வெற்றி என்பது
வானத்துச் சூரியனல்ல…
உன்கை
தொடும் தூரத்தில் தான்…!
ஆர்வத்திசையில்
திட்டப் படகேறி
முயற்சி துடுப்புப் பொட்டு
குறிவைத்து நகர்ந்தால்
கோட்டையும் உன்வசம்….!
இலக்கினைக் கண்டு
எண்ணம் குவித்து
எறும்பாய் நீ
சுறுசுறுப்பானால்
வெற்றி என்பது
உன் விரலின் மோதிரம்….!
பத்து வழியிலும்
பார்வை போனால்
வெற்றி என்பது
தூரத்து வான்தான்…!
பாதை அறிந்து
பயணம் போனால்
வெற்றி என்பது
தொடுகின்ற ஊர்தான்…!
வெயிலில் தாள்
பற்றுவதில்லை…
வெயிலைக் குவி
வெந்துபோம் தீயில்…!
எதுவும் முடியும்
உன்னால்…
எல்லாம் உழைப்பின்
பின்னால்…!
காற்றில் நீ
எங்கும் பறக்கும்
தூசாய் வேண்டாம்…
திசை நோக்கிச் செல்லும்
மரக்கலமாயிரு…!
இருந்தால் –
உனக்கு வெற்றிமுகம்
வெற்றிக்கு உன்முகம்…!
– சி.சு. முருகேசன்
நெல்லை