– 2010 – November | தன்னம்பிக்கை

Home » 2010 » November (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    குறிக்கோளுடன் இடைவிடாமல் செயலாற்றுங்கள்

    தன்னம்பிக்கை கொள்ளுங்கள் :-

    எந்தச் செயலாக இருந்தாலும் அதை முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். தாஜ்மஹாலைக் கட்டி முடித்தானே, முகலாயப் பேரரசன் ஷாஷஹான். “உலகிலேயே இதுவரை எவரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு நினைவாலயத்தைக் கட்டி முடிப்பேன்” என்ற மன உறுதியோடு கட்டி முடித்தானே, அந்தப் பேரரசன். வண்ணக்கற்களையும், வெள்ளை நிறப் பளிங்குக் கற்களையும் வைத்து இருபதாண்டுகள் கடும் முயற்சி எடுத்துக் கட்டினானே! தன்னம்பிக்கை இல்லாமல் அவனால் இப்படிப்பட்ட காதல் மாளிகையைக் கட்டி முடித்திருக்க முடியுமா? உலகில் வாழும் எத்தனையோ பேருக்குப் பணம் இருந்தும், செய்வதற்கு மனம் இருந்தும், தான் நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்குக் காரணம், தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமையே ஆகும். “நம்மால் முடியுமா?” என்ற கேள்வியை ஒருவர் எழுப்பும் போதே, அவரால் அந்தக் காரியத்தை செய்ய இயலாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எனவே எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் நீங்கள் உங்கள் மேல் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்!

    மற்றவர்களைப் பற்றி கவலைப் படலாமா?

    நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் எண்ணுகிற போதே, தன்னம்பிக்கை ஆட்டம் கண்டு விடுகிறது. மற்றவர்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? முதலில் உங்களைப்பற்றி நீங்கள் நினையுங்கள். எதுவாக இருந்தாலும் “தான் தான்”  “தான் தான்” என்று நம்பிக்கை வைக்கும் போது, தான் நம்பிக்கை “தன்னம்பிக்கை” ஆகி விடுகிறது.

    ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். எல்லோருடைய பேச்சுக்களையும், கருத்துக்களையும் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், நீங்கள் வீட்டைக் கட்ட முடியுமா? குழம்பிப் போய் வீடு கட்டும் திட்டத்தையே கைவிட்டு விட வேண்டியதுதான்!

    தன்னம்பிக்கையைத் தரை மட்டமாக்கும் வெடிகுண்டுகள் :-

    தாழ்வு மனப்பான்மை, பயம், மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, காலம் தாழ்த்துகின்ற எண்ணம், சோம்பல், பிறருடைய விமர்சனங்களால் கவலை கொள்ளுதல், தேவையற்ற ஐயங்கள் ஆகியவைகள் தன்னம்பிக்கை என்கிற தங்கமாளிகையைத் தரைமட்டமாக்க வந்த வெடிகுண்டுகளாகும். இவைகளை நீங்கள் ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். எப்பொழுதும் நீங்கள் நல்ல எண்ணங்களை நினையுங்கள். இந்த மண்ணில் நீங்கள் நல்ல வண்ணம் வாழலாம். நீங்கள் எப்பொழுதும் வெற்றி காண வேண்டுமா? நீங்கள் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள்! எண்ணத்தில் தூய்மையும், செயலில் தூய்மையும் இருந்தால் எப்பொழுதும் உங்களுக்கு வெற்றி தான்!

    உங்களை மதிப்பவர்களை உள்ளத்தில் வைத்துப் போற்றுங்கள் :-

    உங்களுடைய எண்ணங்கள், விரைந்து செயல்படும் செயல்கள், பல்லாண்டுகள் ஆனாலும் கொஞ்சமும் மாறாத உங்கள் நற்பண்புகள், அத்தனை பேரையும் கவர்ந்திழுக்கும் அன்பு, ஆகிய யாவையும் அறிந்து உங்களை மதிப்பவர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட இயல்புடையவர்களை எக்காலத்திலும் ஒதுக்கி விடாதீர்கள். அவர்களில் பலர் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கக் கூடும். அவர்களை நீங்கள் எல்லாக் காலத்திலும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்விற்கு உத்தமமான வழிகளைக் கூறும் அவர்களை நிராகரித்து விடாதீர்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் உங்கள் வாழ்விற்குக் கலங்கரை விளக்கம் போல அமைந்திருப்பார்கள்.

    கூடவே இருந்து கொண்டு குழியைத் தோண்டும் “உத்தமர்களை நம்பாதீர்கள் :

    உங்கள் தன்னம்பிக்கையைப் பாழடிக்கும் வண்ணம், போகாத இடத்திற்கெல்லாம் கூட்டிக்கொண்டு போய், உங்களைக் கெடுப்பதுடன் உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் சிலர், ‘நண்பர்கள்’வடிவத்தில் வருவதுண்டு. அவர்கள் உங்களிடம் ‘கூடவே’ இருந்து கொண்டு உங்களுக்கு ஆழமான குழியைத் தோண்டுவார்கள். இத்தகையவர்களிடத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்! தன்னம்பிக்கை என்ற மரம் ஒன்று கூட இருக்கக் கூடாது என்று நினைத்து, அதை அழிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள்!

    பணிவு வேறு – தாழ்வு மனப்பான்மை என்பது வேறு:

    எல்லார்க்கும்   நன்றாம்   பணிதல்   அவருள்ளும்

    செல்வர்க்கே   செல்வம்   தகைத்து

    என்று பணிவின் இலக்கணத்தை வள்ளுவர் அழகாகச் சொல்கிறார். ஒருவருக்கு நீங்கள் பணிந்து போவதால், உங்களுடைய பண்பின் செழுமை, உலகத்தவர்க்குத் தெரியுமே அல்லால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவராக ஆகி விட்டீர்கள் என்று அர்த்தமல்ல! மற்றவர்கள் முன்னால் நீங்கள் உங்களை எப்பொழுதும் தாழ்த்திக் கொள்ள நினைக்காதீர்கள்!

    உயர்ந்த எண்ணம் கொண்டோரிடம் உறவாடுங்கள் :-

    இப்படிச் சொல்லும் போது தாழ்ந்த எண்ணம் கொண்டோரிடம் பழகக் கூடாது என்று பொருளல்ல. அவர்களையும் அன்பினாலே அரவணைத்துச் சென்று, உங்களுடைய உயர்ந்த பண்புகளையும், தன்னம்பிக்கை உணர்வுகளையும் அவர்களும் பெறுமாறு நீங்கள் செய்திட, ஒரு நல்ல வழி காட்டியாக நீங்கள் அமைய வேண்டும். அதே சமயத்தில் மிக உயர்ந்த எண்ணமும், நற்பண்புகளும் அமையப் பெற்றோரிடம் நீங்கள் உறவாடி உன்னதமான நட்பைப் பெற வேண்டும். தன்னம்பிக்கையின் ஆணி வேராகத்திகழ வேண்டும், நீங்கள்!

    மிகச் சிறந்த வெற்றியைப் பெறுவதற்கு நேர்மை வேண்டும் :-

    நீங்கள் வாழ்க்கையிலே மிகச் சிறந்த வெற்றியைப் பெற முடியும். தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு, நேர்மையான பாதையிலே யாரெல்லாம் சென்றார்களோ, அவர்களெல்லாம் வாழ்க்கையிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்கள் அந்த வெற்றியைப் பெற முடியாதா? பட்டம் எதுவும் பெறாமலேயே பெர்னாட்ஷா சிறந்த பேரறிஞராக விளங்கினார். படிக்காமலேயே காமராஜர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக விளங்கினார். முடமாக இருந்த நெல்சன் போரிலே வெற்றிக் கொடி நாட்டினார். வறுமையிலே பிறந்தாலும், ஜி.டி. நாயுடு கோடீஸ்வரராக விளங்கினார். இவர்களெல்லாம் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டு, நேர்மையான பாதையிலே சென்று உயர்ந்தவர்கள்!

    உங்கள் எண்ணமும், செயலும் ஒரே குறிக்கோளைப் பற்றியதாக இருக்க வேண்டும் :-

    நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியுடன் நின்று செயலாற்றினால் வெற்றி நிச்சயம். நீங்கள் உங்கள் கொள்கைகளைத் தேர்ந்தெடுப்பதில் தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. நீங்கள் எதை விரும்புகின்றீர்களோ அதைப் பலமுறை ஆராய்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். உங்களால் முடியுமா என்ற பல முறை சிந்தனை செய்தபின் ‘நிச்சயமாக முடியும்” என்ற முடிவுக்கு வருகின்றீர்கள், ஆங்கில மொழியறிவை அமோகமாகப் பெற்ற நீங்கள், மாவட்ட ஆட்சித் தலைவராக ஆவதற்குரிய தகுதிகள் என்ன, எந்த நூல்களைப் படிக்க வேண்டும்? எப்படித் தேர்வு எழுத வேண்டும் என்ற பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின், உங்கள் முழுக்கவனமும் அதிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு உங்கள் எண்ணமும், செயலும் ஒரே குறிக்கோளைப் பற்றியதாக இருந்தால், அந்தக்குறிக்கோள் உங்களுக்குப் பலனளிக்காமல் போகுமா?

    இடை விடாது செயலாற்றினால் வெற்றி கிடைக்கும்!:-

    மனைவி, மகன், மகள், நண்பர் என்று எல்லோரையும் இழந்து அநாதையாகத் தாகூர் நின்ற போதும், மன உறுதியோடு இருந்து இலக்கியப் பணியைச் செய்து வந்தார். போராட்டங்கள், பொறாமைகள்  இவைகளில் சிக்கித் தவித்தார்.  இறுதியில் “கீதாஞ்சலி” என்ற இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றுப் பாரத நாட்டின் பெருமையை உயர்த்தினார். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தாங்கள் நினைத்த குறிக்கோளில் கவனம் செலுத்தி இடைவிடாமல் செயலாற்றுபவர்களுக்கு வெற்றி உறுதியாகக் கிடைக்கும் என்பதற்கு இரவீந்திர நாத் தாகூர், சிறந்த எடுத்துக்காட்டு!

    நல்ல குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள் :-

    எதேனும் ஒரு நல்ல குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள். அந்தக் குறிக்கோள் நிறைவேற மன உறுதியோடு இடைவிடாமல் பாடுபடுங்கள்! குறிக்கோளை விட்டு விலகியிருக்கும் எவரும் எந்தச் சாதனையும் படைக்க முடியாது. நியூட்டன் புவி ஈர்ப்புத் தன்மையைக் கண்டு பிடித்தார். எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்தார். ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தார். இவைகளெல்லாம் ஒரே குறிக்கோளை விடாப்பிடியுடன் பற்றியிருந்ததுதான், இவர்கள் உயர்வுக்குக் காரணமாக அமைந்தன.

    முரளிதரன் முத்தையா இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர், இலங்கையில் நடைபெற்ற தனது இறுதி விளையாட்டில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகசாதனை புரிந்தார். விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற குறிக்கோளுடன் இடைவிடாமல் போராடி இறுதியில் வெற்றி பெற்றார்.

    குறிக்கோள் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவைப்போன்றது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் சிறிதும் இல்லாத நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பதைப் போன்றது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை மணம் இல்லாத மலரைப் போன்றது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை மாலுமி இல்லாத கப்பலைப் போன்றது. எனவே குறிக்கோளுடன் வாழ்ந்து, வாழ்க்கையிலே வெற்றி பெறுங்கள்.

    நாம் நாமாக இருப்போம்

    நம்மில் பலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு கவலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவர் எவ்வளவு செழிப்பாக வாழ்கிறார். அவரைப் போல நாம் இல்லையே என்று பிறரைப் பார்த்து கவலைப்படும் மனோபாவம். பணக்காரனை பார்த்து ஏழை இப்படி நினைக்கிறான். பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவன் பிரச்சினைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாய் உள்ளவனைப் பார்த்து கவலைப்படுகிறான். ஆரோக்கியமானவனைப் பார்த்து உடல் நலம் குன்றியவன் அவனைப் போல் நாம் ஆரோக்கியமாக இல்லையே என்று கவலைப்படுகிறான். கருப்பாக இருப்பவன் சிவப்பாய் இருப்பவனைப் பார்த்து நாம் அவரைப் போல சிவப்பாக இல்லையே என்று கவலைப்படுகிறான்.

    ஒரு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரன் முதல் பணக்காரனைப் பார்த்து அவனைப் போல நாம் இல்லையே என்று கவலை கொள்ளுகிறான். அவனுக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவன் நினைத்தால் பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனாலும் அவனுக்கும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் முதல் பணக்காரனோ உலகத்தின் முதல் பணக்காரனைப் பார்த்து கவலைப்படுகிறான். அவனைப் போல நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான். உலகின் முதல் பணக்காரன் தான் இரண்டாவது பணக்காரனாகிவிட்டால் என்ன செய்வது என்று கவலையுடனும் பயத்துடனும் நாட்களைக் கழிக்கிறான். ஆக ஏழையானாலும் சரி பணக்காரனானாலும் சரி ஒருவர் மற்றவரைப் பார்த்து அவரைப் போல நாம் இல்லையே என்று கவலைப்படுவது மனித வாழ்க்கையில் இயல்பாகிப் போய்விட்டது.

    இயற்கை எப்போதும் மாறாத தன்மையுடன் விளங்குவதாலேயே அது இன்றுவரை பழமையும் பெருமையும் மாறாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இயற்கையைப் போலவே விலங்குகளும் இயல்பான வாழ்க்கை வாழ்கின்றன. சிங்கம் புலியைப் போல வாழ எண்ணுவதில்லை. புலி யானையைப் போல வாழ எண்ணுவதில்லை. ஒருவர் பிறரைப் போல வாழ முயற்சிக்கும் போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனாலேயே மனிதன் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கிறான். விலங்குகள் பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி இயல்பாக வாழ்க்கையை நடத்துகின்றன.

    காட்டில் வசித்து வந்த ஒரு பூனைக்கு ஒருநாள் அந்த எண்ணம் தோன்றியது.

    ‘நாமும் பார்ப்பதற்கு புலி போலத்தானே இருக்கிறோம்? என்ன உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருக்கிறோம். ஆனால் நம்மைப் பார்த்து ஏன் மற்றவர்கள் பயப்படமாட்டேன் என்கிறார்கள்? புலியைப் போல நாமும் மற்றவரை உறுமி மிரட்டிப் பார்த்தால் என்ன?’

    இந்த எண்ணத்தை உடனே செயல்படுத்தியது.

    சற்று தொலைவில் ஒரு மான் மேய்ந்து கொண்டிருந்தததைப் பார்த்து அதன் அருகே போனது பூனை. பூனையைப் பார்த்துவிட்டு மீண்டும் புல்லை மேயத்தொடங்கியது மான்.

    பூனை இப்போது கோபத்துடன் உறுமி குரல் கொடுத்துவிட்டு மானைப் பார்த்துப் பேசியது.

    “ஏய். எவ்வளவு தைரியம் இருந்தா என்னைப் பார்த்து பயப்படாம புல் மேயற. நானும் புலியைப் போலத்தான். நீ எனக்கு பயந்தாகணும்”

    இதைக் கேட்ட மான் கிண்டலாய் சிரித்தது.

    “எங்கே புலியைப் போல என்னைத் துரத்திப் பிடியேன் பார்க்கலாம்”

    இப்படிச் சொன்ன மான் ஓடத்தொடங்கியது. பூனை அதைத் துரத்தியது. ஆனால் வேகமாக ஓடும் மானைத் துரத்திக் கொண்டு ஓட பூனையால் முடியவில்லை. பூனை மூச்சு வாங்கி பாதியிலேயே நின்று விட்டது.

    அடுத்தநாள் காட்டுப் பன்றி ஒன்றைப் பார்த்த பூனை அதனிடம் சென்று மானிடம் சொன்னது போலவே சொன்னது. இதைக் கேட்டு கோபமடைந்த காட்டுப்பன்றி பூனையைப் பிடித்து தூக்கி வீசியது. தொலைவில் போய் விழுந்த பூனைக்கு நல்ல காயம் ஏற்பட்டது. இப்போது அது யோசிக்க ஆரம்பித்தது.

    ‘யாரும் நமக்கு பயப்படுகிற மாதிரி இல்லை. எனவே வேறு வழியில்லை. இனி நம்மை நாம் மாற்றிக் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்கப் பார்க்கலாம்’

    இவ்வாறு அது யோசித்துக் கொண்டிருந்த போது இரண்டு எலிகள் அந்தப் பக்கம் சென்றன. பூனையைப் பார்த்து பயந்து ஓட எத்தனித்த அந்த எலிகளைப் பூனை கூப்பிட்டது.

    “நண்பர்களே. என்னைப் பார்த்து இனி நீங்கள் ஓடத் தேவையில்லை. இன்றிலிருந்து நான் உங்களைப் பிடித்து சாப்பிடப் போவதில்லை. சுத்த சைவமாக மாறிவிட்டேன். என்னை நம்புங்கள்”

    பூனை சொன்னதைக் கேட்ட எலிகள் பூனையை நம்பின. பூனை அதனிடம் அன்பாகப் பழகியது. அது சுத்த சைவமாக மாறி கிழங்குகளை மட்டுமே சாப்பிடத் தொடங்கியது.

    எலிகள் பூனையிடம் இப்போது மிகவும் சகஜமாக விளையாடின. ஒரு எலி பூனையின் காதைப் பிடித்து இழுத்துப் பார்த்தது. பூனை தூங்கிய சமயத்தில் அதன் மீது குதித்து விளையாடின. விளையாட்டு எல்லை மீறி பூனை மிகவும் கஷ்டப்பட்டது. கிழங்குகளை மட்டுமே சாப்பிட்டதால் உடல் சோர்வடைந்தது.

    பூனை இப்போது யோசித்தது.

    “எல்லோரும் நமக்கு பயப்பட வேண்டும் என்று நினைத்தது வம்பில் முடிந்தது. எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் தொல்லையாக இருக்கிறது. வேறு வழியில்லை. இனி நாம் நாமாக இருப்போம்”

    இந்த முடிவிற்கு வந்த பூனை இப்போது கோபத்துடன் எலிகளைப் பார்த்து உறுமத் தொடங்கியது. பயந்து போன எலிகள் ஓடி மறைந்தன.

    பூனை இப்போது பழையபடி நிம்மதியாக வாழத் தொடங்கியது.

    அவரை மாதிரி நாம் இல்லையே என்று ஏங்குவதைப் போலவே அவரை விட நாம் எவ்வளவோ மேல் என்ற எண்ணமும் நமது வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் தோன்றும். அது எப்போது என்றால் நாம் சிலருடைய வாழ்க்கையைப் பார்த்து அவரைப் போல வாழ்க்கை நமக்கிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக பெரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து தவித்து வேதனைப்படும் போது நமக்கு ‘அவரை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை’ என்ற எண்ணம் தோன்றும். உண்மையில் சொல்லப்போனால் மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினையும் வேதனைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அது அவரவர் தகுதியையும் வாழ்க்கை முறையையும் பொறுத்தே அமைகிறது.

    உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு அண்ணாதுரை அழைக்கப்பட்டார். எப்போதும் போலவே மிகவும் எளிமையாக இயல்பாக அங்கே சென்றார். அவருடைய தோற்றத்தைக் கண்டோர் அவரை சாதாரணமாக நினைத்து விட்டார்கள். ஒரு மாணவன் அண்ணாதுரையை ஏளனமாக நினைத்து அவரிடம் because என்ற ஆங்கிலச்சொல்லை தொடர்ந்து மூன்று முறை வருமாறு அமைத்து ஒரு வாக்கியத்தைக் கூற முடியுமா என்று கேட்டான். அண்ணாதுரை யோசிக்கவே இல்லை. உடனே சர் sentence begins with because, because, because is a conjunction என்று பதிலுரைத்தார். இன்னொரு மாணவன் அண்ணாவிடம் அஆஇஈ என்ற எழுத்துக்களே இல்லாத நூறு வார்த்தைகளை உடனே கூற முடியுமா என்று கேட்டான். அண்ணா உடனே One to Ninety Nine என்று பதிலளித்தார். அண்ணாவின் அறிவைக் கண்டு பிரமித்துப்போனார்கள் பேராசிரியர்களும் மாணவர்களும். அண்ணாவை தங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்த்திக் கொண்டார்கள். மற்றொரு முறை அண்ணா இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார். அக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க துணைவேந்தரை அழைத்தார்கள். அண்ணாவின் எளிய தோற்றத்தைக் கண்டு தவறாக எடைபோட்ட அந்தத் துணைவேந்தர் மறுத்தார். வேறொருவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, அந்தக் கூட்டத்தில் அண்ணா இரண்டு மணிநேரம் அழகான ஆங்கிலத்தில் உரையாற்றினார். அண்ணாவின் பேச்சை தனது அறையிலிருந்து கேட்ட அந்தத் துணைவேந்தர் உடனே மேடையேறி தான் இதுவரை இதுபோன்ற அற்புதமான பேச்சைக் கேட்டதில்லை என்று மனதாரப் பாராட்டினார்.

    அண்ணா எப்போதும் இப்படித்தான். எளிமையான வாழ்க்கை. அவருக்கென்று ஒரு பாணி. அவர் எப்போதும் நம்பியது அவருடைய அறிவைத்தான். அதுதான் அவருக்கு உயர்வைத் தேடித்தந்தது. மிகப்பெரிய மனிதர்கள் எல்லாம் ஒருபோதும் அவரைப் போல நாம் இல்லையே என்று எண்ணி ஏங்குவதே இல்லை.

    கடவுள் புழு பூச்சி முதல் மிகப்பெரிய யானை வரை அனைத்தையும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைத்திருக்கிறார் என்று திடமாக நம்புங்கள். அவரைப் போல நாம் இல்லையே என்று எண்ணி எண்ணி அற்புதமான வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள். அனைவருக்கும் திறமை இருக்கிறது. அனைவருக்கும் ஆற்றல் இருக்கிறது. அனைவருக்கும் சாதித்து உயரக்கூடிய தகுதி இருக்கிறது. அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள்தான். இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் ஒரே நாளில் பிச்சைக்காரர்களைவிட மோசமான நிலைக்கு வருவதைப் பார்க்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் புஜ் என்ற இடத்தில் மிகமோசமான பூகம்பம் ஏற்பட்டபோது இந்த நிலை பலருக்கு ஏற்பட்டது. அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாதவர்கள் சிலர் எதிர்காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாய் ஆவதையும் நாம் பார்க்கிறோம். ஒரு ஏழை ஏழையாக இருக்கும்போதே பணக்காரனாய் தன்னை பாவித்து அவனைப் போலவே வாழ விரும்பும் போதுதான் பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுகின்றன.

    அவரைப் போல நாம் இல்லையே என்று கவலைப்படும் வழக்கத்தை நீங்கள் முதலில் கைவிடுங்கள். அவரைப் போல நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று மட்டும் நினையுங்கள். சலிக்காது உழையுங்கள். வெற்றியும், நிம்மதியும், புகழும் உங்களைத் தேடி வரும். நாம் நாமாக இருப்போம். வெற்றிகளைக் குவித்து புதிதாய் பிறப்போம்.

    உணர்வு நலம் உயர்வுக்கு(வெற்றிக்கு) நலம்

    நானும் நண்பரும் இரவுச்சாப்பாட்டிற்குப் பின் சிறிது தூரம் நடக்கலாமா? என்றார். நடக்கும் போது ரோட்டில் தென்பட்ட பழக்கடைக்காரரிடம் இரண்டு பழங்கள் வாங்கி கொண்டு “நன்றி” எனச் சொல்லிலி வந்தார். பழக்கடைக்காரரோ கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. திமிர் பிடித்தவன், நாகரீகம் தெரியாதவன் ,என பொருமினேன் நான். நண்பரோ, அலட்டிக்கொள்ளாமல் அவர் அப்படித்தான் சில நேரத்தில் எனக்கூறியதைக்கேட்ட நான், அப்படி என்றால் ஏன் அவனிடம் பழம் வாங்குகிறீர்கள்? என்று கேட்டேன். அதனால் என்ன? நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கடைக்காரர் ஏன் தீர்மானிக்க வேண்டும், என்றார். சற்று யோசித்துப்பார்த்தேன். நண்பரிடம் இருந்து வந்த செய்தி “அவர் நாண நன்னயம் செய்துவிடு, திருவள்ளுவரின் வாக்கு, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காண்பி, யேசுநாதரின் போதனை – இவற்றின் உள்ளர்த்தம் இப்படியாகத்தான் இருக்குமோ என எண்ணினேன். நான் பழக்கடைக்காரரின் செயலுக்கு எதிர் செயல் புரிந்ததையும் நண்பர் செயலாற்றிய விதத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். அடித்தான் என்பதால் அடித்தேன்; பேசினான் என்பதற்காக நானும் பேசினேன் என்ற கருத்து எத்துணை தவறானது என்பதையும் உணர்ந்தேன். ரப்பர் பேண்டை இழுத்து விடும் போது ரப்பர் பேண்ட் திரும்பவும் தன் பழைய நிலைக்கு வரும் இதில் ரப்பரை இழுப்பதும் விடுவதும் மட்டுமே என்னுடைய கட்டுப்பாட்டில் நடப்பது; ஆனால் ரப்பர் பேண்ட் திரும்ப பழைய நிலைக்கு வருவதில் என் கட்டுப்பாடு எதுவும் இல்லை. அது போலத்தான் செயலுக்கு எதிர் செயல் (திரும்ப அப்படியே செய்வதைக் குறிப்பிடுகிறேன்) நடக்கும்போது எதிர் செயலிலில் உங்களது கட்டுப்பாடு எதுவும் இருக்கபோவதில்லை. திரும்பநானும் செய்தேன் அவ்வளவுதான் என நீங்களே சொல்லக்கூடும். அடுத்தவர் செயலுக்கு நாம் ஏன் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட வேண்டும்.

    வேறு என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் எதிர் செயலுக்கு தொடர்ந்து ஓட்டளிப்பவர் நீங்கள் அல்ல என நான் புரிந்து கொள்வேன்.

    ஒரு செயலுக்கு உணர்வுத் தூண்டுதல் ஏற்படும் போது ஒர் உணர்வு உள்ளார்ந்த சம நிலையை ஏற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தச் செயலுக்கு உங்களது உடன்பாட்டு செயல் அல்லது பதில் செயல் (பதில் செயல் என்பது எதிர் செயல் அல்ல) எப்படி இருக்கவேண்டும் எனக் கற்றுக்கொண்டால் உங்களது செயல் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். உங்கள் கட்டுப்பாட்டில் நடக்கிற செயல் பதில் செயல்; எதிர் செயலில் உங்கள் கட்டுப்பாட்டை இழப்பது மட்டுமல்லாமல் அடுத்தவரின் செயலால் ஏற்படும் தூண்டுதலிலின் விளைவு மட்டுமே மேலோங்கி நிற்கும். விளைவை செயல்படுத்தும் ஒரு காரணியாக நீங்கள்- உங்கள் செயல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதுமட்டுமல்லாமல் உணர்வு நலம் உடல் நலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்படும் உணர்வு நலம் உடல் நலத்திற்கு சீர்கேடு. அப்படி ஏற்படும் உடல் சீர்கேடு மறுபடியும் மனம் சார்ந்த உணர்வு நலக்கேடு ஏற்படுத்தும். இப்படியே தொடர்ந்து தொடர் ஒட்டம் போல் நடைபெறம். விளைவு -சந்தோச இழப்பு, மனஅமைதியின்மை, உடல்சார்ந்த நோய்க்கான ஆரம்ப சுழி என வேண்டாத, விரும்ப தகாதவைகளை கட்டாய ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இவைகள் உங்களின் வெற்றிக்கான வேர்களையும் விழுதுகளையும் பிடுங்கி எரியும் அபாயகரமானவைகள்.

    ஒருவர் உங்களிடம் நடந்து கொண்டதற்கு நீங்கள் எப்படி நடந்தால் நல்லது என யோசித்து செயல்படுங்கள். யோசிக்கும் போது உங்கள் கட்டுப்பாட்டில் எல்லாம் நடக்கும். அவன் அப்படி செய்ததால் நான் என்ன செய்தேன் என தெரியாமலே என் எதிர் செயல் நடந்து விட்டது என நீங்கள் சொல்லவேண்டி நிலை ஏற்படாது. உணர்வுகளின் சமநிலையை நீங்கள் பெறுவீர்கள். உணர்வுகளின் சமனற்ற நிலை தான் மன அழுத்தம் ஏற்பட காரணம்.

    அழுத்தம் என்பது இயற்பியல் சார்ந்த சொல். ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இடர்செய்து கட்டமைப்பினை குழைப்பது அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முனைவு சக்தி என்பதாக அது பொருள்படலாம். அதுபோலத்தான் மனதின் சமனற்ற ஒரு கட்டமைப்பு நிலைக்குழைவு தான் மன அழுத்தம்.  மன அழுத்தத்தின் விளைவுகள் பல முகங்களை கொண்டது. ஒரு முனைவுள்ள எதிர் செயலே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்னும் போது பல முகங்களை கொண்ட மனஅழுத்தத்தின் விளைவுகள் எப்படி உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரமுடியும். பழக்கடைக்காரரிடம் நன்றி சொன்ன போது எதுவும் சொல்லவில்லை எனில் நண்பர் செய்தது போல் இருங்கள் அல்லது பழவியாபாரியிடம் இன்றைக்கு “ரொம்ப பிஸி” போல இருக்கு என புன்னகைத்துப்பாருங்கள். அவரும் புன்னகைப்பார் அல்லது ஆமாம் சார் இப்படித்தான் நம்ம பொழப்பு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கூட கவனிக்கவில்லை. மன்னிக்கவும் என சொல்லும் நிலையில் அவர் இருப்பார். இந்த நிகழ்வால் யாருடைய உணர்வு நலம் கெட்டுப்போகும் வாய்ப்பில்லை; மாறாக நட்பு பலப்படும். உங்களது உணர்வு நலம் பாதுகாக்கப்படும். அதன் தொடர்புடைய உடல்நலம் பேணிக்காக்கப்படும். அது உங்கள் உயர்வுக்கு நலம் தான் என்பதில் சந்தேகமில்லை.

    குறிப்பு – இரவு தூக்கத்தில் தொந்தரவு இல்லாமல் விடியற்காலை எழுந்திருக்காதவர் என்றால் மன அழுத்தத்தின் அறிகுறி அவரிடம் உள்ளது என அடையாளம் கண்டுகொள்ளலாம்.

    உணர்வு நலம் உடல் நலம் கொண்டு உயர்வு (வெற்றிக்கான) நலம் பெற்றிட வாழ்த்துகிறேன்.

    உனக்குள்ளே உலகம்-6

    படிக்காத பாடங்கள்

    பாடங்கள் என்றால் அதனைப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வது என்று சிலர் நினைக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று படிப்பது மட்டுமே பாடம் என்பதும் சிலரது கருத்தாகும்.

    /பிரி – கேஜி (Pre-KG) முதல் பிளஸ் 2 வரை தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் பள்ளியில் படிக்கிறார். அதன் பின்னர் பட்டப்படிப்பாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படிக்கிறார். பட்ட மேற்படிப்பாக 2 ஆண்டுகள் கல்லூரியில் காலத்தைச் செலவிடுகிறார். இப்படி கல்வி நிலையங்களில் இன்றைய இளைஞர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் கழிந்துவிடுகிறது. 20 ஆண்டுகளாக பல்வேறு பாடங்களை ஒரு இளைஞர் படிக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த பாடங்கள் மட்டுமே வேலை வாய்ப்பையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது என்பது பலரின் நம்பிக்கை. இருந்தபோதும் கல்வி நிலையங்களில் கற்ற கல்வியோடு பல்வேறு அனுபவக் கல்வியைப் பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

    இன்று வேலையில்லாப் பிரச்சனை (Unemployment Problem) உருவாகிக்கொண்டிருக்கிறது என்று ஒருபுறம் நாம் கவலைப்படுகிறோம். ஆனால் தங்கள் நிறுவனங்களில் பணிசெய்ய, வேலைக்கு ஏற்ற தகுதியான பணியாளர் இல்லை (Unemployable) என்ற கவலைதான் வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களிடம் இருக்கின்றன.

    “நான் அந்தக் காலத்துல எஸ்.எஸ்.எல்.சிதான் படிச்சேன். படிச்சு முடிச்சதும் அந்த ஆபீஸ்ல கூப்பிட்டு வேலை கொடுத்தான்” – என்று ஒரு காலத்தில் சொல்லிப் பெருமைப்பட்டவர்கள் உண்டு.

    “நான் பி.காம். படித்தேன். வங்கியில் கிளார்க் வேலை தந்தார்கள். இப்போது மேனேஜராக இருக்கிறேன்” என்று மகிழ்பவர்களும் உண்டு.

    “சாதாரண பாலிடெக்னிக் டிப்ளமோதான் இன்றைக்கு என்னை பெரிய என்ஜினியர் ஆக்கிவிட்டது” – என்று சொல்பவர்களும் உண்டு.

    “அந்தக் காலத்தில் படித்து முடித்ததும் வேலை கிடைத்தது. டிகிரி இருந்தால் நல்ல வேலை தந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் B.E., Ph.D படித்தாலும்கூட வேலை கிடைப்பதில்லை என்று விரக்தியின் விளம்பில் நின்று வேதனைப்படுபவர்களும் உண்டு.

    படித்தால் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்று இளைய வயதினர் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி அவர்களே தீர்ப்பு வழங்கிச் சிலர் நல்ல பாதையில் செல்கிறார்கள். சிலர் சோகமாய் தவிக்கிறார்கள்.

    கல்வி நிறுவனங்களில் படிக்கும் பாடங்கள் வேலை வாங்கித் தருமா? அல்லது வேலை வாங்கித் தராதா? என்னும் குழப்பம் இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது. பள்ளி, கல்லூரிகளில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின்பும் சிலருக்கு வேலை கிடைக்காமல் இருக்கக் காரணம் என்ன?

    கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்று – என்னிடம் பி.பி.ஏ., படித்து முடித்த மாணவன் கேசவன் வந்தார்.

    “சார் எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தாருங்கள். பி.பி.ஏ., பட்டத்திற்கு ஏற்ற ஏதேனும் ஒரு வேலை வாங்கித் தந்தால் எனக்கு நன்றாக இருக்கும்” என்று கேட்டார்.

    பி.பி.ஏ., படித்த அந்த இளைஞர் நல்ல சுறுசுறுப்பானவர். கதை, கவிதை, கட்டுரை ஆர்வத்தை அதிகமாக்கி, கல்லூரி அளவிலும் பல்கலைக்கழக அளவிலும் பரிசு பெற்றவர். இவருக்கு ஏற்ற வேலை எது? சிந்தித்துப் பார்த்தேன். சென்னையிலுள்ள ஒரு பிரபல மாத இதழின் ஆசிரியர் எனது நெருங்கிய நண்பர். அவர்தான் அந்த மாத இதழின் உரிமையாளரும் ஆவார்.

    “கவிநேசன் உங்களுக்குத் தெரிந்த நல்ல பட்டதாரிகள் இருந்தால் அனுப்பி வையுங்கள். வேலை கொடுக்கிறேன்” என்று சொல்லியிருந்ததால் மாணவர் கேசவனை சென்னைக்கு அனுப்பி வைத்தேன். சென்னையில் அந்த மாத இதழ் அலுவலகத்தில் ஒருவாரம் வேலை செய்த கேசவன் திரும்பவும் வந்து நேரில் என்னை சந்தித்தார்.

    “தம்பி கேசவா…. பத்திரிக்கை வேலை எப்படி? என்று கேட்டேன்”.

    சார் நான் இந்த வேலையை விட்டு விடலாம் என நினைக்கிறேன். சாரி சார்” – என்றார் கேசவன்”.

    நான் ஆச்சரியமாகப் பார்த்தேன்.

    கேசவன் மீண்டும் தொடர்ந்தான்.

    “நீங்க கொடுத்த லெட்டரோடு சென்னைக்குப் போனேன். அந்த மாத இதழ் ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் மிகவும் சந்தோக்ஷப்பட்டார். தம்பி இன்றைக்கே வேலைக்கு சேர்ந்துவிடு என்றார். நான் படித்த பாடங்களைப்பற்றி விரிவாகக் கேட்டார்”. “அக்கவுண்டன்சி படிச்சிருக்கிறீங்களா? ரொம்ப நல்லது. நம்ம அக்கவுண்ட் செக்க்ஷன்ல உங்களுக்கு வேலை கொடுத்துவிடலாம் என்றார். அக்கவுண்ட் செக்க்ஷனில் இரண்டு நாள் வேலை பார்த்தேன். தம்பி இந்த பேலன்ஸ் சீட்டை (Balance Sheet) ரெடி பண்ணுங்க என்றார். உதவியாளரை அழைத்து நான்கு ஐந்து பெரிய கணக்கு புத்தகங்களை என் மேஜையில் கொண்டு வைக்கும்படி சொன்னார். மேஜை அருகே அந்த கணக்குப் புத்தகங்களை பார்த்தவுடன் எனக்கு அழுகையாக வந்தது. பி.பி.ஏ., படித்திருக்கிறோம் நமக்கு தெரியாத அக்கவுண்டன்சியா என்று நினைத்து கணக்குகளைப் புரட்ட ஆரம்பிச்சேன். என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இந்த அக்கவுண்ட்களை எப்படி எழுதுவது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேர்வுக்காக கணக்குகள் செய்வதற்கும் நடைமுறை கணக்குகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.

    “உன்னால முடியலைன்னா உடனே என் பிரண்ட்கிட்ட சொல்ல வேண்டியதுதானே நீ ஏன் வேலையை விட்டுவந்தாய்? அவர் ரொம்ப நல்லவர்” – என்றேன் நான்.

    “அவர் ரொம்ப நல்லவர்தான். நான்தான் நல்லவனில்லை. அக்கவுண்டன்சி பாடத்தை நடத்தும்போது கவனிக்காமல் படம் வரைந்து கொண்டிருந்தேன். தேர்வு நேரத்தில் மட்டும் மனப்பாடம் செய்து வெற்றி பெற்றேன். இப்போது அதற்கு பலன் அனுபவிக்கிறேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன். பிறகு அடுத்த நாள் உங்கள் நண்பரான பத்திரிக்கை ஆசிரியரைப் பார்த்தேன். அவர் என்னை உற்சாகப்படுத்தினார். இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையைத் தருகிறேன் என்றார். தனது உதவியாளரை அழைத்து தம்பியை எடிட்டோரியலுக்கு கூட்டிட்டுப்போ என்றார். அங்கு போனவுடன் ஒரு பத்து பக்கத்தை கையில் கொடுத்து இந்த ஆங்கிலத்தை டிரான்ஸ்லேசன் செய்து தமிழில் தாருங்கள் என்றார். எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. முறைப்படி ஆங்கிலத்தைத் தொடர்ந்து வாசித்துப் பழகாததால் எனக்கு அதுவும் கடினமாகவே தோன்றியது. அன்று மாலையில் உங்கள் நண்பரைச் சந்தித்து எனக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என்று சொல்லிவிட்டு உடனே உங்களைத்தான் சார் பார்க்க வருகிறேன்” என்றான் கேசவன்.

    “சரி….. இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றேன் நான்.

    சார் நான் படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் தொடர்பில்லாததுபோல நினைக்கிறேன். ஒரு பி.பி.ஏ., படித்த பட்டதாரி அக்கவுண்ட்ஸ்களை அழகாக செய்வார் என்று நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை சரளமாக பேசும் திறமை அவருக்கு உண்டு என எண்ணுகிறார்கள். எந்த வேலையைக் கொடுத்தாலும் ஆர்வத்தோடு செய்து முடிப்பார் என்று நினைக்கிறார்கள். நம் பி.பி.ஏ., படிப்புக்கு சென்னையில் ரொம்ப மதிப்பிருக்கிறது. அந்த மதிப்புமிக்க படிப்பிற்கேற்ற திறமைகள் என்னிடம் இல்லை. நான் படிக்கின்ற காலத்தில் என்னுடைய திறமைகளை பாடத்தோடு இணைந்து வளர்த்துக்கொள்ள தவறிவிட்டேன்” என வருந்தினான் கேசவன்.

    இந்தப் பட்டதாரி கேசவனின் வாழ்க்கை நிகழ்ச்சி இன்றைய இளைஞர்களுக்கு பாடமாக அமையும் என நினைக்கிறேன்.

    படிக்கும்போது பாடத்தில் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்றால்போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். இப்போதெல்லாம் பாட மதிப்பெண்கள் தேவையான தகுதி (Qualification)யாக கருதப்பட்டாலும் தேவையான பண்புகளும்(Qualities), திறன்களும் (Skills) இருந்தால்தான் ஒருவருக்கு எளிதாக வேலை கிடைக்கும்.

    இந்தப் பண்புகளும், திறன்களும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ – மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனைத்தான் வாழ்க்கைப் பாடங்கள் என கூறுகிறார்கள். புத்தகத்தில் படிக்கின்ற பாடத்தைவிட இந்த அனுபவ பாடங்கள்தான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்.

    இதனால்தான் தத்துவமேதை சாக்ரடீஸ் “Know theyself” எனக் குறிப்பிட்டுள்ளார். “உன்னை நீ அறிந்திடுவாய்” என்பதுதான் இதன் அர்த்தமாகும்.

    வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு பாடங்களைச் சொல்லித் தருகிறது. அந்த அனுபவம் தரும் பாடங்களை நாம் அமைதியுடன் கவனித்து புரிந்து கொள்ள வேண்டும்.

    வாழ்க்கைப் பாடங்களில் மிக முக்கியமானது நேரம் தவறாமை. இதனை ஆங்கிலத்தில் “Punctuality” என அழைப்பார்கள்.

    குறித்த காலத்தில் ஒரு செயலைத் தொடங்குவதும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு செயலை செய்து முடிப்பதும் காலந்தவறாமை என்னும் பண்பின் முக்கிய அம்சங்களாகும். இதனைத்தான் பள்ளி, கல்லூரிகளில் மாணவ – மாணவிகளுக்கு பயிற்சிகளாக வழங்குகிறார்கள்.

    பள்ளிநேரம் (School Time) என்ற ஒரு நேரத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் உள்ள நேரம், இடைவேளை நேரம், உணவு நேரம், பள்ளி முடியும் நேரம் – என நேரத்தை ஒழுங்காகத் திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி பள்ளியை நடத்துகிறார்கள். ஒவ்வொரு பாட வேளையிலும் எந்தெந்தப் பாடத்தை நடத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அந்தப் பாடத்தை எந்த ஆசிரியர் அல்லது ஆசிரியை நடத்துகிறார் என்பதையும் திட்டமிட்டு விடுகிறார்கள். எந்த அறையில் அந்தப் பாடம் நடத்தப்படும் என்பதையும் திட்டமிட்டு தெரிவித்து விடுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது.

    இப்படி திட்டமிட்டு நடத்தப்படுகின்ற ஒரு பள்ளியில் மாணவ – மாணவிகள் நாள்தோறும் வந்து பாடங்களைக் கற்பதற்கான ஆற்றலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

    ஒரு மாணவன் அல்லது மாணவி பள்ளிக்கு ஒழுங்காக, வழக்கமாக சென்றாலே காலந்தவறாமை என்ற பண்பை வளர்த்துக் கொள்ளலாம். “காலந் தவறாமை” என்ற பண்பு கொண்ட மாணவ – மாணவிகளுக்கு 100 சதவீத வருகைப்பதிவுச் சான்றிதழ்” என்ற சிறப்புச் சான்றிதழை பள்ளித் விழாக்களில் வழங்குகிறார்கள்.

    இந்த விவரம் தெரியாமல் சிலர் “கோயில் திருவிழாவுக்கு விடுமுறை எடுத்தால் குறைந்தாபோய்விடும்” என்று எண்ணி பிள்ளைகளை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்பாமல் விட்டுவிடுகிறார்கள். ஒருநாள் படிக்காத பாடத்தை பின்னர் படித்து சரிசெய்து விடலாம். ஆனால் “காலம் தவறாமை” என்னும் உணர்வை காலம் கடந்தபின்பு உருவாக்க முடியாதல்லவா!

    தேர்வுகளை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதுவதற்கு மாணவ – மாணவிகளை எழுதப் பழக்குவது, வீட்டுப்பாடம் கொடுப்பது – இவையெல்லாம் மாணவ – மாணவிகளிடம் காலந்தவறாமை உணர்வை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    “டீன் – ஏஜ்“; எனப்படும் வளர் இளம் பருவத்தில் ஒரு மாணவன் அல்லது மாணவி மனதிற்குள் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். எது நல்லது? எது கெட்டது? எந்தச் செயல் சரியானது? எந்தச் செயல் தவறானது? யார் நல்லவர்கள்?; யாரெல்லாம் கெட்டவர்கள்? என்று பிரித்து அறிந்துகொள்ளும் திறன் சற்று குறைவாகவே இருக்கும். இதனால் சிலவற்றைப் பற்றிய முடிவுகள் எடுக்க இயலாமல் இந்தப்பருவத்தினர் திணறுவார்கள். புத்தகத்தில் படித்த தகவல்களுக்கும், நடைமுறையிலுள்ள தகவல்களுக்கும் இடையே வேறுபாடுகளைக் காணும்போது வளர்இளம் பருவத்தினரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இதனால்தான் அவர்கள் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு செயல்படுகிறார்கள்.

    பல வருடங்களுக்குமுன்பு நான் கல்லூரியில் துணைப்பேராசிரியராக சேர்ந்த புதிதில், எனது வகுப்புக்கு ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவனை நான் வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை. அந்த மாணவனுக்கு என்மீது கோபம் அதிகமானது. வகுப்பு மாணவர்களில் சிலர் தாங்கள் தாமதமாக வருவதை அனுமதிக்க வேண்டும் என்று துறைத் தலைவருக்கு கோரிக்கை மனு எழுதினர்;.

    எங்கள் துறைத்தலைவர் என்னிடம் விசாரித்தபோது “சார் நான் கல்லூரியின் விதிமுறைகளைத்தான் பின்பற்றி நடக்கிறேன். வகுப்புக்கு தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காதது எனது தவறா? சார்?” என்று துறைத் தலைவரிடம் கேட்டேன். அவர் “உங்கள் எண்ணப்படியே வகுப்பை நடத்துங்கள்”; என எனக்கு அனுமதி கொடுத்தார். அதனால்தான் இன்றும் நான் “காலந்தவறாமை” என்னும் பண்பை, வகுப்பில் மாணவர்களுக்கு என்னால் கற்றுக்கொடுக்க முடிகிறது.

    “தாமதமாய் வருவதற்கு அனுமதிக்க வேண்டும”; என்று குரல் கொடுத்த மாணவன் சில வருடங்களுக்குபின்பு என்னை சந்தித்தான்.

    “சார் நீங்கள் லேட்டாக வந்தவர்களை வகுப்புக்குள் அனுமதிக்காமல் இருந்தபோது எங்களுக்கு கோபமாக வந்தது. ஆனால் இன்று ஒரு மேலாளராக பணிபுரிகிற என்னால் அந்த காலந்தவறாமை பண்பை உணர முடிகிறது. நிறுவனத்தில் ஒரு துறைக்கு தலைமையேற்றிருக்கும் நான் ஒழுங்காக இருந்தால்தானே மற்றவர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்று நான் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்” என உணர்வுப் பூர்வமாக உணர்ந்து சொன்னார் அந்த மாணவர்.

    அந்த மாணவனுடைய கருத்தும் சமீபத்தில் சென்னையில் நான் சந்தித்த இன்னொரு இளம் மேலாளர் விஜயராகவனின் கருத்தும் கிட்டதட்ட ஒன்றாகவே இருந்தது.

    விஜய ராகவன் என்ற அந்த இளம் மேலாளர். ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இளம் வயதுக்காரர் என்பதால் அவரால் அந்த நிறுவனத்தை எளிதில் நிர்வாகம் செய்ய முடியவில்லை. திணறிப்போன விஜயராகவன் அந்த தனியார் நிறுவன முதலாளியிடம் வந்து தனது பிரச்சனையைச் சொன்னார். அவரது முதலாளி நிதானமாக அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

    “எந்த நிறுவனத்தையும் நாம் எளிதாக நிர்வகித்து விடலாம். அதற்கு எளிதான ஒரு வழியும் இருக்கிறது. அதாவது நம் நிறுவனத்தின் அலுவலகம் காலை 9 மணிக்கு திறக்கப்படுகிறது என்றால் அரை மணி நேரத்திற்கு முன்னதாக 8.30 மணிக்கே வந்துவிட வேண்டும். அதேபோல் மாலை 5 மணிக்கு அலுவலகம் முடிகிறது என்றால், அதன்பின்னர் குறைந்தபட்சம் அரை மணி நேரம் அலுவலகத்தில் இருந்து தாமதமாக புறப்பட வேண்டும். அப்போது அடுத்தநாள் செயல்பாட்டிற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு மேலாளராக இருக்கிற நீங்கள் அலுவலகத்திற்கு முதல் ஆளாக வர வேண்டும். அலுவலக நேரம் முடிந்தபின்பு கடைசி ஆளாக அலுவலகத்தைவிட்டுச் செல்ல வேண்டும். இதை ஒரு மாதம் பழக்கப்படுத்தி பாருங்கள். நீங்கள்தான் சிறந்த நிர்வாகி” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் முதலாளி.

    இன்று மிகச்சிறந்த மேலாளராக செயல்பட்டு சிறந்து விளங்குகிறார் விஜய ராகவன்.

    காலந்தவறாப் பண்பை பள்ளி, கல்லூரிகளில் கற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். வெற்றியைக் குவிக்கிறார்கள்.

    (தொடரும்)

    வருவது தானே வரும்! வருவது தானே வரும்?

    “எல்லாம் என் விதிப்பா. நான் இப்படியெல்லாம் அனுபவிக்கனும்னு ஆண்டவன் என் தலையில எழுதிட்டான்” என்று பலர் துன்பத்தில் மனம் வருந்திப் பேசுவதைக் கேட்டிருப்போம். அல்லது நாம் கூடச் சில சமயங்களில் இது போல் சொல்லியிருப்போம்.

    இயற்கையின் செயல்கள்

    விதி, தலையெழுத்து – இவை உண்மையா? இல்லையென்று மறுப்பவர்களும், சம்பந்தமில்லாமல் துன்பப்படும்போது, ஏன்? என்று சிந்தித்துத் தெளிவு காணாமல் குழம்புகின்றனர். அவர்களுக்குத் தெளிவு பெற இதோ வழி.

    நமது முயற்சிக்கும், விருப்பங்களுக்கும் அப்பாற்பட்டு நடக்கும் செயல்களை இயற்கையின் செயல்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் வரும் விளைவுகளை, பலாபலன்களை அனுபவித்துத்தான் தீர வேண்டும். அதற்கேற்றவாறு மனநிலையைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    வாழ்க்கை என்பது என்ன?

    ஒருவர் இக்கேள்விக்கு “பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே பட்ட காலம்” என்றார். இன்னொருவர் “நமது எண்ணம், சொல், செயல்கள் தான் வாழ்க்கை” என்றார்.

    “திருமணம் செய்து அதன் பிறகு வாழ்வது தான் வாழ்க்கை”

    “சம்பாதித்து சந்தோஷமாக இருப்பது தான் வாழ்க்கை”

    “விரும்பிய இடங்களுக்குச் சென்று வருவது தான் வாழ்க்கை”

    இதுபோல் பலரும் பலவிதமாய் கூறிக் கொண்டிருக்கிறோம்.

    இது எப்படியிருக்கு என்றால், கண் பார்வை தெரியாதவர்கள், யானையின் எந்தப் பகுதியைக் கைகளால் தொட்டு உணர்ந்தார்களோ, அந்தப் பகுதி மட்டுமே யானை என்று நினைத்ததற்கு ஒப்பானது. எல்லாப் பகுதியும் சேர்ந்தால் தான் யானை. அதுபோல், நீங்கள் கூறும் எல்லா விளக்கங்களும் சேர்ந்ததே வாழ்க்கை.

    தேவைகள் என்ன?

    ஒவ்வொருவருக்கும் தேவைகள் அவர்களது மனோநிலையைப் பொறுத்து மாறுபடும். ஆனால், பொதுவாக நம் எல்லோருக்கும் அடிப்படையில் தேவை என்று பார்த்தால்,

    உணவு, உடை, வசிப்பிடம், வாழ்க்கைத் துணை இந்த நான்கும் கட்டாயமாகத் தேவை.

    உணவு, உயிர் வாழவும், உடல் வளரவும் தேவை. உடைகள் மானம் காக்கத் தேவை. வசிப்பிடம் சொந்தமானதாகவோ, வாடகை கொடுப்பதாகவோ இருக்கலாம். ஒரு முகவரி வேண்டுமல்லவா? அது தான் வசிப்பிடம், பருவம் வந்தபின் ஆண், பெண் அனைவருக்கும் உரிய காலத்தில் வாழ்க்கைத் துணையைச் சேர்த்து வைப்பது திருமணம்.

    தேவைகளைப் பெறும் தகுதி

    “வரப்புயர நீர் உயரும்

    நீருயர நெல் உயரும்

    நெல் உயர குடி உயரும்

    குடி உயர கோன் உயரும்”

    இந்த வரிகள் எளிமையாகத் தகுதி பற்றிக் கூறுகிறது. ஒரு நாடு சிறப்படைய வேண்டுமென்றால், மக்கள் வசதியாக வாழ வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக இருக்க, அவர்களது பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பொருளாதாரம் அதாவது குடும்பம் வசதியாக இருக்க வேண்டுமானால் விவசாயம் / தொழில் / வியாபாரம் நன்கு அமைய வேண்டும்.

    இன்றைய நிலை

    இன்று நாட்டு மக்கள் வறுமையில் வாடும்போது, மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சியினர், மக்களிடமிருந்து வசூல் செய்யும் வரிப்பணத்தால் தாங்கள் செழிப்பாக, செல்வாக்காக, பல நூறு தலைமுறைக்கும் சேர்த்து சேமித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    இயற்கை நியதி

    இதைக் கண்டு பொறுக்காத இயற்கை மேகங்களை வெடிக்கச் செய்து வெள்ளக் காடாக்குகிறது – காஷ்மீர் லே பகுதியில். பாகிஸ்தான் நாட்டில் பெரும் வெள்ள சேதம், கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு.

    சூரியனின் வெப்பம் அதிகரித்து ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெயில், வெறும் 1040F தான். ஆனால் இந்தப் பகுதி குளிர் பிரதேசம் என்பதால், இந்த வெயிலைத் தாங்காமல் பல ஆயிரம் பேர் மரணம்.

    இவையெல்லாம் பத்திரிக்கைச் செய்திகள். 2012க்குள் உலகில் மக்கள் தொகை பெருமளவு குறைந்துவிடும் என்ற ஹேஸ்யம் உண்மையை நோக்கி வேகமாக நகருகிறது. இயற்கை மறைமுகமாக, தவறு செய்பவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை இது. இதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருவோர் தவறு செய்யாத நிலையிலும் பாதிப்புக்கு உள்ளாவதை எண்ணிப் பார்த்தால் வருத்தமே மிஞ்சும். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    இன்று இந்தியாவில் வறட்சி, வெள்ளம், தீவிரவாதம், காஷ்மீர் கலவரம், நக்ஸ்லைட்டுகள், மாவோயிஸ்டுகள் எனப்பல பாதிப்புகளைச் சமாளிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. இத்தொகையை எந்த அரசியல்வாதி அல்லது அரசியல் கட்சி செலவு செய்கிறது? மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப்பணம் தான் செலவாகிறது. போதாவிட்டால் உலகின் பிற நாடுகளிடம் கடன் வாங்குகிறோம்.

    இன்று சுமார் 35 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவின் கடன் தொகை. ஆனால் இந்தியாவின் கொள்ளைக்காரர்களால் (தவறான முறையில் பொருள் சம்பாதிப்பவர்கள்) நம் நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்கு கடத்தப்பட்டு அங்கு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள தொகையின் மதிப்பு சுமார் 73 லட்சம் கோடி ரூபாய்.

    எனவே, தீயவர்களது அதிகாரம் ஓங்கும் போது, அதைத் தடுக்க இயற்கை மேற்கொள்ளும் செயல்களால், அந்தப் பகுதியிலுள்ள நல்லவர்களும் பாதிக்கப்படுவது இயல்பு தான். இதற்காக வருந்திப் பயனில்லை.

    போபால் விஷ வாயு கசிவால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள், சிறு அளவு பாதிப்புக்கு உள்ளானவர்கள் யார் என்று ஒப்பிட்டு, இதனை அறிந்து தெளிவு பெறலாம்.

    விருப்பமும் தேவையும்

    இரண்டுமே வேறு வேறு. தேவையைப் பெற விரும்புவது இயல்பு. ஆனால் ஒரு விருப்பத்தை உண்டாக்கிக் கொண்டு, அதை நிறைவேற்றத் தேவைகளை நாடுவது துன்பம் தரும். இந்த இடத்தில் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மனிதராய் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, அளப்பரிய பொக்கிஷமான மனோசக்தி, மன ஆற்றல் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மன ஆற்றலின் மூலம் நியாயமான தேவைகளை, விருப்பங்களை, இயற்கைக்கு இணக்கமான நிலையால் பெற முடியும்.

    “விரும்பியது கிடைக்கா விட்டால்

    கிடைத்ததை விரும்பு”

    இது முதல் நிலை, அடுத்த நிலை.

    “கிடைத்ததை விரும்பிய பின்

    விரும்பியதைப் பெற முயற்சி செய்

    அதுவும் கிடைக்கும்”

    இது அடுத்த நிலை.

    விருப்பங்கள் வகைகள்

    விருப்பங்களை இயற்கையை ஒட்டியவை கற்பனையானவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பசிக்கிறது – சாப்பிட நினைக்கிறோம். குளிர் அடிக்கிறது – சூடான சூழலை உருவாக்குகிறோம். 25 வயதாகிறது – திருமணத்திற்கு வரன் தேடுகிறோம். பணம் இருக்கிறது – பாதுகாப்பான சேமிப்பு வழிகளை ஆராய்கிறோம். இவையெல்லாம் இயற்கையை ஒட்டிய விருப்பங்கள்.

    செய்தித்தாள், புத்தகம் படிக்கிறோம். டி.வி. சினிமா, இயற்கை அழகு காட்சிகள் பார்க்கிறோம். இனிய பாடல்கள், எழுச்சியூட்டும் பேச்சுகள் கேட்கிறோம். ஊருக்கு நல்லது செய்யும் உத்தமர்களது அன்புக் கட்டளைகளையும் கேட்கிறோம். உடனே, அவர்கள் அளவுக்கு மனதால் உயர்ந்து அதே போல் செயல்பட விரும்புகிறோம். இயலாவிட்டால் சுய பச்சாதப்படுகிறோம். இவைகள் கற்பனையான விருப்பங்கள்.

    ஒப்பீடுகள்

    கற்பனையாக சில விருப்பங்கள் உண்டாக ஒப்பீடுகள் முதன்மைக் காரணமாக உள்ளது. மற்றவர்களது படிப்பு, வாழ்க்கை முறை, உடை, உணவுப் பழக்கம், நாகரீகம் எனப் பல வகையாலும், நம்மை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்கிறோம். இந்த ஒப்பீடு ஆரோக்கியமானதாய் இருக்க வேண்டும்.

    “சிட்டுக் குருவி தலையில் பனங்காய்” வைத்தது போல் இருக்கக்கூடாது. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது. விரும்பங் கூடாது. ஆனால் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்றும் முன்னோர்கள் சொன்னார்களே! இதற்கு என்ன அர்த்தம் என்ற உங்கள் கேள்விக்கு இதோ பதில்.

    முதலில் நமக்கு கிடைப்பதை அனுபவித்து மகிழ வேண்டும். தொடர்ந்து உபயோகம் சலிப்பில் முடிந்து விடும். எனவே அளவு முறை அறிந்து உபயோகிப்பது அவசியம். இல்லாவிட்டால் வருவது தான் துன்பம் / சங்கடம்.

    வேண்டல் வளம்

    உன் வண்ட வாளம் தெரியாதா? என்று சிலர் பேச்சுவாக்கில் கேட்பார்கள். உனது தகுதி, உனது தேவை இவை இரண்டும் சேர்ந்தது தான் இந்த வண்டவாளம். இதை அறிஞர்கள் வேண்டல் வளம் என்றனர்.

    வளம்: தற்போது இருப்பது

    வேண்டல்: இனி தேவைப்படுவது / விரும்புவது

    இராமலிங்க அடிகளாரை வள்ளல் பெருமான் என அழைக்கிறோம். அவரது பாடல்,

    ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

    உத்தமர்தம் உறவு வேண்டும்;

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று

    பேசுவார் உறவு கலவாமை வேண்டும்;

    பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்;

    பொய்மை பேசாதிருத்தல் வேண்டும்;

    பெருநெறி படித்தொழுக வேண்டும்;

    மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்;

    மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்;

    உனை மறவாதிருக்க வேண்டும்;

    மதி வேண்டும்;

    நின் கருணைநிதி வேண்டும்;

    நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்;

    இவர் தம் ஒன்பதாவது வயதிலேயே இந்த நெறிகள் வேண்டுமெனப் பாடியுள்ளார். இதில் நமக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து உள்ளதா? எனப் பார்த்தால் ஒன்றுமேயில்லை என்று தான் கூறுவோம்.

    இந்த நற்குணங்கள் அனைவருக்கும் தேவை தானே! பிறகு ஏன் பலருக்கும் பலவித அளவுகளில் கிடைக்கிறது. காத்திருங்கள்.

    வாழ்க வளமுடன்

    வேப்பம் பூவிலும்

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

    தள்ளினும் தள்ளாமை நீர்த்து

    தற்போதைய போட்டிகள் மிகுந்த வாழ்க்கையில் நாம் தினமும் பல்வேறு விதமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது. தகவுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது டார்வினின் கோட்பாடு. நாம் நமது அறிவையும், திறமைகளையும் பொருத்தமாக வெளிப்படுத்தினால்தான் இன்றைய வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற முடியும்.

    நமது எல்லா இலட்சியங்களையும், குறிக்கோள்களையும் அடைவதற்கு ஆணி வேராகத் திகழ்வது நேர்மறைச் சிந்தனையே ஆகும். ‘கிராண்ட ப்ரெய்லி’ என்னும் மேலாண்மைத் துறை வல்லுநர் நேர்மறைச் சிந்தனையானது பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையாது ஆனாலும் கூட பிரச்சினைகளை எளிதாகக் கையாளுவதற்கு உதவியாக இருக்கும் என்கிறார்.

    தலையில் காகம் தனது வேலையைக் காட்டிவிட்டால் எரிச்சல் கொள்ளாமல், நல்ல காலம் எருமையால் பறக்க முடியாது என எண்ணுவது நலம். நமது உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் நேர்மறைச் சிந்தனை பெரும்பங்கு வகிக்கின்றது. நேர்மறைச் சிந்தனையினால் நமது மன அழுத்தம், கவலை போன்றவற்றைக் குறைக்க முடியும். நாம் உற்சாகமாகப் பணியாற்றுவதுடன், பிறரிடமிருந்து பணிகளைச் செய்ய வைக்கவும் முடியும்.

    “அவள் அப்படியொன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை

    அவள் அப்படியொன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை”

    உளவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மேலாண்மைத் துறை வல்லுநர்கள் போன்றோர்களால் நேர்மறைச் சிந்தனையைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆராய்ச்சியின் முடிவாக நேர்மறைச் சிந்தனையானது முன்னேற்றத்திற்கு வலுவான காரணியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மனிதனிடமும் நேர்மறைச் சிந்தனையும், எதிர்மறைச் சிந்தனையும் கலந்தே இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக நேர்மறைச் சிந்தனையை வளர்க்க முடியும். தன்னம்பிக்கை வளரும். வேப்பம்பூவில் சிறு தேன் துளியாவது இருக்கும்.

    வணிகம் மற்றும் மேலாண்மைத் துறையில் நேர்மறையான எண்ணங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. சுமூகமான பணியிடம் அமைவதற்கும் ஒற்றுமையாக பணியாற்றுவதற்கும் இது உதவியாக இருக்கும். போட்டி பொறாமைகள், மன அழுத்தம், கவலை போன்றவற்றைக் குறைக்கலாம். நெகிழுந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவற்றை அதிகரிக்கலாம்.

    கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் புரிந்து கொள்ளுவதற்கும், பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கும் நேர்மறைச் சிந்தனை பயன்படும்.

    எல்லா மனிதர்களும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான திறமைகளை வெளிப்படுத்த இயலாது. நடத்தைகளும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நிகழ்வின் அடிப்படையில் எந்தத் தீர்மானமும் எடுக்காமல் இருந்தால் நல்லது.

    (+) x (+) = +

    (+) + (+) = +

    பூவா? முள்ளா? உங்கள் சாய்ஸ்!

    புன்னகையா? கண்ணீரா? உங்கள் சாய்ஸ்!

    மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள்.

    மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

    1.         போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

    2.         நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

    3.         உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

    4.         பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

    5.         பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

    6.         சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

    7.         அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

    8.         இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

    9.         கஷ்டம் தான் … ஆன முடியும்.

    10.       நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.

    11.       இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

    12.       விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

    13.       விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

    14.       ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.

    15.       இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

    16.       இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

    17.       இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

    18.       இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

    19.       முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

    20.       கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

    21.       அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

    22.       விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

    23.       திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

    24.       சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

    25.       ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

    26.       உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

    27.       ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

    28.       கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

    29.       எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

    30.       அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

    31.       அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

    32.       நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

    ஆம், நண்பர்களே,

    • வீழ்வது கேவலமல்ல,

    வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்

    • ஒன்பது முறை விழுந்தவனுக்கு

    இன்னொரு பெயர் உண்டு-

    எட்டு முறை எழுந்தவன்

    எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

    தன்னம்பிக்கை மீது நம்பிக்கைக் கொள்

    உயர்வாய் ஒன்றினைச் செய்
    “மனிதன் பிறக்கும் பொழுது பெண்ணின் வயிற்றுக்குள் பிறக்கிறான். இறக்கும் பொழுது மண்ணின் வயிற்றுக்குள் மடிந்து போகிறான்” என்றால் அவன் இருக்கும்பொழுது எதில் சிறப்பு பெற்றான் என்பதைப் பொறுத்து தான் அவனுடைய வாழ்க்கை வளம் பெறுகிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து, நல்லனவற்றைப் பகுத்தறிந்து சிரமங்களைக் கடந்தவர்கள் தாம் இன்றைய சாதனையாளர்கள். சிந்தனை நல்லவை ஆனால் சாதனை சாத்தியம் ஆகும். வாழ்வின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஒரு சிறப்பு வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் சிந்தனை விரியும். சாதனை மலரும். உளிபடாத கல் சிலையானதாக சரித்திரம் இல்லை. உழைப்பில்லாத கனவும் நனவானதாக சரித்திரமில்லை. உழைக்கத் தகுதியற்றவன் உலகில் பிழைக்கத் தகுதியற்றவன்.
    தடைக்கல்லும் படிக்கல்
    வெற்றியும் தோல்வியும் உன் செயல்களைப் பொருத்தே அமையும். “காலம் உன்னை வென்றால் நீயோ காலமாகிவிடுவாய். ஆனால் அக்காலத்தை நீ வென்றால் நீயோ கலாமாகி விடுவாய், அப்துல் கலாமாகி விடுவாய்”. உழை, உழை, உழை. உழைக்காமல் இருப்பது தான் இவ்வுலகில் நீ செய்யும் பிழை. தடைகளைப் பார்த்து தயங்கி நிக்காதே. நீ துள்ளி எழுந்தால் உன் முன் தோற்கும் தோல்வி. மணி முள்ளினைப் போல் மந்தமாய் இராமல் நொடி முள்ளினைப் போல வேகத்தோடு விவேகமாய் இரு. ‘களை மனிதர்களின் புகார்களைப் புறக்கணித்துவிடு, ஏனென்றால் களைகள் எப்போதும் பயிர்களைப் பகைவர்களாகக் கருதும்’. சிந்தனையை விரித்துவிடு. முயற்சிக் குதிரைகளை முடுக்கி விடு. புதிய சூரியனாய் உதித்துவிடு. நீ சூரிய நெருப்பாய் உருவெடுத்தால் பிரச்சனைப் பொறிகள் உன்னைச் சுட்டிடுமா? புலியின் வேகம் உனக்கு இருந்தால் புழுதிக் காற்றும் உன்னை விரட்டிடுமா? நம்பிக்கை கொண்டு விழித்தெழு. உலகத்தை ஜெயித்தெழு.
    வெற்றியின் இரகசியம்
    வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல. ஒவ்வொரு முறை விழும்போதும் விஷ்ப ரூபம் எடுப்பது தான். வாழ்க்கையில் அடிபடும் போது தான் வளர்ச்சியின் அவசியம் புரிகிறது. ஆகவே அடிபடும் போதெல்லாம் அவதாரம் எடு. புதிய சிகரத்தைத் தொடு. தேவைகள் துரத்தும் போதுதான் தேடலின் அவசியம் தெரிகிறது. ஆகவே தேவைகளுக்கு ஈடுகொடுக்க உழைப்பை அதிகப்படுத்து. உபரி நேரத்தை உற்பத்தி நேரமாக்கு. சாதனைத் தீ விறுவிறுப்பாய் எரிய பிரச்சனை என்ற எரிபொருளை பயன்படுத்து. இது தான் வாழ்வில் வெல்ல வெற்றியின் இரகசியம். உழைப்பு வயல்களில் வியர்வையை விதைத்தால் வெற்றியை அறுவடை செய்யலாம். முயற்சியை மூச்சாக்கி வெற்றியை உனதாக்கு.
    எதையும் சாதிக்கலாம்
    தகுதியின் விளிம்பில் நீ தயாராக இருந்தால் வாய்ப்புகள் உன்னிடம் வாய்ப்புக் கேட்கும். வேகத்தின் உச்சியில் நீ விவேகத்தை அமர்த்தினால் வெற்றிகள் உன்னிடம் முத்தம் கேட்கும். மனிதனே எவ்வாறு விடியாத இரவொன்று கிடையாதோ அதுபோல் நீ முயன்றால் முடியாத செயலொன்றும் இருக்காது. வாழ்க்கையில் உங்களுக்கென்று ஓர் இலக்கு இருக்க வேண்டும். நீங்கள் இலக்கினை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றிப் பயணத்திற்கு ஒரு முடிவில்லை. உள்ளத்தில் உற்சாகமும் சாதனை வேட்கையும் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் “இன்று புதிதாகப் பிறந்தோம்” என்ற புத்துணர்வோடு எழுந்து மகிழ்வோடு பணிகளைத் தொடங்குங்கள். கழுகுக்குப் பார்வை மிகவும் கூர்மை. மிக நுட்பமான உயரப்பார்வை. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தரையில் கிடக்கின்ற இரை அதன் கண்ணுக்குத் தப்புவதில்லை. மனதைச் சிதறவிடாமல் எவனுடைய பார்வை லட்சியத்தின் மீது இருக்கிறதோ அவன் வெற்றியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். நண்பனே,
    நீ நினைப்பதை சாதித்துக் காட்டு
    உன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கு

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    திருச்சியில்…
    நாள் : 14.11.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம் : தமிழக ஐகப் இல்லம்

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    ஈரோட்டில்…
    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் சௌபாக்கிய வெட் கிரைண்டர்ஸ்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
    நாள் : 28.11.2010,
    ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 6 மணி
    இடம் : மாயாபஜார் ஹால்

    Continue Reading »