பொன்னிநதி ஊற்றே
பொதிகைமலைக் காற்றே
கன்னிமலர்த் தேனே
கலங்குவது ஏனோ…?
இமயமலை மேகம்
இங்கு வரும் நேரம்
குமரிமுனைதாகம்
குறைந்துவிடும் கண்ணே…!
நிச்சயம்.
கங்கைக்கும் காவிரிக்கும்
கலப்புமணம் நடக்கும்….!
அதோ… அன்பே…!
களத்து மேட்டிலே காண்பார்
கனமான முட்டைகளை
ஏந்திய எறும்புகள்
அகதிகளைப் போல…!
ஆனால்
அவதிகொள்ளாமல் உயர்ந்து
ஆகாயநிலை அறிந்து
வாழுமிடம் நாடுகின்றன!
அவை மழைவரவைக் கண்டும்
அஞ்சுவதில்லை…
அதோ…
கூடுகட்டத் தெரியாத குயில்களும்
கூடுகின்ற கருமேகங்களைக் கண்டும்
கலங்குவதில்லை….
காக்கையின் கூடுகண்டுதான்
கருவுருகின்றன…!
நாம் மட்டும்… என்ன?
கங்கையும் காவிரியுமாய்க்
கலப்போம்… வா!
– பாவலர். செந்தமிழ்வாணன்.