தேர்வில் வெற்றியை வென்றிடுவோம்
மாரிமுத்துராஜ் A.G on Feb 2011
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக் கூட, தேர்வுகள் வந்துவிட்டால் உதறல்தான், என்ன கேட்பார்களோ, என்ன எழுதுவதோ, என்றபயம் இருந்தபடியே இருக்கும். சுமாராகப் படிப்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பரீட்சை ஏன் தான் வருகின்றதோ, என அலுத்துக் கொள்வார்கள். நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். இது மாற்றப்படாத ஒரு விதியாகும். எனவே மாணவப் பருவத்தில், தேர்வுகளைச் சந்திப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால் தைரியமாக தேர்வுகளை அணுகலாம் என்பது மட்டுமல்ல, தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் பெறமுடியும்.
படிக்காமல் தேர்வுகளைச் சந்திக்கும் துணிவு வராது. அது சரி ஆனால் எப்படி படிப்பது என்கிறீர்களா? எப்படிப் படித்தாலும் ஒன்றும் நடக்கமாட்டேன் என்கிறது, என புலம்பும் மாணவர்களும், இனி கவலைப்பட வேண்டாம். இங்கே கொடுக்கப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். வரும் தேர்வுகளில் உங்களை அறியாமலே அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பீர்கள்.
முதலில் நாம் படிக்க உட்கார்ந்தால், பல விஷயங்கள், நமது படிப்பைக் குலைக்கும் சக்திகளாகச் செயல்படுகின்றன. அவற்றை இனி பார்ப்போம்.
· பயம்
· மன நெருக்கடி
· கவனச் சிதறல்கள்
· தாழ்வு மனப்பான்மை
· அதீத நம்பிக்கை
· படிக்கும் திட்டம் இன்மை
· மனதை ஒரு முகப்படுத்தாமை
· மன உறுதியின்மை
· வெற்றி பெறுவதில் ஆசையின்மை
பாடத்தின் முதல் பத்தியையும், பின்னர் கடைசி பத்தியையும் படியுங்கள். அது அப்பாடத்தின் நோக்கத்தையும், சாராம்சத்தையும், உங்களுக்குச் சொல்லும்.
பாடத்தின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ள முக்கியத் தலைப்புகள் அனைத்தையும் படியுங்கள். இது அந்தப் பாடம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை சொல்லும்.
பாடம் முழுவதையும் ஒவ்வொரு பத்தியின் முதல் வாக்கியங்களை வாசித்துப் பாருங்கள். இது அந்தந்தப் பத்தியில் கூறப்படும் கருத்துக்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கும்.
இனி அந்தப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்கள், அருஞ்சொற்பொருள், சொல்லப்பட்டுள்ள முக்கியக் கருத்துக்கள் என்னென்ன என நீங்கள் கருதுவதை, ஒரு குறிப்பு புத்தகத்தில் எழுதுங்கள் எல்லாம் ஓரிரு வார்த்தைகளில் வரிசைப்படுத்தி எழுதினால் போதும்.
இப்போது நீங்கள் எந்த ஏற்பாடுமின்றி, பாடத்தைப் படிக்கவே தொடங்கவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பத்து தடவை, பாடத்தின் முன்னும் பின்னும், கண்களை படரவிடுங்கள். இப்போது நீங்கள் அறியாமலேயே பாடத்தின் 50 – 60 சதவீதம் உங்களுக்குள் பதிவாகி இருக்கும்.
இனி, நீங்கள் மேலே சொன்னபடி பாடத்தை ஒருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள். பாடம் எளிதாகப் புரிவதுடன் மிக ஆழமாக மனதில் பதியும்.
தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள
1. ஆசிரியர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட பாடத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்களை நீங்கள் சரியாக எழுதிவிட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
2. உங்களது மொத்தப் பாடங்கள் எவ்வளவு? அதை எப்படி தேர்வுக்கு முன்னர் படித்து திருப்பம் செய்வது என்பது குறித்த திட்டம் தேவை.
3. தேர்வுக்காக படிப்பது என்பது தினமும் செய்யவேண்டிய ஒரு வேலை,திரும்பத் திரும்ப படிக்கும்போது, குறிப்புகளை புரட்டிப் பார்க்கும் போது பிடித்த விஷயங்கள் எளிதாக மனதில் தங்கும், தினமும் படிப்பதால் மொத்தப்பாடங்களையும் மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கும் நேரமும் குறைந்து விடும்.
4. சிலர் பரீட்சை வந்துவிட்டால் வகுப்பு
களுக்குப் போகாமல் வீட்டில் இருந்து படிப்பார்கள், இது சரியான முறை அல்ல, ஆசிரியர்களின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை, சில முக்கியமான பாடப்பகுதிகள் கடைசி நேரத்தில் தான் விளக்கப்படும், எனவே அத்தகைய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
தேர்வுக்கு ஒரு வாரம் முன்னால் செய்ய வேண்டியது
1. இது வரை நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உங்கள் பாடநூல்கள், பிற உதவி நூல்கள், அனைத்தையும், சேகரித்து அவற்றை முறைப்படி அடுக்குங்கள். தேர்வுக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் நேரடியாக கைவசம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
2. இந்த ஒருவாரத்தில் எல்லா பாடங்களையும் படித்து முடிக்க மனதிற்கு சரியான அளவில் நேரம் ஒதுக்கி, ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். தேர்வுக்கு முன் இரண்டு தினங்கள் வெறுமனே திருப்பம் செய்வதற்கு ஒதுக்குங்கள்.
3. ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்கு நன்றாக தெரிந்த பகுதிகள், தெரியாத பகுதிகள் எது, எது என கணக்கெடுங்கள். இன்னமும் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய பகுதிகளை படிப்பதற்காக போதிய நேரம் ஒதுக்குங்கள்.
4. உங்களுக்கு நீங்களே சுய தேர்வு, உங்களுக்கு பிடித்த முறையில் வைத்துக் கொண்டு, படித்த விஷயங்களைச் சொல்லி எழுதிப்பாருங்கள்.
5. அன்றாடம், ஆசனங்கள், உடற்பயிற்சிகள், தியானங்கள் மூலம் மனத்தையும், உடலையும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள் இவற்றை தொடர்ந்து செய்யுங்கள். பதட்டம் குறையும், படிப்பு இனிக்கும்.
தேர்வு தினத்தன்று செய்ய வேண்டியது
1, நன்றாக தூங்கி எழும்புங்கள் உடல் அசதி, சோர்வு இருப்பின் நன்றாக தேர்வு எழுத இயலாது.
2, தேர்வுக்கு முன்னால் புதிதாக எதையும் படிக்க, மனப்பாடம் செய்ய முற்பட வேண்டாம், தெரிந்த விஷயங்களை மட்டும் மறுபடி படித்துப்பாருங்கள்.
3, நிறைய சாப்பிட வேண்டாம் அரைவயிறுக்கு சாப்பிட்டால் போதும், உணவு லேசானதாக இருக்கட்டும்,
4, தேர்வு அறைக்கு முன்னதாகவே சென்று விடுங்கள் தேர்வை நன்றாக எழுதப் போவதாக கற்பனையும், உங்களுக்குள்ளே உறுதிமொழியும் செய்துகொள்ளுங்கள்.
5, ஒருமுறை நிதானமான, ஆழமான, சுவாசப் பயிற்சியை செய்துவிட்டு மன ஒருமைப்பாடுடன் தயாராகுங்கள்.
தேர்வின் போது கவனிக்க வேண்டியவை
· மூன்று மணி நேரத் தேர்வு எனில் மூன்று மணி நேரமும் தேர்வு அறையிலேயே இருங்கள். எழுதி முடித்துவிட்டாலும் கூட, எழுதியதை மறுபடி படித்துப்பாருங்கள். சிறு சிறு தவறுகள், இருந்தால் திருத்துங்கள்.
· மற்றவர்களின் செயல்களிலே கவனத்தை செலுத்தாது உங்களுடைய வேலையிலே கண்ணும் கருத்துமாக இருங்கள்.
· கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் நிதானமாக வாசிக்கவும், கேள்விகளை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து புரிந்து கொண்டு கேள்விகளுக்கு ஏற்ற, சரியான அளவில் விடைகளை எழுதுங்கள்.
· நேர நிர்வாகம் அதி முக்கியம், ஓவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் என்பதையும் முன்பே தீர்மானித்துக் கொண்டு எழுதுங்கள், நேரம் தாண்டுகிறது எனில், அடுத்த கேள்விக்கு போய் விடுங்கள், நேரம் இருந்தால் விடுபட்ட விடையை எழுதிக் கொள்ளலாம்,
· முதலில் எளிதாக உள்ள கேள்விகளுக்கு, உங்களுக்கு நன்றாக பதில் தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். மேலும் உங்கள் கையெழுத்து, முதலிலிருந்து முடிவு வரை, ஒரே மாதிரி இருக்கட்டும், சரியான இடைவௌல் விட்டு நேர்க்கோடுகளில் தெளிவாக எழுதுங்கள்.
· முக்கிய செய்திகளுக்கு அடிக்கோடிர்டு, எழுதியதை மறுபடியும், சரிபாருங்கள். பக்க எண்கள் கேள்வி எண்கள் உங்கள் பதிவு எண் போன்றவற்றைச் சரியாக எழுதியிருக்கிறீர்களா எனப்பாருங்கள் எல்லாவற்றிக்கும் மேலாக,
தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்
வெற்றி நிச்சயம்.
4 comments Posted in Articles