன்களைக் கவனிக்க விடாமல் தடுக்கிறது. அவர் தவறு அல்லது தீமை செய்தால் அதை நம்மிடம் பூதாகரமாக்கி நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கின்றது. கோபமடைய வைக்கின்றது. ஆக நம் ஆணவத்திற்குப் பிடிக்காத வர்கள் மொத்தமாக தவறுகளின் தீமைகளின் மற்றும் குற்றங்களின் மொத்த உருவமாக நமக்கு தெரிய ஆரம்பித்து விடுவார்கள்.
    நம் ஞானக்கண்ணிற்கு அவர்களிடம் உள்ள எந்த ஒரு நன்மையையும் தெரிந்துகொள்ள இயலாத நிலையில், நாம் எப்படி அவர்களை பாராட்ட முடியும். இங்கு தான் நாம் ஒருவரை பாராட்டுவதை விட்டுவிட்டு குறைகாண, குற்றம் சொல்லத் துவங்குகிறோம் .
    பாராட்ட தொடங்குவோம்?
    எந்தவொரு மனிதரிடமும் (கொலைகாரராக இருந்தாலும்) நிச்சயமாக பல சிறப்புகள், மற்றும் நன்மைகள் காணப்படும். உங்களிடம் பிறரை பாராட்டும் பழக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற அவா இருந்தால், முதலில் உங்களுடைய எதிரிகள் அல்லது பிடிக்காதவர்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். பின் அமைதியான நிலையில் அவர்களை பற்றிய நல்ல விஷயங்களை, அவர்கள் செய்த நன்மைகளை, அவர்களின் நல்ல குணநலன்களை விருப்பு வெறுப்பின்றி பட்டியலிடுங்கள். இவற்றைமுழு மனதோடு பட்டியலிடத் துவங்கினால், உங்கள் ஆணவம் பயப்படத் துவங்கும் அடங்க ஆரம்பிக்கும். பின் அது உங்களைப் பிறருடைய நன்மைகளைக் கண்டுபிடித்துப் பாராட்ட அனுமதிக்கும். பிறர் நன்மைகளைக் கண்டு பிடித்து பாராட்டத் துவங்கினால் அவர்களுக்குச் சந்தோஷ சாதனை வாழ்வு சாத்தியமாகும். அத்தோடு நம் வாழ்விலும் வாசமும், வசந்தமும் வீசத் துவங்கும்.
    (மீண்டும் தன்னம்பிக்கையோடு சந்திப்போம் அடுத்த இதழில்)

    கணினி தொழில்நுட்பம்

    தேடல் இயந்திரம் (Browser)
    தேடல் இயந்திர உலகின் மன்னன் கூகுள் என்றால் யாஹூ (www.yahoo.com) தொலைதூர வித்தியாசத்துடன் இரண்டாவது இடத்திலும், மைக்ரோசஃப்டின் பிங் (www.bing.com) 3வது இடத்திலும் இருக்கின்றன. இணையம் பிரபலமாகத் தொடங்கிய காலகட்டத்தில் கொடிகட்டிப்பறந்த lycos.com, excite.com, ask.com போன்றவை இந்த போட்டியில் டெபாசிட் இழந்து பல வருடங்களாகிவிட்டன. சமுக வலைதளப் போரில் இப்போது இங்கே ஹிட் ஃபேஸ்புக் (www.facebook.com) மைஸ்பேஸ் (www.myspace.com), டேக்ட் (www.tagged.com) போன்றவை கடும் போட்டியிடுவது இரண்டாவது இடத்திற்கே.
    நிறுவப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் 300 மில்லியன் பயனீட்டாளர்களை சம்பாதித்துக் கொண்டிருக்கும் பேஸ்புக் தளத்துக்கு இணைய வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இணையம் முழுவதும் உலவித் தகவல்களை சேகரிக்கும் தேடல் இயந்திரங்களின் மிகப்பெரிய சவால், லேட்டஸ்டான தகவல்களை தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில் கொண்டுவருவது.
    Google கூகுளை அதிகம் பயன்படுத்துபவருக்குக் கூகுள் சாதாரண வலைதளங்களைவிட வலைப்பதிவு (Blogs) பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தெரிய வரும். பாரம்பரிய வலைதளங்
    களைவிட வலைப்பதிவுகள் தகவல்களை வேகமாக பிரசுரிக்க முடியும் என்பதால் இந்த முக்கியத்துவம். திறம்பட வேகமாக தொகுக்கும் திறன் மட்டுமல்லாது, பொருத்தமான தளங்களை ஒரு தேடல் தளம் அடையாளம் காட்டுவது பயனீட்டாளர்களுக்கு முக்கியம்.
    ஆனால் சமுக வலைதள நிறுவனங்களிடமிருந்து பயனீட்டாளர்கள் எதிர்பார்ப்பது சற்றேவித்தியாசமானது. தனது நட்பு வட்டாரத்தின் (Social Graph) செயல்பாடுகளை உடனுக்குடன் வேகமாகத் தெரிந்துகொள்வதை பயனீட்டாளர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை எவ்வளவு விறுவிறுப்பாக கிரகித்துக்கொள்ளமுடியுமோ அந்த சமுக வலைதளங்களுக்கு வெற்றிபெரும் வாய்ப்பு அதிகம். அதனால் தான் பேஸ்புக் நிறுவனம் இந்த தளத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் கூகுள் , பேஸ்புக் இரண்டின் பிசினஸ் மாடல்களுக்குமே சவாலாக வந்திருப்பது தங்ஹப் பண்ம்ங் ரங்க்ஷ கண நேர இணையம் என்று இதை அழைக்கலாம். இதன் நோக்கம் நட்பு வட்டாரத்தின் உரையாடல் மட்டுமல்ல இணையத்தின் பயனீட்டாளர்கள் எவருடைய தகவல்களையும் அந்த நொடிப்பொழுதில் தேடித்தர முடிகிறஇந்த காண்செப்ட்டின் தாக்கம் டிவிட்டரின் பிரமாண்ட வெற்றியால் தெரியும்.
    டிவிட்டரில் யார்வேண்டுமானாலும் எவருடைய டிவிட்டர் பக்கத்தையும் படிக்கலாம். டிவிட்டர் ஒரு தனிப்பட்ட வலைதளம் மட்டுமல்லாது அதில் பதிவாகும் டிவிட்டுகளை மற்றவலைதளங்களுக்கும் மென்பொருட்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள இடமளிப்பதால் பெரும்பாலான டிவிட்டுகள் நீங்கள் அனுப்பிய சில நொடிகளில் பலதரப்பட்ட வலைதளங்களில் பதிவாகிவிடும். ஆனால் டிவிட்டரில் பிரைவஸி என்பது பூஜ்யம். ஆனால் கணநேர இணையம் இன்டர்நெட் தொழில்நுட்பத்தின் அடுத்த யுகம். கூகுள் போன்றதேடல் இயந்திர நிறுவனங்களும், பேஸ்புக் போன்றசமுக வலைதள நிறுவனங்களும் டிவிட்டரின் பிரமாண்டத்தைக் கண்டு மிரண்டு தமது வலை தளங்களை கணநேர இணையத்திற்கு மாற்றமுயற்சித்துள்ளது.
    Logoff …
    திறமைக்கு மரியாதை www.zoogoo.com
    உங்கள் திறமைக்கு ஏற்றமேடை அமைத்துக்கொடுக்கும் தளம். புகைப்படம், அனிமேஷன், கட்டுரை, கவிதை என உங்களின் படைப்புகளை இணைத்து பாராட்டு வாங்கலாம். உங்களின் இசை, கவிதை, விளையாட்டு, பேஷன் டிசைனிங் என பலதரப்பட்ட துறைகளில் உங்களுக்குள் ஒளிந்திருக்கும். திறமையை வீடியோ வடிவில் இங்கு அப்லோடு செய்தால் உங்கள் திறமைக்கு மதிப்பெண் வழங்கி விமர்சனமும் செய்கிறார்கள். உங்களை இன்னும் எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று வகுப்பும் எடுக்கிறார்கள்
    சுடச்சுடஉலகம்! www.newspaperindex.com
    உலகச் செய்திகளை அறிய ஆசையா? 200 நாடுகளைச் சேர்ந்த செய்தித்தாள்களின் தளங்களுக்கான லிங்க் இங்கே உண்டு. இந்த இணைய பத்திரிக்கைகள் எதற்குமே நீங்கள் சந்தாதாரர் ஆக வேண்டியதில்லை. அப்படியே படித்துக்கொள்ளலாம். வார, மாத இதழ்களின் செய்திக் கட்டுரைகள், உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உண்டு

    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

    தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை விபரங்களின் வரிசையில் கடந்த இதழில் அறியப்பட்ட சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகளின் தொடர்ச்சியாக இந்த இதழில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு துறையின் விபரங்களை அறியலாம்.
    எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை(EEE)
    ஒவ்வொருவரின் வாழ்விழும் தினசரி உபயோகத்தில் உள்ள தொலைக்காட்சி, குளிர்விப்பான், மோட்டார், ஜெனரேட்டர் மற்றும் மின்சாரம் போன்றவற்றின் உற்பத்தி, செயல்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய படிப்பே இத்துறையினரின் ஆற்றலாகும்.
    வருங்கால மின் உற்பத்தி தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான செயல்திட்டத்தின் வாயிலாக எலக்ட்ரிக்கல் பொறியாளர்களின் தேவைப்பாடு அதிக அளவில் இருக்கும். நாட்டில் அனைத்து தொழில் துறையும் மின்சாரத்தினை நம்பியிருப்பதனால் அரசுத்துறை மட்டுமல்லாது தனியார் துறையினரும் காற்றாலை, சூரிய ஒளி, மின்சாரம் போன்றவற்றால் உற்பத்தியாகும் மின்சாரம் தனது தேவைக்கும், மிதமானவை பொது உபயோகத்திற்கும் பயன்படுத்துவதனால் வருங்காலத்தில் அதிக அளவிலான தனியார் துறைவேலை வாய்ப்புக்களும் உள்ளன.
    தமிழ்நாட்டில் சுமார் 410-க்கும் மேற்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் துறையில் சுமார் 26,700 இடங்களும், மாணவ மாணவிகள் என இரு பாலரின் போட்டியில் இத்துறை தேர்வு செய்யப்படுவதும், இத்துறையின் சீரான வளர்ச்சியும், துறையின் வேலை வாய்ப்புக்களும் தற்போதைய சூழ்நிலையில் இதன் தேர்வு மாணவர்களின் சரியான முடிவாகும். தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கையில் 2006ம் ஆண்டு 56% மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து இத்துறையானது தற்பொழுது 2010ம் ஆண்டில் 90% மேலான இடங்களை நிரப்பப்பெற்றுள்ளது. மாணவர்களின் தேர்வின் அடிப்படையில் இத்துறை4ம் இடத்தில் இருக்கின்றது.
    Power Systems, Power Electronics, Embedded System, Applied Electronics, VLSI Design, Avionice, Space Science போன்றமுதுகலை (M.E.) படிப்புகளையும், தமிழ்நாடு மன்சார துறையில் Junior Engineer (J.E.) மற்றும் Assistant Engineer (A.E.) போன்ற அரசு வேலை வாய்ப்புகளும், தனியார் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்களும் இத்துறைமாணவர்களின் எதிர்கால நம்பிக்கைகள் ஆகும்.
    பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவையில் அளிக்கப்படும் Sandwich Course எனப்படும் 5 வருட பொறியியல் பட்டப் படிப்பில் அதிக அளவிலான செய்முறை அறிவை பெறுவதன் வாயிலாக சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது அதிக அளவில் பண்நாட்டு தகவல் தொழில்நுட்ப துறைகளும் கணினி துறை மாணவர்களுக்கு இணையாக எலக்ட்ரிக்கல் துறை மாணவர்களைப் பணிக்கு தேர்வு செய்வதன் மூலம் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
    எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைதொடர்புத்துறை (ECE)
    மனிதர்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவு, உடை மற்றும் உறைவிடம் என்பதற்கு அடுத்தபடியாக செல்போன் எனப்படும் தகவல் தொலைத்தொடர்பு சாதனம் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக திகழ்கின்றது. பொறியியல் படிப்பில் இத்துறையில் மட்டும் தொலைத்தொடர்பின் அறிவைப் பெறுவது இத்துறையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் விளங்க வைக்கின்றது.
    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை பள்ளி மாணவர்களின் தேர்வில் முதல் இடத்தில் இருப்பதும், ஆண்டுதோறும் எந்தவொரு தொய்வும் இல்லாமல் 95% மேற்பட்ட இடங்களை நிரம்பப் பெறுவதும், இதன் வலிமையை மாணவர்களுக்கு உணர்த்துகின்றது. பெரும்பாலும் அனைத்து கல்லூரிகளும் அதிக இடங்களை (120) பெற்றிருப்பதினால் தமிழ்நாட்டில் சுமார் 40,000 மேற்பட்ட இடங்களுடன் முதல் தரவரிசையை இத்துறை வகிக்கின்றது.
    ஒவ்வொரு வினாடியும் புதுப்புது தகவல்களை இத்துறை மாணவர்களுக்கு வழங்குவதனால் என்றுமே இது ஒரு சிறப்பான இடத்தை கொண்டிருக்கின்றது. தற்பொழுது அனைத்து தரப்பு மக்களாலும் நன்கு அறியப்பட்ட 2எ அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அதன் பொருள் மதிப்பு இத்துறைசெல்வச் செழிப்பை அறிவிக்கின்றது. இந்நேரத்தில் கல்வி ஆலோசகர் ஆகிய நானும் இத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றவன் என்பதில் பெருமை அடைகின்றேன்.
    இத்துறைமாணவர்கள் Embedded System, VLSI Design, Medical Electronics, Optical Communication, Communication System, Avionics மற்றும் Network Engineering போன்றஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த முதுகலை பொறியியல் (M.E.) படிப்பதற்கான வாய்ப்புக்களை பெற்றுள்ளனர்.
    தமிழ்நாட்டில் அதிக அளவில் 470 மேற்பட்ட கல்லூரிகளும், அவற்றில் சுமார் 40,000 மேற்பட்ட இடங்களும் அதிகமான எண்ணிக்கையுள்ள மாணவர்களின் இத்துறை ஆர்வத்தினை பூர்த்தி செய்கின்றன.
    சிறப்பான கல்லூரிகளின் பெயரும் துவங்கப்பட்ட ஆண்டும்
    1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 1946
    2. மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை 1946
    3. ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி 1969
    4. அரசு பொறியியல் கல்லூரி, கோவை 1968
    5. அரசு பொறியில் கல்லூரி, சேலம் 1973
    6. அரசு பொறியில் கல்லூரி, திருநெல்வேலி 1981
    7. அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை 1970
    8. பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை 1968
    9. தியாகராசர் பொறியில் கல்லூரி, மதுரை 1978
    மாணவர்களின் மனதில் தற்பொழுது எழும் ஐயத்தினை என்னால் உணர முடிகின்றது. ஐயா, நீங்கள் எப்படிப்பட்ட பொறியியல் துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதனை கூறினீர்கள், ஆனால் எப்படி ஒரு பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்வது?
    தரமான ஒரு பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்யும் முன் கீழ்கண்ட குறிப்புகளைத் கவனத்தில் கொள்வோம்.
    · குறிப்பிட்ட கல்லூரிகளில் தான் தேர்வு செய்யவிருக்கும் பிரிவு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    · தாங்கள் தேர்வு செய்த கல்லூரியில் தகுதியான, நிலையான ஆசிரியர்கள் உள்ளனரா?
    · குறிப்பிட்ட பொறியியல் துறைக்கு முதுகலை பட்ட படிப்பு அக்கல்லூரியில் உள்ளதா?
    · குறிப்பிட்ட துறைக்கு Accreditation எனப்படும் துறைசார்ந்த தரச்சான்று பெற்றுள்ளதா?
    · மாணவர்களின் வேலை வாய்ப்புகளில் கல்லூரியின் செயல்பாடு எப்படி உள்ளது?
    · மாணவர்களின் தேவைகள் கல்லூரி நிர்வாகத்தினரால் உணரப்படுகின்றதா?
    மேலும் பல துறை தகவல்களுடன் அடுத்த இதழில்…

    தோல்வி 1 கேள்விகள் 4

    தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவரும் சந்தித்தே ஆக வேண்டிய சங்கடமான விஷயம். ஒருமுறைகூட வாழ்க்கையில் தோல்வியே அடையாத மனிதன் எவருமே இருக்க முடியாது. கொஞ்சம் அசந்தாலும் மனிதனை, தலையில் ஓங்கி அடித்து உட்கார வைத்து விடக்கூடியது தோல்வி.
    எப்படி அதைச் சமாளிப்பது? எப்படி அதிலிருந்து மீள்வது?
    தோல்வியிலிருந்து உங்களைத் தூக்கிவிட இதோ, நான் தரும் நான்கு கேள்விகள்.

    முதல் கேள்வி
    இந்தத் தோல்வி எதனால் வந்தது?
    வழக்கமான சில பதில்கள்:
    · அரைகுறைத் தகவல்கள்
    · சரியான மனிதர்களை அணுகாதது
    · சரியான நேரத்தில் அணுகாதது
    · சரியான செயல்திட்டங்கள் இல்லாதது
    · முயற்சிகளில் முழுமையாக இறங்காதது
    · பொறுப்பில்லாத மனிதர்களிடம் பொறுப்பைக் கொடுத்தது
    · முழுமையான ஈடுபாடு இல்லாதது
    இது அலசல். அலசலின் முடிவில் சரியான காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.
    2ம் கேள்வி
    இந்தத் தோல்வி கற்பித்த பாடம் என்ன?
    தோல்வியின் காரணங்கள் இவை என்று தெரிந்து கொண்டாலே, கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவை என்றும் தெரிந்துவிடும். அந்தப் பாடங்களை மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.
    எதற்காக?
    மீண்டும் அதே தவறை, அதைப் போன்றதவறைஎந்தக் காலத்திலும் செய்யக் கூடாதல்லவா? அதற்காக.
    3ம் கேள்வி
    இந்தத் தோல்வியால் ஏற்பட்ட இழப்பு என்ன?
    · பணம்? பரவாயில்லை மீண்டும் பல மடங்கு சம்பாதித்து விடலாம்
    · புகழ்? இதையும் மீண்டும் பெற்றுவிடலாம்
    · உடல்நலம்? இதுவும் மீண்டும் பெறக்கூடியதே
    · காலவிரயம்? ஆகா. இது ஒன்றுதான் மீட்கமுடியாதது. என்ன செய்வது, ஏற்றுக் கொள்வோம்
    · தன்னம்பிக்கை? இதை, இதை மட்டும் குறைய விடக்கூடாது. இழந்துவிடக் கூடாது. இது இல்லாமல் எதையும் மீட்க முடியாது.
    ஆக, எப்படிப்பட்ட இழப்பானாலும், எவ்வளவு பெரிய இழப்பானாலும் தன்னம்பிக்கை, தைரியம் இவற்றைமட்டும் இழந்துவிடக் கூடாது.
    இந்த மூன்று கேள்விகளோடு, அந்தத் தோல்வியை, அந்தத் தோல்வி சம்பந்தமான நிகழ்ச்சியை சுத்தமாக மனதிலிருந்து கழுவிவிட வேண்டும். இறந்தவரை எடுத்துச் சென்றபின் வீட்டைக் கழுவி விடுவதுபோல.
    4ம் கேள்வி
    எப்படி இதை ஈடுகட்டுவது?
    ரொம்ப சுலபம். காலிக் குடத்தில் உள்ள காற்றைதண்ணீர் ஊற்றிவிரட்டுகூது போல, அறையில் உள்ள இருளை, அகல்விளக்கு கொண்டு விரட்டுவது போல, தோல்வியை ஈடுகட்டுவதற்கு ஒருவெற்றிதான் வேண்டும்.
    · அதற்கு, மூளையைக் குடைந்து யோசிக்க வேண்டும். அதற்காக, வருடக்கணக்காக யோசிக்கக்கூடாது.
    · புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
    · புதிய வலிமைகளைச் சேர்க்க வேண்டும்
    · நுணுக்கமாய்த் திட்டமிட வேண்டும்.
    · புதிய தெம்புடன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்
    கேள்விகள் முடிந்தன. பதில்கள் கிடைத்தன. தெளிவு பிறந்துவிட்டது. வழிதெரிந்து விட்டது. அதாவது, சிந்தனை முடிந்துவிட்டது. இனிசெயல் தான்.

    போட்ட திட்டங்களின்படி, தாமதமின்றி காரியத்தில் இறங்க வேண்டும். காரியங்களை முடிக்க வேண்டும்.
    மீண்டும் சொல்கிறேன்.
    · தோல்விகள் தவிர்க்க முடியாதவை; ஆகவே வருந்த வேண்டாம்
    · தோல்வியிலிருந்து மீள வேண்டும்; ஆகவே மன உறுதி வேண்டும்
    · தோல்விகளை ஈடுகட்ட வேண்டும்; ஆகவே மீண்டும் முயற்சிக்க வேண்டும்
    · தோல்வி – மீண்டும் முயற்சி செய்.
    ஆகவே,
    தோல்வி கண்டால் நின்று விட வேண்டாம். தொடர்ந்து நடை போடுங்கள். வெற்றி தொட்டுவிடும் தூரம் தான்.

    உடலினை உறுதிசெய்

    உங்களது தந்தையாரைப் பற்றியும், தாயாரைப் பற்றியும், சகோதரர்களைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும், உங்களுக்குத் திருமணமாகி இருந்தால் மனைவி மக்களைப் பற்றியும் நன்றாக உங்களுக்குத் தெரியும். இவர்களுடன் நீங்கள் அன்றாடம் உரையாடுகிறீர்கள், உறவாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவர் உண்டு. அவரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
    உங்களது அறையின் கதவை மூடிக்கொள்ளுங்கள். அறையில் உள்ள நிலைக்கண்ணாடி முன்போய் நின்று கண்களை மூடிக்கொள்ளுங்கள். சைலேந்திரபாபு ஒருவரை அறிமுகப்படுத்துவதாக சொன்னாரே அவர் யாராக இருக்க முடியும்? என்று கற்பனை செய்து பாருங்கள். அப்பாவா? அம்மாவா? சகோதரனா? சகோதரியா? நண்பனா?
    இப்போது உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். கண்ணாடியில் ஒருவர் தெரிவார். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் வேண்டியவர் இவர். இவரைத்தான் நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இவருடன்தான் நீங்கள் உங்கள் வாழ்நாளை கழிக்கிறீர்கள். இவருடன் தான் நீங்கள் அதிகம் உரையாட வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அன்றாடம் நீங்கள் உரையாடல் நடத்துவதும் அவருடன்தான். ஆனால் அந்த உரையாடல் சுயஉணர்வோடு (Conscious) கூடிய உரையாடலாக இருக்க வேண்டும். யார் இவர்? இவரது இலட்சியம் என்ன? எப்படிப்பட்ட திறமைகள் இவரிடத்தில் இருக்கிறது? இவரது குறைபாடுகள் என்ன? இவரது உடற்கட்டு எப்படி இருத்தல் வேண்டும்? என்று கேள்விகளைக் கேளுங்கள்.
    நாம் நம்மோடு உரையாடி முடித்த பின்னரே மற்றவர்களோடு உரையாடுகிறோம். நம்மோடு நாம் உரையாடுவது உண்மையுள்ளதாக இருந்தால்தான் மற்றவர்களோடு உள்ள உரையாடலும் உண்மையுள்ளதாக இருக்கும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். முதலில் நாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய கல்வியே சிறந்த கல்வி.
    உண்டது போதும் என்று நமது உடல் சொன்னால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் செயல் வேண்டாம், நான் இதற்குத் தயாராக இல்லை என்று உடல் மறுத்தால் வீம்புக்காக அச்செயலை செய்யக்கூடாது. உடலின் பேச்சைக் கேட்க வேண்டும். அதன்படி நடக்க வேண்டும்.
    பசி இல்லை என்று உடல்சொன்னால் ஏன் சாப்பிட முந்துகிறீர்கள். ஓய்வு வேண்டும் என்று உடல் சொல்லும்போது ஏன் இரவில் சினிமா பார்க்கிறீர்கள். நெஞ்சில் வலி என்று உடல் ‘சிக்னல்’ தரும்போது அது வாயுத்தொல்லை என்று ஏன் அலட்சியம் செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலோடு சரியாக உரையாடுவதில்லை.
    வீட்டில் ஒரு நிலைக்கண்ணாடி வைத்து தினமும் உங்களைப் பாருங்கள். உணவு கட்டுப்பாட்டின் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும், போதுமான ஓய்வின் மூலமும் உடற்கட்டு தேறியிருந்தால் நீங்களே உங்களைப் பாராட்டி மகிழுங்கள்.
    அப்படியே வந்து உங்களது எடையைப் பாருங்கள். அதற்காக இன்றேஎடை காட்டும் கருவி ஒன்று வாங்கிவிடுங்கள். எடை ஒரு கிலோ குறைந்ததும் உங்களுக்கு நீங்களே ஒரு பாராட்டு விழாவை நடத்துங்கள். Celebrate your body. வழக்கமாக சாப்பிடுவதைவிட குறைவாக உண்ட அன்று உங்களுக்கு நீங்களே பரிசு வழங்குங்கள்.
    தீபாவளி, பொங்கலை கொண்டாடுவது போல திருத்தி அமைத்த உங்களது உடலைக் கொண்டாடுங்கள்.

    நீயும் நானுமா? கண்ணே…. நீயும் நானுமா?

    கணவன் மனைவி உறவு என்பது மற்றஎல்லா உறவுகளுக்கும் அப்பாற்பட்டது. தாய், தந்தை, குழந்தைகள், கூடப்பிறந்தவர்கள் இப்படி எந்த உறவாக இருந்தாலும் அவர்களோடு கழிக்கும் காலத்தைவிட நமது துணையோடு நாம் இருக்கும் காலம்தான் அதிகம். அதனால் இந்த இதழில் கணவன், மனைவி உறவில் இருக்கும் சில சவால்களைப் பற்றி பார்ப்போம்.
    கமலும், சுந்தரியும் புதிதாக கல்யாணம் முடித்தவர்கள். புதுமணத்தம்பதிகள். முதல் ஆறு மாதங்கள் மிகவும் இனிமையாகச் சென்றது. பிறகு இருவருக்கும் சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. சின்ன விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை. ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
    பல புதுமணத்தம்பதிக்குள் இந்த சூழல் ஏற்படுவது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. இது எதனால் என்று பார்க்கலாம். கமல், சுந்தரி வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
    ஒருநாள் ஒரு கடினமான தினத்தை எதிர்கொண்டு மிகவும் களைப்பாக வீடு வருகிறாள் சுந்தரி. அன்றைய தினம் நடந்ததைப் பற்றி கணவனிடம் கூறி சிறிது தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள நினைக்கிறாள்.
    சுந்தரி கூறுகிறாள், “நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருந்தது. எனக்கென்று நேரமே இல்லை” என்கிறாள். அதற்கு கமல் “பேசாமல் வேலையை விட்டுவிடு. இவ்வளவு கஷ்டப்படுவதைவிட வேலையை விட்டுவிடலாம்” என்கிறான். அதற்கு சுந்தரி “ஆனால் எனக்கு என் வேலை மிகவும் பிடிக்கும். மேலதிகாரிகள் எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்யச் சொல்கிறார்கள். அதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்கிறாள். கமல் “அவர்கள் கூறுவதை எல்லாம் பொருட்படுத்தாதே, உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்” என்கிறான்.
    சுந்தரி “நான் அதைத்தான் செய்கிறேன். இன்று என் நெருங்கிய தோழியை தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகக் கூறி இருந்தேன். ஆனால் முடியவில்லை” என்கிறாள். அதற்கு கமல் “கவலைப்படாதே, அவள் புரிந்து கொள்வாள்” என்கிறான். சுந்தரி “இல்லை, அவள் ஒரு பெருங்கவலையில் இருக்கிறாள். இப்பொழுதுதான் நான் அவளுக்குத் தேவை” என்கிறாள். மிகவும் கோபமடைகிறான் கமல். “இப்படி எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தாள், நீ சந்தோஷமாக இருக்கவே முடியாது” என்று கூறுகிறான். இதனைக் கேட்ட சுந்தரி கோபமாக “நான் ஒன்றும் கவலையாக இல்லை, நான் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாதா?” என்கிறாள். “நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்” என்கிறான் கமல்.
    இந்த நீண்ட உரையாடலுக்குப் பிறகு சுந்தரி மிகவும் எரிச்சல் அடைகிறாள். சுந்தரி நீண்ட கடின நாளை எதிர்கொண்டதால் ஆறுதல் தேடி வீட்டிற்கு வருகிறாள். கமலும் அப்படித்தான். அவளுக்கு நல்ல தீர்வுகளைத் தருவதாக நினைத்துக் கொள்கிறான்.
    இந்த இடத்தில் கவனித்தால் ஆண் என்ன செய்கிறான்?
    ஒரு சில பதில்களில் பெண்ணின் உணர்வுகளை மாற்றமுயற்சிக்கிறான். அவள் என்ன கூறுகிறாள் என்பதை முழுதாகக் கேட்காமல் தீர்வு கொடுக்க நினைக்கிறான். பொதுவாகவே நாம் என்ன கூறுகிறோம் என்பதைக் காது கொடுத்து கேட்கும் நபரைத் தான் பெண்களுக்குப் பிடிக்கும்.
    இந்த சூழலில் சுந்தரி என்ன கூறுகிறாள் என்பதை முழுவதும் கேட்டுவிட்டு பிறகு “பரவாயில்லை, சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, உன் தோழியை அழைத்துப் பேசு” என்று ஆறுதலாகக் கூறியிருந்தால் எல்லாமே தலைகீழ், இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.
    அடுத்ததாக, இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். சுந்தரியும், கமலும் ஒரு கல்யாணத்திற்குக் காரில் செல்கிறார்கள். ஒரு இடத்தில் எப்படிச் செல்ல வேண்டும் என்றகுழப்பம் ஏற்படுகிறது. “யாரையாவது கேட்கலாமே” என்றாள் சுந்தரி. கமல் தன்னிச்சையாக ஒரு வழியில் செல்கிறான். 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் வந்த வழியிலேயே வருகிறார்கள். எரிச்சல் அடைந்த சுந்தரி, “இதற்குத்தான் யாரையாவது கேட்கலாம்” என்று கூறினேன். கல்யாண வீட்டில் யாரையாவது போனில் அழைத்துக் கேளுங்கள்” என்று கூறுகிறாள். கூறியதோடு அல்லாமல், அவளே யாரையோ அழைத்துக் கேட்டு வழி கண்டுபிடித்து சரியான நேரத்திற்கு கல்யாண வீட்டை அடைகிறார்கள். அன்று முழுவதும் கமல் ‘அப்செட்’ஆக இருக்கிறான். சுந்தரி நினைக்கிறாள், “நாம் அவனுக்கு உதவி தானே செய்தோம்” ஏன் ‘அப்செட்’ஆக இருக்கிறான் என்று.
    இங்கு நாம் எதை கவனிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு இது போன்றதருணங்களில் தரும் அறிவுரை, எதிர் விளைவுகளைத் தரும். தன்னை நம்பாமல் இவள் அறிவுரை செய்கிறாள் என்று எண்ணுவான். பொதுவாகவே ஆண்களுக்கு அறிவுரை கூறுவது பிடிக்காது. அதுவும் இதுபோன்றதருணங்களில் சுத்தமாகப் பிடிக்காது. ஆண்களுக்குத் தன்னுடைய இலக்கை எந்த உதவியும் இல்லாமல் தானே அடைய வேண்டும் என்று எண்ணுவார்கள். அது கார் ஓட்டுவது போன்றசிறிய விஷயமாக இருந்தாலும் அப்படித்தான்.
    மேற்கூறிய சம்பவத்தில், சுந்தரி என்ன செய்திருக்க வேண்டும். எந்தவித குறுக்கீடும் செய்யாமல், பேசாமல் இருந்திருக்க வேண்டும்.
    கணவன், மனைவி உறவில் பொதுவாக நாம் செய்யும் இரண்டு முக்கியமான தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
    1. பெண் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை எண்ணிப்பார்க்காமல் அவள் என்ன கூறுகிறாள் என்பதைக் காதில் வாங்காமல், ஆண்கள் நல்ல தீர்வு கூறுவதாக எண்ணிக் கொண்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது.
    2. ஆண் தவறு செய்யும்போது தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் உதவி செய்வதாக எண்ணிக் கொண்டு, பெண் அறிவுரை செய்தால், கண்டிப்பாக அது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
    இந்த இரண்டையும் மனதில் கொண்டு பரஸ்பரம் இருவரும் அவரவர் உணர்வுகளை மதித்து செயல்பட்டால் நிச்சயம் குடும்பத்தில் பல சச்சரவுகளைத் தவிர்க்கலாம்.