![]() |
Author: சாந்தாசிவம்
|
ஆயிரமாயிரம் நூல்களைப் படித்தாலும் அவைகளை நம் அனுபவத்தில் பார்த்திராவிட்டால், ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீரை விட்டுக்கொண்டேயிருக்கும் கதைதான்.
நாம் பள்ளிகளில் சென்றுபடிக்காத பாடத்தை, நமக்கு அனுபவம் உள்ளுணர்வாலும் வெளியுணர்வாலும் உணர்த்துகிறது. இதைத்தான் “நூல்களை மட்டும் படிக்காதே; மனிதரையும் படி, உன்னையும் படி” என்ற பொன்மொழி கூறுகிறது.
நூற்றி இருபது முறை சிறைக்குச்சென்ற ஒரு பிக்பாக்கெட் கைதியின் நேர்காணல் நிகழ்ச்சிக்கு உள்ளூர் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது. கடந்த ஒரு வருடமாக போலீஸ் துறையின் கண்காணிப்பால் திருந்தியவர் பட்டியலில் இடம்பெற்ற அந்தக் கைதியின் நன்னடத்தைக்காக பல உதவிகளையும் காவல்துறை செய்து வந்தது.
அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அத்தனைக்கும் வெளிப்படையாகவும், தெளிவாகும், தான் ஏன் தவறு செய்தேன் என விவரித்து பதில் சொன்னார்.
என் முறை வந்தபோது நான், “இனி திருடவே மாட்டேன் என சொல்லும் நீங்கள், புதிதாக திருமணம் செய்து சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கிறீர்கள். பணமில்லாத வளையில் ஒரு பரிசை மனைவிக்கு கொடுக்கத் தோன்றி, இந்த ஒரு முறை முட்டும் பாக்கெட் அடித்துவிட்டு அப்புறம் செய்யக்கூடாது என்ற எண்ணம் வரலாமில்லையா?” என்றேன்.
அதற்கு அவர் – “மனித மனம் வறுமை, பசி, கஷ்டம் என்கிறபோது தான் இப்படிச் செய்யும். அது உண்மைதான். இவ்வளவு நாள் கையில் காசு தராளமாக புழங்கியது. இனி, நான் நடவமாடும் உணவகம் நடத்தலாம் என்று இருக்கிறேன். இதில் என்ன காசு தாராளமா புளரப்போகுது. ஒரு நாளைக்கு அந்தத் தவறை செய்ய மாட்டாய் என்பது என்ன நிச்சயம்? என்கிறீர்கள். அப்படிச் செய்ய மாட்டேன்.
இன்ஸ்பெக்டர் ஐயா எந்த கஷ்டமனாலும் எங்களைக் கேள் உதவுகிறோம் என என்னை நல்லவனாக்கியிருக்கிறார்கள். எனக்கு வாய்த்த அந்தப் பெண், இவர் இனிமேல் திருட மாட்டார் எனச்சொல்லி எனக்கு கழுத்தை நீட்டியிருக்கிறது. என் வியாபாரத்தில் விற்ற காசை அவகிட்ட கொடுத்து அவள் எனக்கு ஒருரூபாய் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்குவேன். அவள் ஒரு தியாகி.
எனக்கு திருட்டு ஒரு மோசமான பிழைப்பாகவும் ஜாலியாகவும் இருந்தது. இனி அதைச் செய்தால் நான் மனிதனே அல்ல. என் சக நண்பர்கள் கூட, என்னைப் பார்த்து திருந்திக் கொண்டிருக்கறார்கள். அவர்களுக்கு என் வாழ்க்கையே ஒரு பாடமாகிவிட்டது” என்றார்.
இப்படிப்பட்டவர் ஏன் திருட்டுத் தொழிலில் இறங்கினார்? அதையும் கேட்டோம்.
“எனக்கு திருட்டுப் பழக்கம் வந்ததுக்குக் காரணம், என் பத்து வயதில் மளிகைக் கடை முதலாளி செய்த செயல்தான். அவர் தெலிலாவது எதையாவது, கலப்படம் செய்வார். பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் யாரிடமும் சொல்லாதே என ஐம்பது காசைத் தருவார். இதுபோல் ஆரம்பித்த எனக்கு அடுத்தவரிடம் இருக்கும் காசை எடுப்பது குற்றமாக படாததால் வயதும், வறுமையும் சேர்ந்து வழி தவறிப் போகும் நிலை ஏற்பட்டது. ஒரு பெரிய மனிதரிடம் இருந்துதான் என்னுள் இந்தத் தவறு விதைக்கப்பட்டது” என்றார்.
பல இளைஞர்களின் குற்றங்களுக்குக் காரணம் அவர்கள் குழந்தைப் பருவத்தில் அறியாமல் செய்த சின்னச்சின்ன தவறுகளே.
என் உறவினர் ஒருவரின் குழந்தை அடிக்கடி தன் பென்சில்பாக்சில் புதிது புதிதாகரப்பர், ஸ்கேல், சாக்லேட் எனக் கொண்டு வந்ததை கண்டிக்காமல், பெரிதாக எடுதுக்கொள்ளாமல் விட்டது, வளர வளர அவர்கள் வீட்டில் பணம் காணாமல் போகும் நிலை ஏற்பட்டது. அவன் மனதை படம் பிடித்துப் பார்த்ததில் பெற்றோர் தான், கவனிக்காமல் விட்ட குற்றவாளிகள் என தெரிந்தது.
இப்படி, நம் அன்றாட வாழ்வில் பலவற்றிலும் படிப்பினையாக பலவற்றை உணர்ந்தும், பல சமயம் அவைகளை ஆழமாக உணர்வதில்லை. வாழ்க்கை நமக்கு பலமுறை போதிக்கும் ஆசிரியனாகவே இருந்திருக்கிறது.
நான் பள்ளிகளிலும் பல நூல்களிலும் படிக்காதவற்றை அனுபவம் உணர்த்துகிறது.
இப்படி… பாடம் இருக்கத்தான் செய்கிறது எதிலேயும், எங்கேயும்.

June 2002

















No comments
Be the first one to leave a comment.