– 2010 – November | தன்னம்பிக்கை

Home » 2010 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஏய் தோழா முன்னால் வாடா

    பழையகதை, புதிய கருத்து

    இந்த வாரக்கட்டுரைகளில் நமக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ஒரு பழைய கதைக்குள் இருக்கும் புதிய கருத்தைப் பற்றி பார்ப்போம்.

    முயலுக்கும், ஆமைக்கும் நடந்த ஓட்டப்பந்தயக் கதை நாம் அறிந்ததுதான்.

    முயலுக்கும் ஆமைக்கும் இடையே ஓட்டப்பந்தயத்தில் யார் முதலில் வருவார்கள் என்று வாக்குவாதம் நடந்தது.  ஓட்டப்பந்தயம் வைப்பது என்று முடிவானது.  ஓட்டப்பந்தயம் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் முயல் ஓட்டப்பந்தய எல்லைக்குப் பக்கத்தில் இருந்தது.  நாம் சிறிது நேரம் தூங்கினாலும் கூட. சுலபமாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தது.  நன்றாக உறங்கியும் விட்டது.  மெல்ல நடந்து முன்னேறிய ஆமை இலக்கை அடைநது வெற்றி பெற்றது.

    இதில் இருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

    நிதானமாக செயல்பட்டால், வெற்றி இலக்கை முதலாவதாக அடையலாம் என்பதுதான் நாம் அறிந்து கொண்டது.

    மேல் கூறிய கதையைத்தான், ஆண்டாண்டு காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.   இதற்குப் பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

    உறங்கிக் கண் விழித்த முயல் மிகவும் வேதனை அடைந்தது. ஏன் தான் தோல்வி அடைந்தோம் என்று ஆராய்ந்தது.  தான் மிகவும் மெத்தனமாக இருந்தால்தான் தோற்றுப்போனோம் என்று முடிவு செய்தது.  தான் எதையும் லேசாக எடுத்துக் கொள்ளலாமல், முழு மனதோடு போட்டியில் கலந்து கொண்டால், ஆமையை சுலபமாக வென்றுவிடலாம் என்று நினைத்தது, மீண்டும் ஆமையை சந்தித்து மற்றொரு போட்டி வைத்துக் கொள்ளலாம் என்று கூறியது.

    இந்தமுறை எந்தத் தடையும் ஏற்படாமல் முயல் வேகமாக ஓடி இலக்கை அடைந்து, பல மைல் தொலைவு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

    இதில் இருந்து நாம் அறிவது என்ன?

    வேகமும் விவேகமும் இருந்தால் நிதானமாக செயல்படுபவரை முறியடித்து முன்னேறிவிடலாம் என்பதுதான்.

    உங்கள் ஸ்தாபனத்தில் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் நிதானமாகச் செயல்படுவார், மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்.  அதே போல் இருக்கும் இன்னொரு நபர் வேகமாக செயல்படுபவர் இருவரும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் இதில் இரண்டாவதாகக் கூறிய வேகமாகச் செயல்படுபவர் நிச்சயமாக முதலாமவரைக் காட்டிலும் வேகமாக வாழ்க்கையில் முன்னேறி விடுவார் சரிதானே?

    நிதானமாக இருப்பது அவசியம்தான், அதைவிட வேகமாக செயல்படுவது நல்லது.  சரி கதை இத்தோடு முடிந்தது என்று நினைக்கிறீர்களா? இல்லை நண்பர்களே கதை மீண்டும் தொடருகிறது.

    இந்த முறை, தான் ஏன் தோல்வி அடைந்தோம் என்று ஆமை சிந்தித்தது.  எப்படி முயலை ஜெயிப்பது என்று யோசனை செய்தது.  பிறகு முயலை சந்தித்து, மற்றொரு ஓட்டப்பந்தயத்திற்கு ஏற்பாடு செய்கிறது.  இந்த முறை வேறு பாதையில் செல்லலாம் என்று முயலிடம் கூறுகிறது.  முயல் சரி என்று ஒத்துக் கொள்கிறது.

    ஓட்டப்பந்தயம் தொடங்குகிறது.  சிறிது தூரம் வந்த பிறகு முயல் நின்று விடுகிறது.  காணரம் பாதையின் நடுவில் ஒரு பெரிய ஆறு ஓடுகிறது.  என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறது முயல்.  இதற்கிடையில் ஆமை ஆற்றங்கரையை மெல்ல அடைந்து ஆற்றில் இறங்கி, நீந்தி மறுகரையை தொட்டு, இலக்கை அடைந்து வெற்றி பெறுகிறது.

    இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? முதலில் நாம் எதில் சிறந்து விளங்க முடியும் என்பதைக் கண்டுபிடித்து, அதில் உழைக்க வேண்டும்.

    ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் நீங்கள்.  நல்ல பேச்சாளர் என்று வைத்துக் கொள்வோம்.  நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்பங்களை உருவாக்க வேண்டும்.

    அதேபோல், நீங்கள் ஆராய்வதில் வல்லவர் என்றால், ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து, உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

    உங்கள் திறமை எது என்று கண்டுபிடித்து அதில் உழைத்து முன்னேற முற்பட்டால் வெற்றி நிச்சயம்.

    ஆனால் கதை இன்னும் முடியவில்லை.  ஆமையும் முயலும் இப்பொழுது நல்ல நண்பர்கள்களாக மாறி இருந்தனர்.  இருவரும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.  போன முறை இருவரும் சென்ற ஓட்டப்பந்தயதை, இந்த முறை இன்னும் சிறப்பாக வேறு முறையில் செயல்பட முடிவு செய்கின்றனர். இந்த முறை இருவரும் சேர்ந்து செயல்பட முடிவு செய்கின்றனர்.

    ஓட்டப்பந்தயம் தொடங்குகிறது.  ஆனால் இந்த முறை முயல் ஆமையை தூக்கிக்கொண்டு ஆற்றங்கரை வரை ஓடுகிறது.  அங்கே ஆமை, முயலைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் நீந்தி மறுகரையை அடைகிறது.   இப்போது முயல், ஆமையை சுமந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடுகிறது.  இருவரும் ஓரே நேரத்தில், மிகவும் குறைந்த நேரத்தில் இலக்கை அடைகிறார்கள்.  இதுவரை ஏற்படாத திருப்தி இருவருக்கும் ஏற்படுகிறது.

    இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

    நீங்கள் ஒரு பொருளை விற்பதில் கெட்டிக்காரர் என்று வைத்துக் கொள்வோம்.  உங்கள் நண்பர், அந்தப் பொருளை தயாரிப்பதில் வல்லவர் என்று வைத்துக் கொள்வோம்.  இருவரும் சேர்ந்து செயல்பட்டால், தரமான பொருளைத் தயாரிக்கவும் முடியும், அதே சமயம் அப்பொருளின் விற்பனையையும் அதிகரிக்க முடியும்.  சேர்ந்து செயல்பட்டால் இருமடங்காகும்.

    இந்தக் கதையில் இருந்து நாம் அறிவது என்ன?

    • தோல்வி அடைந்தால் தளர்ந்து போகாமல் அடுத்தது என்ன என்று சிந்தியுங்கள்.
    • வேகமும், விவேகமும் நிச்சயமாக நிதானத்தை தோற்கடிக்கும்.
    • நமது திறமையை கண்டறிந்து, அதில் உழைக்க வேண்டும்.  எதிரியை எதிர்த்து போராடாமல் சூழ்நிலையை எதிர்த்து பேராடுங்கள்.
    • இணைந்து செயல்பட்டால், தனித்து செயல்படுவதைக் காட்டிலும் அதிகமாக பயன் அடையலாம்.

    இதனை எல்லாம் மனதில் கொண்டு, வெற்றியை நோக்கி முன்னால்

    வாருங்கள் தோழர்களே!

    சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்

    27. முடிவுகளின்  விளைவுகளையும்  ஏற்றுக் கொள்ளுங்கள்

    நீங்கள் வாகனத்தினை ஓட்டிச் செல்லும் போது, வேலை சுலபத்திற்காக கிளச்சினை  அழுத்தாமல்; கியரை போடுவீர்களானால்,கியர்பாக்ஸ் உடையவும் வாய்ப்பு உள்ளது. அப்படி உடைந்தால் உங்கள் தவறான முடிவால் வந்த அந்த எதிர்மறை விளைவிற்கு நீங்கள் பொறுப்பேற்க தயாராக , இருக்க வேண்டும். அப்படி பொறுப்பேற்க தயாரானால் எல்லா நொடிப்பொழுதும் சந்தோஷ மணித்துளிகளே.சந்தோஷ மனநிலை சாதனைகளை சாத்தியமாக்குகின்றது. அப்படி  அல்லாமல், நான் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் (சரியா (அ) தவறா), குறிப்பிட்ட (எதிர்பார்க்கும்) விளைவு மட்டுமே விளைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகப் பெரிய முட்டாள் தனம். உங்கள் விருப்பம், அறிவு அல்லது அனுபவத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு எடுத்து செயல்படுவீர்களானால்,எந்த (நேர்மறை (அ) எதிர்மறை) விளைவு வேண்டுமானாலும் விளையலாம்.

    அப்படி ஏற்படும் விளைவுகளை ஏற்றுகொள்ளும் மனநிலையை கொண்டிருக்கா விட்டால்,ஐய்யய்யோ நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லையே, யாரும் நான்  சொல்வதை கேட்க மாட்டேங்கிறார்களே, எல்லோரும் எனக்கு எதிராக செயல்படுகிறார்களே, என மன வருத்தம் அடைவதுடன் நிம்மதியை , இழந்து, அமைதியின்றி, சாதாரண வாழ்வு வாழ வேண்டியிருக்கும்.

    எடுத்துக்காட்டாக:  ஒரு தாய் அல்லது தந்தை தன் மகன் (அ) மகளை தான் விரும்புவது போல் எப்பொழுதும் 100/100 வாங்க வைக்க வேண்டும் என்று அடி உதை கொடுக்க ஆரம்பிக்கின்றார் ., இவர் அடி உதையின் பின்விளைவாகிய மகன் (அ) மகளின் மனநிலை பாதிப்பு அல்லது உடல்நிலை பாதிப்பு என என்ன நிகழ்ந்தாலும்  பரவாயில்லை, குழந்தை ரேங்க் வாங்கியே தீர வேண்டும் என்ற கண்மூடிதனமான எதிர்பார்ப்புடன் முடிவெடுத்து செயல்படுகிறார்.

    பெற்றொரின் அடி, உதை, திட்டுகளைத் தாக்கு பிடிக்க முடியாத சில குழந்தைகள், ஒரு கட்டத்தில் (பலசாலியாக , இருந்தால்) திருப்பி தாக்க ஆரம்பிக்கின்றனர்

    மற்றும் சில குழந்தைகள் அந்த வலி வருத்தத்தினை மனதிற்குள்ளேயே அமுக்கி, அமுக்கி வைக்க ஆரம்பிக்கின்றனர். அவர்களுக்கு சில வருடங்களுக்கு பின் மன நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. படிப்பையே வெறுக்கும் வாய்ப்பு உள்ளது. , இப்போது , இத்தகைய பாதக செயலை செய்த தாய் (அ) தந்தை தங்கள் தவறான முடிவினால் தான் தன் குழந்தைக்கு , இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளாமல், பழியை கணவன் (அ) மனைவி (அ) ஆசிரியர் (அ) பள்ளி(அ) தொலைகாட்சி (அ) கணிணி (அ) நண்பர் என  யாரேனும் ஒருவர் மீது போட்டுவிட்டு தப்பிக்க முயற்சிக்கிறார். பிரச்சனை மேலும் பெரிதாகின்றது.

    ஆகவே நண்பர்களே , இது போன்ற பிரச்சினைகளை(அ) எதிர்மறை விளைவுகளை தடுக்க வேண்டுமா?

    நீங்கள் எடுக்கும் முடிவுகளை முழுமையாக ஆய்ந்து அதன்பலன்கள்,விளைவுகள,எதிர்விளைவுகள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு, முடிவுகளை எடுத்து செயலில் , இறங்குங்கள். எடுத்த முடிவின் விளைவுகள்,நன்மை, தீமைகளுக்கு நிங்களே பொறுப்பேற்றுகொள்ளுங்கள்.

    இப்படி செயல்பட்டால் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்க  ஆரம்பிக்கும். கிடைத்தாலும் ,கிடைக்காவிட்டாலும் சந்தோஷமும் சாதனைகளும் என்றென்றும் நம் வாழ்வில் நிலைத்து நிற்பது திண்ணம்;.

    8. சகிப்போம் சாதிப்போம்

    சகிப்புத் தன்மை என்பது அடுத்தவரின் கருத்துக்கள் சுதந்திரம் மற்றும்  உணர்வுகளை மதிக்கும் மன முதிர்வினையே குறிப்பிடுகின்றது.

    நானே சிறந்தவன் என் கருத்துகளே உயர்ந்தவை, என் நம்பிக்கைகளே உண்மையானவை, , இதை அனைவரும் ஏற்று கொள்ளவேண்டும் என்ற ஆணவமே, , இன்று வரை நடந்துள்ள பல்வேறு அழிவுச்செயல்களுக்கு அடிப்படையாக அமைந்து வந்துள்ளது.

    சகிப்புதன்மைக்கு அடிப்படை மனமுதிர்ச்சி அடைந்த ஒருவர் மன துணிவுடன் அடுத்தவரை அவர்களின் உண்மையான , இயல்புகளோடு அப்படியே ஏற்றுகொள்ளும் பக்குவம் அடைந்தவர் ஆவார்.

    ஒருமுறை புத்தரின் போதனைகளை மக்களுக்கு விளக்குவதற்காக புறப்பட்ட ஒரு சீடரை நோக்கி அன்பரே தாங்கள் செல்லும் , இடத்தில் மக்கள் உங்களை திட்டி துன்புறுத்தி, அவதூறு பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்

    அதற்கு அந்த சீடர், பரவாயில்லை , இவர்கள் என்னை அடிக்காமல் விட்டுவிடுகிறார்களே” என்று சந்தோஷம் அடைவேன் என்றார்.

    சரி அவர்கள்” தங்களை உதைக்க ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்” என்றார் புத்தர்.

    சீடர் பரவாயில்லை “ஆயுதங்களால் கடுமையாக தாக்கவில்லையே” என்று மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

    மீண்டும் புத்தர், சரி,இப்போது ஆயுதங்களால் கொலை செய்ய எத்தனிக்கின்றனர்” என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்.

    சீடர் “பிறவித்தளையிலிருந்து விடுபட்டு முக்திக்கு வழிவகுக்க உதவிபுரியும் அந்த கிராமமக்களை நன்றியோடு போற்றி புகழ்வேன்” என்றார்.

    , இந்த  சீடருடைய மனநிலையே முதிர்ச்சி அடைந்த மனநிலையாக கூறப்படுகிறது.

    ஷகவே சகிப்புத் தன்மையின் உச்ச கட்டம் என்பது அடுத்தவர்கள் நமக்கு தரும் துன்பத்தை புன்னகையுடன் ஏற்று கொள்வதே ஆகும்.

    அன்னைத் தெரசா அவர்கள் ஒரு முறை நம்முடைய சமூகத்திற்காக ஒரு  செல்வந்தரிடம் உதவி கேட்டு சென்ற போது ,செல்வந்தர் செய்த அவமரியாதையை  சகித்து அவரிடமே, , இந்த அவமரியாதை எனக்கு வழங்கப்பட்ட பங்கு ஏற்றுக்கொள்கிறேன். , இனி ஆதரவற்றோர் மற்றும் தொழுநோயாளிகளுக்காக உதவிகேட்டு வந்துள்ளேன் அவர்களுக்கான பங்கினை(உதவிகளை) வழங்குவீர்களாக என கேட்டார் , இந்த சகிப்புத்தன்மை அந்த செல்வந்தரை அன்னை தெரேசாவின் தீவிர ஆதரவாளராக மாற்றிவிட்டது மட்டுமல்ல அத்தகைய சகிப்புதன்மை அன்னை த் தெரேசாவை புனிதர் பட்டம்,நோபல் பரிசுடன் உலக வரலாற்றில் , இடத்தினையும் பிடிக்க உதவிபுரிந்தது கண்கூடு.  ஆஷகவே சகிப்புத்தன்மையை வளர்ப்போம் சந்தோஷ சாதனைகளைச்

    சாதிப்போம்.

    29. செய்யும் தொழிலை நேசிப்போம்

    அடிமைகளின் விடுதலையை நேசித்த ஆபிரகாம் லிங்கன்  விமானம் என்ற கண்டுபிடிப்பை நேசித்த  ரைட் பிரதர்ஸ், , இந்திய சுதந்திரத்தை நேசித்த மகாத்மா காந்தி, பங்கு சந்தையை நேசிக்கும் வாரன்பபட்.

    அமெரிக்க நாட்டின் குடியரசுதலைவர் பதவியை நேசித்த ஒபாமா,

    , இப்படி தாங்கள் ஈடுபட்டிருந்த அல்லது விரும்பிய பணி அல்லது தொழில் (அ) செயல் (அ) குறிக்கோளை  முழுமையாக நேசித்த எத்தனையோ சாதரண மனிதர்கள் சரித்திர நாயகர்களாக மாறி வரலாறு படைத்திருக்கின்றார்கள்.

    , இன்று உலகம் முழுவதும் சமூக பொருளாதார மற்றும் தொழில் நுட்ப புரட்சியால் மனித சமுதாயம் சீருடனும், சிறப்புடனும் வாழ காரணமாக அமைந்த மின்விளக்கினை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்  ஈடுபட்டிருந்த போது ஆயிரம்  முறைக்கு மேல் தோல்வியை அடைந்தார்.  ஆயினும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும், முன்பைவிட உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் அவரை செயல்பட வைத்தது அவர் செய்து வந்த ஆராய்ச்சி மீது அவர் வைத்திருந்த நேசமே. அதே போன்று தான் டூர் டி பிரான்ஸ் போட்டியில், தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்ற லன்ஸ் ஷம்ஸ்ட்ராங்க் அவர்கள் புற்று நோயை  வென்று உலகம் வியக்கும் அற்புத சாதனையாளராக மாறியதற்கு காரணம் அவர் ஈடுபட்ட செயலாம் மிதிவண்டி பந்தயத்தில் கொண்டிருந்த அதீத காதலே  ஆகும்.

    ஆகவே சந்தோஷத்தோடு சாதனை வாழ்வு வாழ, செய்யும் தொழிலை அல்லது பணியை, ஈடுபட்டுள்ள செயலை முழுமையாக நேசியுங்கள். அத்தகைய நேசம் உங்களை, தோல்விகளை தாண்டி செயல்புரிய வைக்கும்.

    துன்பங்களை தாண்டி மகிழ்ச்சியோடு வாழவைக்கும்.

    தடைகளை தாண்டி தகுதிபெற்றிட உதவிபுரியும்.

    ஏற்படும் அவமானங்களை அழித்த அற்புத சாதனைகளை நிகழ்த்தும் அடிப்படையாக அமையும்.

    ( சாதனையின் சந்தோஷ வழிமுறைகள் தொடரும்)

    உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்…

    “டேய் நடராஜா… போய் அது என்ன வகைன்னு பாத்துட்டு வாடா! சீக்கிரம்!” என்ற மெலிதாய் ஒரு குரல். “சரி முத்து அண்ணா!” என்று படபடவென வயல்வரப்பு வழி ஓடி சென்றான் நடராஜன். வேலிகளைத் தாண்டி அவன் நேராக அருகில் உள்ள முனியன் வயலருகே சென்றான். அங்கே வண்டியிலிருந்து மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டு கொண்டிருந்தன. அங்குள்ள ஓர் மரத்தின் பின் நின்று இதை கவனித்து கொண்டிருந்தான் நடராஜன். யாரோ பார்ப்பதாய் உணர்ந்த முனியன் திரும்பி பார்க்க, அங்கு ஒரு மரத்தின் பின் நடராஜனை கண்டார். “டேய் ராசா! வாடா! ஏன் அங்கேயே நின்னுட்டே? வா!’ என்று முகமெங்கும் புன்னகை மலர்ந்து அழைத்தார் முனியன். நடராஜன் மெதுவாய் அன்ன நடை அழகி போல் நடந்து வந்து முனியன் முன் நின்றான். “ஏன்டா ராசா ஒளிஞ்சு நின்னு பாக்குற?’ என்ற கேள்விக்கு அசட்டுத்தனமாய் சிரித்துவிட்டு திரும்பி பார்த்தான். அங்கே முத்து அண்ணன் நின்று கொண்டு, கண்களை உருட்டிக் கொண்டிருந்தான். நெற்றி சுருங்கின, புருவங்கள் கூர்மையான அரிவாள் போலானது! சட்டென்று திரும்பி, “இல்லன்னா… சும்மாதான் வந்தேன்!’ என்று மறுபடியும் குழைந்து சிரித்தான். சுற்றியும் பார்த்தான். அந்த மூட்டைகள் அங்கே இருந்த ஓர் குடிலுக்குள் சென்று கொண்டிருந்தது. முனியன் கணக்கு புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த குடிலின் முன்னே தண்ணீர் பானை இருந்தது. அதை பார்த்த நடராஜன், முனியனை பார்த்து, “அண்ணே தண்ணி குடிச்சிக்கிறேன்…’ என்று ஒரு இழுவையை போட்டான். “ம்.. போடா, போய் குடிச்சிக்கோ!’ என்று சொல்லிவிட்டு மீண்டும் கணக்கு புத்தகத்தினுள் சென்றார்.

    நடராஜன் மெதுவாய் நடந்து சென்று, தண்ணீர் குடிப்பது போல அந்த மூட்டைகளை கவனித்தான். மூட்டைகள் அடுக்கி வைத்து கொண்டிருந்தனர் வேலையாட்கள். அதில் எழுதியிருப்பதை மேய்ந்தது நடராஜனின் கண்கள். டம்ளரை வைத்து விட்டு, “வர்றேன் அண்ணே!” என்று சிரிப்புடன் சிட்டாய் பறந்தான். அவனை பார்த்து “கிறுக்கு பைய!’ என்று சொல்லி சிரித்துவிட்டு தன் வேலையை கவனிக்கலானார் முனியன். குறுகிய வயல் வரப்பு வழி ஓடி அருகிலுள்ள முத்துவின் வயலை அடைந்தான்.

    “என்னடா? என்னாச்சு?” என்று முட்டை கண்களுடன் நின்றிருந்தான் முத்து. நடராஜன் அங்கே பார்த்த அந்த மூட்டையின் விவரத்தை முத்துவிடம் சொன்னான். அதுவரை அவன் முகத்திலிருந்த பதற்றம் மாறி புன்னகை சிந்தினான். ஒரு வெள்ளை காகித்ததில் நடராஜன் சொல்வதை எழுதிக் கொண்டான். “இதயே ஒரு 20 மூட்டை வாங்கீட்டா, நம்ம வயலுக்கும் தெளிச்சிடலாம் ராசா!’ என்று கொக்கரித்து சிரித்தான் முத்து. அதைக் கண்டு செய்வதறியாது நடராஜனும் சிரிக்க ஆரம்பித்தான்.

    அப்போது யாரோ கடினப்பட்டு இருமும் சத்தம் கேட்டது. நடராஜனும் முத்துவும் திரும்பி பார்த்தனர். முத்துவின் தந்தை துரைசாமி அய்யா வந்து கொண்டிருந்தார். “என்னங்கடா களவாணி பயலுகளா… என்ன நடக்குது? ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு!’ என்று வினவ, நாய் கடி வாங்கியவர்கள் போல் நின்றனர் நடராஜனும் முத்துவும். “இல்லப்பா… சும்மாதான்…’ என்று முத்து இழுத்துக் கொண்டிருக்க, தன் சுருங்கிய கண்களின் மேல் கையை குடையாக்கி பக்கத்து வயலை கவனித்தார் அய்யா. அங்கே முனியன் வயலருகே நடக்கும் வேலையை கவனித்தார் அவர். திரும்பி முத்துவையும் நடராஜனையும் பார்த்தார். இருவரும் தலை குனிந்தனர்.

    உற்றுப் பார்த்தார் அய்யா. தலை நிமிர முடியாமல் தரை கவனித்தனர் இருவர். “களவாணிங்கன்னு சொன்னது சரியாத்தான் போச்சு! முனியன் தோப்புல என்ன உரம் போடுறான்னு திருட்டுதனமா பாக்க வந்திருக்கீங்க? அப்படிதான?’ என்று கடுகடுவென பேசிய அய்யாவிற்கு பதிலளிக்க முடியாமல் நின்றனர் இருவர். “ஒன்னு புரிஞ்சிகுங்கடா… அவன் மண்ணு வேற, நம்மளது வேற! அவன் அவனோட மண்ண பாத்து உரம் போடுறான். அதனால அவனுக்கு விளைச்சல் அதிகம்! நீ அது தெரியாம, எப்பவும் அவன் தோப்புல தொரவுல நடக்குற சமாச்சாரத்த பாத்திக்கிட்டு இருக்க? நீ நல்ல விவசாயின்னா, உன் நிலத்துக்கு என்ன தேவைன்னு பாரு! உன் நிலத்த கவனி! அடுத்தவன் அவன் விசியத்த பாத்துக்குவான். அவன் போட்ட உரமேதான் நான் போடுவேன்னு கங்கனம் கட்டீட்டு போட்டி மனசோட திரிஞ்ச… உன் நிலம் தான் பாழா போகும்! முதல பட்டணம் போய்… ம்ம்ம்… நம்ம மண்னை கொஞ்சம் எடுத்திட்டு போ! அவுங்க சொல்லுவாங்க… நமக்கு எது சரியா வரும்ன்னு! புரிஞ்சிதா?’ என்று பொறிந்து தள்ளியவருக்கு சரியென்று சொல்ல தலை நிமிர்ந்தனர் இருவர்.

    அப்போது ஒருவன் அவர்களை நோக்கி ஓடி வந்தான். “அய்யா முனியன் அண்ணே அனுப்புனாரு! ஒரு 30 உரம் மூட்டை இருக்கு. அது உங்க வயலுக்குத்தான் சரியா வருமாமா! பட்டணத்து சந்தையில வாங்கி வந்திருக்காரு. உங்க கிட்ட கேட்டிட்டு வர சொன்னார்…’ என்றான் மூச்சிரைக்க. அவனைப் பார்த்து விட்டு திரும்பி நடராஜனையும் முத்துவையும் பார்த்தார். அந்த வேலையாளை பார்த்து, “சரிப்பா… மூட்டைக்கு எவ்வளோ சொல்றான் முனியன்?” என்ற கேள்விக்கு அந்த வேலையாள் பதிலளித்து விட்டு நின்றான். அய்யா சிரித்தார். ஒரு கும்பிடு வைத்து விட்டு குடுகுடுவென வரப்பு வழி ஓடி சென்றான் அவன். மீண்டும் ஒரு முறை அய்யா திரும்பி நடராஜனையும் முத்துவையும் பார்த்தார். அவர்கள் பேச்சற்று நின்றிருந்தனர். ஒரு சிரிப்புடன் அவர்கள் இருவரையும் மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

    கதையும் கருத்தும்

    (1) கவலை

    கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். ‘மதிப்பெண் குறைந்து விட்டது’, ‘கேட்ட சப்ஜெக்ட் கிடைக்கவில்லை’, ‘பிடித்த கல்லூரியில் படிக்க வாய்ப்பில்லை’ என்பது போன்ற கவலைகள் படிக்கும் மாணவனுக்கு. ‘வேலை இல்லை’, ‘போதிய சம்பளம் கிடைக்கவில்லை’ போன்ற கவலைகள் படித்த இளைஞனுக்கு.  இப்படி அவரவர்க்கு ஆயிரம் கவலைகள்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமானவர் தாமஸ் ஆல்வா எடிசன்.  எடிசன் பலமுறை தோல்வி கண்டவர். ஒரு முறை எடிசனின் ஆய்வுக்கூடம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.  அந்த நேரத்திலும் கூட தன் மனைவியை அழைத்து ‘அம்மாவைக் கூப்பிடு,  இது மாதிரி ஒரு தீ விபத்தை அம்மா இனிமேல் எங்கேயும் பார்க்க முடியாது’ என்றாராம்.  சோதனைகள் பல வந்த போதும் அவர் மனம் கலங்கியதில்லை. கவலை கொண்டதில்லை.

    நாடு முழுவதும் பேசப்படுபவர். உலக நாடுகளே அண்ணாந்து பார்க்கக் கூடிய அளவுக்கு உயர்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.   அவருடைய மாணவப் பருவத்தில் தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகத்தை விற்கும் அளவுக்கு வறுமையில் இருந்த போதும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டார்.

    ‘மாமனிதன் யாரெனில் எவன் ஒருவன் தவிர்க்க முடியாததை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு அதைப் பொறுமையுடன் தீர்த்துக் கொள்கிறானோ அவன்தான்’ என்கிறார்  தத்துவப் பேரறிஞர் நீட்சே.

    வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் இருக்கும். சில சமயங்களில் துன்பத்தின் காரணமாக கவலை கொள்ள நேரிடும். தவறில்லை, ஆனால் அதை விடாப்பிடியாகக் கொண்டு வாழக் கூடாது.  கவலையே வாழ்க்கையாகி விடக்கூடாது.

    அது ஒரு கிராமம். கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்தார். ஊர் மக்கள் ‘எங்கள் கவலைகள் ஒழிய வேண்டும். நாங்கள் விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று துறவியிடம் வேண்டினார்கள்.

    எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்ட துறவி அடுத்த நாள் அந்த கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார். ‘நாளை பகல் 12 மணிக்கு இந்தக் கிராமத்தில் ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. அந்த நேரம் உங்கள் எல்லா கவலைகளையும் ஒரு கற்பனையான சாக்குப்பையில் கொண்டுபோய் ஆற்றில் போட்டு விடுங்கள்.  பிறகு அதே கற்பனைக் கோணிப்பையில் நீங்கள் விரும்பும் வீடு, நகை, நட்டு அனைத்தையும் அதில் போட்டு வீட்டுக்கு கொண்டு வருவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  உங்கள் கற்பனை பலிக்கும்.

    அதன்படி அடுத்த நாள் மக்கள் தங்களின் பிரச்சனைகளை மூட்டை கட்டி ஆற்றில் போட்டு விட்டு கார், பங்களா, நெக்லஸ் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்து பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார்கள்.

    திரும்பியவர்கள் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்து விட்டது.  கார் வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார் நின்றிருந்தது. மாடி வீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு மாடி வீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை,

    ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம்தான்.  பிறகு, ‘ஐயையோ, நாம் ஒற்றைவட தங்க செயின் கேட்டோம்.  அதுதான் கிடைத்தது.  ஆனால் அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை வடச்செயின் கேட்டு வாங்கி விட்டாளே! நாம் வீடுதான் கேட்டோம்.  ஆனால் எதிர்வீட்டுக்காரர் பங்களா கேட்டு வாங்கி விட்டாரே! நாமும் அது போல கேட்டிருக்கலாமே! சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே’ என்று மீண்டும் கவலைப்படத் தொடங்கி விட்டார்கள்.

    கடல் முழுவதும் நீர், என்றாலும் கப்பல் மட்டும் கம்பீரமாகச் செல்கிறது,  மனம் எனும் கப்பலுக்குள் கவலை என்னும் நீர் புகாத வரை அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கு அளவில்லை.

    (2) கோபம்

    “அழுக்காறு அவா, வெகுளி இன்னாச்சொல்’ அதாவது பொறாமை, பேராசை, கோபம், கடுஞ் சொற்கள் ஆகிய நான்கினையும் ஒதுக்கி வாழ்வதே அறம் என்கிறார் வள்ளுவர்.

    இதில் கோபம் மிகவும் கொடியது. கோபத்தின் போது அமிர்தத்தை சாப்பிட்டாலும் இனிப்பாக இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும்போது மிளகாயைக் கடித்தாலும் காரமாகத் தெரியாது.

    கோபம் தோன்றும் போது மிருக குணம் வெளிப்படும். அப்போது கண்கள் சிவக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். இதயம் படபடக்கும். மூச்சு வாங்கும். கோபம் வந்தால் முக மலர்ச்சியும் அக மகிழ்ச்சியும் அகன்று விடும்.

    கோபம் நிறைந்த மூளையில் பகுத்தறிவு வேலை செய்யாது. கோபம் பகுத்தறிவின் விரோதி.

    தீயினும் கொடியது சினம்.  ‘கொள்ளி’  என்பது நெருப்பிற்கு ஒரு பெயர்.  விறகைப் பற்றிய நெருப்பானது விறகைக் கொண்டே தன்னைக்காட்டி நிற்கும்.  விறகு முழுவதும் எரிந்து அழியும் போது தானும் இல்லாது போகும். அதுபோல மனிதனைப் பற்றிய கோபம் அவன் இயல்பாகிய அன்பையும் அறிவையும் அழித்து விட்டு தானும் இல்லாது போகும்.

    இரும்பிலிருந்தே உருவாகி இரும்பையே அழிக்கும் துரு போன்றது கோபம். அது நம்முள் உண்டாகி நம்மையே அழிக்கும் நோய்க்கிருமி.

    கோபம் என்னும் கொடிய நாகத்தை ‘பொறுமை’ என்னும் மகுடியால் கட்டுப்படுத்த வேண்டும். கோபத் தீயை ‘அன்பு’ என்னும் குளிர் நீரால் அணைத்துவிட வேண்டும்.

    கண்டிப்பு வேறு. கோபம் வேறு. கோபம் வெறுப்பை உண்டாக்கும். கண்டிப்பு ஒழுங்கை உண்டாக்கும். கண்டிப்பு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் கோபம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.

    கோபத்தின் தாக்கத்திற்கு முதலில் ஆளாவது மனம். கோபத்தின் பிடியில் மனம் சிக்கிக் கொண்டால் உடல் முழுவதும் அதற்கு அடிபணிய வேண்டியதுதான்.  அதன் பிடியில் சிக்காமல் மனம் பண்பட்டு விட்டால் கோபம் அடிபணிந்து விடும்.

    ஒரு முறை புத்தர் தனது சீடருடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார்.  புத்தரைப் பார்த்து அந்த வீட்டிலிருந்த பெண்மணி திட்டி விரட்டினாள். தன் குருவைத் திட்டியதால் சீடர் கோபம் கொண்டார்.

    அந்தப் பெண்ணுக்கு சரியான பாடம் புகட்ட சீடர் புத்தரிடம் அனுமதி கேட்டார்.  அவர் ஒன்றும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார்.  நல்ல வெயில், தன் கையிலிருந்த கமண்டலத்தை சீடரிடம் கொடுத்து விட்டு ஓய்வெடுத்தார்.

    மீண்டும் மாலையில் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது சீடரின் கையிலிருந்த கமண்டலத்தைப் பார்த்த புத்தர் ‘இது யாருடையது?’ என்று கேட்டார். அதற்கு சீடர் ‘சுவாமி! இது உங்களுடையது’ என்றார்.

    உடனே புத்தர், அந்தக் கமண்டலத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்து விட்டு ‘இல்லை, இதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேன். அது உன்னுடையதுதான்’ என்று திரும்பவும் சீடரிடம் கொடுத்து விட்டார்.

    அன்று இரவு ‘இந்தக் கமண்டலம் யாருடையது?’ என்று மீண்டும் கேட்டார்.  அதற்கு சீடர் ‘சுவாமி, இது என்னுடையது!’ என்றார். புத்தர் சிரித்துக் கொண்டே இன்று மாலை ‘இது உங்களுடையது’  என்றாய்.  இப்போதோ, ‘இது என்னுடையது’ என்கிறாய்,

    ‘சுவாமி, கமண்டலத்தைத் தாங்கள் எனக்கு பரிசாகக் கொடுத்து விட்டதாகச் சொன்னீர்கள்.  நானும் அதை ஏற்றுக் கொண்டதால் ‘என்னுடையது’ என்றேன்.  ஆனால் முதல் முறை அதை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை,  ஆகவே, ‘உங்களுடையது’ என்றேன்.

    புன்னகையுடன் புத்தர் சொன்னார். ‘இதுபோல்தான் அந்தப் பெண்மணி திட்டிய வார்த்தைகளை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை.  அது அந்தப் பெண்மணிக்கே சொந்தம்.  அதனால்தான் நீ பாடம் புகட்ட அவசியம் இல்லை என்று விட்டு விட்டேன்’ என்றார்.

    கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!

    (3) அனுபவம்

    வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி புரிவது அனுபவ அறிவு.  அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக் கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு உதவும். அனுபவம் என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் பெற்றதாகவும் இருக்கலாம்.

    ‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல – நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது தான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான் பாடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்குக் காலம் போதாது.

    பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்ப்பது வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்பது வேறு.  மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது, அதில் அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம். தவறான போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம் இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ, அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.

    அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு,  வயது ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும் அதிகரிக்கும்.  வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு கணக்கிடுவது அல்ல. எத்தனை தழும்புகள், விழுப்புண்கள், வடுக்களை பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.  வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது. Life is nothing but Memories – வாழ்க்கை என்பது வெறும் நினைவுகளைக் கொண்டது.  ஓடி ஓடி உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில் அசைபோட்டுப் பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க வேண்டும்.

    வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’ எனப்படும் இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும். அரசன் நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை வேண்டுமானாலும் கொன்று வந்து அரண்மனையில் குவிக்க முடியும்.  ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை.  வில்லெடுத்து தானே வேட்டைக்குச் செல்கிறான்.  எந்த நிமிடத்தில், எந்த கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும் என்று தெரியாத நிலை,  என்றாலும் அத்தகைய அச்சம் நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம் இருப்பதால்தான் அரசன் வேட்டைக்குச் செல்கிறான்.  இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.

    ‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான விலை கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். ‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழிநடக்கலாம்’ என்கிறார் மற்றோர் அறிஞர்.

    அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்துவிட்டு, அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.

    பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.  காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.  மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.

    தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.  வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய் எதையோ பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி, ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டது.

    அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய் ‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன். புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்,  எனக்கு கொஞ்சம் புல் கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு பசியாறுவேன்’ என்றது.

    அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும் என்கிறாயே! என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான் நீ என்றால் நான் உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில் நுழைந்து ஓநாய் பக்கம் போயிற்று. உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

    பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

    உடலினை உறுதிசெய்

    உடல் பருமனான மனிதன் ஒவ்வொரு நாளும்

    பலமுறை மரணத்தைத் தழுவுகிறான்

    – ஷெல்லி போவே

    உடல் பருமன் ஒரு நோய்’ என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. உடல் பருமனாக இருப்பதுதான் உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி என்று நம்புகிறார்கள். இந்தத் தவறான நம்பிக்கையை மாற்றுவது இந்தப் புத்தகத்தின் ஒரு நோக்கம் ஆகும்.

    உடல் பருமன் என்றால் என்ன?

    ஒவ்வொருவருடைய உடலுக்கும் விரும்பத்தக்க எடை என்று ஒன்று உண்டு. அதைக் கண்டுபிடிக்க வழியும் உண்டு. நமது உயரத்திலிருந்து (சென்டிமீட்டரில்) 100ஐக் கழித்தால் வரும் எண்ணே (கிலோ கிராம்களில்) அந்த எடை.

    உங்களது உயரம் 165 செ.மீ. என்றால் 165லிருந்து 100ஐக் கழியுங்கள். உங்களின் விரும்பத்தக்க எடை 65 கிலோ ஆகும். உடல் பருமனாக உள்ளதா, இல்லையா என்று பார்க்க வேறு பல அளவுகளும் உண்டு. அவையாவன,

    Body Mass Index (BMI)

    எடை (கிலோ கிராமில்)

    BMI    =          —————————-

    உயரம் (மீ)2

    உங்களது எடை 72 கிலோ, உயரம் 170 செ.மீ. என்றால், உங்களது

    72           72

    BMI    =          —–  =   ——-   =   24.91

    1.702     2.89

    ஒருவரது BMI 23க்குள் இருப்பது ஆரோக்கியமானது. இந்த அளவுகோலை வைத்து உடல் பருமனை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

    உடல் பருமனை அளவிடும் இன்னொரு முறை

    ஆ. Waist-Hip Rate: இது வயிறு-இடுப்பு விகிதம் ஆகும். இவ்விகிதம் ஆண்களுக்கு 1.0 எண்ணிற்கு குறைவாகவும், பெண்களுக்கு 0.85 எண்ணிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

    எடுத்துக்காட்டாக, வயிறு பகுதி 80 செ.மீ. என்று வைத்துக் கொள்வோம். இடுப்பு பகுதி 80 செ.மீ. என்றால் வயிறு-இடுப்பு விகிதம் 80  / 80 = 1. ஒருவருக்கு வயிறு 100 செ.மீ. இடுப்பு 80 செ.மீ. என்றால் வயிறு-இடுப்பு விகிதம் 100 / 80 = 1.25.

    சுருங்கச் சொன்னால், வயிற்றுப் பகுதியின் அளவு இடுப்பின் அளவை விடக் குறைவாக இருத்தல் வேண்டும். வயிற்றுப் (Waist) பகுதி இடுப்புப் (Hip) பகுதியைவிட அதிகமானால் உடல் பருமனாகிவிட்டது என்று பொருள்.

    நான் எங்கு பணியாற்றினாலும் என்னுடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கூறுவதெல்லாம் உடல் எடையைக் குறையுங்கள் என்பதாகும். அப்படி ஓர் உதவி ஆணையரிடம் சொன்னதும் அவர் கோபித்துக் கொண்டார். ‘நான் நன்றாகத்தானே இருக்கிறேன், என்னைப்போல யாராவது சுறுசுறுப்பாக நமது ஆயுதப்படையில் இருக்கிறார்களா? சொல்லுங்கள்’ என்று கேட்டார். பல அதிகாரிகள் எனது வேண்டுகோளை ஏற்று என்னுடன் ஓடினாலும் இவர் வருவதாக இல்லை. பிறகு அவர் பணி மாறுதலில் வேறிடத்திற்குச் சென்றார்.

    சில நாட்கள் கழித்து உதவி ஆணையரின் மனைவி தொலைபேசியில் பேசினார். தனது கணவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று கூறினார். நான் அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முடித்துவிட்டு வெளியில் வந்தனர். உதவி ஆணையர் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். ‘இதயத்தில் மூன்று அடைப்புகள், அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்று கூறினார்கள். ‘அப்பா எப்படி ஐயா இருக்கிறார்? சொல்லுங்க ஐயா’ என்று கேட்டு கதறி அழுதார் MBA படிக்கும் அவரது மகள். நான் என்ன சொல்ல முடியும்? அறுவை சிகிச்சை முடிந்து இருக்கிறது. விரைவில் குணமாகிவிடுவார் என்றேன்.

    அதிகாலை ஐந்து மணிக்கு அந்த உதவி ஆணையர் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்தது.

    இதே போல நான் நேற்று பார்த்த பலர் இன்று இல்லை. காரணம், அதிக பருமன் ………. இதய நோய் …………… ஆஸ்பத்திரியில் மரணம்.

    உடல் பருமனின் விளைவு என்ன?

    உடல் பருமன் அதிகம் கொண்ட நடுத்தர வயது உள்ளவர்கள் பலர் . நான் ஆரோக்கியமாகத் தானே உள்ளேன்? மற்றவர்களைவிட என்னால் வேகமாக நடக்க முடியும். எனக்கு நோய் எதுவும் இல்லை, எதற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டும்? என்று கேட்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வது என்னவென்றால் உங்கள் உடல்நலம் நன்றாக உ;ளளது என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களால் இதைச் சொல்ல முடியுமா? உடல் பருமன் என்ற நிலைத் தொடர்ந்து நீடித்தால் உடலில் என்னென்ன நோய்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதைப் பாருங்கள்.

    1.         சர்க்கரை நோய் – Diabetes

    2.         இதய நோய் – Coronary Artery Diseases (CAD)

    3.         பக்க வாதம் – Stroke

    4.         மூட்டுவலி – Arthritis

    5.         அதிக இரத்த அழுத்தம் – Hypertension

    6.         புற்றுநோய் – Cancer

    7.         மனநோய் – Mental Disorder

    8.         பெண்களுக்கு மலட்டுத் தன்மை – Infertility

    9.         குடலிறக்கம் – Hernia

    10.       பித்தப்பை கல் – Gall Stone

    இதில் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர 30 சதவிகிதம் அதிகம் வாய்ப்புள்ளது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முன் காலத்தில் காலரா, பெரியம்மை, போலியோ, மலேரியா, டெங்கு போன்ற பலவித கொடிய நோய்கள் (Epidemic Disease) இருந்தன. ஆனால் அவைகளை ஒழிக்கும் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு இன்று நாம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறோம். அம்மை நோய்க்கான தடுப்பு ஊசி கண்டுபிடித்த எட்வெர்ட் ஜென்னர், ராபிஸ் என்னும் வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லுயி பாஸ்டர், போலியோ நோய்க்கு மருந்து கண்ட ஜோனாஸ் சால்க் ஆகியோர்கள் மனித குலம் நல்வாழ்வு வாழ ஆற்றிய பங்கு எவ்வளவு என்பதை எண்ணிப்பாருங்கள்.

    இவர்கள் இக்கொடிய நோய்களிலிருந்து விடுதலை வாங்கித் தந்துள்ளனர். இந்நோய்களுக்கு நமது உடலில் நிரந்தர தடுப்பாற்றலை ஏற்படுத்த, இவ்விஞ்ஞானிகள் அற்புத தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த மாபெரும் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இந்நூலின் மூலமாக நாம் நன்றி சொல்லிக் கொள்வோம்.

    இன்றைய உயிர்கொல்லி நோய் மலேரியாவோ, அம்மை நோயோ, போலியோவோ அல்லது பறவைக் காய்ச்சலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் இன்று உலகளவில் பரவியுள்ள எய்ட்ஸ் நோயோ, புற்றுநோயோ கூட அல்ல. இன்றைய தினத்தின் உயிர்க்கொல்லி சர்க்கரை (Diabetes) நோய் ஆகும். இதனை ஒரு Silent Killer என்றும் கூறுவர்.

    சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

    • அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria)
    • அடிக்கடி பசித்தல் (Polyphagia)
    • அடிக்கடி தாகம் எடுத்தல் (Polydypsia)

    சர்க்கரை நோய் என்பது நிரந்தர வளர்சிதை மாற்ற நோய் (Chronic Metabolic Disorder) ஆகும். இதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி (Hyperglycemia) அதன் மூலம் பலவித நோய்களும் வந்துவிடுகின்றன. அவையாவன,

    அ.       இதய நோய் (Cardio Vascular Disease)

    ஆ.       கண் நோய் (Retinopathy)

    இ.       பல் நோய் (Periodontal and other Dental Disease)

    ஈ.         கால் புண் (Foot Infection)

    உ.       சிறுநீரக நோய் (Nephropathy)

    ஊ.      நரம்பு நோய் (Neuropathy)

    சர்க்கரை நோயினால் ஏற்படும் அனைத்து வித நோய்களும் இதய நோயைப் போல மிகவும் மோசமானவைதான். சர்க்கரை நோய் வர ஒரு முக்கிய காரணம் உடல்பருமன். உடல் பருமன் என்ற நோய் இப்போது ஒரு  என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. பணக்கார நாடுகள் என்றல்லாமல் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைக் கூட இந்நோய் பாதித்து வருகிறது. பூமியில் 160 கோடி மக்கள் அதிக எடை (over weight) உள்ளவர். இதில் 40 கோடி மக்கள் உடல் பருமன் உள்ளவர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்து இருக்கிறது.

    உடல் பருமனின் தாக்கம்

    2004 – 2006ம் ஆண்டுகளில் பரிசோதனை செய்யப்பட்ட டில்லி பள்ளி மாணவர்களில் 30 சதவிகிதம் மாணவர்கள் உடல் பருமன் உடையவர்கள் என்று கண்டறியப்பட்டது.  இந்தியாவில் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை நியுஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமாகும். உடல் பருமன் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 15 கோடி என்று National Institute of Nutrition என்ற நிறுவனம் கூறுகிறது. இது மக்கள் தொகையில் 15 சதவிகிதம் ஆகும். இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் குழந்தைகள் கூட அதிக எடையுடனும், பருமனுடனும் உள்ளனர்.

    உடல் பருமன் ஒரு சர்வதேச பிரச்சினை ஆகிவிட்டது. எனவேதான் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் 26ம் தேதி உலக உடல் பருமன் எதிர்ப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    உடல் பருமனைப் பற்றி வெளிநாட்டவர் கவலைப்படுவதைவிட நம் நாட்டவர்கள் அதிகம் கவலைப்பட பல காரணங்கள் உண்டு. இந்தியர்களின் உடல் கூறு மற்றும் மரபுக்கூறு, சர்க்கரை நோய் ஏற்பட ஏதுவானது. அதேபோல் இந்தியர்களின் இதய தமனிகள் (Coronary artery) மிகவும் சிறியன. இதனால் இதயநோய் எளிதில் ஏற்பட்டுவிடும். ஆகவே பருமனாக இருப்பவர்கள் அதிகமாகி 2010ல் இந்தியா உலகின் மாரடைப்புத் தலைநகர் ஆகிவிடும் அபாயம் உள்ளது என்று கூறுகிறது உலக நல நிறுவன (WHO) அறிக்கை.

    இன்று நமக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து அணு ஆயுதங்களில் இல்லை. அது நம்முடைய தட்டில் வைக்கப்பட்ட உணவில் தான் இருக்கிறது. உங்கள் உணவுப்பழக்கமே கூட உங்களின் மிகப்பெரிய எதிரியாக இருக்கக்கூடும். எனவே தான் மீண்டும் வலியுறுத்துகிறேன், உங்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

    நல்ல செய்தி

    ஆரோக்கியத்திற்கு அதிகக் கெடுதல் விளைவிக்கும் உடல்பருமன் என்னும் நோயைப் பற்றி ஒரு நல்ல செய்தியும் உண்டு. அது உடல் பருமனை எளிதில் குறைக்க முடியும் என்பதுதான். உடல் எடையைக் குறைப்பதன் மூலம் பயங்கர நோய்கள் வருவதைத் தவிர்த்து விடலாம். உடல் பருமனாகாமல் இருக்கவும், அப்படி பருமனாகிவிட்டால் அதனைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    1.         உங்களால் குறைக்க முடியும் என்ற ஓர் எடையை இலக்காக வையுங்கள்.

    2.         உங்களால் தொடர்ந்து கடைபிடிக்க முடியும் என்ற ஓர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    3.         சிறிய அளவு உணவு பல முறை உண்ணுங்கள். அளவுக்கு அதிகமான உணவை ஒரு போதும் உண்ணாதீர்கள். தினமும் 100 கலோரிகள் அதிகம் உண்டால் ஓர் ஆண்டிற்கு ஐந்து கிலோ எடை உடலில் கூடும்.

    4.         பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    5.         உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்து விடுங்கள்.

    6.         ஒரு டம்ளர் (200 மி.லி.) சுத்தமான தண்ணீர் தினமும் எட்டுமுறை குடியுங்கள்.

    7.         தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    8.         எட்டு மணிநேரம் உறங்குங்கள்.

    9.         தவறாமல் தியானம் செய்யுங்கள்.

    10.       மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

    11.       நோய் கண்டதும் மருத்துவரை அணுகுங்கள்

    இவை அனைத்தையும் பற்றி விவரித்துவிட்டேன்.

    உடலை ஒல்லியாக வைத்திருப்பதே உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். உடல் ஒல்லியாக இருந்தால் எந்த நோயும் வரவே வராது என்று சொல்ல முடியாது. சிலருக்கு பாரம்பரியமாகவே, மரபணுவில் நோய் (Genes) இருக்கும். அவர்கள் ஒல்லியாக இருந்தாலும் அந்நோய் வந்துவிடும். ஆனால், உடலை ஒல்லியாக வைத்திருப்பவர்கள் அந்நோய் தாக்குதலைத் தள்ளிப்போட முடியும். நோய் வந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். ஆனால், உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இயற்கையில் அவரது மரபணுவில் உள்ள நோய்கள் மட்டும் இன்றி, பிற நோய்களும் உடலில் தொற்றிக் கொள்ளும். நடுத்தர வயது உள்ளவர்கள் ஒல்லியாக இருந்தால் அவர்கள் பருமனாக இருப்பவர்களைவிட 30 சதவிகிதம் அதிகநாள் வாழ்வார்கள். அதுபோல அவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பும் 60 சதவிகிதம் குறைவு.

    விரும்பத்தக்க அளவு எடை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அந்த எடையில் உடலைப் பராமரிக்க வேண்டும். தினமும் எடையைப் பார்க்க வேண்டும். அளக்கும் நாடா ஒன்றை வாங்கி வயிற்றுப் பகுதியையும், இடுப்புப் பகுதியையும் அளந்து பார்க்க வேண்டும். எடை அதிகரித்துவிட்டால் அத்தியாயம் 3ல் கண்ட உணவு முறையையும், அத்தியாயம் 4ல் கண்ட உடற்பயிற்சியையும் மேற்கொண்டு எடையைப் படிப்படியாக குறைக்க வேண்டும்.

    அதிரடி எடைக்குறைப்பு ஆபத்தானது

    இரண்டே வருடத்தில் 10 கிலோ எடையைக் குறைத்துக் காட்டுகிறோம் என்ற விளம்பரங்களைப் பார்க்கிறோம். ஒரு பருமனான நபர் பின்னர் ஒல்லியாக மாறிவிட்ட படமும் விளம்பரம்படுத்தப் படுகின்றது. உடல் பருமன் உள்ளவர்கள் பலரும் இந்நிலையங்களுக்குச் செல்கிறார்கள். இதில் பல வித ஆபத்துகள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் மலைப்போல் குவிந்துள்ளன.

    விரதம் (Fasting)

    உடல் எடைக் குறைப்பதாக கூறி விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் உடலில் எந்த எடையைக் குறைப்பார்கள் என்று கூறுவது இல்லை. வெறும் எடையை குறைப்பார்கள் அவ்வளவுதான். பருமனாக இருப்பவர்களுக்கு உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்தது என்றால் வரவேற்கத்தக்கதே. ஆனால் பட்டினிக் கிடப்பதன் மூலம் அல்லது தினமும் ஒரு வேளை மட்டும் உண்பதன் மூலம் உடலில் உள்ள நீர் மற்றும் புரதத்தின் அளவு குறைந்து, அதன் மூலம் தசைகளின் அளவும் குறைந்து விடுகிறது. குறைக்கப்பட வேண்டிய கொழுப்பு உடலில் அப்படியே இருந்து விடுகிறது. குறைக்கப்படக் கூடாத செல்களும் நீரும் குறைந்து விடுகின்றன.

    விரதம் இருந்து ஒருவர் இரண்டு கிலோ எடை குறைத்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் உடலில் எவற்றையெல்லாம் இழந்திருப்பார் என்பதைப் பார்ப்போம்.

    அ. இழந்த உடல் எடை         – 2 கிலோ

    ஆ. இழந்த நீரின் அளவு – 4 கிலோ

    இ. சம்பாதித்த கொழுப்பு – 3 கிலோ

    ஈ. இழந்த தசைகள் – 1 கிலோ

    விரதத்தின் மூலம் 4 கிலோ நீரையும், 1 கிலோ தசையை இழந்த இவர் அதே விரதத்தின் மூலம் 3 கிலோ கொழுப்பையும் உடலில் சேர்த்துக் கொண்டு விட்டார். இதில் 2 கிலோ எடை குறைத்தது ஒன்றும் விரும்பத்தக்க எடைக் குறைப்பே அல்ல. இன்னும் சொல்லப் போனால் இதனால் பாதிப்பே அதிகமாக இருக்கிறது. எனவே, அதிரடி எடைக் குறைப்பு செய்யாமல் இருப்பதே மேல்.

    எடை குறைக்கச் சென்றவர் மிகவும் பலவீனம் ஆவதோடு மட்டுமல்லாமல், பிற்காலத்தில் கொழுப்பைக் குறைக்கத் தேவையான தசைகள், தசைகளில் உள்ள செல்கள், என்சைம்கள், நீர் ஆகியவற்றை இழந்து வீடு திரும்புகிறார். இதனால், இந்த பட்டினி படலம் முடிந்து வழக்கமான உணவு உண்ணத் துவங்கியதும் உணவுப் பொருளிலுள்ள கொழுப்பு எரிந்து சக்தியாக மாற்றத் தேவையான என்ஸைம்கள் மற்றும் செல்கள் இல்லாததால் கொழுப்பு அதிக அளவில் உடலில் சேமிக்கப்படுகிறது. இவர் முதலில் இருந்த எடையை விட அதிகம் எடையுடையவர் ஆகிவிடுவார். அது மட்டுமல்லாமல், பல நாட்கள் விரதம் இருக்கும் போது உணவிற்காக ஏங்கிய இவர், எடைக் குறைந்ததும், வழக்கத்தை விட அதிகமாக உண்ண ஆரம்பித்துவிடுவார். இதனால் இந்த அதிரடி எடைக் குறைப்பு நிலையத்திலிருந்து விடுபட்டதும் இவர் எடை இதற்கு முன்னதாக இருந்த எடையை விட அதிகமாகி விடுகிறது.

    விரதம் வேண்டாம்; உடற்பயிற்சி போதும்

    எனவே விரதம் இருப்பதைத் தவிர்த்து அளவான எல்லா சத்துகளும் அடங்கிய உணவினை உட்கொண்டு ஏரோபிக் உடற்பயிற்சி (Aerobic Exercise) என்ற வகை உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். (இதைப் பற்றி அத்தியாயம் 4ல் விவரிக்கப்பட்டிருக்கிறது). எடையைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது, காலையில் எழுந்ததும் கால்களில் ஷூவை மாட்டிக் கொண்டு வீட்டின் முன் கதவைத் திறந்து ஓட வேண்டியது தான். தேவைக்கு அதிகமான கொழுப்பு உங்களைவிட்டு ஓடி விடும். ஒரு வாரம் ஒரு கிலோ எடை குறைப்பதே போதுமானதாகும்.

    எந்த அதிரடி எடைக் குறைப்பு நிறுவனமும் ஒரு வாரம் ஒரு கிலோவிற்கு மேல் எடையைக் குறைத்துக் காட்டுகிறோம் என்றால் அதை நம்பாதீர்கள். ஏனென்றால் நீங்கள் மிதமான உணவு உண்டு போதுமான உடற்பயிற்சிகள் செய்தால் கூட உங்கள் உடலில் ஒரு கிலோவிற்கு மேல் கொழுப்பு கரைவதில்லை. வாரத்திற்கு ஒரு கிலோவிற்கு மேல் எடை குறைந்து விட்டது என்றால் அது கொழுப்பு கரைந்ததால் ஏற்பட்ட எடைக் குறைவு அல்ல. இந்த எடைக்குறைப்பு உடலில் உள்ள நீர் மற்றும் தசைகள் குறைந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும் எடை வீழ்ச்சியே அன்றி வேறொன்றாக இருக்க முடியாது.

    எனவே, நியாயமான எடைக் குறைப்பு நிலையங்களுக்குச் செல்வதாக இருந்தால் உங்கள் உடல் எடையை எடை இயந்திரத்தில் பார்ப்பதைப் போல இன்னொரு முறையையும் கையாளுங்கள். எடை குறையும்போது நீங்கள் அணிந்திருந்த ஆடை தளர்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். இடுப்பைச் சுற்றி அணிந்திருந்த ஆடை தளர்ந்தால்தான் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு கரைந்திருக்கிறது என்று பொருளாகும்.

    கார்போஹைட்ரேட் குறைப்பு

    சில அதிரடி எடைக்குறைப்பு மையங்கள் அதிக புரதச்சத்துள்ள அதே வேளையில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவை உண்ண வைத்து எடையினை குறைத்துக் காட்டுகிறார்கள்.

    ஒரு நாள் உண்ணும் உணவில் உள்ள மொத்த கலோரிகளில் 12 சதவீதம் புரதம், 23 சதவீதம் கொழுப்பு, 65 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் என்று இருத்தல் வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவு 65 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் உடனே வேதியல் மாறுகிறது. ஏதோ உணவு பற்றாக்குறை வந்தவிட்டது, எனவே உணவை சேமிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை உடல் எடுத்துவிடுகிறது. இது கூட மனித உடல் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடாகும். எனவே, உடலானது குறைந்த பட்ச கார்போஹைட்ரேட்டையும், இன்னும் சொல்லப்போனால் செல்களைப் பழுது பார்க்க வேண்டிய புரத்தையும் கூட கொழுப்பாக மாற்றி உடலில் தேக்கி வைத்துவிடும். ஆக, எடையைக் குறைக்க உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்கப்போய் அதன் மூலம் உடலில் கொழுப்பின் எடை அதிகமாகிவிடும்.

    கார்போஹைட்ரேட் அடங்கிய முழு கோதுமை, கைக்குத்தல் அரிசி, ராகி, கம்பு போன்ற தானியங்களை உட்கொள்ளலாம். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் தீட்டப்படுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் களையப்படுகிறது. ஆனாலும் இவை அனைத்துமே கார்போஹைட்ரேட் தாம். இவை நமது வயிற்றில் மெதுவாகச் செரிப்பதால் அதிக அளவு குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்படுவது தடைபடுகிறது. எனவே உடல் எடை அதிகமாவதில்லை. அதே வேளையில் வெண்சர்க்கரை (சீனி) 100 சதவீதம் குளுக்கோஸ் ஆகும். இது உடனடியாக இரத்தத்தில் கலந்து விடுகிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் அது உடனே கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தேக்கி வைக்கப்படுகிறது. எனவே உடல் நலத்தின் எதிரி தானியமோ, சோறோ அல்ல, நாம் உண்ணும் சர்க்கரையே (Sugar) ஆகும். இதைத் தவிர்த்தாலே, உடல் எடைக் குறையும்.

    விரதம் ஓர் என்ஸைம் கொல்லி

    நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைச் சக்தியாக மாற்றுவதும், அதிலிருந்து பல விதமான ஊட்டச்சத்துக்களைத் தயாரிப்பதும் என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆகும். இந்த என்சைம்களும் புரதங்களே. பலவிதமான என்சைம்கள் உள்ளன. நமது தசைகளில் உள்ள செல்லுக்குள் குளுக்கோஸ் தானாகவே செல்ல முடியாது. குளுக்கோஸை இன்சுலின் என்ற ஹார்மோன் (இது கணைத்தில் உற்பத்தி ஆகிறது) எடுத்துச் செல்கிறது. தசைகளிலிலுள்ள செல்கள் பெருத்துவிட்டால் (உடல்பருமன் உள்ளவர்கள்) இந்த இன்சுலினால் குளுக்கோஸை செல்லுக்குள்ளே எடுத்துச் சொல்ல முடியாமல் இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். இறுதியாக இந்த குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாறி பின்னர் மூன்று கொழுப்பு அமிலத்துடன் சேர்ந்து டிரைக் கிளிசரைடாக மாறிவிடுகிறது. டிரை கிளிசரைடுகள் கொழுப்புச் செல்லுக்குள் தஞ்சம் புகுந்து விடுகின்றது. இந்த டிரை கிளிசரைடுதான் நமது உடலில் இருக்கும் கொழுப்பு. இதனால் பருமனான நபர் மீண்டும் பருமன் ஆகிவிடுகின்றனர். தசையிலுள்ள செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு தகுந்த இசைவுதராமல் இருப்பதே இதற்கு காரணம். காலப்போக்கில் குளுக்கோஸ் இல்லாமல் செல்களும் செயலிழந்து தசைகளின் அளவும், எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது.

    இந்நிலையைத் தவிர்ப்பதற்கு நாம் மேற்கொள்வது விரதம் அல்ல; உடற்பயிற்சி செய்வதே ஆகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலிலுள்ள தசைகள் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவை இன்சுலின் கொண்டுவரும் குளுக்கோசை ஏற்றுக் கொள்கின்றன. இதனால் குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்படுவது தவிர்க்கப்படுகிறது.

    விரதம் இருப்பதைப் புறக்கணியுங்கள். பாகம் மூன்றில் நான் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளைப்ப பின்பற்றிப் பாருங்கள். உடல் எடை குறையும். உடல் எடைக் குறைவது கூட ஓர் இன்பமான அனுபவமாகவும் இருக்கும்.

    உடல் பருமனைக் குணப்படுத்தும் சிகிச்சை முறை

    சத்தான உணவினைத் தெரிவு செய்து உண்பது, உடற்பயிற்சி செய்வது என்று உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியமானது. இந்த முறையைத் தவிர்த்து வேறொரு முறையை சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவே அறுவே சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சைக்கு Bariatic Surgery என்று பெயர்.

    பேரியாட்டிக் அறுவை சிகிச்சை இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது.

    அ. உணவைக் கட்டுப்படுத்தும் முறை

    இம்முறையில் இரைப்பையின் ஒரு பகுதியை Gastric Banding என்னும் முறைப்படி ஒட்டி அதன் கொள்ளளவைக் குறைத்து விடுகிறார்கள். இரைப்பையின் கொள்ளளவு குறைவதால் உண்ணும் உணவின் அளவும் குறைந்து விடுகிறது. இதனால் உடல் பருமன் படிப்படியாக குறையும்.

    ஆ. கிரகிக்கும் திறனைக் குறைக்கும் முறை

    இம்முறையில் இரைப்பையின் ஒரு பகுதியையும், சிறுகுடலின் ஒரு பகுதியையும் Gastric by-pass முறைப்படி தனிமைப்படுத்தி, அப்பகுதியை பயன்படாமல் செய்துவிடுகிறார்கள். இதனால் உண்ணும் உணவின் அளவும் குறைகிறது. உடலில் உறிஞ்சப்படும் ஊட்டச்சத்தின் அளவும் குறைகிறது. உடல் எடையும் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது.

    இரைப்பையைச் சிறதாக்கும் Gastric Banding என்னும் முறைதான் பிரபலமாக இருக்கிறது. நோய் வரும் அளவிற்கு உடல் பருமனுள்ள (Morbidly obese) பலர் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கிறார்கள். இந்தச் சிகிச்சையில் இறப்பு விகிதம் ஒரு சதவீதம் ஆகும். எனக்குத் தெரிந்த ஒருவர் இறந்தும் இருக்கிறார். என்ன பயமாக இருக்கிறதா? அந்த ஒரு சதவீதம் நாமாக கூட இருக்கலாம். மிக அதிகமாக உடல் பருமனாகிவிட்டால் உயிரைக் காக்க இந்த அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை.

    எனக்குப் பழக்கமான நண்பர்கள் சிலர் உடற்பயிற்சி செய்யத் தயங்குகிறார்கள். உடற்பயிற்சி செய்வது அவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் வலி ஏற்படுகிறது என்கிறார்கள். ஒருநாள் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் பொழுதுதான் உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி சுகமான வலி என்பது புரியும்.

    எனவே உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இந்த இரண்டும் தான் உடல் பருமனைத் தடுக்கும் எளிய இயற்கை முறைகளாகும்.

    எண்ணம்

    ஒரு மனிதன் வாழும் காலமும் வாழ்ந்த காலமும் அவன் எண்ணங்களின் வெளிப்பாடே. தன் எண்ணங்களின் மூலமாகச் சக மனிதனுக்கு உதவி செய்து சாதிக்கத் தூண்டும் மனிதர்களின் எண்ணம் வாழ்வாங்கு வாழும்.

    உலகத்தின் ஏதோ ஓர் இடத்தில் மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளைக் காலம் பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இது ஒரு வகையில் இயற்கை அளிக்கும் பாடம் என்று கூட நாம் கூறலாம். இவர் பெயர் ஜோதி ரோசன்பர்க் (Jothy Rosenberg). 1973ம் ஆண்டு இவருடைய வலது கால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் முழங்கால்களுக்குக் கீழ் இவர் கால்களை இழந்தார். அப்பொழுது இவருக்கு வயது 19. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இரண்டு நுரையீரலில் ஐந்து பகுதிகளை நீக்கினால் மட்டுமே (2/5) சிறிது காலம் இவர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். கீமோதெரபி (Chemotherapy) தொடர் சிகிச்சை மூலம் குணமடைந்தார். இப்பொழுது இவருடைய வயது 56. இடைப்பட்ட 37 வருடத்தில் இவர் செய்த சாதனைகள் இரு சக்கர வாகன போட்டிகளில் 7 முறை பங்குகொண்டு அதன் மூலம் தனக்கு கிடைத்த பணத்தை புற்றுநோயால் வாடும் நோயாளிகளுக்கு உதவும் “Dana Farber Cancer Institute” எனும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்தார்.

    மேலும் இவர் 16 முறை நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு (1 1/2 கி.மீ. தூரம் நீந்தி) அந்த போட்டிகளில் தனக்குக் கிடைத்த பணத்தையும், பரிசுப் பொருள்களையும் Boston Health Care என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்து உதவினார்.

    அமெரிக்காவில் பல நகரங்களில் நடந்த சைக்கிள் போட்டி மற்றும் பணிச் சருக்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு Haiti தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் இழந்தவர்களுக்கு தன் சாதனைகள் மூலம் கிடைத்த பணத்தால் உதவி செய்தார். இவர் வாழ்க்கையின் அனுபவங்கள் Who Says I Cant என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

    என் புத்தகத்தின் இந்த வாசகமே என் வெற்றியின் தாரகமந்திரம் என்று கூறும் இவர் இந்த புத்தகத்தின் மூலம் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கும், புற்றுநோயாளிகளுக்கும் உதவுவதே என் நோக்கம் என்று கூறுகிறார்.

    பொதுவாகச் சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து தன்னம்பிக்கை, முயற்சி, தைரியம் எனப் பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். ஜோதி ரோசன் பர்க்கின் வாழ்க்கையை உற்றுநோக்கும்பொழுது எனக்கு ஒரு விஷயம் புலப்படுகிறது! இங்கு விதிவசத்தாலோ, சூழ்நிலையாலோ இவர் கால்களிலும், நுரையீரலிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மாண்டவர் மீண்டதுபோல் இன்று வாழ்ந்து, சாதித்துப் பிறரை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் நம்மில் சிலர் நன்றாக இயங்கும் நுரையீரலை, இதயத்தை புகைபிடிக்கும் பழக்கம் மூலமாக அதன் செயல் திறனைக் கெடுத்துக் கொண்டு வலிய சென்று புற்றுநோயால் மடியும் அவலத்தைக் காண்கிறோம். புகைபிடிக்கும் பழக்கம் ஒரு மனிதனுக்கு எதனால் வருகிறது. முக்கிய காரணங்களாக கூறப்படுபவை:

    1.         நண்பர்களோடு சேர்ந்து விளையாட்டாகப் பழகிக் கொள்வது

    2.         நம் நாசிகளின் வழியாக சுவாசிக்கும் மூச்சுகாற்றை நம் கண்ணால் காண முடியாத நிலையில் புகைபிடிப்பவர் நாசிகளின் வழியாக புகையை விடும்பொழுது அதை பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரு புதுமையாகவும், திரில்லாகவும் தெரியும் பொழுது இந்தப் பழக்கம் பார்ப்பவரை தொற்றிக் கொள்கிறது!

    3.         சிறுவயதில் தாய்ப்பால் அதிகம் மறுக்கப்பட்ட குழந்தைகள் பின்னாளில் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இவை தவிர ஒவ்வொரு மனிதராலும் பல காரணங்களாக கூறப்படுகின்றன.

    ஆனால் விளைவு என்னவோ ஒன்றுதான். புகைப்பவர்களுக்கு மட்டும் அல்லாது அருகில் இருப்பவர்களுக்கும் உடல்நலக் கேடு.

    என் அனுபவத்தில் என் நண்பர்கள் எனக்கு தெரிந்தவர்களிடத்தில் சில யோசனைகள் கூறினேன். 10 நபர்களுக்கு கூறியதில் 6 பேர் கணிசமாக வெற்றி கண்டுள்ளனர். 4 பேர் தோல்வியடைந்தனர். புகைபிடிப்பவர்கள் இந்த யோசனையை பின்பற்றினால் சில நாட்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

    ஒரு நாளில் 10 சிகரெட் 20 சிகரெட் என புகைப்பவர்கள் உண்டு. அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். காரணங்களை ஒதுக்கிவிட்டு இங்கு புதிய காரியம் நிகழ்த்தப்பட வேண்டும். அதுவே உங்கள் தலையாய எண்ணமாக இருக்க வேண்டும். உறுதியோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். சராசரியாக ஒரு நாளில் 2 சிகரெட் புகைப்பதை குறைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 60 சிகரெட் குறைக்கப்படுகிறது. 6 பாக்கெட் சிகரெட் வாங்கும் தொகை சேமிக்கப்பட்டு மிச்சப்படுத்தப்படுகிறது! இப்படி சேமிக்கப்பட்ட தொகையை மட்டுமே வைத்து உங்களுடைய தாயாருக்கு அவர் விரும்பி உண்ணும் பழங்களை வாங்கித் தரலாம் அல்லது நீங்கள் தாய்போல் நினைப்பவருக்கு வாங்கித் தரலாம். அதற்கும் முடியாதவர்கள் முதியோர் இல்லம் சென்று அங்கு உள்ளவர்களிடம் பொருளாகவோ சேமித்த இந்த பணத்தின் மூலமாகவோ உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் புகைபிடிக்கும் பொழுதெல்லாம் இந்த அன்பை நினைத்து நெகிழலாம். ஒரு காலகட்டத்தில் உங்களை அறியாமலேயே இந்தப் பழக்கம் உங்களிடம் இருந்து காணாமல் போகும். உணர்வை உணர்வால் நிச்சயம் வெல்ல முடியும். புகைபிடிப்பதும் ஒரு உணர்வுதான். மனதுக்கு கற்பிக்கப்பட்ட உணர்வு. அன்பு எனும் உணர்வால் நிச்சயமாக இந்த வேண்டாத உணர்வை வெல்ல முடியும். சாதிக்க முடியும்.

    இந்த முயற்சியை செயல்படுத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள். புகைபிடிக்கும் நண்பர்களிடம் இருந்து விலகி இருத்தல் நலம். வாழ்க வளமுடன்!

    இளைய தலைமுறையினருக்கு ஓர் கடிதம்

    நான் 18.7.2010 அன்று நடந்த சுயமுன்னேற்ற பயிலரங்கத்தில் கலந்து கொண்டேன். சுயமுன்னேற்றப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டேன். அன்று அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம் ஐயா வழங்கிய அறிவுரைகளின்படி, “இளைய தலைமுறையினருக்கு ஓர் கடிதம்” என்ற தலைப்பில் ஓர் கட்டுரை எழுதி உள்ளேன்.

    “எவன் எக்கேடு கெட்டாலும் நான் நிம்மதியாக வாழ வேண்டும்” என்பதே இளைய தலைமுறையின் தாராக மந்திரம். எனக்கு ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் நன்கு அதை அனுபவிக்க கேளிக்கை விடுதிகளும் மற்ற சமாச்சரங்களும் இருக்கின்றன. நான் பிறந்த இந்த சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கவும், இதனை சற்று திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்கின்றனர். இதற்கேற்றாற்போல் வீட்டிற்கு ஒரே பையன் என்று செல்லமாக வளர்த்து, அவனுக்கு சமுதாய சிந்தனையையும் பொதுவுடைமை கருத்தையும் புகட்டாமல் வளர்த்து வருகின்றனர் அவர்களது பெற்றோர்கள்.

    நகரத்தின் மத்திய இடத்தில் மக்கள் நெருக்கடியாக வாழும் பகுதியில் விஜய் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அவன் தினமும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் அலுவலகம் செல்வது வழக்கம். வழக்கம்போல் அவன் போகும் வழியில் உள்ள ஓரு குழாயில் தண்ணீர் வீணாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை அடைத்துவிட்டுச் செல்வதற்கு சுமார் இரண்டு நொடிகள் ஆகலாம். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. அவனிடம் சென்று காரணம் கேட்டால், அது என்னுடைய பொறுப்பு அல்ல என்று பதில் வருகிறது. அந்த இடத்தில் நீர் தேங்கிக் கொசுக்கள் வளர்ந்து மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் தொடர்ச்சியாக வருகின்றன. யாரோ ஒருவர் செய்யும் அலட்சியத்தால் வருவது அல்ல இந்தச் சமுதாயப் பிரச்சினைகள், சமூக பிரதிகளான நாம் செய்யும் அலட்சியப் போக்கும் ஒரு காரணமே? என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

    என்று நம் முன்னோர்கள் சொன்ன பொதுவுடைமை கருத்து ஏன் காணாமல் போனது. பொதுவுடைமை கொள்கையுடன் ஒன்றி பிறந்து வளர்ந்த நம் சமுதயாம் ஏன் இப்படி மாறிவிட்டது.

    இதைப்போல கிராமத்தில் இருந்து வேலைதேடி நகரத்திற்குச் சென்று, அங்கு வேலைபார்க்கும் இளைஞர்கள், தன் சொந்த ஊருக்கு வந்தால், அங்கு தான் செய்யும் வேலையை மறைத்துவிட்டு, தான் உயர்ந்த உத்யோகம் பார்ப்பதாகப் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த பொய்? எங்கே தொலைத்தாய் உனது உண்மை நிலையை? தான் செய்யும் தொழிலையே வெளியே சொல்ல வெட்கப்படும் இந்த இளைஞர்கள், எப்படி அந்தத் தொழிலைச் செய்து முன்னேறுவார்கள்.

    உண்மை நிலையை போற்றுதல், பொய் கூறாமை, நன்னெறி வாழ்தல் இவையனைத்தும் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு அல்லவா? நம் முன்னோர்கள் இதைப்பற்றி நன்கு கூறிவிட்டு, அதன்படி வாழ்ந்தவர்கள் தானே! நாம் எங்கே தொலைத்தோம் அந்த வாழ்க்கை முறையை? சந்ததிகளை பெருக்கி அவர்களுக்குச் சொத்துக்களை மட்டுமே சேர்த்து வைக்கும் பெற்றோர்கள்தான் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கடத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள்.

    ஈன்று புறந்தருதல் என்தலை கடனே

    சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே

    நன்நடை நல்கல் வேந்தர்க்கு கடனே

    வேள்வடித்து கொடித்தல் கொல்லர்க்கு கடனே

    ஒளிருவாள் அறிஞ்சமம் முறுக்கி

    களிறெறிந்து பெயர்தல் காளைக்கு கடனே!

    என்ற அகநானூற்றுப் பாடலை அனைவரும் நினைவு கூறுவோமாக! பணம் மட்டுமே சேர்த்து பகட்டு வாழ்க்கை வாழாமல், நன்னெறிகளையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற கடமை உணர்வு நம் அனைவருக்கும் வர வேண்டும் என்பதே என் நோக்கம்.

    மனமே, மனமே மாறிவிடு

    வெற்றிப்படி 3 நமது தலைமைச் செயலகம்

    எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்ற பழமை வரி மூளையின் முக்கியத்துவத்தைப் பற்றி முழங்குகிறது.

    மூளையைப் பற்றிய பிறசெய்திகள் (அவசியம் அறிய வேண்டியவை)

    • மூளை நமது உடலில் பல மிக நுண் துகள்களால் ஆக்கப்பட்ட, நுண் இயக்கங்கள் கொண்ட, நமது உடல், உயிர், மன இயக்கத்திற்குத் தேவையான மிகமிக முக்கிய உறுப்பு.
    • மனம் இல்லாமல் கூட மூளை இயங்கும். ஆனால் மூளை இயங்காமல் மனம் இயங்காது.
    • இருதயம், நுரையீரல் இவை இரண்டும் முக்கிய உறுப்புகள் தான். ஆனால் அதன் இயக்கத்திற்கும் மூளையின் செயல்பாடு முக்கியம்.
    • மூளைக்குள்ளே பல்லாயிரம் கோடி இயக்கங்கள்.
    • 10 ஆயிரம் கோடி நியூரான்களால் ஆக்கப்பட்டது மூளை. இவையே மூளையின் அடிப்படை துகள்கள்.
    • உயர் ஆழ் மன இயக்கத்தின் போது மிக முக்கிய உறுப்புக்களான இருதயம், நுரையீரல் ஆகியவை குறைந்த இயக்கத்தில் இருக்கும். ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்து ஒன்றிணைந்த இயக்கமாக இருக்கும்.
    • கோமா நிலையில், மன இயக்கம் நின்று, மூளையின் துரித இயக்கம் நின்று இறப்பு (Brain Death) ஏற்படுகிறது. இருதயம், நுரையீரல் ஆகியவை குறைந்த இயக்கத்தில் இயங்கும்.

    மூளையின் Bio-data

    • மூளையின் எடை சராசரியாக 1.4 கிலோகிராம்.
    • மூளையின் எடைக்கும் அறிவாற்றலுக்கும் ஓரளவு தொடர்பு இருந்தாலும் இயற்பியல் மேதை ஐன்ஸ்டினின் மூளை எடை 1230 கிராம்கள் தான்.
    • கனஅளவு – 1400 C.C.
    • மூன்று பாதுகாப்பான படலங்களுடன் மூளை பாதுகாப்பாக Cerebrospinal gluid-ல் சொகுசாக மிதந்து கொண்டுள்ளது.
    • 10 ஆயிரம் கோடி நியூரான்கள் நமது மூளையில் (ஒரு பறவைக்கு 3,50,000 நியூரான்கள், ஆக்டோபஸ்க்கு 300 மில்லியன் நியூரான்கள்).
    • ஒரு நியூரான் ஒரு ஆயிரம் நியூரான்களுடன் இணையும்.

    நியூரான்களைப் பற்றி

    • தகவல்களை உடலின் பாகங்களுக்குக் கொண்டு செல்வது நியூரான்கள் தான்.
    • Cell body, Axon மற்றும் Dendrites எனும் மூன்று பகுதிகள் கொண்டது ஒரு நியூரான்.
    • அனைத்து Axons-களையும் இணைத்தால் அதன் நீளம் 4.9 மில்லியன் கி.மீட்டர் நீளம் இருக்கும் (இது சுமாராக பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல் பத்து மடங்கு).
    • இயற்பியல் அமைப்பு, வேதியியல் தன்மை மற்றும் இயக்கங்களைக் கொண்டு நியூரான்களை பல வகைகளாகப் பிரிக்கலாம்.
    • உடல் உறுப்புகளிலிருந்து மூளைக்கு தகவல்களைக் கொண்டு செல்லும் நியூரான்களை sensory neuron என்றும், மூளையிலிருந்து உடல் உறுப்புகளுக்குத் தகவல் கொண்டு செல்லும் நியூரான்களை motor neuron என்றும் அழைப்பர்.
    • அனைத்துத் தகவல்களும் மின் சைகைகளாக (Electric signals) மாற்றப்பட்டு நியூரான்கள் மூலம் கடத்தப்படுகிறது.
    • ஒரே நியூரான் பலவித தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுகிறது.
    • வெப்பநிலை, வலி, அழுத்தம், ஒளி போன்றவைகளால் இயக்கப்படும் நியூரான்களும் உள்ளன.
    • Acetylchlorine, Adrenaline போன்ற வேதிப்பொருட்கள் நியூரான்களிடமிருந்து வெளிப்படுத்தப்படுகின்றன.
    • மூளையில் உள்ள மற்றொரு வகை செல்கள் ‘Glia’ என்பவை. இவை நியூரான்களை தாங்கியுள்ளன. இவை நியூரான்களைக் காட்டிலும் 50 முதல் 100 மடங்குகள் எண்ணிக்கையில் அதிகம்.
    • பார்த்தல், கேட்டல், நுகர்தல், தொடு உணர்வு, சுவைத்தல், பதிய வைத்தல் போன்ற ஒவ்வொரு செயலும் மூளையின் ஒவ்வொரு பகுதியில் நடைபெறுகிறது.
    • ஒரே சமயத்தில் பல செய்திகளை உடலின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல உதவுவது நியூரான்களுக்கு இடையே உள்ள தொடர்புகள்.
    • நம் எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகளுக்கு ஏற்ப மூளையில் வேதிப்பொருட்கள் சுரக்கப்படுகிறது. இவ்வேதிப் பொருட்கள் மூலமே தகவல் பரிமாற்றம் நடக்கிறது.
    • துக்கப்படுவதும், சந்தோஷப்படுவதும், கோபப்படுவதும் இதன் மூலம் தான் சாத்தியமாகிறது.
    • மூளையிலே மின்னோட்டம், மின் புலம், காந்தப்புலம், அலை அதிர்வுகள் போன்ற அனைத்தும் உண்டு.
    • நம் உடல் நிலை / மனோநிலைக்கு ஏற்ப மூளையின் அதிர்வெண்கள் மாறுகின்றன.

    நற்சிந்தனை, நுண் கலைகள், சாதனைகள், நினைவாற்றல் திறன் இவைகள் a நிலையில் எளிதாகின்றன.

    கோபப்படும்போது அல்லது உணர்ச்சிவசப்படும்போது, மன இறுக்கம், பயம் கொண்ட போது மூளையின் அதிர்வெண்கள் மிக அதிக அளவில் இருக்கும். அப்போது நினைவில் உள்ளதை வெளிக்கொணர்வது அல்லது நினைவில் வைப்பது இயலா நிலை. அப்போது புத்தி மந்தமாக இருக்கும். எனவே தான் “ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு” என்ற பழமொழி.

    “அமைதியான மனம் ஆற்றல் மிக்கது” என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் பகுத்து அறிந்த மருத்துவ வல்லுநர்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது மூளைப்பகுதியே.

    அறியப்படாத இரகசியங்கள், ஆன்மீக சாதனைகள் மூலம் பிரபஞ்ச தொடர்புகள் என அதிசயமான, ஆச்சரியமான இடம்தான் நமது தலைமைச் செயலகம்.

    கணிணி மொழியில் சொல்வதனால்,

    மூளை – Hardware

    மனம் / எண்ணங்கள் – Software

    நான்காம் படியில் சந்திப்போம்.

    உள்முகப்பார்வை

    நம்மைச் சுற்றிலும் பிரபஞ்ச அறிவு நிறைந்துள்ளது. அதுதான் ஒவ்வொன்றாகவும், எங்கெங்கும், எல்லாப் பொருள்களிலும் இருக்கிறது. அது முடிவில்லாதது. எல்லாம் நிறைந்தது. எல்லாம் அறிந்தது. ஒவ்வொருவருமே அந்த அறிவை நோக்கி வளர முடியும். ஏனென்றால் அதில் நாமும் நம்மில் அதுவும் இருக்கிறது.

    நாம் நம்மை நமக்குள் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகின் உறவுகளையும் எப்போதும் பார்க்கிறோம். அதுதான் நம்முடைய நம்பிக்கை. நம்முடைய அறிவு. நம்முடைய புரிதல். நம்முடைய உள்ளார்ந்த உள்ளுணர்வு நிலை.

    1.         நம்மிடம் எல்லாவிதமான ஆற்றல்களும் உள்ளன. நாம் யாராக இருக்கிறோமோ அதுதான் நம்முடைய ஆளுமை. நம்முடைய புனிதமான மனித இயற்கையின் அடியாழத்தில் மறைந்து கிடக்கும் நம்முடைய கடவுளின் எல்லையில்லாத உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ளுமளவிற்கு அதைப் பயன்படுத்த வேண்டும்.

    2.         நம்மைப் பற்றிய அறிவில் நாம் என்னவாக புரிந்து கொண்டிருக்கிறோம். அதுவாகத்தான் நாம் உருவாகி இருக்கிறோம். நாம் எப்படி உருவாக விரும்புகிறோமோ அப்படி உருவாக முடியும். ஏனென்றால் இந்த உலகம் நம்பிக்கையின் வலிமையால் தான் வாழுகிறது. மனித இருப்பில் எதுவுமே நிலையானதாக அல்லது வரையறை உள்ளதாக இல்லை.

    பிரபஞ்சத்தின் எல்லா ஆற்றல்களும் நமக்குள் அடங்கியுள்ளன. சுருக்கமாகச் சொல்வதனால், நாம் யாராக இருப்பதாகச் சிந்திக்கிறோமோ அதுவாகவே இருக்கிறோம். இதனால் அந்த கணத்திலும் நம்முடைய ஆற்றல் எதையும் மாற்ற முடியும்.

    அதற்கு நம்முடைய உள்முகப் பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்வதற்கான துணிச்சலும், தகர்க்க முடியாத மனஉறுதியும் நம்மிடம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பங்களிப்பில்தான் நம்முடைய திறமைகளும், ஆற்றல்களும் இயல்பாகவே செறிவுடன் அடங்கியிருக்கின்றன.

    ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் (Oliver Wendall Holmes) அவர்களின் கருத்தை நான் மிகவும் நேசிக்கிறேன்.

    “நமக்குப் பின்னாலும், நமக்கு முன்னாலும் இருப்பவையெல்லாம் நமக்குள் இருப்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மிகமிகச் சிறியவைகளே”.

    இது உள்ளகப்பார்வை சம்பந்தப்பட்ட ஒரு கருத்து. நம்மில் பலர், நம்மிடம் மிகப்பெரிய ஆற்றல் அடங்கியுள்ளது என்ற கருத்தை அறியாமல் இருக்கின்றனர். அதை அறிந்து கொள்ளும்போதுதான் நாம் யாரென்பதையும், நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கிறது.

    நாம் எதை விரும்புகிறோமோ, அதைப் பெறுவதற்காக நாம் குறைந்த அளவுக்குத்தான் அறிவுத்திறனை பயன்படுத்துகிறோம்.

    வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையென்பது நம் அளவில் பல வகையான வரையறைகளைக் கொண்டுள்ளது. பலவீனத்திற்கும், கோபத்திற்கும், சோம்பலுக்கும், சுயசந்தேகத்திற்கும் நாம் எளிதில் பலியாகிவிடக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆனாலும் நம்முடைய அறிவுத்திறனை, வளமை மிகுந்த ஆற்றலை நம் வசப்படுத்திக்கொள்வது என்பதைத் தெரிந்து கொண்டால், நமது வாழ்க்கை பல வெற்றிகள் நிறைந்ததாக மாறிவிடும்.

    நம்மை படைத்தவரிடமுள்ள ஆற்றல்களைப் போலவே, சிந்திக்கும், பிரதிபலிக்கும், கற்பனை செய்யும், படைக்கும் திறனும் நம்மிடம் உள்ளன. இந்த உன்னதமான ஆற்றலை நாம் மேலும், மேலும் பயன்படுத்தும்போது உண்மையிலேயே நாம் யாரென்பதையும், இந்த உலகில் நம்முடைய நோக்கம் எது என்பதையும் கண்டு கொள்ளலாம்.

    இந்த அடிப்படையிலேயே நாம் தொடர்ந்து செல்வோம். மனிதனின் அறிவாற்றல் வரையறையற்றது. அதற்கு எல்லைகளே இல்லை. ஆனால் நாம் நம்மை முன்னோக்கிச் செலுத்த வேண்டியிருக்கிறது. நாம் உண்மையிலேயே யாராக இருக்கிறோம் என்பதைக் கண்டுகொள்வதற்காக, நம்மை நாமே முன்னோக்கி செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

    சிந்தனையும் நம்பிக்கையும் ஒன்றாகும்போது வடிவம் பிறக்கிறது. நம்முடைய அனுபவத்தில் நாம் எந்த நம்பிக்கைக்கு உள்ளாகிறோமோ அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தவே எப்போதும் விரும்புகிறோம். நம்முடைய நம்பிக்கையின் வழியாகவும், கோட்பாடுகளின் வழியாகவுமே நமது சிந்தனைகள் வெளிப்படுகின்றன. ஒருவர் மனதில் தனது விருப்பப்படி எந்த ஒன்றை அடைவதற்காக மிகுந்த ஈடுபாடுகாட்டி உறுதியான நம்பிக்கையோடு செயல்படுவார்.

    ‘உங்களால் நம்பிக்கை வைக்க முடியுமானால் எல்லாப் பொருள்களுமே உங்களுடையதாகிவிடும்’ என்று பைபிள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதற்கு ஒரு முக்கிய எ.கா. ‘நான்கு நிமிட மைல்’ பற்றிய கதையை நினைவுபடுத்திக் கொள்வோம். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு மைல் தொலைவை, நான்கு நிமிடத்தில் ஓடிக் கடந்துவிட முடியுமென்பதை எவருமே நம்பவில்லை. ஆனால் 1954ம் ஆண்டு மே மாதம் 6ம் நாளன்று ‘ரோஜர் பானிஸ்டர்’ என்பவர் சாத்தியமாக முடியாத ஒன்றைச் சாத்தியப்படுத்திக் காட்டினார். அவரால் அதை எப்படி சாதிக்க முடிந்தது? முதலில் அதைத் தன்னால் சாதிக்க முடியுமென்று அவர் முடிவெடுத்தார். தன்னுடைய மனதில் அதைச் சாத்தியமாக்கக் கூடிய கற்பனையே மேலும் மேலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

    அவர் தன்னுடைய மனதிற்குள் பல நூற்றுக்கணக்கான முறை தாம் அந்த நான்கு நிமிட நேரத்திற்குள் ஒரு மைல் தொலைவைக் கடந்து செல்வதாகக் கற்பனையில் கண்டார். தன்னையே அந்த நினைவில் கரைத்துக் கொண்டு தன்னுடைய “இலக்கை” அடைவதற்கான முழுமையான ஈடுபாட்டுடன் தன்னுடைய ஆழ்ந்த உணர்வுடன் இருந்து வந்தார். அதன் மூலமாக அவருடைய அடிமனமும், நரம்பு மண்டலமும் தமக்கென ஒரு திட்டத்தை வடிவமைத்துக் கொண்டன. அதைச் செயல்படுத்திவிட முடியுமென்ற நிலைமைக்கு வந்தன.

    அவருடைய வெற்றி மற்றவர்களைக்கூட ஒருவேளை தங்களுடைய நம்பிக்கைகளிலிருந்து மாறிவிடத் தூண்டியிருக்கக்கூடும். அடுத்துவந்த 18 மாதங்களில் மேலும் 24 பேர் அந்த 4 நிமிட மைல் ஓட்டத்தில் வெற்றியடைந்தார்கள். அதைத் தொடர்ந்து வந்த 10 ஆண்டில் நூற்றுக்கணக்கானவர்கள் அதே செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள்.

    இன்றைக்கு எல்லாவித ஓட்டப் பந்தயக்காரர்களுமே ஓட்டப்பந்தயத்தில் தவறாமல் அதைச்செய்து வருகிறார்கள். அதைச் செய்தவர் தன்னுடைய மன ஆற்றலின் மூலமாகத்தான் அதைச் சாதித்தார். உடலால் அல்ல. சிந்தனையும், நம்பிக்கையும் இணைந்த நிலையில் ஏற்பட்டுள்ள இந்த வடிவமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    நமது வரலாற்றினூடே பார்க்கும் பொழுது, பல வகையான மனிதரின் தங்களுடைய உள்முகப் பார்வையின் கண்டுபிடிப்புகளினாலேயே வெளிப்பட்டிருக்கிறார்கள். எ.கா. பிளேட்டோ தன்னுடைய 80வது வயதில் கி.மு. 397ல் இறந்துபோன அவர் சொன்னார் “நாம் எதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம்”. மறைந்த இளவரசர் நைட்டிங்கேல் தன்னுடைய உன்னதமான படைப்பான “வினோதமான இரகசியம்” என்ற நூலில் “மனதில் ஒருவன் தன்னைப்பற்றி எப்படி சிந்திக்கிறானோ அப்படியே ஆகிவிடுகிறான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    நாம் ஒவ்வொருவருமே உள்ளுணர்வு நிலையை கூட்டாகச் சேர்த்து வளர்க்க முடியும். அதுதான் நம்மை நாமே புரிந்து கொள்வதற்கு அவசியமானது. “நான் யாராக இருக்கிறேன்?” என்ற கேள்விக்கு அது பதில் அளிக்கிறது. நம்முடைய உணர்வுக்கும், நம்முடைய உலகிற்கும் இடையிலான உறவை அது இனம் காட்டுகிறது. அதில் நம்முடைய சாத்தியப் பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது.

    மனித மூளை இரண்டு வகையான கண்ணோட்டங்களைப் பெற்றதாக இருக்கிறது. அதன் மூலமாக மனம் தன்னையும், தான் சார்ந்துள்ள உலகையும் உணர்ந்து கொள்கிறது. மேலும் நம்முடைய சிந்தனைகள் தான் நாம் யாரென்பதை தீர்மானிக்கிறது. இன்றைக்கு நாம் எதைப்பற்றிச் சிந்திக்கிறோமோ அதன் அடிப்படையிலேயே நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறோம். ஆகவே, நம்முடைய சிந்தனைகளை மாற்றுவதன் மூலமாக நாம் யாராக இருக்கிறோம் அதிலிருந்து மாறிவிட முடியும் அப்படியே நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும்.

    உன்னதமாய் வாழ்வோம்

    23. மதிவசம் வாழ்வோம்

    அன்பு நண்பர்களே! உடலினை உறுதி செய்யும் ஆறாம் படி நிலையான எலும்பு நரம்பாக மாறும் இரகசியங்களை இந்த இதழில் தெரிந்து, புரிந்து கொள்வோம். எலும்பின் உள்மையம் மஜ்ஜையாக உருவாகிறது. இந்த மஜ்ஜையானது தண்டுவடத்தை அடையும் போது நரம்புக் கற்றையாக உருமாறுகிறது. இதுவே மண்டை ஓட்டுக்குள் மூளையாக நிறம்பியுள்ளது. நண்பர்களே! கொழுப்புதான் எலும்பாகவும் நரம்பாகவும் உருமாறி வந்திருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் எலும்பு மூட்டுகளில் உள்ள கூழும், நரம்பின் சுருங்கி விரியும் தன்மையும் ஆகும். நம்மிடையே நல்ல கொழுப்புத் தன்மை இருக்குமாயின் நரம்புகள் நன்றாக சுருங்கி விரியும் இலாஸ்டிக் (Elastic) தன்மையைப் பெற்றிருக்கும். அதுவே கெட்ட கொழுப்புத் தன்மை அதிகமாக இருப்பின் நம் நரம்புகள் பிளாஸ்டிக் (Plastic) தன்மையை பெற்றிருக்கும். ஆக நம் நரம்பு உணர்வோடு இருக்க வேண்டுமாயின் நல்ல கொழுப்புத் தன்மை நம்மிடையே இருக்க வேண்டும்.

    நண்பர்களே! நமது நரம்பு என்பது உடல் உறுப்புகளையும் மூளையையும் இணைக்கும் அதிவிரைவுத் தந்தி வலைப் பின்னலாகும் (Network). இந்த தந்தி அமைப்பு வழியாக உடல் தன்மையை மூளைக்குத் தெரிவிக்கும் சமிக்ஞைதான் வலியாகும். இந்த வலிச் செய்தியின் தன்மையைப் பொறுத்துதான் மூளையின் ஆளுமைத்திறன் வெளிப்படும். உடலின் இரணம் அல்லது வேதனைத் தீரும் வரை வலிச்செய்தி மூளைக்குச் சென்று கொண்டுதான் இருக்கும். ஆக வலி மிக நல்லதுதான். வலி இருக்கும்வரைதான் குணமாவது விரைவாக நிகழும். மூளையானது வலியின் தன்மையை நரம்பு வழியாக உணர்ந்து அதே நரம்பு வழியாக பாதிக்கப்பட்ட உறுப்பு அல்லது பகுதிக்கு அதிகப்படியான இரத்தம், சத்து மற்றும் சக்தியைப் பாய்ச்சி குணமாக்க விழிப்பாக நடவடிக்கை எடுக்கும். ஆக, மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இது நிகழ்வதால், குணமாவது முழுமையானதாக இருக்கும். குணம் கிடைக்கக் கிடைக்க வலி குறைவதும் நிகழும். வலி முற்றிலும் காணாமல் போகும் போது குணமடைந்து விட்டதைக் குறிக்கும். ஆக, வலியானது, பாதிப்பு குணமாகவும், குணமடைந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

    நம் ஆங்கில மருத்துவமோ முதலில் வலிக்காமல் இருக்க வலி நிவாரணிகளைக் கொடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்கும் மூளைக்கும் உள்ளத் தொடர்பைத் துண்டித்து விடுகிறார்கள். பிறகு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கக் கிருமி நாசினிகளை (Antibiotics) கொடுக்கிறார்கள். கிருமிகள் இல்லாத நிலையில் மூளையின் ஈடுபாடு இன்றி தற்செயலாக (Casual) பாதிக்கப்பட்ட இடத்திற்கு இரத்தமும் சக்தியும் பாயும் போது மட்டுமே குணம் கிடைப்பதால், சுமாராக மட்டுமே குணமாகிறது. இந்த பாதிக்கப்பட்ட பகுதி காலத்திற்கும் பலவீணமான பகுதியாகவே இருக்க நேரிடுகிறது. ஆக ஆங்கில மருத்துவம், முதலில் வலிக்குச் சாவுமணி அடிக்கிறது. அடுத்து கிருமிகளுக்கு மரண தண்டனை தருகிறது. பிற்பாடு, நமக்கும் அது மெல்ல மெல்ல நிகழ்கிறது. நண்பர்களே! நாம் இயற்கையாக இறக்க வேண்டுமா? அல்லது நோயாளியாக இறக்க வேண்டுமா?. முடிவு நம் கைகளில் இருக்கட்டும். மருத்துவர்கள் கையில் விட்டுவிடாதீர்கள்.

    மாற்று மருத்துவத்தில் (Alternative Medicines) உடல் பாதிப்புக்கு வலி நிவாரணிகளும் இல்லை, கிருமிநாசினிகளும் கிடையாது. இம்மருத்துவங்களில் வலிபொறுக்க சக்தியை அதிகரிக்கச் செய்யவும், சீர்செய்து (Repair) வலுவாக்க (Strengthen) சத்து(Nurishment) அளிக்கவும் வழி இருக்கிறது. ஆங்கில மருத்துவமானது சத்துக்களைக்கூட இயற்கையான தன்மையில் தராமல் இரசாயன முறையில் தயாரித்துதான் தருகிறார்கள். சரி நண்பர்களே! அது அவர்கள் தன்மை, நாம் நமது இயல்புத் தன்மையை (இயற்கையை) காப்போம். முதலில் நமது நரம்புகள் எந்த விதங்களில் பாதிப்படைகிறது என்று பார்ப்போம்.

    1. அமிலத்தன்மை: அமிலத்தன்மை வாய்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது தற்காலிகமாக முறுக்கேற்றி பின் தளர்த்திவிடுகிறது. தொடர்ந்து இவ்வாறு நிகழும் போது நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது. மேலும் அதிக அமிலத் தன்மையால் கொழுப்புச் செரிமானம் கெட்டு, உடலுக்கு நல்ல கொழுப்பு கிடைக்காமல் போவதால் நரம்பின் இலகுத்தன்மை (Elasticity) குறைந்து கடினத்தன்மை (Plasticity) எற்படுகிறது.

    2. இரத்த அழுத்தம்: இரத்த அழுத்தமானது ஒருவித பதட்டத்தை உடல் முழுமையும் ஏற்படுத்துகிறது. இது நரம்புகளை அதிகமாக உசுப்பி பின் தளர்த்துவதால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது. நமது நரம்புகளில் ஏற்படும் பதட்டம்தான் மன உளைச்சலாக வெளிப்படுகிறது.

    3. முதுகெலும்புத் தேய்மானம்: நமது மூளையில் இருந்து இறங்கும் நரம்புக் கற்றையானது தண்டுவடத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் முதுகெலும்பு தவறான பயன்பாட்டால் தேய்ந்து, அடுக்குகள் சீர்கெடும்போது நரம்பானது முதுகெலும்போடு உரசும் நிலை ஏற்படுகிறது. இந்த நரம்பு கற்றைகள் உடல் முழுமைக்குமான இணைப்புகளை உள்ளடக்கியதாக இருப்பதால், நரம்பின் உரசலானது பொறுக்கமுடியாத வலியினை மூளைக்குத் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் போதைக்குச் சமமான மூன்றாம் நிலை வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வதும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்வதும் நிகழ்கிறது. இந்த சிகிச்சைக்கு தேவைப்படும் உலோக தகடுக்கும் (Metallic disc) அறுவை சிகிச்சைக்கும் விலை அதிகம் கொடுக்க வேண்டும்.

    4. கெட்ட கொழுப்பு தேக்கம்: எல். டி. எல் (LDL) கெட்ட கொழுப்பு அதிகமாகி, எச். டி. எல் (HDL) நல்ல கொழுப்பு குறையும் போது நரம்பானது இலகுத்தன்மையை இழந்து பிளாஸ்டிக் தன்மையை (Plasticity) அடைகிறது. அதிலும் குறிப்பாக எச். டி. எல் (HDL) கொழுப்பில் ஒமேகா-3/ஒமேகா-6 கொழுப்பின் விகிதாச்சாரம் 1: 5 என்ற இயல்பு நிலைக்கு பதில் 1: 70 என்ற அளவுகளில் மாறுவதால் இலகுத்தன்மையில் (Elasticity) இருந்து இறுக்கத் தன்மைக்கு (Plasticity) மாறுகிறது.

    5. வலி நிவாரணிகள்: வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வதென்பது ஒருவித போதையாகும். வலி நிவாரணிகள் தொடர்ந்து எடுத்துகொள்ளும் போது நரம்புகள் உணர்வு குறைந்த நிலைக்குத் தள்ளப்படுகிறது. வலிக்கான காரணம் சரிசெய்யப்படாததால் மேலும் பாதிப்பு அதிகமாகிறது. ஆக, வலிநிவாரணியின் வீரியம் குறையும் போது நரம்பானது மேலும் பாதிப்படைந்த நோய் தன்மையை அதிகப்படியான வலியாக மூளைக்குத் தெரிவிக்கிறது. இப்போது வலியின் தீவிரத்திற்கு ஏற்ப இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை வலி நிவாரணிகள் கொடுக்கப்படுகிறது. ஆக, நோயை முழுமையாக குணப்படுத்தாமல் அழுத்தி வைத்து விட்டு வலி பொறுக்காமைக்கு நம்மை பழக்கிவிடுவதால், வலி நிவாரணிகள் வசம் வாழ ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம். இப்படி தொடர்ந்து வலி நிவாரணிகள் வசம் வாழ்ந்தால், நமக்குள் புற்று நோய் வளர்வதுகூடத் தெரியாமல் வாழ நேரிடும்.

    6. அதீத பாலுணர்வு: அதிக பாலுணர்வு எண்ணமாகவோ அல்லது செயலாகவோ இருக்கும் போது உணவு வழி கிடைக்கும் சக்தியும், சேமித்த கொழுப்பு வழி சக்தியும் விரைவாக கரைந்து பற்றாக்குறை ஏற்பட்டு சதை, எலும்பு மற்றும் நரம்புகள் கரையும் சூழலுக்குத் தள்ளப்படுகிறது. இதில் இன்னும் சிலர் தங்கள் ஆண்மை அல்லது பெண்மையை உசுப்பிக்கொள்ள வயக்ரா உள்ளிட்ட ஊக்கிகளை எடுத்துக்கொள்ளும் போது, இந்த சதை, எலும்பு மற்றும் நரம்பு கரைதல் அதிரடியாக நிகழ்கிறது. மிதமான பாலுணர்வு நமக்கு எப்போதும் ஒரு உந்து சக்தியாகவே திகழும்.

    7. விபத்துக் காயங்கள்: நமக்கு உடலில் எங்காவது அடிபடும் போது அடிபட்ட இடம் வலித்தால் குணமாவது விரைவாக நடக்கும். அப்படி வலிக்கவில்லை என்றால் அடிபட்ட இடத்தில் நரம்புக்கு பலமான அடி விழுந்திருக்க வாய்ப்பிருக்கும், ஆதலால் அடிபட்ட இடத்தை கைகளால் வலி உணர்தல் வரும் வரை தேய்த்து விட வேண்டும். அப்போதுதான் அடிபட்ட பகுதிக்கும் மூளைக்குமான தொடர்பு ஏற்பட்டு குணமாவது தொடங்கும். நண்பர்களே! நரம்புணர்வற்ற உள் காயங்கள்தான் இரத்தக்கட்டாக தொடங்கி பின் புற்று கட்டிகளாக வளர்ந்து விடுகின்றன. இதனால்தான், அறிவும் உயிரும் உள்ள நம்மால் கண்டுகொள்ள முடியாமல், அறிவும் உயிரும் இல்லாத இயந்திரம் கண்டு பிடித்து சொல்கிறது. இது தேவையா?.

    8. மன உளைச்சல்: கோபமும், வேகமும் அதிகமுள்ளவர்கள் யாவரும் தமது நரம்புகளை விரைவாக இழுத்து தளர்த்தும் செயல்களைச் செய்கிறார்கள். இதனால், நரம்பு விரைவாக தளர்ந்து விடுகிறது. தளர்ந்த நரம்பை வைத்துக் கொண்டு உடலையும் மூளையையும் இணக்கமாக இயக்க முடியாது. ஆகவே, தளர்ந்த நரம்பை உசுப்பிக்கொள்ள உடலையும் மனதையும் உசுப்பிக்கொள்கிறார்கள்.

    அறிவு நண்பர்களே! நமது நரம்பு சுருங்கி விரியும் தன்மையோடு நீர்த்துப் போகாமலும் இருக்க வேண்டும். நரம்பு தளர்ச்சியில் இருந்து மீள வேண்டுமானால் நரம்பை வீணாக்கும் சூழலைத் தவிர்த்து, வலுவாக்கும் சத்துணவை அளிக்க வேண்டும். நரம்பின் இலகுத் தன்மைக்கு (Elasticity) ஒமேகா-3 (Omega-3) கொழுப்பும், நரம்பின் வலிமைக்கு (Strength) ஜின்சங் (Ginseng) தாவரச் சத்து மற்றும் சமச்சீர் புரதமும் (Balanced Protein) தேவைப்படுகின்றன. நண்பர்களே! நரம்பு உணர்வைக் கொடுக்காத வரையில் நாம் மதி வசம் (அறிவு வசம்) வாழ முடியும். நரம்பு உணர்வை இழக்க இழக்க நாம் விதி வசம் வாழ வேண்டி இருக்கும். நாம் நரம்பு தளர்ச்சிக்கு ஆளாகும் போது நாம் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் மருத்துவர் வசம் விட்டு விட வேண்டியிருக்கும். நம் நிலமை இன்னும் மோசமானால், நமக்கு என்ன செய்யலாம் என்பதை நம்மைச் சார்ந்தவர்கள் முடிவு செய்வார்கள். உதாரணமாக, ஒருவருக்கு பைத்தியம் பிடித்தால் அவருக்கு வைத்தியம் செய்யலாமா வேண்டாமா என்பது தொடங்கி ஏர்வாடியில் விட்டுவிடலாமா என்பது யாவும் மற்றவர்கள்தான் முடிவு செய்வார்கள். என்ன நண்பர்களே! உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில் இருக்க வேண்டுமா அல்லது மற்றவர்கள் கைகளில் கொடுத்துவிடப் போகிறீர்களா?. நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    அன்பர்களே! நரம்பு செயலிழப்பானது ஆண்களில் விந்துவையும் (Semen). பெண்களில் நாதத்தையும் (Egg) சக்தியிழக்கச் செய்யும். அது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

    அறிவின் ஆட்சி மூளை; விழிப்புணர்வின் விதை நரம்பு.

    ஆக, இரண்டையும் இழந்தால் மதி கெட்டு விதி வசம் வாழ்வோம்.

    இரகசியங்கள் தொடரும்….