– சக்சஸ் ஜெயச்சந்திரன்
உழைப்பு
வெற்றி ஏணியின் பத்தாம் படி
பத்து ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கும் முயற்சியில் திட்டமிடுதலை அடுத்த உழைப்பு என்னும் பத்தாம் படியில் கால் வைக்கிறீர்கள்.
இதுவரை பார்த்த படிகளுக்கு இல்லாத முக்கியத்துவமும், வேறுபாடும் இதற்கு உண்டு. விருப்பம் முதலாக திட்டமிடுதல் ஈறாக உள்ளவை மநிலை மாற்றங்களே!
ஆனால் உழைப்பு உருவாக்குவது, படைப்பது, உடலின் இயக்கத்தால் கண்ணால் காணக்கூடிய, தொட்டறியக்கூடிய பருப்பொருள்களை உருவத்தோடும், வடிவோடும் உண்டாக்குவது.
பலருடைய கனவுகளும், கற்பனைகளும், திட்டங்களும் நிறைவேற்றாமைக்குக் காரணம் அவை உழைப்பு என்னும் செயலோடு இணையாமையே! உழைப்பு இல்லாமல் கற்பனைக் கோட்டைகள் கட்டலாம். நிஜக் கோட்டைகள் கட்ட முடியாது.
உழைப்பு என்பது என்ன?
குறிக்கோளுடன் திட்டமிட்டுச் செய்யப்படுகிற உடல் இயக்கமே உழைப்பு. இறைவனின் உழைப்பு, பூமியையும், மற்ற கிரகங்களையும், சூரிய சந்திரன்களையும், ஐந்து பெரும் பூதங்களையும், மற்ற விலங்கு, பறவை, உயிரினங்களையும் படைத்தது.
இறைவன் தான் படைத்த உயிரினங்களுக்கும், படைக்கும் ஆற்றலை, உருவாக்கும் சக்தியை கொடுத்திருக்கிறான்.
பூச்சி, பறவையினங்கள் கூட குறிக்கோளுடன் திட்டமிட்டு உழைப்பதை நீங்கள் அறிவீர்களா?
எறும்புகளைக் கவனித்துப் பாருங்கள். மழையிலிருந்தும், வெய்யிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துகொள்ள புற்றுகளை அமைத்துக்கொள்கின்றன. மழை காலத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்கின்றன. வெகு தொலைவிலிருந்து கூட உணவுத் துகள்களைச் சுமந்து கொண்டு வந்து ஓயாது உழைக்கின்றன.
தேனீக்களைப் பாருங்கள். பல மைல்தூரத்திற்கும் பறந்து சென்று மலர்களை ஆராய்ந்து தேனைக் கொண்டு வந்து தேன் கூட்டைக் கட்டுகின்றன.
அவற்றிற்கு உறையுளாகவும், உணவுக் கிடங்காகவும் பயன்படும் தேன்கூட்டை எவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும், வடிவமைக்கின்றன பார்த்தீர்களா? அவற்றின் உழைப்பின் மேன்மையையும், ஒழுங்கையும் பாராட்டாமல் இருக்க முடியுமா?
மிகச்சிறிய ஈக்களின் குறிக்கோளுடன் கூடிய திட்டமிட்ட உழைப்பு எவ்வளவு சிறந்த சாதனையாக வடிவெடுக்கிறது பாருங்கள்!
சிலந்தி வலை பின்னுவதை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு விரைவாக உழைக்கிறது என்பதைக்கவனியுங்கள். நம்மால் அதுபோன்ற அற்புதமான வலையைப் பின்ன இயலுமா? எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?
தூக்கணங்குருவியின் கூட்டைப் பாருங்கள். மிகச்சிறிய அலகினால் எப்படி அதனால் அவ்வளவு பாதுகாபான கூடு கட்டமுடிகிறது?
சிலந்தி போன்ற பூச்சிகளாயினும் சிட்டுக்குருவி போன்ற பறவைகளாயினும் உழைத்து உணவைத் தேடிக்கொள்கின்றன. உழைப்பின் மூலமே உறைவிடத்தையும் அமைத்துக்கொள்கின்றன.
மனித சமுதாயத்தில் உழைப்பு எவ்விடத்தைப் பெற்றுள்ளது?
பிறந்த குழவி கூட கையையும், காலையும் அசைத்து, உதைத்து தன்னிடமுள்ள உயிர்ச்சக்தியை வெளிப்டுத்துகிறது.
குழவி குழந்தையான பின்னர் உழைக்கும் திறன் வளர்கிறதே தவிர மங்குவதில்லை. வளர்ப்பு முறையினாலும், தம்மைச் சுற்றி வாழும் சமுதாயத்தைப் பார்த்துப் பழகுவதாலும் மனிதன் படிப்படியாக உழைக்க மனமில்லாதவனாகவும், பிறர் உழைப்புச் சுரண்டுபவனாகவும் மாறிவிடுகிறான்!
ஆனால் மனிதனின் உழைப்பால் மலை முகடுகள் சமவெளியகின்றன. பாலைவனங்கள் சோலை வனங்களாகின்றன. மண்மேடுகள் மாடமாளிகைகள் ஆகின்றன. குப்பைமேடுகள் கோபுரங்களாகின்றன.
மனித சமுதாயம் மேம்பாடு அடைய உழைத்தர்கள் எவ்வளவு உன்னதமான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்!
நடையாகப் பயணம் செய்த மனிதன் குதிரை வண்டி, மாட்டு வண்டி என்று உருவாகி, பேருந்து, புகை வண்டி, விமானம் என்று முன்னேறி, விண்வெளியில் பயணம் செய்ய ராகெட்டையும் கண்டு பிடித்துள்ள போக்குவரத்துப் புரட்சி உழைப்பினால் விளைந்த அற்புதமல்லவா?
மனித குலத்தைச் சில நிமிடங்களில் நூற்றுக்கணகில் அழித்துக் கொண்டிருந்த தொற்று நோய்களை அறவே ஒழித்து, மனிதனின் சராசரி ஆயுளை அதிகரித்து, இதயத்திற்கும் மூளைக்கும் கூட அறுவைச் சிகிச்சை முறைகளைக் கண்டறிந்து, பழுதுபட்ட கண், சிறு நீரகங்களைக் கூட மாற்றிப் பொருத்தும் வழிகளைக் கண்டறிந்ததது மருத்துவ மேதைகளின் உழைப்பல்லவா?
ஆண்டுக்கணக்கில் பயணம் செய்து அறிவிக்க வேண்டிய தகவல்களை, ஒலியாகவும், ஒளியாகவும் பரப்பி, ஒரு நொடியில் உலகிற்குத் தெரிவிக்கும் வானொலியும், தொலைக்காட்சியும் உழைப்பாளிகளின் வெற்றிச்சின்னம் தானே!
நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஆண்டுக் கணக்கில் செய்யும் வேலையைக்கூட சில மணித்துளிகளில் முடித்துவிடுகிற கணிப்பொறியைக் கண்டறிந்தது மனிதனின் உழைப்பல்லவா?
எங்கு நோக்கினும், உலகின் எப்பகுதியிலும் உழைப்பின் வெற்றிச் சின்னத்தைக் காணமுடிகிறதல்லவா?
உலக அதிசயங்கள் என்று போற்றப்படும் சாதனைகள் உழைப்பின் உயர்வைப் பறைசாற்றுபவைதானே!
ஆகவே உழைப்பின்றி உயர்வில்லை; முன்னேற்றம் இல்லை!
உழைப்பின்றி வளம் இல்லை; வளர்ச்சி இல்லை!
உழைப்பே உணர்வின் அடையாளம்; அதுவே உயிரின் இயக்கம்.
உழைப்பு இல்லாவிட்டால் விருப்பம் நிறைவேறாது; ஆசை ஏக்கத்தை மட்டுமே வளர்க்கும்; குறிக்கோள் கேலிக்கு இலக்காகும்; நம்பிக்கை ஏமாற்றத்தில் முடியும்; தன்னம்பிக்கை உயர்வுச்சிக்கலை வளர்க்கும்; விசுவாசம் உயிரின்றிக் கிடக்கும்; கற்பனை பகற்கனவாக முடியும்; சிறப்பறிவு பயனற்றுப்போகும்; திட்டம் ஒருபோதும் நிறைவடையாது!
இவையனைத்தும் உழைப்போடு சேரும்போதுதான் மனிதனை உயர்த்தம். சமுதாயத்தை முன்னேற்றும்.
நீங்கள் அழகிய சிலை செய்ய வேண்டும் என்று விரும்பலாம். ஆசையாக வளர்க்கலாம் உலகம் போற்றும் சிலை வடிக்க குறிக்கோள் பூணலாம். உங்களால் வெற்றி அடைய முடியும் என்று நம்பலாம். திறனும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்று தன்னம்பிக்கை கொள்ளலாம். இறைவன் துணை செய்கிறான் என்று விசுவாசிக்கலாம்.
இலை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்யலாம். சிற்பக்கலை வல்லுநர்களை அணுகி சிறப்பறிவைத் திரட்டலாம். எந்த அளவில், என்ன கால அளவில் செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடலாம்.
ஆனால்… நீங்கள் உளியை எடுத்து, சுத்தியலால் தட்டி, கல்லைச் செதுக்கியும், தட்டியும், கொட்டியும் உழைக்காவிட்டால், கல் கல்லாகவே இருக்குமேயன்றி சிலையாகாது.
ஒருமுறை சோவியத் ரஷ்யாவின் பிரதம அமைச்சர் கருச்சேவ் இந்தியாவிற்கு வந்தார். நம் நாடின் அப்போதை பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரை ஆக்ராவிற்கு அழைத்துச் சென்றார்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் முன் நின்று, அதன் நிமர்ந்த அழகிய தோற்றத்தைக் கண்ட குருச்ஏவ் வியப்படையாமல் நீண்ட பெருமூச்சு விட்டார்.
அதைக் கவனித்து நேரு “என்ன மிஸ்டர் குருச்சேவ்! ஏன் பெருமூச்சு விடுகிறீர்கள்?” என்றார் பெருமிதத்துடன்.
குருச்சேவ் இறுகிய முகத்துடன் ஆழ்ந்த சிந்தனையோடு கூறினார், “மிஸ்டர் நேரு இந்த அழகிய மாளிகையின் கீழ் எத்தனை பாட்டாளித் தோழர்கள் தங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தியிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். பெருமூச்சு வருகிறது.
அதுபோல இலட்சக் கணக்கான உழைப்பாளிகள் சிந்திய வியர்வையினாலும், இரத்தத்தினாலும் உருவாக்கப்பட்ட சாதனைகளையே நாம் அனுபவித்து வருகிறோம்.
எடுத்துக் கொண்ட குறிக்கோள் எவ்வளவு பெரியது என்று மலைக்கத் தேவையில்லை.
நூறடுக்கு மாளிகையாயினும் ஒவ்வொரு செங்கல்லாகத்தான் அடுக்குகறோம். ஒவ்வொரு அடுக்கும் சேர்ந்துதான் மாளிகைள் ஆகிறது.
பரந்த வயலில் மூட்டைக் கணக்கில் நெல் விளைந்தாலும், ஒவ்வொரு நாற்றாகத்தான் நடப்படுகிறது.
அதுபோன்று ஒவ்வொரு முயற்சியும், உழைப்பும் ஒன்று சேர்ந்துதான் சாதனை பிறக்கிறது.
அதுபோன்று ஒவ்வொரு முயற்சியும், உழைப்பும் ஒன்று சேர்ந்துதான் சாதனை பிறக்கிறது.
ஆகவே பத்தாண்டுகள் ஓயாது உழைக்க வேண்டும். வெற்றி பெறும் வரை உழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு செயலில் இறங்கிவிடுங்கள்.
உழைக்கும்போதேத வெற்றியைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்காமல் உழைப்பை கடமையா கொள்ளுங்கள். இயற்கை நியதிப்படி வெற்றி விளைந்தே தீரும்.
மாங்கொட்டை ஒன்றை நிலத்தில் ஊன்றி, நீருற்றி, செடியைப் பாதுகாத்துத வந்தால் அது மரமாகி பூத்து, காய்த்து, கனி தருவது எப்படி இயற்கை நியதியோ அப்படியே உழைப்பு வெற்றியைத் தருவதும் இயற்கை நியதியே!
தேவையானால் கடும் உழைப்பிற்கும் தயாராக இருங்கள். தடையைக் கண்டால் உடைத்து நொறுக்கி விட்டு முன்னேறுங்கள். முடியவில்லை என்றால் தடையின் மேல் ஏறித் தாண்டிக் குதியுங்கள்.
எதிர்ப்பு வந்தால் முயற்சியை இருமடங்கு ஆக்குங்கள். எதிர்ப்பு உங்களைச் சோர்வடைய அனுமதிக்காதீர்கள். எதிர்ப்பை எதிர்த்துப் போராடுங்கள். போராடடமே உங்கள் நரம்புகளை முறுக்கேற்றும். தசைகளை வலுவாக்கும்.
உலகமே எதிராக நின்றாலும், இடர்பல வந்தாலும் வெற்றி அடைந்தே தீருவேன்; எடுத்த சபத்தை முடித்தே தீருவேன் என்று முன்னால் அடியெடுத்து வையுங்கள்!
தடையும் எதிர்ப்பும் பொடிப்பொடியாக நொறுங்குவதை நிச்சயம் காண்பீர்கள்!
– தொடரும்…